வெள்ளி, 28 ஜூலை, 2023

கழுவேற்றப்படும் நிலமும் விவசாயிகளும் - மகாராசன்


உழந்தும் உழவே 
தலையெனப் பாடியும்,
வாடிய பயிரைக் 
கண்டபோதெல்லாம் வாடியும்
அறமும் உயிர் நேயமும்
பெருகப் பெருக விளைந்திருந்த
தமிழ் நிலம்
கூனிக் குறுகிக் கிடக்கிறது.

உடல் நோகவும்
உயிர் கரையவுமான 
உழைப்பின் பெரும்பாட்டு
உணர்வுப் பெருக்கில்
தளைத்து வளர்ந்த
பிள்ளைப் பயிர்களை,
ஆளாக்கிக் கிடந்த
உழவு மேனி ஆன்மாக்களின்
வேரறுத்தும் கழுத்தறுத்தும் தளையறுத்தும் 
கழுவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் 
ஏகப் பெருமுதலைகளின்
வைப்பாள்கள்.

கரி தோண்டவும்
எரிநெய் உறிஞ்சவும்
விளை நிலத்தை
துடிதுடிக்கக் கொல்லும்
துயர்க் காலத்தில்,
நிலத்தை நம்பிக் கிடந்த
சம்சாரிகளின் வாழ்வை
பெருங்களவாணிகள் சூறையாடி சுரண்டல் தீயில் வீசியெறிகிறார்கள்.

பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப் பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்திப் பாழ்படுத்தும்
படுபாதகப் பாவங்கள் 
நாளொரு நாளும்
நீர் பாயும் ஊரிலும்
திமிர்க் கோலத்தில்
தலைவிரித்தாடுகின்றன.

வக்கிரமும் வன்மமும் காழ்ப்பும்
பழிவாங்கும் பகையுணர்ச்சியும்
திமிரும் ஆணவமும் கூடிய கொலைவெறியில்
நிலத்தை அம்மணமாக்கும் 
இழி வேலை அழிச்சாட்டியத்தைத்
தீவிரப்படுத்துகிறது அதிகாரம்.

அதிகாரத்தின் எந்திரக் கைகளால்
பயிர்களையெல்லாம்
வாரிச்சுருட்டிச் சாகடித்து 
நிலத்தைக் கையகப்படுத்துவது,
உழவரையும் நிலத்தையும் மட்டுமல்ல;
எதிர்காலத் தலைமுறையையும்
பசித் துயரில் சாகடிக்கத்தான்.

உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே 
நிலத்தை இழந்து 
பயிர்கள் சாகும் 
வலியும் வேதனையும் புரியும்.

நிலமும் அற்று
வெள்ளாமை பார்க்க 
ஆளரவம் அற்றுப்போன பின்னே,
பசியெடுத்து அம்மணமாகும்போது
இந்த வலியும் வேதனையும் மற்றவருக்கும் வரும்.
அந்தக் காலம் 
விரைவில் தெரியும்.

வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்.

அழிச்சாட்டிய அதிகாரம் 
நாசமாய்ப் போகட்டும்.
இந்த அதிகாரத்தின் ஆணவம் அழிந்து போகட்டும்.

ஏர் மகாராசன் ,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
28.07.2023

1 கருத்து: