திங்கள், 6 ஏப்ரல், 2020

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: முக்கியமானதோர் ஆய்வு நூல் :- அறிவியலாளர் பிரபாகரன்.




முனைவர் மகாராசன் அவர்களுடைய தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்ற முக்கியமானதொரு ஆய்வு நூலை நேற்று தான் முழுவதுமாக வாசிக்க நேர்ந்தது. இதை முக்கியமான புத்தகம் என்று சொல்வதற்கு என்னிடம் நான்கு காரணங்கள் உள்ளன. 1) பேச்சும் எழுத்தும் சேர்ந்த மொழியின் அடிப்படைக் கூறான பேச்சு தோன்றிய விதத்தை, அதன் தேவையை டார்வினின் பரிணாமக் கொள்கையின் வழி நின்று விளக்கிய விதம். “முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தியதாலும், குரல் வளையை பேசுவதற்கு உபயோகப்படுத்தியதாலுமே” குரங்கிலிருந்து மனிதன் வேறுபடுகிறான் எனவும் இந்த இரண்டிற்கும் அடிப்படை, உழைப்பு மட்டுமே என்ற அறிவியலை மிகத் தெளிவாக, பேச்சின் தோற்றம் குறித்த விளக்கத்திற்கு பயன்படுத்தியதற்கு. 2) “தமிழி” எழுத்துகளின் காலம் (தோராயமாக கி.மு 5-6 ஆம் நூற்றாண்டு) பிராமி எழுத்துகளுக்கும் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) முந்தியது என்பதை “கொற்கை, ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகங்குளம்” போன்ற இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் முடிவுகளுடன் ஒப்பிட்டு வாதிட்டிருப்பது. மேலும் “தமிழி” எழுத்து அரசதிகார எழுத்தாகவோ, கடவுளின் எழுத்தாகவோ இல்லாமல் அது மக்களின் எழுத்தாக இருந்ததை ஆதாரத்துடன் குறிப்பிட்டதற்கு. 3) ‘பாட்டியல்’ உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்கள் “தமிழ்” எழுத்துக்களின் மீது சாதிய- மத- வர்க்க- பாலின பாகுபாட்டை ஏற்றிருந்ததையும் அப்படி அத்தகைய அடையாளங்கள் இருந்தாலும் அதனால் “தமிழ்” எழுத்துகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பல இலக்கண நூல்களின் வழி கொடுத்த விரிவான விளக்கத்திற்கு. 4) இதுதான் மிக மிக முக்கியமானது. நீண்ட நெடும் வருடங்களாக தமிழ் எழுத்து முறையில் இருந்து வரும் “உ” என்ற எழுத்துக் குறியீட்டுடன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை மறு ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சித்ததற்கும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பரந்த ஆய்வும். தமிழ் எழுத்து மரபில் “உ” என்ற எழுத்தைக் கொண்டு ஒரு விஷயத்தை எழுத ஆரம்பிக்கும் பழக்கத்திற்கு உண்மையான காரணம் பிள்ளையார் சுழிக்காக அல்ல. மாறாக “உலகம்” என்ற ஒரு பொதுமைப்படுத்தலைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்பதை இலக்கியம், மக்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் மற்றும் குல தெய்வ பெயர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டிருப்பது. இந்த நான்கு முக்கிய விளக்கத்திற்கும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட ஆய்விற்கும் வாழ்த்துகள். தமிழின் மீதான உங்களின் ஆய்வு மேலும் தொடரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக