வியாழன், 18 ஜூலை, 2024

புழுதி மண் தடவிய காலத்தை நினைப்பூட்டும் கவிதைகள்.


நிலத்தை, 'இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்' என்றது வள்ளுவம்.


'வண்ணச்சீரடி.. மென் பாதம்
மண்மகளும் அறிந்திலாள்'
என்றது கம்பராமாயணம்.
இன்னும் பிற கவிஞர்கள் நிலமடந்தை என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆக, மண்சார்ந்த நிலம் ஒரு ஆக்க சக்தியாக விளங்குவதற்கும் பிரபஞ்ச உற்பத்தியின் மூலப் பொருளே நிலம், நிலம், நிலமே என்பதே. 

ஒரு செடியைப் பிடிங்கினாலும் அதனுடன் மண் ஒட்டிக்கொண்டு வருவது போல, ஒரு மரம் வேருடன் சாயும்போதும் அதனுடன் தான் இருந்த இடத்தின் மண்ணையும் எடுத்தபடி வருவது போல 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைத் தொகுப்பில் எந்தக் கவிதையை எடுத்தாலும் தான் வாழ்ந்த - சார்ந்திருந்த தன் மூதாதையர்கள் வாழ்வியலில் படிந்திருந்த உழவையும், மண்ணையும், உழவுக்கான தளவாடங்களையும், பாடுகளையும் தவிர்த்தவிட்டு எழுதவில்லை. தன் உழுகுடி நிலத்தில் முளைத்த சொற்களை வைத்து நேர்த்தியாகக் கவிதைகளாக்கியிருப்பது மாபெரும் வெற்றியே.

தொல் குடியில் நிலம், நிலம் சார்ந்த பொழுதுகள்தான் வாழ்வியல் பயன்பாடுகளில் மரபுவழியாக வந்திருக்கிறது. அதன் நீட்சியாக இக்கவிதைத் தொகுப்பு நம்மைச் சங்க காலத்திற்கும் நவீன காலத்தின் இடைப்பட்ட காலத்திற்கும் அழைத்துச் சென்று, அலுப்பு தட்டாது நீள் கவிதையாகத் தந்திருப்பது தனிச்சிறப்பு. 

புழக்கத்தில் நம்மால் கைவிடப்பட்டு நிற்கதியாக இருக்கும் சொற்களைத் தேடி எடுத்து, தேவையான இடத்தில் கையாண்டு இருப்பது ஆச்சரியப்பட வைக்கிகிறது.

அவரின் நிலத்தில் காதல், வீரம், மண்ணின் வயனம், நெகிழ்ந்த வயல்வெளிகள், நம்மால் வங்கொலை செய்யப்பட்ட தாவரம், புழு, பூச்சிகள், கால்நடைகள், சிறுபொழுது, பெரும்பொழுதுகளை அழகியலுடன் தமக்கே உரிய மொழிநடையில் கவிதையாக்கியிருப்பது பிரமிப்பே.

'தெப்பென்று நிரம்பியிருக்கும் கண்மாய் மடைத் தூம்புக் கண்களின் நீர்ப் பாய்ச்சலில் தாவி 
வெயிலில் மினுமினுத்து நீந்திப்போய் வாய்க்கால் வாமடையில் நுழைகின்றன கெண்டைகள்'
காட்சியலுடன் அழகியலும் கலந்து நம்மை வாமடைப் பக்கம் சற்றுநேரம் உட்காரவைத்து விடுகின்றன வரிகள். இங்கு தெப்பென்ற சொல்லே தெப்பத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம்.
சிலப்பதிகாரத்தில் புதிய கேள்வி ஒன்றையும் வைக்கிறார் கவிஞர்.
'காலத்தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர் முட்ட கசிந்த 
வாழ்வின் தனிப்பொழுதுகள் மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு பாடாத மனத்தொட்டிலும் நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.
கண்களில் வழிந்த சுடுநீரும்
அவள் ஆழ்மனத் தீயை அணைக்கவில்லை'. 
இக்கவிதை ஒன்றுபோதும் நம்மை விசனப்பட வைக்க. 
நிலத்தில் முளைத்த சொற்கள் யாவற்றையும் வீரியத்துடன் தந்திருக்கிறார் கவிஞர். உள்ளது தேடி அகழ்ந்து எடுத்து, இறுதியாகவும் சூட்சுமத்துடனும் ஒரு நம்பிக்கை விதையைத் தந்திருக்கிறார். 
'தப்பிய புலிகளின் 
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது 
ஒரு நிலம்'.
நாம் அனைவரும் இந்த நம்பிக்கை விதையைப் பாதுகாப்போம்.

இது அவர் நிலத்தில் முளைத்த சொற்கள் அல்ல; நம் யாவரின் நிலத்திலும் உருண்டு புரண்ட சிராய்புப் காயத்தில் புழுதி மண்ணைத் தடவிய காலத்தை நினைப்பூட்டிச் செல்கிறது. வாசிக்க வேண்டிய கவிதை நூல்.

நூல் வெற்றி பெறட்டும். வாழ்க.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அறிவழகன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.
**
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக