செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீர்முலைத் தாய்ச்சி.

மணல் உடுத்திய பாதைகள்
வெறும் ஆறுகள் மட்டுமல்ல;
கருந்தோல் மேனிகளில்
உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்
அரத்த நாளங்களைப் போல,
நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்
நீர் நாளங்கள்.

கடைமடை நிலத்தாளின்
மானம் போர்த்திய
நீர்ச் சேலைத் துணிகள்.

மழையாள் வகுந்தெடுத்த
உச்சந்தலை நீர்க்கோடுகள்.

பசுந்தாள்
வேர் நாவுகளை நனைக்கும்
உமிழ் நீர்ச் சுரப்பிகள்.

தொடை விரித்து ஈனும்
தாயவள் போல்,
உழவும் குடியும்
நெல்லும் சொல்லும் ஈன்ற
நீர்முலைத் தாய்ச்சிகள்.

பச்சிளம் பிள்ளையைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளைப்
புணரத் துடிக்கும்
இனப் பகைக் குறிகளின்
விதைகளை அறுத்தெறிந்து
அரற்றுகிறாள் காவிரித் தாய்ச்சி.

நீதி மறைத்த அதிகாரத்தை
ஒற்றைச் சிலம்பால் எறிந்து
ஒரு முலை திருகி எரிந்தாள்
திருமாவுண்ணி.

அதிகாரம் மறுத்த நீதியை
நீர்ச் சிலம்பால்
உடைத்தெறிந்தாள்
நிலத் தாய்ச்சி.

காவிரி!
நீர்முலைத் தாய்ச்சியவள்
தீயும் மூட்டுவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக