வெள்ளி, 13 ஜூலை, 2018

புதிய தமிழ்ப் பாடத்திட்டம்: கற்றல் கற்பித்தல் சார்ந்த எதிர்பார்ப்புகள் :- மகாராசன்

புதியதாக வடிவமைக்கப்பட்ட 11 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக முதுகலை ஆசிரியர்களுக்கான கருத்து வளப்பயிற்சி முகாம் மூன்று நாட்களாகத் தேனியில் நடைபெற்று வந்தது. இந்த மூன்று நாட்களும் கருத்தாளராகப் பங்கேற்று, புதிய பாடத்திட்டத்தின் நோக்கம் உள்ளடக்கம் குறித்து மிக விரிவாக ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று நாட்களும் ஊக்கத்தோடும் தேடலோடும் பல பொருண்மைகள் குறித்துப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

புதிய பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் அதன் தரத்தையும் நோக்கத்தையும் உணர்ந்தும் புரிந்தும் முழுமையாகவே ஏற்றுக் கொண்டு வரவேற்கிறார்கள். அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும் தயாராகவே இருக்கிறார்கள். அதே வேளையில், புதிய பாடத்திட்டத்தைக் கற்றல் கற்பித்தல் நிலையில் இருக்கக் கூடிய இடர்ப்பாடுகளையும் அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளையும் குறித்து நிறையப் பேசினார்கள். தங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினார்கள். அவை வருமாறு:

1. பாடப்பொருண்மை 10 இல் இருந்து 7 அல் 8 ஆகக் குறைத்தல்.
2. தமிழ்ப் பாடத்திற்கும் வாரத்திற்கு 7 பாடவேளைகள் வழங்குதல்.
3. கற்றல் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கும் அடைவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் வினாத்தாள் வினாப் பகுப்பு முறையை மீண்டும் கொண்டு வருதல்.
4. திருக்குறள் பாக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
5. கற்றலுக்கு உகந்த வகுப்பறை மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
6. தேர்ச்சி விழுக்காடு தொடர்பான நெருக்கடிகளைக் கைவிடுதல்.
7. பருவ முறைத் தேர்வுகளைக் கொண்டு வருதல்.
8. ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்தல்.
9. கற்றல் கற்பித்தல் தவிர, இதரப் பணிகளுக்கு ஆசிரியர்களைப் பணிப்பதைக் கைவிடுதல்.
10. 11 ஆம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வைக் கைவிடுதல்.
11. தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் பொருண்மை அளவுகளைக் குறைத்தல்.
12. தாள் ஒன்று, தாள் இரண்டு என்கிற பழைய முறைகளையே கொண்டு வருதல் - தமிழில் கற்றல் அடைவுகளை இலகுவாக்கவும் மொழியாளுமைத் திறன்கள் வளரவும் வாய்ப்பு ஏற்படும். ஆகவே, தாள் ஒன்று என்கிற நிலை மாற்றி, தாள் ஒன்று இரண்டு எனக் கொண்டு வருதல்.
13. 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி மதிப்பெண் குறைவிருந்தாலும், மாணவர் கட்டாயத் தேர்ச்சியாகி 12 ஆம் வகுப்பிற்கு அனுமதிக்கும் போக்கைக் கைவிடுதல்.
14. அரையாண்டுத் தேர்வுக்கே முழுப் பாடப்பகுதிகளையும் வைக்காமல், முழு ஆண்டுத் தேர்வுக்கே முழுமையான பாடப் பகுதிகள் என வரையறுக்க வேண்டும்.
15. உயர் கல்வியையும் தமிழில் படிக்கின்ற வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.
16. தமிழ் வழியில் பயின்றோருக்கே அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
17. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை திணிக்கப்படுவதைக் கைவிட வேண்டும்.
18. மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைக் கைவிட வேண்டும்.
19. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயில்வோருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் தனிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
20. புதிய பாடத்திட்டம் தொடர்பாக மாணவர் ஆசிரியர் பெற்றோர் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

மேற்குறித்த கோரிக்கைகளைப் பள்ளிக்கல்வித் துறை கவனத்துடன் நிறைவேற்ற ஆவன செய்திட வேண்டும். இக்கோரிக்கைகள் ஆசிரியர் தொடர்பானது மட்டுமல்ல; இளம் தலைமுறை தொடர்பானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக