ஞாயிறு, 25 நவம்பர், 2018

வதை நிலம் : மகாராசன்


விதை நிலமெல்லாம்
வதை நிலமாகிக் கிடக்கிறது.

சோறுடைத்த மண்ணெல்லாம்
வயிறு காஞ்சு கிடக்கிறது;
வியர்வை மணக்கும் நெல்லை
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம்
பருக்கைகளுக்காகக்
கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளைப் போல
முதுகொடிந்து கிடக்கிறது;
குலையோடு சரிந்த வாழைகளைப் போல
குலம் நொடிந்து கிடக்கிறது.

கூடிழந்த பறவைகள் போல
வீடிழந்து நிற்கிறது;
கருப்பம் கலைந்த நெல் பயிர்போல
உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும்
கண்ணீர் தேங்கிக் கிடக்கும்
வதை நிலமாகிப் போச்சே மக்கா
வதை நிலமாகிப் போச்சே.

நிலத்தை விட்டு விடுவோமா?

நிலம் தான்
நம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு,
நிலத்தாளோட தொப்பூள்க் கொடிய
அறுத்தெறிய மனசில்லயே மக்கா
அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

எழுத்தோவியம்
தோழர் Palani Nithiyan

1 கருத்து: