திங்கள், 29 ஏப்ரல், 2024

பாரதிதாசனின் திராவிட நிலைப்பாடும் தமிழ்த் தேசிய நிலைப்பாடும் : அறிஞர் குணா


திராவிடக் கருத்தியலும் அடையாள இழப்பும்.

திராவிட இனவழி மரபினில் ஊன்றி நில்!", "வாழ்க திராவிடத் தமிழ்த் திருநாடு!" என்றெல்லாம் பாவேந்தர் ஒருகால் பாடியதைக் கோடிட்டுக் காட்டி, இன்று அடிக்காலிலேயே ஆட்டம் கண்டுவரும் 'திராவிடக்' கருத்தியலுக்கு உரம் சேர்க்க முயல்வாருமுண்டு.

தொடக்கத்தில் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று எழுதியவர்தாம் அப் பாவேந்தர். சங்கதமொழி இலக்கியங்களைத் தழுவிக் கதைப்பாட்டுகளைப் புனைந்தவர்தாம் அவர். பின்னர் பெரியாரோடு இணைந்து அவர்தம் 'திராவிடக்' கொள்கைக்காக நின்றவரும், "திராவிடத் தமிழன்" போன்ற பொருந்தாக் கலப்புருவைக் கருவாக வைத்தும் அவர் பாடினார்.

ஆனால், தேவநேயப் பாவாணரோடும், அவருடைய தனித் தமிழ் இயக்கத்தோடும் தொடர்பேற்பட்ட பின்னர், அவர் அத் திராவிடத்தை மெல்ல விட்டுத்தொலைத்தார். தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகளேயெனச் சொன்ன பெரியாரின் தமிழெதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு நேரெதிராக,

'நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப் படி! - முறைப்படி
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி!
காலையில் படி, கடும்பகலில் படி, 
மாலை இரவு, பொருள்படும்படி'

என்று சொல்லி, பெரியாரின் திராவிட மெய்யினக் கொள்கைக்கு நேரெதிரான மொழிவழித் தமிழ்த் தேசிய இனக் கொள்கைக்காக அவர் பாடலானார். 

தமிழுணர்வை மிகவும் பழித்து வந்த கன்னடராம் பெரியாருக்கு மாறாக,

"பிள்ளை பிறந்தேன், யாருக்காக?
பெற்ற தமிழ்மொழிப் போருக்காக.
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக''

என்று பாடினார். 

தாம் பிறந்த புதுவை மண்ணில், மிகச் சிறுபான்மையராம் தெலுங்கர்கள் போடும் கொற்றங்களை எல்லாம் கண்டு வெம்பியவராயிற்றே. அதனால்தான் பாவேந்தர்,

தமிழ்நாட்டில் அயலார்க்கினி என்ன வேலை? 
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?”
என்றும்,
"அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க; மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் 
அடியோடு வீழ்க"
என்றும்,
"பழந்தமிழ்க் குடிகள் வழிவந்த நாமே
பச்சைத் தமிழர்கள் நமதிந்த நாடு! - நல்
உழுந்தன வேனும் நமைப் பிறர் ஆள 
உரிமையே இல்லை என்றுநீ பாடு"

என்றும் தமிழ்த் தேசியப் போர்ப்பரணி பாடினார்.

"எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! 
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்! 
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்"

என்று பாடிய பாட்டில், "திராவிடத் தமிழன்" என்னும் மாயை செத்துவிட்டது. 

தமிழைத் தாழ்த்தித் "தாய்ப்பால் பைத்தியம்" என்றெழுதிய பெரியாருக்கு நேர்மாறாக,

"தாய்மடியில் குந்தித் தமிழ்முலைப்பால் உண்ணுகின்ற 

சேய்தனக்கும் தாய்பேர் தெரிகிலையோ என்தாயே" 

என்று பாடினார். 

திராவிட மெய்யினக் கொள்கையை அப்பால் எறிந்துவிட்டு.

"தூங்கும் புலியைப் பறைகொண்டெழுப்பினோம்; 
தூய தமிழரைத் தமிழ்கொண்டெழுப்பினோம்’’

என்று பாடியவரும் பாவேந்தரே. 

"தமிழனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது” என்று எழுதிய பெரியாருக்கு மாறாக,

தமிழ்மொழி யெல்லாம் வடமொழி என்று 
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று; 
தமிழ்மொழி யெல்லாம் தமிழ்மொழி என்று 
சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று"

என்று பாடி, பாவாணர் மொழிந்த முதன்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர். பாவேந்தரின் இறுதிநிலை தமிழ்த் தேசியத்தோடு ஒன்றி, தமிழ்த் தேசியப் பாவலராக முதிர்ந்துவிட்ட செம்மையான கோலம்.

தமிழரின் இன்றைய இழிகேடுகளுக்கு, 'திராவிடம்' என்னும் நச்சுப்பூண்டு தமிழகத்தில் பற்றிப் படர்ந்ததும் ஒரு பெரிய காரணம். திராவிடக் கருத்தியலால் தமிழன் தன் அடையாளத்தை இழந்தான்; இன ஓர்மையை இழந்தான்.

கன்னடனுக்கு ஒரு கன்னடநாடும், தெலுங்கனுக்கு ஒரு தெலுங்குநாடும், மலையாளிக்கு ஒரு மலையாளநாடும் இருக்கையில், தமிழகம் மட்டும் தமிழ்நாடாக இல்லை. அது திராவிட நாடாகக் கெட்டு, தெலுங்கரும் கன்னடரும் மலையாளிகளும் அடுத்தடுத்து வந்து ஆளவும் சுரண்டவும் வழிவகுத்துள்ளது.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக