செவ்வாய், 11 ஜூலை, 2023

காலத்தில் கரைதல் - மகாராசன்


வெளிரிய வானத்தில் 
வலி நோகச் சிறகடித்துப் பறந்து திரிந்து 
இளைப்பாறவும் களைப்பாறவும்
உச்சிக் கிளை தேடியபடி
இறகுகள் துவள
வட்டமடித்துக் கொண்டிருந்தது
வனப் பறவை.

வெறுமை ததும்பிய 

வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில் 

ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தது

யாருமற்ற தனிமை.


வலசைத் தடங்களின் கதைகளில்

கண்ணீர் மேவி

தூர்ந்து கிடந்தன

திக்குகளின் பாதைகள்.


உதிர்ந்து விழும் சருகின்

காம்பைக் கவ்வியபடி 

சிறகைத் துறந்து

மிதந்தலைந்து வந்த இறகாய்

மண்ணை நீவி

தன்னைத் தொலைத்துக் கொண்டது 

மனப் பறவை.


மிச்சமிருந்த கனவையும்

மெல்லக் கவ்விக் கொண்டு

உயரப் பறந்தது வாழ்க்கை.


காலத்தில் கரைதலும்

வாழ்வின் நிமித்தம் ஆனது.

*

ஏர் மகாராசன்

10 .07.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக