திங்கள், 29 ஜூலை, 2024

சொற்கள் பேசும் அரசியலும் அழகியலும் - கவிஞர் கோ.கலியமூர்த்தி


ஏர் மகாராசன் அற்புதமான ஆய்வாளர். ஆக்கபூர்வமான சமூக இலக்கியப் பண்பாட்டுச் செயல்பாட்டாளர். அவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’.

நிலம், நிலம் கைவிட்டுப்போதலின் வலி, நிலம் வளமிழந்த கதை எனப் பாடுபொருட்கள் விரியும் வலிமிகுந்த உலகம் மகாராசனின் கவிதை உலகம்.

இது கற்பனை உலகம் அல்ல. கண்ணீரின் அமிலத்தில் ஊறும் எதார்த்த உலகம். கதறலாகக் கண்ணீராக ஒப்பாரியாகப் பெருகி வழியும் சொற்கள் பேசும் அரசியல் அழகியலும் செழிக்கிற களமாகியிருக்கிறது.
     “துளைகள் ஏதுமின்றி
     வேர்கள் இசைத்ததில்
     கிளைகள் தலையாட்டி
     பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
     காட்டுச்செடிகள்”
என அபூர்வமான அழகியல் மிளிர்கிறது தொகுப்பில்.
   “வெளிறிய வானத்தில்
    திசைகள் தேடிய பறவைகள்
    கூடுதிரும்பிய நாட்களில்
    மனிதர்கள் யாருமேயில்லை”
என்றெழுதுகிறார் மகாராசன்.

ஏன் மனிதர்கள் யாருமில்லை? எங்கே போனார்கள் அவர்கள்? என்ன நேர்ந்தது அவர்களுக்கு? ஏன்? எப்படி? கேட்டுக்கொண்டே பின்தொடரும் போது ஒரு வலிமிகுந்த வரலாறு விரியும்.

இப்படிக் காட்சிகள் ஊடே நம்மை வேறுவேறு தளங்களுக்கு அழைத்துப்போகும் மகாராசனின் தொகுப்பை யாப்பு வெளியீடு கொண்டுவந்திருக்கிறது.

வாழ்த்துகள் மகாராசன் ...

கட்டுரையாளர்:
கவிஞர் கோ.கலியமூர்த்தி
திருச்சி.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506



1 கருத்து:

  1. செறிவும் அழகும் நிறைந்த சுருக்கமான மதிப்புரை. வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு