வியாழன், 12 ஜூலை, 2018

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை : த. சத்தியராசு

“எந்த ஒரு படைப்பாளியும், ஒருபடைப்பில் அடைய வேண்டிய உச்சநிலையை நோக்கிய தேடலில்ஈடுபடாமல் இருக்க இயலாது.அத்தகைய அவர்களின் தேடல்கள்,பிற படைப்பாளியைப் பற்றிக்கூறுகிற கூற்றுக்கள், இலக்கியம்பற்றிய ஆழமான கணிப்புக்களாகஅமைந்து கிடக்கின்றன” என்றுக.பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார். அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறது. இருப்பினும் சிற்சில முரண்களும், பிழைகளும் இல்லாமல் இல்லை. இது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறது. தொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும். அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.

சொல் நிலம் – உருவாக்கம்

பண்டித, எளிய நடைகளில் இருப்பது, உவமை மிகுதியாக இடம்பெறுவது, இருண்மை நிலையில் இருப்பது, தொன்மம், புராணத்தொடர்பு, சமகாலம் – அரசியல் முறை, சமூகம், வாழ்க்கைமுறை எனப் பல்வேறு முகங்களைக் காட்டுவதுதான் கவிதை எனப் பெரும்பான்மையானோர் கருதுவர். அப்படிப்பட்ட ஓர் இலக்கியப் பிரதியாகத்தான் சொல் நிலமும் அமைந்திருக்கிறது.

     இப்பிரதி தொல்காப்பியம், சங்கப்பனுவல்கள் போன்ற வாசிப்புத் தளத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் உருவாகியிருக்கலாம். இதனை இக்கவிதைப் பிரதியும், கவிஞருடனான உரையாடலும் உணர்த்தின.

மதிப்பீட்டு முகங்கள்

ஒரு பனுவலின் மதிப்பீடானது அதனை வாசிக்கும் வாசகனின் வாசிப்புக்கு ஏற்ப மாறுபடும். ஒரு கவிதையின் தன்மை நுகர்வோருக்கு, அவர்தம் புலன்வழிக் கிடைக்கும் காட்சிகள் படிமங்களாக விரியும். “கவிதைகளில் அறிவுப்பூர்வமானஎண்ணங்களைச் சிந்தனைஅலைகளாக வெளிப்படுத்துதல்ஒரு முறை. இதற்கு மாறாக,கண்ணால் கண்டும், காதால்கேட்டும், நாவால் சுவைத்தும்,மூக்கால் முகர்ந்தும், உடலால்தீண்டியும் அனுபவிக்கப்படும்ஐம்புல உணர்வுகளை உள்ளத்தேஎழுப்புதல் அல்லது உணரச்செய்தல் மற்றொரு முறை.புலனுணர்வுகளுக்குவிருந்தளிக்கும் முறையில்கவிதையைப் படைக்கும்இத்தன்மையையே புலனுகர்வுத்தன்மை (Sensuousness) என்கிறோம்”(பா.ஆனந்தகுமார்,2003:33). இப்படிப்பட்ட அடையாளம் சொல் நிலம் தொகுப்பில் காணப்படுகிறது.   

குணம் என்பதை ‘நற்கருத்து, சொற்சுருக்கம், வடிவமைப்பு, எடுத்துரைப்பியல், நடையழகு’ போன்ற கவித்திறன்களை உள்ளடக்கியவை என்பதாகப் புரிந்துகொள்ளலாம். குற்றம் ‘சொற்பிழை, கருத்துப்பிழை, மொழிப்பிழை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், குணம் மிகுதியாக அமைந்திருப்பதையே சிறந்த கவிதை என்பர்.

     “நல்ல கவிதை என்பதுகுற்றங்கள் (Dosha) இல்லாதது,குணங்கள் (Guna) நிறைந்தது;அணிகள் அமைந்தது (Alankara) என்று வாமனர் கருதுகிறார்.குணங்களைச் சேர்த்து குற்றங்கள்இல்லாமல் செய்யுளையாப்பதற்காக, கவிஞன்இரண்டையும் நன்றாகஅறிந்திருக்க வேண்டும் என்கிறார்வாமனர். இவை தவிர வெளிப்படப்புலப்படாது மறைந்திருக்கும்குற்றங்கள் (சூட்சும தோஷங்கள்)பற்றிய அறிவும் கவிஞனுக்குவேண்டும் என்று வற்புறுத்துகிறார்வாமனர்” (கி.இராசா, 2016:99). இக்கருத்தின் அடிப்படையில் இக்கவிதைத் தொகுப்பை அணுகிப் பார்க்கும்பொழுது குணம் – குற்றம் ஆகிய இரண்டு தன்மைகளையும் இனங்காண முடிகின்றது. இவ்வகையில் இந்தத் தொகுப்பை, கவித்திறம் (குணம்), போலி(குற்றம்) என்ற இருவகைகளில் மதிப்பிடலாம்.

கவித்திறம் (குணம்)

மேலே சுட்டிக்காட்டிய குணத்தின் வரையறைகள் இங்கு மதிப்பீட்டுத் தன்மைகளாக அமையவில்லை. மாறாக, கவித்திறம் சார்ந்து கவிஞனின் படைப்பாளுமையை, சமுதாயச் சிக்கலை எடுத்துரைக்கும் முறை, நடை, மனிதம், கவிதை – விளக்கம், மொழித்தூய்மை காத்தல், தலைப்பிடல், பாலுணர்வுக் கருத்தாக்கம், ஒரு சொல் பலபொருள், வரலாற்றுணர்வு எனும் வகைகளில் இங்கு இனம் காணப்படுகின்றன.

சமுதாயச் சிக்கலை எடுத்துரைக்கும் முறை

இக்கவிதைகள் முழுமையும் மனிதன், மனிதப்பண்பு, அடக்குமுறை, உலகத்தின் சுருக்கம் என அமைந்துள்ளன. இப்பார்வை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைச் சிந்தனை உள்ளோரிடத்து மட்டுமே கூடுதலாக அமைந்திருக்கும். அதனை, கெடுநகர் எனும் தலைப்பில் எழுதப்பெற்ற கவிதையின் சில வரிகள் சுட்டிக்காட்டும். அவ்வரிகள் வருமாறு:

           கொளுத்தவர் வலுக்கவும்

இளைத்தவர் இறக்கவுமான

நிகழ்வெளியாய்ச்

சுருங்கிப் போனது

உலகம்

     இவ்வரிகள் உலகத்தில் பொருளாதாரம் ஒரு பகுதியினருக்கு மட்டுமே சேருகிறது என்கின்றன. இதனால் உலகம் நிகழ்வெளியாய்ச் சுருங்கிப் போய்விட்டது என்கிறார் கவிஞர். பல்லாயிரம் ஆண்டு வரலாறு தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்டு. இச்சமுதாயத்திற்காக எழுதப்பெற்ற இலக்கியங்கள் இக்கவிஞரின் பார்வையோடு ஒத்தன. இது இக்கவிஞரையும் அவ்வரிசையிலே சிந்திக்க வைத்திருக்கிறது. அவ்வாறெனில் இன்னும் சமுதாயத்தில் சிக்கல் தீரவில்லை எனலாம். தீர்வை நோக்கிய நகர்வு கவிதைகளில் அமைந்திருக்கலாம்.

நடை

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு நடையைக் கையாள்வர். அது அக்கவிஞரை அடையாளப்படுத்தும். அழகிய நடை, சாதாரண நடை, கடின நடை என நடைகள் இருப்பதாக கி.இராசா (2016:98) குறிப்பிடுகிறார். இந்த மூன்று நடைகளையும் இக்கவிஞர் ஆண்டிருக்கிறார் என்பதை அறியமுடிகின்றது. வட்டார வழக்குகளை மிகுதியாக யாரும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், இக்கவிதைக்குள் சில இடங்களில் வட்டார வழக்கை அறிய முடிகின்றது. சான்றாக,



ஒனக்காகத் தானப்பா

உசுர வச்சுருக்கேன்னு

சொல்லும் போதெல்லாம்,

ஓயாம

இதயே சொல்லாதவென

ஓங்கி நான் கத்தும் போது,

பொசுக்கென அழுது

பொலபொலன்னு

சிந்தும் கண்ணீரெல்லாம்

பொய்யென நினைத்தது

விடலை மனம்       (அம்மா)

எனும் வரிகளைக் காட்டலாம். இவ்வரிகள் அனைத்தும் சிவகங்கை வட்டார மொழியை எடுத்துக்காட்டுவன. இதில்தான் கவிஞரின் முகமும் புதைந்திருக்கிறது. இதுதான் யார்? எங்கிருந்து? கவிதைகள் எழுதுகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டிவிடும் தன்மையுடையது. இது நீரோட்டமான நடையையும் வெளிக்காட்டுகிறது. இவ்வழக்காற்று மொழிகளில்தான் ஒரு மொழிக்கான அடையாளத்தைக் காணமுடிகின்றது. அத்தகு நிலையில் அக்கவிதைத் தொகுப்புக்கான சிறப்பும் கூடுகிறது. ஆங்காங்கு முரண் நடையையும் கவிதைக்குள் காணமுடிகின்றது.

     மனித

     நிழல் போர்த்திய

     நாடுதான்

     வெயிலில்

     வெந்து சாகிறது.



     எட்டிய

     காட்டுக்குள்ளிருக்கும்

     மரங்களும்

     பூக்களும்

     இப்போது

     சிரித்துக் கொண்டிருக்கின்றன       (நிழல் வானம்)

இக்விதை வரிகளில் காணலாகும் நிழல் = வெயில், சிரிப்பு = சிரிப்பின்மை; காடு = நாடு, மரம், பூ= மனிதர் ஆகியன முரண் கருத்துக்களைத் தாங்கியவை. அதாவது,

     நிழல் + சிரிப்பு = காடு è மரம், பூ

வெயில் + சிரிப்பின்மை = நாடு è மனிதர்

எனும் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதைக் கூறலாம். இவ்வாறு அணுகிப் பார்க்கக் கூடிய தன்மைகள் மிகுதி.

மனிதம்

மனிதனின் நற்பண்பைக் குறிப்பது மனிதம். இதை மனிதர்களிடத்தில் தேடிப் பார்க்கின்ற கவிதைகளையும் காணமுடிகின்றது. தமிழகச் சூழல்கள் மட்டுமின்றி உலகச் சூழல்களே மனிதம் இன்றிக் காணப்படுகின்றன என்பதைப் பல கவிதைகள் வெளிப்படுத்தியுள்ளன.  சான்றாக,

     சுள்ளி அடுக்குகளாய்

பெருங்குழிக்குள்

     மனிதங்களை அடுக்கிச்

     சாவை மூட்டிச் சென்றது

கடல்.                 (அலை நிலத்துஅழுகை)

விழுந்திருக்கும் துணியில்

விழுந்த காசுகள்

சிதறிய கோலங்களாய்க்

கிடந்ததில் தெரிந்தன

மனித முகங்கள்

குழல் தடவிய விரல்கள்

காசு முகங்களைத்

தடவுகையில் தெரிந்தன

மனிதர்களின் நிறங்கள்      (அகக்கண்ணர்கள்)

அதிகாரம்

இந்த முறையும்

மனிதத்தைத்

தின்று விட்டது           (இதுவும் ஓர்ஆணவப் படுகொலை)

     இக்கவிதை வரிகள் பல்வேறு சூழல்களில் மனிதத்தைத் தேடும் தன்மையை வெளிக்காட்டுகின்றன. இப்படிப்பட்ட முரண்சிந்தையோடு மனிதன் வாழ்வதற்கு, அவன் போர்த்திக் கொண்ட சமயம், சாதி, இனம் தன்மைகளைக் காரணம் காட்டலாமா? காட்டலாம். இவை மூன்றும் மனித சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு நடத்தேறி வருகின்றன. இதனை வரலாற்றுப் படிப்பினைகள் நமக்குக் காட்டிக் கொண்டேதான் இருக்கின்றன. அத்தகு நீ்ட்சியில் இக்கவிஞரும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கவிதை – விளக்கம்

கவிதையின் வடிவம் என்ன? எளிமை, கடினம், இருண்மை, உவமை எனப் பல வடிவங்களைக் காட்டுவர். கவிதைக்கான பண்பு என்ன என்றால் விளங்கக் கூடாத தன்மையில் அமைந்திருத்தல், எளிதில் புரிதலைத் தருவது, வட்டார வழக்கில் அமைந்திருப்பது எனக் காட்டுவர். இப்படிப் பல்வேறு கருத்தியல்கள் இன்று நிலவுகின்றன. இக்கவிதைத் தொகுப்புக்குள் கவிதைக்கான விளக்கங்கள் சில முன்வைக்கப் பெற்றுள்ளன. அவை வருமாறு:

           நனவிலும் கனவிலும்

           பாடாய்ப் படுத்தும்

           நினைவுகள்

           இப்படியான

           கவிதைகளில் தானே

           செழித்து நிற்கின்றன. (கூதிர்காலம்)

            கவித்தனம் காட்டவே

           எழுதி எழுதித் தீர்கின்றன

           சொற்கள்                 (மனங்கொத்தி)

மொழித்தூய்மை காத்தல்

இலக்கியப் புலவனாக இருந்தாலும், இலக்கணப் புலவனாக இருந்தாலும் காலந்தோறும் மொழித்திருத்தத்தையும் மொழித்தூய்மை காத்தலையும் செய்து வந்திருக்கின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. அதனால்தான் நமக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில்,

     “வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ

     யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”  (தொல்.சொல்.401)

     “சிதைந்தன வரினு மியைந்தனவரையார்”  (தொல்.சொல்.402)

     “கடிசொல் இல்லை காலத்துப்படினே”   (தொல்.சொல்.452)

என்ற கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கவிதைத் தொகுப்பும் அமைந்துள்ளது. குருதி என்பது தூய சொல். அது ரத்தம் எனது வழங்கப்பட்டது. அதனை இக்கவிஞர் ‘அரத்தம்’ (ப.51) என்ற சொல்லாடலால் தூய்மைப்படுத்துகிறார். தேவநேயப் பாவாணர் கூறுவார் பிற மொழியாளர்களின் பெயர்களைக்கூட தமிழ் படுத்துங்கள் என்று. அவரே சேக்ஸ்பியர் என்பதைச் சேக்சுபியர், செகப்பியர் என்றெல்லாம் மாற்றி அழைத்திருக்கிறார். இது ஒரு மொழியைக் கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கான வழிமுறையாகும். அதனை இக்கவிஞரும் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை,

     “ஆனந்த ராசுக்கு

     என் அழுகைத் தமிழ்

அஞ்சலி ஆகட்டும்” (அழுகைத்தமிழ்)

எனும் கவிதைவரிகள் அறிவுறுத்தும். இதன் முதல்வரியில்‘ஆனந்த ராசு’ எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ‘ஆனந்த ராஜ்’ என்று அமைதல் வேண்டும். இப்பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது ராசுவாக மாறுகிறது. தமிழ் தவிர்த்த பிற இந்திய மொழிகளில் ‘ச’ ஒலிப்போடு தொடர்புடைய ச2, ஜ1, ஜ2, ஸ, ஸ1, ஷ, க்ஷ ஆகிய எழுத்துக்கள் உண்டு. அவ்வெழுத்துக்களின் வரிவடிவமும் தனித்தனி. ஆனால், தமிழ்மொழியைக் கட்டமைத்த இலக்கண அறிஞர்கள் நேர்த்தியுடன்தான் செயல்பட்டனர் எனக் கருத இடம் தருகின்றது. இதனை,

     பச்சை   – pacchai – c

     மஞ்சள் – manjal – j

     வம்சம்  – vamsam – s

     சட்டம்  – cattam – ca

     சக்கரம்  – chakkaram – ch

எனவரும் சான்றுகள் காட்டும். இதில் ‘ச’ ஒலிப்பு அதனுடன் தொடர்புடைய பிற ஒலிப்புடன்தான் ஒலிக்கப்படுகிறது. இது கற்றலுக்கான எளியமுறை. இதை ஒப்புக்கொண்டு பிறமொழி ஒலிப்பு வடிவத்தை நீக்கி, தூய்மையைக் காத்துள்ளது எனலாம். அவ்வகையில் இக்கவிஞரும் மொழித்தூய்மை காப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் எனலாம்.

தலைப்பிடல்

இத்தொகுப்புநூல் ‘சொல் நிலம்’ எனும் பெயரைத் தாங்கி, 52 உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. கவிதை நூலின் தலைப்பைத் தெரிவு செய்வதிலும், உட்தலைப்பிடலிலும் மெனக்கெட்டுள்ளார் என்பதை முதல்கவிதையின் தலைப்பான‘கருச்சொல்’ காட்டும். இது கவிதையின் முழுச்சாரத்தையும் உள்வாங்கித் தரப்பெற்றுள்ளது என்பது அக்கவிதையை வாசிப்போருக்குப் புலப்படும். இப்படி, ‘கெடுநகர், ஆயுட்காலம், நிழல் வனம், உறவுக் கூடு, துயர்ப் படலம், ஆழி முகம், செந்நெல் மனிதர்கள், பாழ் மனம்’ போன்ற உட்தலைப்புகளை அமைத்துள்ளார். இவரின் உட்தலைப்பிடல் முறையைப் பின்வரும் கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.

கருத்தைக் கொண்டு தலைப்பிடல்(கருச்சொல், கெடுநகர் போல்வன).அடிச்சொற்கள் தலைப்பாதல்(கருச்சொல், கெடுநகர், பாழ்நிலம் போல்வன).கவிதைவரிச் சொல்லைத் தலைப்பாகத் தருதல்(உறவுக்கூடு, செந்நெல் மனிதர்கள் போல்வன).முதல் கருத்தின் முடிவுச் சொல்லும், இறுதிக் கருத்தின் முதற்சொல்லும் தலைப்பாகுதல்(பாழ்மனம், வலித்தடம் போல்வன).ஒருவரிச் சொற்கள் தலைப்பாதல்(அகக் கண்ணர்கள், கார்காலச் சொற்கள் போல்வன).கவிதைவரிச் சொல்லும் கருத்தும் தலைப்பாதல் (செல்லாக் காசுகளின் ஒப்பாரி, உயிர்க்கூடு போல்வன).வெளிப்பாட்டுத் திறன் தலைப்பாதல் (முரண் செய்யுள்).

பாலுணர்வுக் கருத்தாக்கம்

பிராய்டு கூறுவார் ஒருவரின் ஆழ்மனப் பதிவுகள் ஏதாவதொரு சூழலில் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்பட்ட வரிகள் நிரம்ப உண்டு. அவற்றுள்,

           ஈசல் வயிற்றுப்

           பால் கவுச்சியில்

           கசிந்து கிடந்தது

           நிலத்தாளின் முலைப்பால்    (ஈசப்பால்)

எனும் கவிதை வரிகள் கவிஞரின் உள்ளத்து ஆழ்மனப் பதிவை வெளிக்காட்டுகின்றன. ஓர் ஆணுக்குப் பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு அமையும். அந்த ஈர்ப்பு காமம் சார்ந்து அமையும். அதனையே மேற்கண்ட வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வரிகளில் காணப்படும் ‘பால் கவுச்சியில், முலைப்பால்’ என்ற சொல்லாடல்கள் ஓர் ஆணிடத்துப் புதைந்திருக்கும் காம உணர்ச்சி சொல்லாடல்களின் மூலம் வெளியேறும் தன்மையைக் காட்டுகின்றன. “மனித உள்ளத்தின்வாழ்க்கைமுறையைப்பகுத்துக்கூறும் ஓர் அறிவியலேஉளவியல். ஒருவனது உள்ளம்அவனுடைய செயல்களின் மூலம்உணர்ச்சிகளைவெளிப்படுத்துகிறது. எனவேசெயலை அறிந்து ஆராய்வதன்வழிஉள்ளத்தை நேரடியாக அறியமுடியும். மேலும் உள்ளத்தைநேரடியாக அறிவதற்குஉபகரணங்கள் மூலம் கணிக்கமுடியும். இங்ஙனமே இலக்கியங்கள்கவிஞனின் உள்ளத்துள் சென்றுஉணர்வாக்கப்பட்டுப் பின்னர்உணர்ச்சியாக மாற்றம்செய்யப்படுகிறது” (பா. கவிதா, ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கம் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து), 2017:11) இதனைக் காலந்தோறும் எழுதப்பெற்ற இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டும். அதிலும் குறிப்பாக ஆண் கவிஞர்களின் பாடல்களில் இதனை மிகுதியாகக் காணமுடியும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களை வாசிப்போர் இதனை நன்கு உணர்வர்.

ஒருசொல் பலபொருள்

கவிதை, வாசிக்கும் வாசகனுக்கு ஏற்பப் புதியப் புதிய விளக்கங்களைத் தரவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கவிதை காலம் கடந்தும் பேசப்படும். அப்படியொரு தன்மை இத்தொகுப்புநூலுக்கு உண்டு.

     வடுக்களோடும் வலிகளோடும்

     வயிற்றுப் பாட்டோடும்

     நெருப்பையும் சுமந்து

     சாம்பலாகிப் போனார்கள்

     வெண்மணி வயலின்

     செந்நெல் மனிதர்கள் (செந்நெல்மனிதர்கள்)

எனும் வரிகள் உழவரின் வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுகின்றன. இக்கவிதை வரிகளின் இறுதிவரி கவனிக்கத்தக்கது. அவ்வரியின்‘செந்நெல்’ எனும் சொல் ‘சிறந்த, நல்ல, முற்றிய’ எனும் பொருண்மைகளைத் தந்தாலும், உழைக்கும் வர்க்கத்தினருக்குக் குரல் கொடுத்து வரும் கம்யூனிசத்தை முக்கியமாகப் பதிவுசெய்கிறது. ஆக, ஒருபுறம் உழவரின் வாழ்க்கையையும் மறுபுறம் கம்யூனிசக் கொள்கையாளரின் வாழ்க்கையையும் அவ்வரிகள் வெளிக்காட்டுகின்றன. இக்கவிதையில் இடம்பெற்ற ‘வெண்மணி’ எனும் சொல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி ஊரின் வரலாற்று நிகழ்வையும் நிறுத்திச் செல்கின்றது. அதனைப் பின்வரும் கருத்து தெளிவுறுத்தும்.

தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. (தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் முன்னர் இருந்தது.)  தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி. இப்பூமியில் எங்கு சுற்றினும் பச்சை பசேலேன பசுமை போர்த்திய நெற்பயிர்கள். சில்லென்று வீசும் காற்று, தென்னந்தோப்பு, கரும்புத் தோட்டம் என மனம் வருடிச் செல்லும் இயற்கை சூழல். இங்கு பலதரப்பட்ட நிலமில்லா மக்களும், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் நல்ல வாழ்க்கை முறையை அடைய முயற்சி செய்தும் அதை நிலக்கிழார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வேருன்றி மரமாக வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற கூலித் தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கினார்கள். ஐயா, ஆண்டை என்றுதான் அழைக்க வேண்டும். குறைந்த கூலி, அதுவும் அணாவாக கிடையாது (ஒரு படி நெல்லும் கேப்பை கூழும்தான்) சம்பளம்.

பண்னையார்கள் தொழிலாளர்களிடம் இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். வயலில் நடவு நடும் பெண், ஒருமாதம் முன் பிறந்த தன் பச்சைக் குழந்தையை அங்குள்ள மரத்தில்,  சேலையை கட்டி கிடத்திவிட்டு வேலைசெய்வார். அந்த குழந்தை பசியில் அழுதால் கூட வேலையை முடிக்காமல் பால் கொடுக்கச் செல்லக் கூடாது. மீறினால் வேலை கிடையாது அன்று. சில நேரங்களில் பால் கொடுக்கும் தாயின் மார்பில் எட்டி உதைவிட்டுவிட்டு செல்வர். அங்குள்ள பெண்களை தவறாக அணுகிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

எதிர்த்தால் கட்டி வைத்து அடித்து உதைதான். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். ஒரு பண்ணையாரிடம் முறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் செல்ல முடியாதபடி பண்ணையார்கள் தங்களுக்குள் நல்ல பிணைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். சாணிப்பால், சவுக்கடி இவையெல்லாம் சர்வசாதாரணமான தண்டனைகள் அங்கே.

இந்த நிலையில்தான் 1960களில் இந்திய – சீனப் போரால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது கீழவெண்மணி கிராமத்தையும் விட்டுவிடவில்லை. பஞ்சத்தால் குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். ஆனாலும் பயனில்லை. இவர்களுக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ். இதில் இணைந்து தங்களுக்கு கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். இவர்களுக்கு போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் நிலக்கிழார்கள்.

தொழிலாளர்கள் கூடுதலாக கேட்கும் அரை படி நெல்லை தருவதற்கு மனமில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. ஆனாலும் நேற்று வரை நமக்கு கீழ் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தவர்கள்,  நமக்கு எதிரே அமர்ந்து நம்மிடமே பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற பெருங்கோபம் சம்பந்தப்பட்ட பண்ணையார்களிடம் கனன்று வந்தது. ‘எங்களுக்கு எதிராக சங்கம் ஆரம்பிக்கிறீங்களா..?’ என்று கீழவெண்மணியை சேர்ந்த முத்துகுமார், கணபதி இருவரை கட்டிவைத்து அடித்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கீழவெண்மணியில் கலவரம் மூண்டது.

1968 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க, கீழவெண்மணி மக்களுக்கோ அன்று இருண்ட நாளாக அமைந்தது.

‘தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?’ என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. ‘ஐயோ, அம்மா ஆ…ஆ….எரியுதே!’ என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள் என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

மறுநாள் தினசரிகளில் கிழவெண்மனி படுகொலை சம்பவம்தான் தலைப்புச்செய்தி. நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவானது. தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். சீன வானொலிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன இச்செய்தி. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. முதல் வழக்கில் தொழிலாளர்கள் 120 பேரின் மீதும் இரண்டாவது வழக்கில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு சரியான தண்டனை கிடைத்ததா…? இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருடைய ஆதரவாளர்கள் 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை

மேற்முறையீட்டுக்காக வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அப்பாவி தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இது மட்டும்தானா…? இல்லை, இன்னும் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொழிலாளர்களுக்கு.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்கள் அனைவரும் பணக்காரர்கள். கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” -இதுதான் தீர்ப்பு. ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களை, அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொண்றவர்களுக்கு தீர்ப்பு விடுதலை. இதுதான் அன்றைக்கு தொழிலாளர்களின் நிலை (விகடன், 25.12.2015).

இக்கருத்தியல் அடிப்படையில் நோக்கும்பொழுது அக்கவிதை ஒருசொல் பலபொருளில் கம்யூனிசக் கொள்கையை வெளிப்படுத்தி நிற்பதாகக் கொண்டாலும் நாகை மாவட்டம் கீழவெண்மணியில் விவசாயிகளை (தேவேந்திரகுல வேளாளர்களை) நெருப்புக்கு இரையாக்கிப் படுகொலை செய்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தைத் தோலுரித்துக் காட்டும் வரலாற்றுக் கவிதையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).

வரலாற்றுணர்வு

கவிதை வெறுமனே சமகாலப் பிரச்சினையை மட்டும் பேசிவிட்டுச் செல்லக் கூடாது. அதில் வரலாறு சார்ந்த கருத்துக்கும் இடம் வேண்டும். அதிலும் அந்தக் கருத்துப் பொருத்தப்பாட்டோடு அமைதல் வேண்டும். அப்படிப்பட்ட தன்மையையும் இதனுள் காணமுடிகின்றது. சான்றாக ‘செந்நெல் மனிதர்கள்’ எனும் தலைப்பில் எழுதப்பெற்ற கவிதையில்,

     அரைப்படி நெல்மணி

     கூடக் கேட்டாரென

     நெருப்பின் ஒரு துளி விதையைக்

குடிசைக்குள்

எரிந்துவிட்டுப் போனர்கள்(செந்நெல் மனிதர்கள்)

எனும் வரிகள் ஒரு காலக்கட்டத்தில் உழைக்கும் வர்க்கம் எங்களின் உழைப்பிற்கு இவ்வூதியம் போதாது எனக் கேட்டதற்காக அவர்கள் பட்ட துயரங்களை இன்றும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இக்காட்சிப் படிமங்கள் காலந்தோறும் உழைக்கும் வர்க்கத்தினரைச் சுரண்டித் தின்பதைக் காட்டுகின்றன. இதனை மேற்காண் கருத்தியல் தெளிவுறுத்தும்.

     இவ்வளவு சிறப்புகளைக் கவிஞர் கொண்டிருந்தாலும், சிலவிடங்களில் மொழியமைப்பில் சறுக்கலைக் கண்டுள்ளார்.

போலி

இரண்டு பிழைவாதங்கள் தென்பட்டன. ஒன்று: போலி வலியுறுதல். மற்றொன்று: சொற்றொடர் அமைப்புக் கருத்துப்பிழையும் மொழிப்பிழையும்.

போலி வலியுறுதல்

தமிழ் மொழியமைப்பில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துக்கள் இன்றும் சிக்கலுக்குள்ளாகின்றன. ஏனென்றால் இவ்விரு எழுத்துக்களும் அ+இ, அ+ய்=ஐ; அ+உ, அ+வ்=ஔ எனத் தோன்றியதாக ஆய்வாளர்களும் இலக்கணப் புலவர்களும் கருதுவர். தொல்காப்பியரும் அதற்கு உட்பட்டவர்தான் என்பதை,

     அகர இகர மைகார மாகும்(தொல்.எழுத்.54)

     அகர உகர மௌகார மாகும்(தொல்.எழுத்.55)

என்ற இரண்டு நூற்பாக்கள் சுட்டிக்காட்டும். அப்படியென்றால் அவ்விரு எழுத்துக்களும் போலி எழுத்துக்கள்தானே. இவ்வெண்ணம் இந்தக் கவிஞருக்கும் இருக்கும் போலும். அதனால்தான் ‘அய்ம்பூத, அய்ம்புலன்கள் (ப.11), அய்க்கியமாகி (ப.40)’ ஆகிய சொல்லாடல்களைக் கையாண்டிருக்கிறார். இங்குத் தொல்காப்பியரின் கருத்தை இவர் உணராதிருந்திருக்கிறார் என்றே தோன்றுகின்றது.

     எழுத்துச் சீர்திருத்தத்தைக் காலந்தோறும் அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வெழுத்துச் சீர்திருத்ததில் ஐ, ஔ ஆகியனவும் அடங்கும். அவ்வடிப்படையில் நோக்கும்பொழுது போலி எழுத்தாக எண்ணி அவர் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தில் கவிஞர்க்கு உடன்பாடாய் இருத்தல் வேண்டும். ஐ, ஔ தேவையில்லை என்றார் பெரியார் (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).அதனால் கவிஞர் ஐ, ஔ ஆகிய எழுத்துக்களை அய், அவ் என எழுத முனைந்திருக்கிறார்.

இருப்பினும் அவ்விரு எழுத்துக்களும் அவ்வொலியமைப்பில் ஒலிக்கப்பட்டாலும், அவை, தனித்த எழுத்துக்களாக உணரத்தக்கன என்பதைத் தொல்காப்பியர்,

     “எழுத்தெனப்படுப

     அகரமுத

     னகர விறுவாய் முப்பஃ தென்ப

     சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே”  (தொல்.எழுத்.1)

“ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னு மப்பா லேழு

மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப” (தொல்.எழுத்.4)

“ஔகார விறுவாய்ப்

பன்னீ ரெழுத்து முயிரெனமொழிப” (தொல்.எழுத்.8)

எனும் நூற்பாக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது இவ்வெழுத்து வடிவங்களை நான் கொண்டு வரவில்லை, எனக்கு முன்பு வாழ்ந்த இலக்கணப் புலவர்கள் கொண்டு வந்தது என்பதை ‘மொழிப, என்ப’ என்ற சொல்லாட்சிகளில் விளக்கியுள்ளமையாகும். இதன் வடிவ வளர்ச்சியை ஏற்றுக்கொள்வது சாலச் சிறந்தது. அப்படியிருக்க, இன்றைய ‘ஜ, ஷ, ஸ, க்ஷ’ ஆகிய எழுத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்ற எண்ணம் மேலுறும். அவ்விரு எழுத்துக்களை இவ்வெழுத்துக்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது. ஏனெனில், தமிழ்மொழி இயல்பான, எளிமையான மொழி. அதனால் பண்டைய இலக்கணப்புலவர்கள் க, ச, ட, த, ப எழுத்துக்களை வருக்கங்களாக அமைக்காமல், அதற்குள் அவ்வருக்கங்களை அடைத்துவிட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே அவ்வாறு பயன்படுத்தும் முறையை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

சொற்றொடர் அமைப்புக் கருத்துப்பிழையும் மொழிப்பிழையும்

     இன்றைய வழக்கில் “தான்” என்ற ஒட்டைப் பயன்படுத்துவதைப் பெரும்பான்மையான எழுத்துரையாளர்களிடம் காணமுடிகின்றது. இச்சொல் தனித்து நிற்கும் போதும், ஒட்டி நிற்கும் போதும் வெவ்வேறு பொருட்களைத் தரும். சான்றாக, அன்று தான், அன்றுதான் என்ற சொற்றொடரை நோக்குவோம்.

நான் அவனை அன்று தான் பார்த்தேன்.நான் அவனை அன்றுதான் பார்த்தேன்.

இவ்விரு தொடரில், முதல் தொடரை, ‘நான் அவனை அன்று நான் (தான்) பார்த்தேன்’ என்ற பொருளைத் தருகிறது. இத்தொடரில் உள்ள ‘தான்’ – யான் அல்லது நான் எனும் தொனியைத் தருகின்றது. ஆனால் இரண்டாவது தொடரில் உள்ள ‘அன்றுதான்’ என்பது ‘அன்று’ எனும் பொருண்மைத் தொனியை மட்டுமே தருகிறது. இவ்விரு உணர்தலைப் பெறுவோர் இங்குப் பிழையென்று நம்புவர்.

     இப்பிழையை ‘அன்று தான், அது தான் (ப.20); ஆகியிருக்கலாம் தான்(ப.26); கவிதைகளில் தானே (ப.30), படுகொலை தான் (ப.37), மாட்டீர்கள் தான் (ப.41), ஆறுகள் தான் (ப.44); மானமும் தான் (ப.48); தொலைக்கத் தானா (ப.53); கொடியது தான் (ப.54), குறுணி தான், ஊமத்தையும் தான் (ப.63), சொற்கள் தான் (ப.68) ஆகிய சொற்றொடர்களில் காணமுடிகின்றது. அப்படியொன்றும் கருத்துப்பிழை வரவில்லையே என வினவத் தோன்றும் சிலருக்கு. அவர்களின் புரிதலுக்காக, ‘கற்கள் – கற் கள், பற்கள் – பற் கள், சொற்கள் – சொற் கள்’ இச்சொற்றொடர்களைப் பொருண்மையியல் நோக்கில் வாசித்துப் பார்க்கவும்.

     சிலவிடங்களில் சரியான தொனியுடனும் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். அவ்விடங்கள் வருமாறு: நாடுதான்(ப.17), சீவகன்களும்தான் (ப.32), நாடுதானே (ப.38), அதுதான் (ப.45), என்னதான் (ப.46), எச்சம்தான்(ப.50), வாழ்க்கைதான் (ப.52), தவித்தேதான் (ப.63), குண்டர்கள்தான் (ப.83).

மொழிப்பிழைகள் குறைவு. இருப்பினும் கவனக்குறைவால் ப.76இல் ‘மு(ண்)டியடித்து’ என்பதற்குப் பதிலாக‘மு(ன்)டியடித்து’ என வந்துள்ளது. மொழிப்பிழையில் மற்றொரு பிழை புணர்ச்சிப் பிழை. அது கவனக்குறைவால் வந்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் ப.55, 79களில் ‘தொப்பூள்க் கொடி’ என்ற பிழை வந்துள்ளமையாம். தொப்புள் என்பது பேச்சுவழக்கு; கொப்பூழ் தூய வழக்கு. தொப்பூள் எனும் வழக்குத் தவறு (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).இப்பிழைகள் தவிர்க்கப்பெற்றிருந்தால் இந்நூல் இன்னும் கூடுதல் சிறப்பைப் பெற்றிருக்கும்.

கவிதைத்தொகுப்பு : சொல்நிலம், ஆசிரியர் : மகாராசன், பதிப்பாண்டு : 2007 (முதல் பதிப்பு), வெளியீடு : ஏர், 28, காந்தி நகர், செயமங்களம், பெரியகுளம். பக்கங்கள் : 88, விலை: உரூபாய் 100.

துணைநின்றவை :

ஆனந்தகுமார் பா., 2005, இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட், சென்னை.இராசா கி., 2016, ஒப்பிலக்கியம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட், சென்னை.கவிதா பா., 2017, “ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும்,” தமிழ்ச்செவ்விலக்கிய மேன்மை(மகளிர் உடலியல் – பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து, காவ்யா, சென்னை.கழகப் புலவர் குழு, 2003, நன்னூல் காண்டிகையுரை எழுத்ததிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.சுப்பிரமணியன் ச.வே. (உரை.), 2006, தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.சுப்புரெட்டியார் நா., 1982, குயில்பாட்டு ஒரு மதிப்பீடு, பாரிநிலையம், சென்னை.ஞானசம்பந்தன் அ.ச., 1916, இலக்கியக் கலை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை.பஞ்சாங்கம் க., 2011, தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, அன்னம், தஞ்சாவூர்.பொன்னையா நா. (பதி.), 1937, தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகார மூலமூம் சேனாவரையருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.…, 1937, தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமூம் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.மகாராசன், 2007, சொல்நிலம், ஏர், பெரியகுளம்.ரகுநாதன், 1980, இலக்கிய விமர்சனம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.https://www.google.co.in/amp/s/www.vikatan.com/amp/news/tamilnadu/56826-kilvenmani-massacre.htmlhttp://vaettoli.blogspot.in/2016/10/blog-post_15.html?m=1https://www.vinavu.com/2014/12/24/december-25th-venmani-martyr-day/



த.சத்தியராஜ்

தமிழ் உதவிப் பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்துர் – 28

neyakkoo27@gmail.com

நன்றி: இனம் இணைய இதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக