செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆரியத்திற்கும் வாக்கில்லை; துரோகத்திற்கும் வாக்கில்லை.

வாக்குரிமை என்பது,
வாக்கை அளிப்பதற்கான உரிமை என்பதோடு, வாக்களிக்க மறுத்தலையும் உரிமையாகக் கொண்டிருக்கிறது.

நிலவுகிற போலி சனநாயக அமைப்பிற்கான தேர்தல் என்பது சனநாயகத்திற்கான தேர்தல் என்பது போலத் தோன்றினாலும், உண்மையில் இத்தகையத் தேர்தல் மக்களின் சனநாயகத்திற்கானது அல்ல.

பேருக்கு வேண்டுமானால் எதிர் எதிர் அணிகள் போலக் காட்டிக் கொண்டாலும்,  பெரும் பெரும் பலத்தோடு நிற்கும் இந்திய தேசியக் கட்சிகள் யாவும் இந்திய வடிவிலான ஆரிய / பார்ப்பனிய - தரகு முதலாளித்துவ - ஏகாதிபத்தியக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதைப் பாதுகாக்கவும் தான் முனைந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு தேசிய இனங்களை அடக்கியும் ஒடுக்கியும் - அவற்றின் உரிமைகளைச் சிதைத்தும் - தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்தும் இந்திய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்கான முயற்சிகளுள் ஒன்றுதான் இந்தத் தேர்தல் முறைகளும்.

தேசிய இன விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியலாகக் கொண்டிருக்கும் இடதுசாரிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் பலவும் இப்போதைய போலி சனநாயகத் தேர்தல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் வேலைமுறைகளைக் கைவிட்டிருக்கின்றன அல்லது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை நோக்கித் தடம் மாறியிருக்கின்றன.

தமிழர் / தமிழ் மரபின் பன்னெடுங்காலப் பகையான ஆரிய / வைதீக மரபின் நீட்சியாகப் பரவியிருக்கும் பாரதீய சனதா கட்சியின் சர்வதிகாரக் காவி பயங்கரவாதத்தையும், ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கத் துணை போன காங்கிரசின் துரோகத்தையும் வேறு வேறாகப் பார்க்க வேண்டியதில்லை. இரு பெரும் கட்சிகளுமே தமிழர் / தமிழ் மரபுக்கு எதிரான துரோகத்தையும் வன்மத்தையும் பகையையும் உள்ளீடாகக் கொண்டிருப்பவையே. இதில் எதிர்க்க வேண்டிய அணி என்றோ அல்லது ஆதரிக்க வேண்டிய அணி என்றோ என ஒன்றுமில்லை. இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டிய அணிகளே. இரண்டு அணிகளுமே இந்தியத்தைப் பாதுகாக்கும் அரசு எந்திரத்துக்கான தேர்தலைத் தான் எதிர்கொண்டுள்ளன.

இந்திய அரசதிகார வடிவம் என்பதும் இந்துத்துவம் எனப்பெறும் ஆரியத்தின் நவீன வடிவம்தான். இந்தியத் தேர்தல் நடைமுறைகள் யாவும் ஆரியத்தின் வேர்களைச் சட்டப்பூர்வ அரசு எந்திரமயமாக்கலின் இன்னொரு முயற்சிதான். ஆக, இந்தியத்தைப் பாதுகாக்கும் எந்தத் தேர்தலும் ஆரியத்திற்கான ஆதரவும் பாதுகாப்பும்தான்.

உண்மையிலேயே, ஆரிய எதிர்ப்பு என்பது இந்திய ஒன்றியங்களில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் தனித்த இறையாண்மை மிக்க அதிகாரத்தைப் பெறுவதில் தான் இருக்கிறது. அதை நோக்கிய அரசியல் செயல்பாடுகளைத் தான் புரட்சிகர / தமிழ்த் தேசிய / இடதுசாரிகள் முன்னெடுக்க வேண்டுமே ஒழிய, ஆரிய எதிர்ப்பு / சர்வதிகார எதிர்ப்பு எனும் பேரில் காங்கிரசை ஆதரிப்பது என்பது மட்டும் அல்ல.

பாரதிய சனதா அல்லது காங்கிரசு இவற்றுள் எதையாவது ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இங்குள்ள மக்கள் திரள் அமைப்புகள் மட்டுமல்ல, புரட்சிகர இடதுசாரிகள் மற்றும் தமிழ்த் தேசியர்கள் கூட முன்னெடுக்க வேண்டும் என்கிற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்குள் நிற்க வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன.

அவ்வகையில், இந்த முறை காங்கிரசு கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கின்றன இந்திய உளவு மற்றும் முதலாளித்துவ ஊடக நிறுவனங்கள். இவர்களின் இத்தகைய காங்கிரசு கூட்டணி ஆதரவு நிலைப்பாட்டை முன்னெடுப்பதற்கு ஆரிய எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டாலும், பாரதிய சனதா கட்சியும் காங்கிரசும் வேறு வேறு என்றோ, அல்லது, காங்கிரசு கட்சியானது பாரதிய சனதா கட்சியிலிருந்து வேறுபட்டது என்பதற்கான வலுவான காரணங்களையும் ஆதாரங்களையுமோ இவர்களால் முன்வைக்க முடியவில்லை.

பெரும்பாலும், காங்கிரசும் பாரதிய சனதா கட்சியும் வேறு வேறல்ல என்கிற அரசியல் பார்வையும் தமிழ்த் தேசியர்களிடமும் இருக்கிறது. அவ்வகையில், தோழர் நலங்கிள்ளி அவர்களது பதிவு சில முக்கியமான உரையாடலை முன்வைத்திருக்கிறது.

"எவருக்கும் வாக்கில்லை எனத் தமிழ்த் தேசியர்கள் கூறுவது ஏன்?

2019 மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் முதன்மையாக பாஜக தலைமையிலான கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மோதுகின்றன.

இந்த மோதலில் இவ்விரு கூட்டணிகளில் இல்லாது போட்டியிடும் மாநிலக் கட்சிகளைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் 545 பேர் இருக்கும் மக்களவையில் இந்தக் கட்சிகளின் வெற்றி சிறு அளவில் கூட தாக்கம் செலுத்தப் போவதில்லை. ஏனென்றால் சட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்வதற்குக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். மாநிலக் கட்சிகள் எவ்வளவு எட்டிப் பிடித்தாலும் இந்த அளவுக்கான இடங்களை வெல்லப் போவதில்லை.

எனவே நாம் பாஜக, காங்கிரஸ் ஆகிய  இரு கூட்டணிகளுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனப் பார்ப்போம்.

மோதி கடந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஆட்சியையே தந்துள்ளார் என்றும்,  மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால், இதுவே கடைசித் தேர்தலாக இருக்கும் என்றும், இந்தியாவின் அனைத்துச் சனநாயக அமைப்புகளையும் மோதி நொறுக்கித் தள்ளி விடுவார் என்றும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நடிகர்கள், சிறு முற்போக்கு இயக்கதினர் எனப் பலரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஏதோ மோதி ஒருவர்தான் இந்தியாவின் பெருங்கேடர் போலவும், ராகுல் காந்தி வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அப்பாவி போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

மோதி சனநாயக விரோதியா? பாசிஸ்டா? இந்துத்துவரா? சமூகநீதி மறுப்பாளரா? மத வெறுப்பரசியல் செய்பவரா? இத்தனைக்கும் ஆமாம் ஆமாம் என்பதே என் பதில். ஆனால் இதற்கு ராகுல் காந்தி எப்படி மாற்றாக முடியும்?

மோதியாவது நெருக்கடி நிலை போன்ற ஓர் ஆட்சியை நடத்தி வருவதாக காங்கிரஸ், திமுக ஆதரவாளர்களே கூறுகின்றனர். ஆனால் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி உண்மையான நெருக்கடி நிலைக் கொடுங்கோன்மை ஆட்சியை நடத்திக் காட்டியவர். இந்திராவின் அந்தக் கேடு கெட்ட ஆட்சியை அனுபவித்தவர்களைக் கேட்டால்,  மோதியின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்பார்கள்.

ராகுலின் பாட்டி சரி, ராகுலின் அப்பா எப்படி? இந்திரா காந்தியைக் கொன்றது ஒரு சீக்கியர் என்பதற்காக ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட  சீக்கியர்களின் குருதியை புது தில்லி வீதிகளில் ஓட விட்டவர்கள் ராஜீவ் காந்தி கூட்டத்தினர். அதற்கு இன்று வரை ராஜீவ் குடும்பம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஒரு பெரும் மரம் சாயும் போது சிறு சிறு செடிகள் நசுங்கத்தான் செய்யும் எனத் திமிராகப் பேசினார் ராஜீவ் காந்தி. இது பாசிசச் செயல் இல்லையா?

வி. பி. சிங் மண்டல் குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய போது, அதனை எதிர்த்து 2 மணி நேரம் மக்களவையில் பேசியவர் ராஜீவ். அவர் மகன் ராகுல் ஏழை இதர சாதியினருக்கு 10% ஒதுக்கீட்டை மோதி கொண்டு வந்த போது அதனை ஆதரித்தார். இவர்கள்தான் சமூகநீதிக் காவலர்களா?

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மோதி நடத்தி வரும் இரத்தக் களரிக்குத் துணை நிற்பவர்தானே ராகுல்? அதைத்தானே ராகுல் ஆட்சிக்கு வந்தாலும் செய்யப் போகிறார்? அப்படியானால் மோதி இந்துத்துவர், ராகுல் இந்துத்துவர் இல்லை எனச் சொல்வதற்கு ஏதேனும் நியாயம் உண்டா?

சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் சல்வா ஜுடும் கொடூரத்துக்கு பாஜக, காங்கிரஸ் இரண்டுக்குமே சமப் பங்கு இல்லையா?

பசு மாட்டு கோமியத்துக்கு எனத் தொழிற்சாலை அமைக்கப் போவதாக மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை சொல்லவில்லையா?

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் மறுப்பதில், எழுவர் விடுதலை எதிர்ப்பில், ஐட்ரோ கார்பன், மீத்தேன் உறிஞ்சுவதில், நியூட்ரினோ திட்டத்தில், ஸ்டெர்லைட் நஞ்சு கக்குவதில், தமிழீழ இனக்கொலையில் தமிழகச் சுற்றுச் சூழல் அழிப்பில் மோதிக்கும் ராகுலுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?

மோதி எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றும் பலரும் திமுகவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையோ மத்திய அரசிடம் இதை வலியுறுத்துவோம், அதை வலியுறுத்துவோம் என ஒரே வலியுறுத்தல்கள் கதையாக இருக்கிறது (அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வலியுறுத்தல் மயந்தான்). இந்த வலியுறுத்தல் அறிக்கையே எந்த அதிகாரத்தையும் நிறைவேற்றவியலாத நிலைமையை அம்பலப்படுத்துகிறது.

இந்தியைத் திணிக்கும் பிரிவு 17 பற்றி எல்லாம் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை. இதற்காகவா 1965இல் தீக்குளித்து உயிர் விட்டோம் என அன்று போராடிய வீரர்கள் இந்த அறிக்கையைப் படிக்க நேர்ந்தால் கொதித்துப் போவார்கள்.

இத்தனையும் மீறி பாஜகவை விட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஓரிரண்டு புள்ளிகளில் சிறந்து விளங்கலாம். ஆனால் ஒரு கட்சியை ஆதரிக்க இது போதாது. அந்த விஞ்சி நிற்கும் புள்ளி அடிப்படை மாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் இதை எல்லாம் செய்யுமா?

•  தமிழ்நாட்டுக்குக் காவிரி தரும் வகையில் அதிகாரப் பல் உள்ள ஆணையத்தை அமைத்துத் தருமா?

• இந்தியைத் திணிக்கும் பிரிவு 17ஐ முற்றாக நீக்குமா?

• ஜம்மு காஷ்மீரிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் இராணுவத்தைத் திரும்பப் பெறுமா?

• இனி இந்தியாவில் ஆள் தூக்கிச் சட்டங்களுக்கோ கறுப்புச் சட்டங்களுக்கோ வேலையில்லை என அறிவிக்குமா?

• மாநில எல்லைப் பிரிவினையில் நேரு சதி செய்து தமிழ்நாட்டிலிருந்து பிடுங்கிய தேவிகுளம், பீர்மேடு, திருவேங்கடம், கோலார் போன்ற பகுதிகளைத் தமிழர்களுக்கே மீட்டுத் தருமா?

• தமிழீழ இனக்கொலை குறித்து விசாரிக்க ஐநாவிடம் கோரிக்கை வைக்குமா?

• தமிழ்நாட்டில் நீதித்துறை, ஒன்றிய அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அனைத்தும் தமிழில் மட்டுமே இயங்க சட்டம் இயற்றுமா?

• சிபிஎஸ்இ, நவோதயா என எந்த மத்திய அரசு கல்வி வாரியம் எதற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என அறிவிக்குமா?

• தமிழ்நாட்டிடமிருந்து இந்திரா களவாடிச் சென்ற கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றித் தருமா? 

இத்தகைய அடிப்படை மாற்றங்களை காங்கிரஸ் செய்து காட்டட்டும், அல்லது செய்து காட்டுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கட்டும்.. பிறகு தமிழ்த் தேசியர்களும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆதரிப்பது பற்றி யோசிக்கலாம்" என்கிற அரசியல் பார்வையை முன்வைத்திருக்கிறார் தோழர் நலங்கிள்ளி.

காங்கிரசு மீதான இந்த விமர்சனம் என்பதைக் கூட ஆரியச் சார்பானது; பாசிச ஆதரவானது எனப் பலவாறாகச் சொல்லவும் கூடும்.

தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில் ஆரியம் எப்போதுமே எதிரானது; நஞ்சானது; எதிர்க்கப்பட வேண்டியது. அதேபோல, தமிழர் நிலத்திற்கும் இனத்திற்கும் நலத்திற்கும் துரோகம் செய்த காங்கிரசும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். காங்கிரசுடன் விமர்சனமற்று கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கட்சிகளும் துரோகத்திற்குத் துணை போனவை என அம்பலப்படுத்த வேண்டியவைதான்.

ஆகவே, தமிழ் நிலத்தையும் இனத்தையும் மொழியையும் காத்திடும் பெரும் போராட்டக் களத்தில் ஆரியமும் துரோகமும் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பதை மக்களிடத்தில் திரும்பத் திரும்ப விதைத்துக் கொண்டே இருப்போம்.

ஏர் மகாராசன்
16.04.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக