திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்பேத்கர் சிலை உடைப்பும் அதன் பின்னாலான சமூகப் பின்புலமும் : மகாராசன்

அறிவர் அம்பேத்கரை அவமதிப்பதற்காக அந்தச் சிலையை உடைத்து நொறுக்கவில்லை என்பது அந்தச் சாதிவெறி மன நோயாளிகளுக்கும் தெரியும். அந்தச் சாதிய வெறியர்கள் வேறொன்றை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

 கடந்த காலத்திலும் இப்போதும்கூட அண்ணல் அம்பேத்கரை ஓர் அடையாளமாகவும் குறியீடாகவும் வழிகாட்டியாகவும் முன்னெடுத்துக் கொண்டிருப்பது தாழ்த்தப்பட்டோர் எனப் பொதுச் சமூகத்தால் அடையாளப்படுத்தப்படும் பட்டியல் சாதியினர்தான்.

அம்பேத்கர் பட்டியல் சாதிப் பிரிவில் பிறந்தவர் என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, பட்டியல் சாதியினர் அம்பேத்கரை தமது அடையாளமாகக் கொண்டிருக்கவில்லை. கல்வி, வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்ட குறிப்பிட்ட சமூகப் பெருந்திரளினருக்குக் கல்வி கற்கவும் வேலை வாய்ப்புகளில் பங்கேற்கவுமான இடஒதுக்கீடு அம்பேத்கரால் கிடைக்கப்பெற்றது என்பதை பட்டியல் சமூகப் பிரிவினர் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருப்பதும் போற்றுவதும் இயல்பான ஒன்று.

அதே வேளையில், அம்பேத்கரின் நோக்கமோ அல்லது அரசியல் சட்ட வரைவுகள் உருவாக்கப் பணிகளோ பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகப் பிரிவினரை மட்டுமே மய்யமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இந்தச் சமூகத்தின் பெரும் பிரிவினராக இருந்து கொண்டிருக்கும் உயர்த்திக் கொண்ட சாதியினர் என உள்ளூரப் பெருமிதத்தில் இருந்து கொண்டிருக்கும் இதரப் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமயப் பிரிவினர், பெண்கள் எனச் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டுதான் - அவர்களது சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில்தான் அரசியல் சட்ட வரைவுகள் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்டன.

1950களுக்குப் பிறகு கல்வி வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மைச் சமூகப் பிரிவினர் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனில், அது அம்பேத்கரால் கிடைக்கப்பெற்ற சமூக நீதியால்தான். குறிப்பாக, அம்பேத்கர் வடிவமைத்த சட்ட வரைவுகளால் அதிகமும் பயனடைந்து கொண்டிருப்பது பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர் தான்.

இன்றைக்கும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மூலமாகவே பி.சி., எம்.பி.சி பிரிவினர் கல்வி வேலைவாய்ப்புகளில் அதிகமான பயன்களை அடைந்திருக்கின்றனர்.
உண்மையாகவே, பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினர் எனப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர்தான் அம்பேத்கரைக் கொண்டாடி இருக்க வேண்டும்.

ஆனால், மேட்டிமைச் சாதியினர் எனத் தாம் கருதிக் கொண்டிருக்கிற உயர்த்திக் கொண்ட சாதியினர், அம்பேத்கார் பிறந்த சாதிப் பின்புலம் என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர் தமது சாதிக்காரர் அல்லது சாதிப் பிரிவினர் அல்ல; அதனால் அவர் தமக்கானவர் அல்ல என்கிற சாதியக் கண்ணோட்டத்திலேயே அம்பேத்கரை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அம்பேத்கர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானவர் அல்லர் என்கிற பொதுப்புத்தியை - சாதியக் கண்ணோட்டத்தை - குறுகிய மனப்பான்மையை - சாதிய வன்மத்தை அந்தச் சமூகப் பிரிவின் பெருவாரியான மக்கள் அனைவருமே கொண்டிருந்தவர்களாகவோ அல்லது இப்போதும் கொண்டிருப்பவர்களாகவோ பொத்தாம் பொதுவாக அந்த மக்கள் அனைவரின் மீதும் குற்றம் சுமத்திவிட முடியாது;கூடாது.

பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் அம்பேத்கரைக் குறித்த சாதியப் பிம்பத்தைக் கொண்டு சென்றதில் பெருவாரியான அந்த மக்களைக் காட்டிலும், அந்த மக்களை முன்வைத்து அரசியல் செய்திருக்கிற, இப்போதும் செய்து கொண்டிருக்கிற வாக்கு அரசியல் கட்சிகளான காங்கிரசு, திராவிட மற்றும் இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் ஒட்டுண்ணிக் கட்சிகள், அவற்றுக்கெல்லாம் ஆதரவளிக்கும் இயக்கங்கள், வர்க்க அரசியல் பேசுகிற - புரட்சிகர அரசியல் பேசுகிற இந்திய மற்றும் தமிழ்த் தேசிய அளவிலான புரட்சிகரக் கட்சிகள், தமிழ் அடையாள அரசியலை முன்னெடுக்கிற கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் பெரும் பங்குண்டு.

அம்பேத்கர், பட்டியல் சமூகப் பிரிவினில் பிறந்த ஒருவர் என்றாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி வேலைவாய்ப்புக்குமான இடஒதுக்கீட்டைப் பெற்றுத்
தந்ததற்கும் அவரே காரணம் என்பதால் அவரை அந்தச் சமூகப் பிரிவினர் தூக்கி வைத்துக் கொண்டாடும்படியான மனநிலைக்கு மேற்குறித்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் யாவும் முனைந்திருக்க வேண்டும். மாறாக, அம்பேத்கர் பட்டியல் சமூகப் பிரிவினருக்கானவர் என்கிற அரசியல் பிம்பத்தையே பிற்படுத்தப்பட்ட மக்களிடமும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் விதைத்திருக்கின்றன. அதோடு சேர்த்து, அம்பேத்கர் பட்டியல் சமூகத்திற்காகவே பாத்தியப்பட்டவர் என்பதைப் பட்டியல் சமூகத்தவர் மட்டுமே முன்னெடுக்கும்படியான அரசியல் சூழலையும் மேற்குறித்த கட்சிகளும் இயக்கங்களும் உருவாக்கி வைத்திருக்கின்றன.

அம்பேத்கர், அனைவருக்குமான தலைவர் என்கிற புரிதலுக்குப் பதிலாக, அம்பேத்கர் பட்டியல் சமூகத்திற்கானவர் என்கிற சாதிய மனநோய் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினரிடம் அண்மைக்காலமாகப் பரவி வருகிற சமூக நோயாய் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமூக நோயைத் தீர்ப்பதிலும், அம்பேத்கர் நம் அனைவருக்குமானவராகக் கட்டமைப்பதிலும் பட்டியல் சமூகப் பிரிவு மக்கள் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைக் காட்டிலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் அரசியல் வேலை செய்கிற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கே பெரும் பங்குண்டு.

உண்மையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை முன்வைத்து அல்லது அவர்களிடம் வேலை செய்கிற கட்சிகளும் இயக்கங்களும் உண்மையுடனும் நேர்மையுடனும் சனநாயகப் பண்புடனும் சமூக அக்கறையுடனும் இருக்கின்றன எனில், அவை யாவும் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க முன்வர வேண்டும். அந்த மக்களிடம் அம்பேத்கரைக் குறித்து நேர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும். அம்பேத்கரை அந்தச் சமூகப் பிரிவினர் புரிந்து கொண்டாலே - ஏற்றுக் கொண்டாலே இதரப் பட்டியல் சமூகப் பிரிவு மக்களையும் சமூக சமத்துவத்தோடு அணுகவும் உறவாடவுமான நிலைமைகள் ஏற்படும்.

ஆகவே, திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் யாவும் அம்பேத்கரைப் பட்டியல் பிரிவு மக்களிடம் கொண்டு செல்வதையும் தாண்டி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் முதலில் கொண்டு செல்ல வேண்டியது உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதோடு சேர்த்தே, சாதி வெறித் தாக்குதல்கள், இது போன்ற சிலை உடைப்புகளைச் செய்யும் உயர்த்திக் கொண்ட சாதியினரின் சாதிய மேலாதிக்கச் செயல்பாடுகளைத் துணிவுடன் கண்டிக்கவும் எதிர்க்கவும் முன்வர வேண்டும். பெயரளவுக்கான கண்துடைப்பு அறிக்கையாக இருந்து விடக் கூடாது. பொதுவாகவே, ஒரு சில பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் மீது காழ்ப்புணர்வோடு அணுகுவதும், வேறு சில பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினரைக் கண்டிக்கவும் எதிர்க்கத் தயங்குவதுமான போக்கும் மேற்குறித்த கட்சிகளிடமும் இயக்கங்களிடமும் இன்னும் இருக்கின்ற. சாதிய மேலாதிக்கமும் சாதியத் தாக்குதல்களும் சிலை உடைப்புகளும் எந்தச் சாதிப் பின்புலத்தில் நடந்தேறினாலும் அதைக் கண்டிக்கவும் எதிர்க்கவும் முன்வர வேண்டும். இது தாமதமானால், இன்னும் பல அம்பேத்கர் சிலைகள் உடைபடும்; அம்பேத்கரை அடையாளமாகக் கொண்டிருக்கும் பட்டியல் சமூகப் பிரிவினர் பலரும் கொல்லப்படுவார்கள்.

ஏர் மகாராசன்
26.08. 2019

ஓவியம்:
தோழர் இரவி பேலட்

1 கருத்து:

  1. தோழர்,
    இடதுசாரி இயக்கங்கள் இப்போது அம்பேத்கர் குறித்து அதிகமாக பேசுகின்றனர்...

    பதிலளிநீக்கு