வெள்ளி, 9 டிசம்பர், 2016

சம்சாரியாய் இருத்தல் கொடுங்கனவு மட்டுமல்ல, கொடிய தண்டனையும் கூட.

தேடல், வாசிப்பு, எழுத்து, நாடகம், கூட்டங்கள், கல்விப் பணி என அலைதலும் தொலைதலும் நிரம்பி வழியும் எனது வாழ்க்கைப் பயணிப்பில், நிலம் சார்ந்த வேளாண் தொழிலையும் மேற்கொண்டு வருவது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும். எனது எழுத்துகளில் நிலம் சார்ந்த தவிப்பு உயிர்ப்பாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய்க் கூட இருக்கலாம்.

பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காப் போகாம, வாத்தியாரு செத்துப் போனாருனு பல தடவப் பொய்கள் சொல்லி ஏமாத்துனதப் பாத்துப்புட்டு, படிப்புக்கே இவன் தோதுப்பட மாட்டான்னு நெனச்சி மனசுக்குள்ள அழுதுக்கிட்டாரு அப்பா.

நாம்பட்ட கருமாயத்த நீயும் படனுமாடான்னு சில நேரங்கள்ல கண்ணீர் பொங்கப் பேசுவார்.
என்னத்தச் சொல்ல,
ஓம்பொழப்பு மண்ணோட மண்ணா சீரழியப் போவுதுனு  அழுகாத கொறையாச் சொல்வாரு.

எஞ்சோட்டுப் பய புள்ளைகளெல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டும், மத்த நாள்ள கம்மாய்க்குள்ள நீச்சலடிச்சிக்கிட்டுமா இருந்த ஒரு மழக் காலத்துல தான் ,
எங் கையில ஒரு மம்பட்டியக் கொடுத்து, வாடா தம்பி பின்னாலன்னு பெரிய காணிக்குக் கூட்டிட்டுப் போனாரு.

உழுது தொளியாக் கெடந்த அந்த வயக்காட்டுச் சனி மூலயில எறங்கி நின்னுக்கிட்டு என்னயவும் எறங்கச் சொல்லி, புல்லும் புளிச்சியுமாக் கெடந்த வரப்புல அரிஞ்சி அரிஞ்சியே வெட்டி, மண்ண இழுத்துத் தொளிக்குள்ள போட்டுக்கிட்டே போனாரு.

நம்மள எதுக்குடா இங்க வரச் சொன்னாருனு தெகச்சி நிக்கும் போது தான் , நாஞ் சும்மா நிக்குறதப் பாத்துப் புட்டு, ங்கோத்தா மவனே வரப்ப வெட்டுடான்னு அமட்டுனாரு. இதென்ன பெருய மசுரான்னு நெனச்சி நானும் வரப்ப வெட்டலாம்னு மம்பட்டியப் புடிச்சி வெட்டுனேன். வடக்கத்தி வரப்ப முடிச்சுப்புட்டு மேக்கத்தி வரப்புல பாதி கூடத் தாண்ட முடியல. உள்ளங்கயி ரெண்டுலயும் கொப்புளம் கொப்புளமாய் நீர் கோத்துக்கிச்சு. எம் பக்கமா திரும்பிக் கூடப் பாக்காம அவரு பாட்டுக்கு வரப்ப வெட்டிக்கிட்டே போனாரு அப்பா.

இடுப்பெல்லாங் கடுக்குது , உள்ளங்கையி காந்துது.
தொட ரெண்டுமே கிடு கிடுன்னு நடுங்குது. அழுக அழுகயா முட்டிக்கிட்டு வருது. சார சாரயா வேத்து ஊத்துது. குனியவும் முடியல , நிமிரவும் முடியல. வயித்துப் பசியும் அல்லயப் புடுங்குது.
மேக்கத்தி வரப்பச் செதுக்கிட்டு தெக்கத்தி வரப்பு மூலயில நின்னுக்கிட்டு கொறய வெட்டிட்டு வரப் போறீயா என்னான்னு கோவமா கத்துனாரு அப்பா.

என்னால இதுக்கு மேல முடியலப்பான்னு அழுதே புட்டேன். இந்தக் காணிய முடிக்காம வெளியேறப்டாதுன்னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிப்புட்டாரு. வேற வழியே இல்லாம மம்பட்டியப் புடிச்சி வெட்டலாம்னு குனிஞ்சா வின்னுவின்னுன்னு இடுப்புத் தெறிக்குது. ரெண்டு எட்டு வரப்ப வெட்டிப் போக முடியல. உள்ளங்கயி கொப்பளம் ஒவ்வொன்னா ஒடஞ்சு போனதால அந்த எடமெல்லாம் காந்துது. யாராச்சும் நம்மளக் காப்பாத்த வர மாட்டாங்களான்னு தவிச்சுக்கிட்டு நிக்கும் போது தான் , நாலஞ்சு காணி தள்ளி அம்மா வாரதப் பாத்துப் புட்டேன்.

அப்புடியே மம்பட்டிய தொளிக்குள்ள போட்டுப் புட்டு அம்மாகிட்ட ஓடிப்போனேன். அம்மா என்னயக் காப்பாத்துமான்னு அம்மா காலப் புடிச்சிக்கிட்டு அழுது அழுது கெஞ்சினேன். எங் கய்யப் பாத்துப்புட்டு அம்மாவும் சன்ன அழுகயா அழுதுச்சு. பதறிப் போயி ரெண்டு பேருமா மாத்தி மாத்தி அழுததுல, கொண்டாந்த சோத்துச் சட்டியும் கொட்டிப் போச்சு.

இத எதயுமே கண்டுக்காத மாதிரியே கெழக்கத்தி வரப்புல முக்காவாசிய வெட்டிக்கிட்டு இருந்தாரு அப்பா. எங் கையப் புடிச்சிக்கிட்டு விங்கு விங்குன்னு அப்பாக்கிட்ட இழுத்து வந்துச்சு அம்மா. அப்பாவ ஏன்டான்னே அம்மா கேட்டது அன்னிக்குத்தான். ஏன்டா ஒனக்குப் புத்தி கித்திப் பேதலிச்சுப் போச்சா? பச்சப்புள்ளய இந்தப் பாடு படுத்திருக்க ? ஒத்தப் புள்ளயச் சாவடிச்சுப்புடுவ போலன்னு கோவந்தாவமா பேசுனா அம்மா.

பேசாமப் போயி கெணத்தடியல இருங்களா. இத அரிக்கிப்பிட்டு வாரேன்னு அப்பா சொன்னாலும்,அம்மா விடல. ஏளா பேசாம இருளான்னு அப்பா சொல்லவும், கெணத்தடிக் குடிசக்கிக் கூட்டிட்டுப் போனா அம்மா. அப்பா கொண்டாந்திருந்த தூக்கு வாளியில இருந்த நீச்சத் தண்ணிய எடுத்துக் குடிக்கச் சொல்லித் தவிப்பாத்தினாள்.

பெரிய காணி முழுசயும் வெட்டி முடிச்சுப்புட்டு தம்பாயமில்லாம நடந்து வந்து எங்கிட்ட வந்து ஒக்காந்தார் அப்பா.
உள்ளங்கை ரெண்டையும் விரிக்கச் சொல்லிப் பாத்தாரு. ரொம்ப வலிக்குதாப்பான்னு குரல் தழுதழுக்கக் கேட்டாரு. உள்ளங்கையெல்லாம் செவந்து போனதப் பாத்துப் புட்டு ரொம்பவே வேதனப்பட்டாரு.
பாத்துக்கோ தம்பி, நீ பள்ளிக் கோடம் போகலாட்டினா , ஒழுங்காப் படிக்காட்டினா காலம் பூராவும் இப்டித்தான் கருமாயப் படனும்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள ,
இல்லப்பா, நா பள்ளிக் கொடத்துக்குப் போறேனுப்பா, ஒழுங்காப் படிப்பேம்பான்னு சொல்லி முடிக்குங்குள்ள, என்ன அப்புடியே கட்டிப் புடிச்சி அழுதே விட்டார் அப்பா.
அப்பாவும் நானும் அழுகுறதப் பாத்துப் புட்டு அம்மாவும் சேந்தழுதுச்சு.

அன்றிலிருந்து படிப்பு வாசனை என்னைத் தொற்றிக் கொண்டாலும் , அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்ட தொளி வாசனையும் வியர்வை வாசனையும், அம்மாவிடமிருந்த உழைப்பு வாசனையும் எம்மிடமிருந்து விலகவுமில்லை. அதனால் தான் கல்விப் புலத்தோடு மாய்ந்து கொண்டிருந்தாலும், நிலத்தோடும் இன்னும் உழன்று கொண்டிருக்கிறேன்.
நிலத்தை விட்டு வெளியேற மனமுமில்லை. முடியவுமில்லை.

ஆயினும்,
கொடுங்கனவாய்
கொடிய தண்டனையாய்
ஆகிப் போய்க் கொண்டிருக்கிறது
சம்சாரிகளின் வாழ்வு.

எனது அப்பா காலத்திலிருந்தும்
எனது காலத்திலும்
கால வெள்ளாமையாக
நெல் பயிரிடுவதே
பெரு வழக்கம்
எங்களூர் வட்டாரத்தில்.

கிணற்றுப் பாசனம் இருந்தாலும் கூட, தென் மேற்குப் பருவமழையைப் பார்த்துத்தான் நாத்துப் பாவுதல் வழக்கம்.

எனக்குத் தெரிய ,
நாத்துப் பாவிய
முப்பது நாளைக்குள் நடுகையை முடித்துக் கொள்வது உண்டு.
எல்லாக் கால வெள்ளாமையும் அப்படித்தான்.

இந்த ஆண்டோ ,
தென் மேற்குப் பருவமழை முழுவதுமாக இல்லாமலே போயிற்று. வடகிழக்குப் பருவமழையும் வருமான்னே தெரியல. மடையாய்க் கிணற்றுக்குள் விழுந்த தண்ணீர் வரத்தும் காணாமல் போனது. கிணறு தோண்டிய காலத்திலிருந்து அடி மண்ணை நான் பார்த்ததே இல்லை. எமது மட்டுமல்ல, பக்கத்துல இருக்கிற எல்லாக் கிணற்றிலுமே தண்ணீர் வற்றிப் போனது. ஆறுகளும் கண்மாய் குளங்களும் என அத்தனை நீர் நிலைகளும் மணல் சுரண்டப்பட்டுக் கோரமாய்க் கிடக்கின்றன.

நாத்துப் பாவி
அய்ம்பதுக்கும் மேற்பட்ட நாட்களாகிப் போயின.

மழையுமில்லை.
உழவுமில்லை. தொளியுமில்லை. நடவுமில்லை.
நாத்தெல்லாம்
வயித்துப் புள்ளயா
பருஞ்சு நிக்குது.
அது சாவியாப் போகுதுன்னு மனசெல்லாம் சாகுது.

நிலமே பிழைப்பாய்க் கிடக்கும் சம்சாரிகள்
சாக மாட்டாமலும்
வாழமாட்டாமலும்
முகம் வாடிக் கிடக்கிறார்கள்.

முதல் முறையாய்
வரப்பு வெட்டுகையில் பொங்கிய அழுகை ,
இப்போது
சம்சாரியாய் இருக்கையில் முட்டி நிற்கிறது.

சம்சாரிகள்
தற்கொலை செய்து கொள்வது சொந்தக் காரணங்களால் மட்டுமல்ல,
நிலமும் பயிரும்
உயிரெனக் கருதிக் கொண்டிருப்பவை
கருகிக் கொண்டிருப்பதாலும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக