திங்கள், 18 ஏப்ரல், 2022

தமிழ் ஆண்டுப் பிறப்பை எதுவாகக் கொள்வது? - மகாராசன்


தமிழ் நிலம் முழுவதையும் ஒரே மன்னர் ஆண்டிருக்கவில்லை. வட்டார அடிப்படையிலும் மண்டல அடிப்படையிலும் பல்வேறு பெருநில மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். 

தமிழ் நிலம் பல்வேறு அயல் இனத்தாரின் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, பல்வேறு அயல் மொழி, பண்பாட்டு அதிகாரங்கள் பல காலம் நீடித்திருக்கின்றன. 

ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நடைமுறைப்படுத்திய - பின்பற்றிய ஆட்சி ஆண்டு நடைமுறைகளே அந்தந்த காலகட்டத்தில் ஆண்டுப் பிறப்பாகவும் கொண்டாட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழர்கள் எல்லா பருவங்களையும் இன்முகத்தோடு வரவேற்கும் பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். 

இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி, கார், கூதிர் என ஆறு பருவகாலங்களையும் வரவேற்று மகிழ்ந்திருக்கின்றனர். அந்தவகையில், தையும் வரவேற்றுக் கொண்டாடப்பட்டிருக்கிறது. சித்திரையும் வரவேற்றுக் கொண்டாடப்பட்டிருக்கிறது. தமிழ் ஆண்டுத் தொடக்கம் தையா? சித்திரையா? எனும் குழப்பங்களும் விவாதங்கள் இன்னும் நடந்துகொண்டிருப்பதற்கான காரணம் யாதெனில், எல்லாக் காலத்திலும் குறிப்பிட்ட மாதத்தை மட்டும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியிருக்கவில்லை என்பதுதான். 

இப்போதைய காலகட்டத்தில், தமிழர்களுக்கான ஆண்டுப் பிறப்பை எதுவாகக் கொள்வது?

சித்திரையும் தையும் ஆண்டுப் பிறப்பு மாதங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த இரண்டில் எதை ஏற்பது? சித்திரையை ஆரியமும் முன்மொழிந்திருக்கிறது; வழிமொழிந்திருக்கிறது. தமிழ் மரபில் சித்திரையும் உண்டு; தையும் உண்டு. இறுதியாக, ஆண்டுக் கணக்கிற்கு- ஆண்டுத் தொடக்கத்திற்கு உரிய மாதமாகக் கொள்வது எதை? 

ஆரியத்திற்கு எதிராகவும் மறுப்பாகவும் இருந்திருப்பதே தமிழர் மரபு. அவ்வகையில், ஆரியத்திற்கு எதிரானதான பண்பாட்டு நடத்தையாகக் கொள்ளும் வகையில், தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டாகக் கருதலாம். சித்திரையை வேனில்காலத் தொடக்கமாய்க் கொண்டாடலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக