வியாழன், 22 ஆகஸ்ட், 2019

செம்பச்சை நூலகம்: அறிவிப்பும் வேண்டுகோளும்.

எம் வாழ்வின் பெருங்கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறோம். ஓர் இல்லறத்தின் ஒரு பாதியாய் நிமிர்வகத்தையும், இன்னொரு பாதியாய் செம்பச்சை நூலகத்தையும் உருவாக்கி இருக்கிறோம்.

கால் நூற்றாண்டாய் எம் சேகரிப்பில் இருந்த நூல்கள் அனைத்தும் நூலகத்தில் இருக்கின்றன. இன்னும் புதிய, இதற்கும் முந்தியப் பழைய நூல்களையெல்லாம் நூலகத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற பெருந்தாகம் இருக்கின்றது.

நாங்கள் உருவாக்கி இருக்கும் இந்த நூலகம் எமது பயன்பாட்டுக்கு மட்டுமல்ல. அறிவுத் தாகமும் வாசிப்புப் பழக்கமும் உள்ள யாவரும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, ஆய்வு மாணவர்கள், படைப்பாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், போட்டித் தேர்வர்கள் போன்றோர் காரி(சனி)க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

குளிர்மை அரங்கு, கணினி, இணையம், அச்சுப்பொறி, தங்குவதற்கான விருந்தினர் அறை உள்ளிட்ட வசதிகள் எழுத்துச் செயல்பாட்டினருக்கு உதவும். வயது மூப்பு கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் படைப்பாளிகள் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கியிருந்து எழுத்துப் பணிகளை மேற்கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 50 பேர் வரை அமரக்கூடிய வகையில் சிற்றரங்கமாகவும் செம்பச்சை நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர், தமிழ் நிலம், தமிழ்க் கலை இலக்கியம், பண்பாடு சார்ந்த செயல்பாடுகளை அக்கறையோடு மேற்கொள்ளும் அமைப்புகளின் கருத்தரங்கம் மற்றும் கூடுகை நிகழ்வுகளை நடத்திக் கொள்ளவும் நூலக அரங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆய்வாளர்கள், படைப்பாளிகள், இதழாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் நூல் வாசிப்பாளர்கள் செம்பச்சை நூலகத்திற்குப் புதிய நூல்களையோ அல்லது பழைய நூல்களையோ கொடையாக வழங்கினால் நூலகம் இன்னும் பல வகையில் பயன்படக்கூடும். அன்பர்களிடமிருந்து நூல்கொடையை எதிர்பார்த்து நிற்கிறது செம்பச்சை நூலகம்.

முன்னோர்களின் சேகரிப்பில் உள்ள பழைய புத்தகங்கள் பராமரிக்க இயலாமலும் பயன்பாடு இன்றியும் தங்கள் வசம் இருப்பின் நூலகத்திற்குக் கொடையளிக்கலாம். அஞ்சலிலோ தூதஞ்சலிலோ அனுப்பலாம். நிறைய புத்தகங்களாக இருப்பின் நேரிலே வந்து பெற்றுக் கொள்ளவும் காத்திருக்கிறோம்.

நம் சேகரிப்பில் உருவாகும் இந்த நூலகம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும்.

எழுத்துச் செயல்பாட்டிற்குத் தம் கையளவு கைம்மாறைச் செய்திடக் காத்திருக்கிறது செம்பச்சை நூலகம்.

தொடர்புக்கும்
நூல் அனுப்புவதற்குமான
முகவரி :

முனைவர் மகாராசன்,
செம்பச்சை நூலகம்,
208, நிமிர்வகம்,
வைகை அணை முதன்மைச் சாலை, காந்தி நகர்,
செயமங்கலம் - 625 603,
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்.
பேச 9443676082.
மின்னஞ்சல் :
maharasan1978@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக