ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஏறு தழுவுதல்: தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் :- இரா.முத்துநாகு.

ஏறு தழுவுதல், மாடுதழுவுதல், மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு திராவிட மரபில் உள்ள தமிழ் குடிகளிடம் எப்படி ஊடுருவி இருந்தது என்பதற்குத் தமிழ் இலக்கியங்களில் பல நூறு சான்றுகள் இருந்தாலும், மஞ்சுவிரட்டைப் பன்னாட்டு முதலாளித்துவ முகம் கொண்ட பானுமதி என்ற நீதிபதி தடை போட்ட பின்பே இது குறித்துத் தமிழ் அறிஞர்களிடம் தனிக்கவனம் போனது. அதுவரை மஞ்சுவிரட்டு என்ற வேளாண்குடிகளின் தொன்மம் சிறுகதைகளில், புதினங்களில், பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாகவே இருந்தவை தனித்த நூலுக்கான அடித்தளத்தை இட்டது.

(மஞ்சுவிரட்டு வழக்கில் ப்பிரேம் ஆப் பேஸ் இல்லை என்று தெரிந்தும் வழக்கை நீதி மன்றம் ஏற்றதிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் இயங்கும் நீதி மன்றங்களுக்குப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் தாக்கம் நீதிமன்ற முதலாளிகளாகவே நீதிபதிகள் மூளைக்குள் முளைத்திருப்பதை பாண்பாட்டு அசைவுத் தளத்தில் இயங்குப்வர்களுக்கு புரிந்தது.)

மஞ்சுவிரட்டு தொடர்பாக வந்த தனிநூல்களில் ஏறுதழுவுதல் என்ற தலைப்பில் வந்த முனைவர் ஏர் மகாராசனின் நூல் சிறந்த நூலுக்கான இடத்தைப் பிடிக்கிறது. (ஏர் மகாராசன், வேர்ச் சொல்லகராதி கண்ட பெரும் தமிழ்ப் புலமான அறிஞர் அருளியின் வார்ப்பு).

மானுட சமூகம் உணவுத் தேடுதலுக்காக வனத்திற்குள் செல்லும் போது விலங்குகளை எளிதில் வேட்டையாட கூட்டு தேவைப்படுகிறது. இங்கிருந்து தான் கூட்டு வாழ்க்கை துவங்குகிறது. இது தான் மனிதனை வேளாண்மை உற்பத்திச் சமூகமாக மாற்றியது . குறிஞ்சி நிலத்தின் விலங்கான மாடு எப்படி மருத, முல்லை நிலத்திற்குரியதானது எனத் துவங்கும் ஆய்வு, பல நூறு தரவுகளை அடுக்கடுக்காகக் கொடுத்துப் படிப்பவர்கள் மூளை வேறு சிந்தனைக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

மருத நிலத்தில் மாடுகள் வேளாண்மைக்குப் பயன்பட்டாலும், கடந்த தலைமுறைவரை குறிஞ்சி நில மக்கள் மாடுகளை வளர்த்து அதை மருத,குறிஞ்சி நில மக்களுக்கு வழங்கினார்கள். தமிழ்ச் சமூகத்தில் திணைகளாகப் பிரிந்து இருந்தாலும், எப்படி ஒருவருக்கொருவர் தொடர்புடைதாக இருந்தது? முதல் தொடர்பே மாடுதான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளை நெருக்கமாகக் கொடுத்துப் பிரமிக்க வைத்துள்ளார் நூலாசிரியர்.

16ம் நூற்றாண்டின் இறுதியில் வந்த பள்ளு இலக்கியத்தில் மாடுகளின் வகைகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
மஞ்சுவிரட்டு மனிதனை விட வலிய விலங்கான மாட்டை அடக்குவது அல்லது கேளிக்கை அல்ல. மானுட சமூகத்தின் தனி மனிதங்கள் குழுக்கள் சேர்த்து வைத்துள்ள நினைவுகளைத் தனது சந்ததிக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுகளே விழாக்கள். அந்த விழாக்களில் மய்யமானது மஞ்சுவிரட்டு.இதன் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என அறிஞர்களின் வாதத்தை எடுத்து வைத்து நூலினைச் செழுமைப்படுத்தியுள்ளார்.

 மருத, முல்லை நிலமே அரசர்களுக்கான கருவூல கேந்திரமாக இருந்தது. இந்தக் கேந்திரத்தின் நிலமும் மாடுகள் மட்டுமே உற்பத்தி செய்திடும் எந்திரம். இந்த எந்திரத்தை எப்படியெல்லாம் ஆண்ட அரசுகள் வேளாண்மை செய்தால் பாவம் என்று தங்களது மநு நூலினைத் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களுக்கும், வேளாண்மை உற்பத்தியை வியாபாரம் செய்திடும் வணிகர்களும் உழு குடி மக்களிடமிருந்து பிடிங்கிக் கொடுத்தனர். வேளாண்மைக் குடிகள் மீது ஏவப்பட்ட வன்முறையால் இவர்கள் வெகுண்டு எழாமல் இருக்க, மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் திசைதிருப்பவே அரசர்கள் பெருங்கோயில்களை உருவாக்கினார்கள். அகரம் மருத நிலத்தின் ஊரின் பெயர். இது எப்படி பார்ப்பனர்களின் அக்ராகாரமானது என்ற நுண்ணிய பார்வையைச் சான்றுகளோடு நிறுவியுள்ளார்.   
         
  தமிழகத்தில் துல்லிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் மஞ்சுவிரட்டு நடத்திய தமிழ்க் குடிகளின் நிலம் எப்படிப் பறிபோனது என்பதைப் போகிற போக்கில் சுட்டிக்காட்டும் இந்த நூலில், நாயக்கர் ஆட்சியில் வந்து குடியேறிய வடுக கன்னடம் பேசும் குலத்தினரிடம் மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு,  சலகெருது என்ற பெயரில்  கொண்டாடப்படுகிறது. இவைகளுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதேபோல் தமிழ் நிலத்தில் விலங்குகள் குறிப்புப் பண்டுவம் (மருத்துவம்) அறிய 'வாகடம்' நூல் இருப்பது போல், தெலுங்கு மக்களிடம் காடமராசா, ஆவுலராசா கதைகள் வாகட நூலுக்கு ஒப்பாக உள்ளது. இந்த நூலைக் காமராசர் பல்கலைக் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அது குறித்த குறிப்புகள் கொடுத்திருக்கலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உழுகுடிகள் கையிலிருந்த மஞ்சுவிரட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதைச் சான்று உரைக்கும் நூல்.

 மஞ்சுவிரட்டுக்கு நீதிமன்றம் தடையைத் தற்காலியமாக நீக்கினாலும் மேலாதிக்கத்தை அரசு எந்திரம் மூலம் ஆழமாகச் செழுத்தி வருவதைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்குப் புரியும்.

''எதிர்க் குரலும் கலகமும் புரட்சியும் உழுகுடிகளிலிருந்தே துவங்கும். அதனால் தான் தமிழகத்தை ஆண்ட தமிழ அரசர்கள் நிலங்களைக் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி உழு குடிகளை அடிப்படை நம்பிக்கையில் வீழ்த்தியது.

இந்த உழுகுடிகள் மஞ்சுவிரட்டில் மாட்டுடன் நேருக்கு நேராக மோதும் திறன் படைத்தவர்கள். தமது உயிரை மாய்த்துகொள்ள தமக்குத்தானே துறவறம் கொண்டவர்கள். இவர்கள் அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டால்,காவல் துறையும் ராணுவத்தையும் தமது துறவறத்தால் உயிர்த்தியாகம் செய்து புரட்சியைக் கொண்டு செழுத்துவார்கள். இதை ஆழமாகப் புரிந்து வைத்துள்ள முதலாளிகள் நீதிமன்றங்கள் மூலமாக மஞ்சுவிரட்டுக்குத் தடை, நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். அதிகாரத்திற்கு ஆகம விதிகள் அடங்கி, பெருமாள் கோயிலும் சிவனும், சிவ ஆலயத்தில் பெருமாளும் இருப்பார். ஆனால் உழுகுடிகளை அதிகாரம் அடக்கியே வைத்திட முடியாது? என மானுடவியலர் ஆய்வில் சொல்லி வருவதை அறுபது பக்கங்களே கொண்ட இச்சிறுநூல், ஏங்கல்ஸின் பொதுவுடமைப் பண்பாட்டு  நூலான குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல் அளவுக்குத் தரவுகளாகக் குவித்து வைத்துள்ளது. தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் என்று அறுதியிட்டு நான் சொல்லுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக