வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பிள்ளையார் சுழியும் எழுத்துப் பண்பாட்டு மரபும்.

எதையும் எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.
குறளும் கூட உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களும் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் உ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர். அதாவது உலகைக் குறிக்க உ எனப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு. இதற்கும் பிள்ளையார் சுழி என்பதற்கும் தொடர்பு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் , உ என்பது பிள்ளையார் சுழி அல்ல , உலகம் என்பதன் சுருக்கக் குறி ஆகும்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது , பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
( உ என்பதைக் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்தில் பதிவான "பிள்ளையார் சுழி வந்த கதை" கட்டுரை குறித்த எமது பதிவு இது.)
பிற்சேர்க்கை .
‘பிள்ளையார் சுழி’ வந்த கதை !
பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று - அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச்சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின்
மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும்இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் - முழுமுதற் கடவுள்
என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது.
அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே,
இடையில் வந்த பிள்ளையார் - முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா?
அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.
கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது. எனவே வளைவுக் கோடும் - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும்
தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின்கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். அது பிள்ளையார் சுழியும் அல்ல - பிள்ளையாரும் அல்ல. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில் ‘உ’ என்ற தலைப்புக் குறி பயன்பட்டது. இப்பொழுதோ ஊற்றுப் பேனாவும், ‘பால் பாயின்ட்’ பேனாவும், பேப்பரும் வந்த பிறகும் ஏனோ அந்தச் சுழி!
- பெரியார் முழக்கம்.(01.09.2016.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக