வெள்ளி, 21 ஜூன், 2024

கார்காலத்துப் பசுங்கனவு - விசாகன்


மானுட அறத்தை வீழ்த்தும் குணாம்சம் கொண்ட மதவாதம் பீடிக்கத் தொடங்கிய கடந்த பத்தாண்டுகளில் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்து வருகின்ற அரசியல் மாற்றம், செழுமைமிகு சமூக மாற்றம், சூழலியல் மேம்மாடு, மொழியழிப்பு முயற்சியிலிருந்து தற்காத்தல் போன்றவற்றிற்கான சவால்மிகுந்த செயல்பாடுகளில் படைப்பிலக்கியவாதிகளின் பங்குபணி மகத்தானது. அவர்கள் தங்களுடைய எழுத்துகளால் வெளியெங்கும் நிரப்பிய அமைதிப் புரட்சியின் வீச்சு அடர்த்தியானது மாத்திரமல்ல, அலாதியானது. தமிழில் குறிப்பிடத்தக்க வகையில் சமீபத்திய ஆண்டுகளில் வெளிவந்த நாவல்கள், கதைகள், கவிதைகள் என பல படைப்புகள், சில கருங்காலிகளின் இருப்பைத் தகர்த்து வலதுசாரிகளின் அரசியல் வீழ்ச்சியைப் பறைசாற்றின. 

அந்தவகையில், மொழிசார்ந்தும் நிலம் சார்ந்தும் உருக்கொள்கின்ற தனது படைப்புகளின் வழியாக வலதுசாரிகளின் வீணாய்ப்போன கனவுகளில் பேருடைப்பைச் செய்து வருகின்ற சின்னஉடைப்பைச் சேர்ந்த தோழர் மகாராசன் பெரும் கவனங்கொள்ளத்தக்கவராக இருக்கிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கின்ற அவரின் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு இதற்கு மேலும் அணி சேர்க்கிறது.

நிலம், மனிதம், மொழி இந்த மூன்றுக்குமிடையேயான தனித்த இணைப்பின் விழுமியங்களை உணர்ந்துகொண்டவர்களின் சமூகம் உலக அளவில் மேம்பட்டதாக இருக்கிறது. எனவே வெகுமக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இது ஒரு தேர்ந்த அரசியல் செயல்பாடாகும். 

இவ்வாறான விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்ற வலதுசாரிகளின் பணிகளைவிட இடதுசாரிகளின் செயலூக்கம் பின்தங்கியிருக்கின்றது என்பது நமக்கான கெடுவாய்ப்பு. இதுபோன்ற தொய்வுகளை ஈடுகட்டுகின்ற இலக்கியப் பணிகளிலும் மகாராசனின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது. 

‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பு 55 கவிதைகளைக் கொண்டிருக்கிறது. கவிஞர் யுகபாரதியின் அணிந்துரை மற்றும் முனைவர் அரங்கமல்லிகாவின் மதிப்புரையோடு வந்திருக்கின்ற இந்த நூலை ‘யாப்பு’ வெளியிட்டிருக்கிறது. பக்கங்கள் 112, விலை 100. 

தனது கவிதைகளில் தோழர் மகாராசன் கையாண்டிருக்கின்ற சொற்களை இன்றைய தலைமுறையினர் வாசிக்கின்ற வாய்ப்பு அமையுமானால் தமிழின் உன்னதத்தைப் புரிந்துகொள்ளும் நல்வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். “மகாராசன், தன்னுடைய கவிதைகளின் வெளியைச் சொற்சேர்க்கைகளின் வழியே கட்டமைக்கிறார்” என்கிற கவிஞர் யுகபாரதியின் கூற்றை மேற்கண்ட எனது கருத்துக்குச் சான்றாக வைக்கின்றேன். 

சரி, இந்த நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகளின் மையப் பாடுபொருள் என்னவென்று நாம் கவனித்தோமானால், நிலம், மனிதம், மொழி இவைகளின் விழுமியங்களே கவிதைகளின் ஒவ்வொரு சொற்களிலும் தோய்ந்து கிடக்கின்றன. நிலமிழந்தவர்கள் மற்றும் நிலமற்றவர்களின் வலியின் பிரதியாக இந்த நிலத்தில் முளைத்த சொற்கள் இருக்கின்ற நிலையில், மொழி தேய்ந்த கதையும், மனிதம் அற்றுப்போன கையறு நிலையையும் நிலமிழந்தவர்களின் வலியின் வழியே கடத்தப்படுகின்ற கதைகள் நம் மனக்கண் முன்னே விரிகின்றது. 

“புயலடித்துக் கூடிழந்த குஞ்சுகளும்
வீடிழந்த சம்சாரிப் பிஞ்சுகளும்
குளிரில் ஒடுங்கி நடுங்கித் தவித்தன.
ஊருக்குச் சோறு போட
உழைத்த சனமெல்லாம்
ஒரு வாய் சோற்றுக்கும்
ஊரிடம் கையேந்தி நின்றபோது
உக்கித்துப் போனது நிலம்.

பச்சிளம் பிள்ளைகளைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளாய்
அரற்றித் துடிக்கிறாள் நிலத்தாய்ச்சி.
சம்சாரிகளாய்ப் பிறந்ததன் வலி
சாவிலும் கொடிது” .
தொகுப்பில் உள்ள இந்த 20 வது கவிதை ஒரு சோற்றுப்பதம்.

சமீபத்தில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் ஒரு உரையில், வைரமுத்து பாடல்களில் பல்லவி வரிகளில் விரிகின்ற காட்சிகள் குறித்து சிலாகித்திருந்தார். உதாரத்திற்கு ‘பனிவிழும் மலர்வனம்’ என்று தொடங்கும் பாடலைச் சுட்டிக்காட்டினார். அதைப்போல மகாராசன் கவிதைகளில் வைத்திருக்கின்ற காட்சிப் படிமங்கள் அபாரமானவை, மட்டுமல்ல சமகாலச் சூழலில் அபூர்வமானவை.

 ‘பனையோலைத் தூர் இடுக்கு’ ‘கல்லடுக்குகளின் செதில்கள்’ ‘கோபுர நிழல் மறைப்பு’ ‘பசப்பூறிய பூசனத்தின் ஈரம்’ ‘குலையோடு சரிந்த வாழை’ ‘தான்தோன்றிப் புற்களின் வாசம்’ …….. என தொகுப்பு முழுமைக்குமே உயிர் உருக்கும் காட்சிப் படிமங்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

‘ஆறுகளின் நாவுகள் ஈரம் பாடுதலை நிறுத்திக்கொண்டன’ என்ற வரிகள் உள்ள 52 வது கவிதை இத்தொகுப்பின் உச்சமாக இருக்கிறது என்பது எனது கணிப்பு. 

மனிதத்தின் பாடுகளையும், நிலம் படுகின்ற அவஸ்தைகளும் சொல்லிச்செல்கின்ற ஒரு படைப்பாளர் அதனூடாக எப்போதும் நம்பிக்கை விதைகளையும் எதிர்காலக் கனவுகளையும் விதைத்து வருவார் என்பது இயல்பு. மகாராசன் சொல்கிறார்…

“பூஞ்செடிகளின்
இலைகளைத் தைத்து
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.

மண்ணுக்குள் புதைந்திருக்கும்
பெருமரத்து வேர்களின்
நுனி முடிச்சுகளோடு
கிளையில் துளிர்க்கும் இலைகளின்
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.

இறகின் கனமும்
பூவின் மணமும்
அரும்பிடும் வாழ்க்கை
இனிதுதான்.

எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பிற்கென சாகித்திய அகாடமி பெற்ற விருதாளர், சற்றேறக்குறைய 75 வயதைக் கடந்த சா.தேவதாஸ் அவர்களைக் காண நான் அவருடைய ஊருக்குச் சென்றிருந்தபோது, அவருடைய வீடு விசாரிக்கையில் அக்கம் பக்கத்து குடியிருப்போருக்குக்கூட அவர் பெயர் தெரியவில்லை என்கின்றபோது அவரின் எழுத்தின் வீரியம் எப்படித் தெரியக்கூடும்! அதுபோன்றதொரு அவலநிலை சமகால எழுத்தாளருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். 

ஒரு நடுத்தர வயது மக்கள் படைப்பாளர், புனைவு, அபுனைவு என சுமார் 20 நூல்கள் எழுதிய, தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர் மகாராசன் இதோ கூப்பிடு தொலைவில்தான் இருக்கின்றார். அவருடைய படைப்புகள் தமிழக பட்டிதொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை இலக்கிய அமைப்புகளுக்கு இதன் மூலமாக வைக்கின்றேன். 

அதோடு, சமகாலத்தில் வந்த கவிதைத் தொகுப்புகளில் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ கவிதைகளில் கையாளப்பட்டிருக்கின்ற மொழியின் வீச்சு கனமானது என்கின்ற புரிதலின் அடிப்படையில், ஒரு கடைக்கோடி வாசகனாய் மகாராசனின் இந்த ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ தொகுப்பிற்கு சாகித்திய அகாடமி விருது வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பிற்குப் பரிந்துரைக்கின்றேன். 

தோழர் மகாராசனின் படைப்புகள் கோடான கோடி தமிழ் வாசகர்களுக்குச் சென்றடைய எனது வாழ்த்துகள்!

கட்டுரையாளர்:
எழுத்தாளர் விசாகன்,
பதிப்பாளர், பன்முக மேடை,
தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை, தமிழ்நாடு.

உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள் - அய்யனார் ஈடாடி



பசப்படித்த நிலமும், ஈரம் பொதிந்த மண்ணும் சுமக்கும் வலிகளைப் பேசுகின்றன மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்'. 

இந்நூல், இனத்தின் பசியும் நிலத்தின் வலியும் கண்களில் நீரைத் திரட்டிக் கொப்பளிக்கச் செய்கின்றன. கங்குகள் சுமக்கும் பெருங்காட்டின் வேதனைகளைச் சொல்லி மாளாது அகம் நொந்து முடிவுறாத ஒப்பாரிகளாய்ப் பாடுகின்றன.

தொல்நிலத்தின் காணிகளைப் பிடுங்கி எக்காளமிட்டுச் சிரிக்கும் முந்நிறத்துகொடி இன்றும் தூக்குக் கயிறுகளாய் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பேசுகிறது இந்நூல்‌.

தொரட்டிகளால் முறிக்கப்பட்ட எம்நிலத்தின் பூங்கிளைகளைகளுக்காக அரற்றுத் துடிக்கிறாள் நிலத்தாய்ச்சி. ஊர் தெறிக்கும் மணிக்குலவையோடு பிள்ளைமுடி வாங்கும் குடும்பச்சியின் நடுகை, நினைவுச் சுடராய் நிமிர்கின்றது.

சொல்லளந்து போட்ட குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளந்து போடும் குடும்பச்சிகளின் வெள்ளந்தி மனம், மனதை இறுகப் பற்றித் தழுவுகிறது.

ஏர் மகாராசன் அவர்களின் எழுத்துழவு நிலத்தின் பாடுகளைச் செம்மையாகப் பாடுகின்றன; சொற்கள் வெடிக்கின்றன. சங்க இலக்கியங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிமிர்கின்றன.

வெடித்துச் சிதறிய நிலத்தில் மக்களின் வேதனைகள் சூட்டுக் காய்களாய்ச் சுட்டி இருக்கிறது கவிஞரின் வெள்ளந்தியான சிவந்த இதயத்தை. இன்னுமோர் தலைவனைத் தேடித்தான் அலைகிறது காய்ந்த நிலத்தின் மடி, கிடத்தி அமர்வதற்கு.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
மதுரை.
**

நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் 112,
விலை ரூபாய் 100/-
நூல் வேண்டுவோர் 
தொடர்புக்கு:
90805 14506.


அழகிய கவிதை மொழியிலான வித்தியாசமான பாடுபொருட்கள் - சிவக்குமார் கணேசன்


நிலத்தை நம்பி விவசாயம் செய்து வாழும் மக்களின் வாழ்வை, மகிழ்வை,பெருந்துயரை, மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிற கவிதைகளின் தொகுப்பு, மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்'.

ஒரு கவிதையில் அவரே சொல்வதுபோல, தன் அத்தனை பாடுகளையும் கவிதைகளில் இறக்கி வைத்திருக்கிறார்.


'கல்லடுக்குகளில் செதில்களில்

வேர்களை நுழைத்தபடி 

கோபுர நிழல் மறைப்பில் 

வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது

இச்சிச் செடி'

என்று துவங்கி,


'எழுதப்படாமலே போனது 

எனதூர்த் தல புராணம்'

என்று முடிகிற, கைவிடப்பட்ட கோவிலொன்றின் துயரத்தைப் பேசுகிற கவிதையில் உணர்வுகள் கொந்தளிக்கின்றன.


'பசப்பூறிய பூனத்தின் ஈரத்தில்

நீந்தத் தவித்து

சுற்றுக்கல் புடைப்புகளில்

ஒட்டிக் கிடக்கின்றன

கெண்டை மீன்கள்'.


எத்தனை அழகிய வரிகள் இவை. வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது செடி என்று வெறுமனே குறிப்பிடாமல், இச்சிச் செடி என்று அந்தச் செடியின் பெயரைக் குறிப்பிட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.


'வயலைப் பாழ்படுத்தி

பயிர்களைச் சாகடித்துத்தான்

விளக்கெரிய வேண்டுமெனில்

வயிறு எரிந்து சாபமிடும்

உழவர்கள் தூற்றிய மண்ணில்

எல்லாம் எரிந்து சாம்பலாகி

நாசமாய்ப் போகட்டும்'

என்கிற வரிகளில் எத்தனை தகிப்பு.


'வாழ்தலின் பேரின்பத்தை 

மணக்க மணக்கப் பாடியது 

பூப்பெய்திய காடு'

என்று அவர் சொல்கிற காடு, வனம் அல்ல. விளை நிலம்.

 

வெறுமனே துயரங்களை மட்டும் கவிதைகளில் பாடாமல்,

'இறகின் கனமும் 

பூவின் மனமும் 

அரும்பிடும் வாழ்க்கை

இனிதுதான்'

என்று நம்பிக்கை விதையையும் விதைக்கிறது ஒரு கவிதை.


பசப்படித்தது நிலம், நிலத்தாய்ச்சி, தொளி வயல், நீர் முலைத்தாய்ச்சி, வேம்பு மரத்தாய்ச்சி, பனந்தூர்க் குதுவல் மறைவு, இப்படி புதுப்புது அழகிய ஆச்சர்யமான வார்த்தைகள் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன.  


நாகரிகப் போர்வை போர்த்திய காட்டுமிராண்டி மனிதர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மது, பலிபீடத்தின் மீது அமர்ந்திருந்த பிரபாகரின் மகன் பாலச்சந்திரனின் கண்கள், காட்டுத்தீயை அணைக்கும் சிறுமழை, பொசுங்கிய வாழ்வை நினைத்துக் கால்கள் பொசுக்க நடந்த கண்ணகி, வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்ட காடுகளின் ஆதிக்குடிகள், இலங்கையின் இறுதி யுத்தம், நல்லதொரு குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளித்து, சொல்லளந்து போட்டவனுக்கு நெல்லளந்து போடுறதுதானப்பா சம்சாரிக வாழ்க்க என்று சொல்லும் பெண், காதலற்ற முத்தங்களால் கசங்கிக் கிடக்கின்ற எச்சில் கோப்பைகள், மறைகாலத்தின் களவுப் பூ, மந்தையில் ஓரத்தில் கிடக்கிற இளவட்டக் கல், இப்படியான வித்தியாசமான பாடுபொருள்களாலான கவிதைகளின் தொகுப்பு.


முகப்புப் படமும், தொகுப்பிலுள்ள ஓவியங்களும் அழகு.


ஒரு வாசகனை, நான்காவது வரியை வாசிக்க வைப்பதுதான் இன்றைக்குப் பெரும் சிரமம் என்று நண்பர்களிடம் சொல்வேன். தொகுப்பில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை நெடுங்கவிதைகள் என்றாலும், உள்ளடக்கத்தால், அழகான கவி மொழியால், வாசிப்பவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.


முனைவர் மகாராசன், மதுரை சின்ன உடைப்பைச் சேர்ந்தவர். ஏர் இதழை நடத்தியவர். பெண்மொழி குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், உரை நூல்கள்,தொகுப்பு நூல்களை எழுதியுள்ள இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.


கட்டுரையாளர்:

முனைவர் சிவக்குமார் கணேசன்,

கவிஞர் மற்றும் நீரியல் / பறவையியல் அறிஞர்.

மதுரை.

*

நிலத்தில் முளைத்த சொற்கள்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு,

பக்கங்கள் 112,

விலை ரூபாய் 100/-

நூல் வேண்டுவோர் 

தொடர்புக்கு:

90805 14506.

ஞாயிறு, 2 ஜூன், 2024

உண்மையை ஆணித்தரமாகப் பேசும் நூல் - கல்பனா சாகர்


தோழர் திரு மகாராசன் எழுதியுள்ள 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து ' நூலை, அளவில் சிறியது தானே என்று சாதாரணமாக யாரும் கடந்து விட முடியாது. 

ஒவ்வொரு பக்கமும் கனத்த பொருள் பொதிந்தவை. இன்றைய பாடப்பொருண்மை, அதை மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் விதம், ஆசிரியர்களின் கையறு நிலை, மாணவர்களின் திணறல்,மெல்லக் கற்கும் மாணவர்களின் திணறல், சமூக உதிரிகளாக மாறும் அவலம் என்று உண்மைக்கு மிக அருகில், இல்லையில்லை, உண்மையையே ஆணித்தரமாக அக்கறையோடு ஆசிரியர் கூறும்போது நம் மனதிலும் உணர்ச்சிப் பிழம்புகள் ஒட்டிக் கொள்கின்றன. 

இந்த நூல் வழியாக அனைத்துத் தரப்பினரையும் சிந்திக்க வைத்த சமூகச் சிந்தனையாளர் ஆசிரியர் திரு மகாராசன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் 

தோழமையுடன் 
கல்பனா சாகர்,
முதுகலை ஆசிரியர்,
ஆண்டிபட்டி .

மகாராசனின் எல்லாக் கவிதைகளிலும் நிலமே பிரதானம் - எழுத்தாளர் சோ.தர்மன்


தம்பி ஏர் மகாராசன் தனது "நிலத்தில் முளைத்த சொற்கள்" எனும் கவிதைத் தொகுப்பை அனுப்பியிருந்தார். ஐம்பத்தைந்து கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்தியா எவ்வளவோ முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் சிகரங்களைத் தொட்டு, சந்திரனில் கால் பதித்திருந்தாலும், இந்தியா இன்னும் விவசாயத்தை முதன்மையாகக்கொண்ட நாடுதான்.

விவசாயத்தில் போதுமான லாபமில்லை. உற்பத்திச்செலவுகள் அதிகரித்து விட்டன. விளை பொருட்களுக்குப் போதுமான விலையில்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு. பருவ மழை பருவம் தவறி, புயல் மழையாகப் பெய்வதால் ஏற்படும் நட்டம் ஆகிய காரணங்களால் விவசாயிகள் ஏராளமானோர் தங்கள் நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு, பிழைப்புத் தேடி நகரங்களில் குடியேறிவிட்டதால் விவசாயம் நசிந்து விட்டது உண்மைதான். 

ஆனாலும், இன்னும் எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் பேர் விவசாயத்தில் நட்டம் வந்தாலும் இன்னும் அதை விடாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

எழுபது எண்பது காலகட்டங்களில் விவசாயம், கிராமம் சார்ந்த ஏராளமான படைப்புக்கள் வந்தன. அம்மாதிரியான எழுத்துக்களில் கிராமங்கள், கிராம மக்கள் சார்ந்த கலாச்சாரப் பண்பாட்டு அடையாளங்கள் ஏராளம் பதிவாகின.

இப்போது கிராமங்கள் பற்றியும், விவசாயத் தொழில் பற்றியும், கிராமக் கலாச்சாரப் பண்பாடுகள் பற்றியும் எழுதுவதற்குப் படைப்பளிகளே இல்லை. எனக்குப் பிறகு கரிசல் பிரதேச மக்களின் வாழ்வியலை எழுதுவதற்கு எழுத்தாளர்கள் உருவாகவில்லை. அதன் விளைவு, கிராமங்களில் பயன்படுத்தும் அசலான தமிழ் வார்த்தைகள், சொலவடைகள், பேச்சு மொழி எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.

இவ்வாறான ஒரு காலகட்டத்தில்தான் தம்பி மகாராசன் தன்னுடைய "நிலத்தில் முளைத்த சொற்கள்" நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இதில் தொழில்படும் வார்த்தைகள் அனைத்துமே அனேகமாக நிலத்தோடும், அந்நில மக்களோடும், இயற்கையோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் வார்த்தைகளே. எல்லாக் கவிதைகளிலும் நிலமே பிரதானம்.

ஏதோ ஒரு புது உலகத்திற்குள் பிரவேசிப்பது மாதிரியான அனுபவம் நம்மை வந்து பாடாய்ப் படுத்துகிறது. கவிஞர் யுகபாரதி அவர்களும், முனைவர் அரங்க மல்லிகா அவர்களும் அருமையான ஒரு முன்னுரையைத் தங்களுக்கே உரிய முறையில் எழுதியிருக்கிறார்கள். 

உரைநடை எழுத்தாளர்கள் நாவலாக எழுத வேண்டிய ஒரு தளத்தை, நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் தன்னுடைய கவிதைகள் மூலமாக. தம்பி மகாராசனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சோ.தர்மன்,

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.


*

நிலத்தில் முளைத்த சொற்கள்,

மகாராசன்,

முதல் பதிப்பு, மே 2024,

பக்கங்கள்: 112,

விலை: உரூ 100/- 

(அஞ்சல் செலவு உட்பட),

வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506.



சனி, 1 ஜூன், 2024

ஒளிரும் ஒத்தடச் சொற்கள்: கவிஞர் யுகபாரதி




பண்பாட்டுத் தளத்தில் கவனமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றிவரும் ஏர் மகாராசன், என் நேசத்துக்குரியவர். அவருடைய எழுத்துகளை ஆர்வத்துடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன். கடந்து இருபது ஆண்டுகளில் வேளாண் மரபின் வேர்க்கால்கள் எவையென்னும் புள்ளியைத் தன்னுடைய இடையறாதத் தேடல்களால் அவர் தொட்டிருக்கிறார். 

கட்சி கட்டும் நோக்கத்துடன் செயல்படும் ஆய்வாளர்களுக்கு மத்தியில், தன்னியல்பாக அவர் செய்துவரும் ஆக்கப்பூர்வமான அவதானிப்புகள் பாராட்டுக்குரியவை. அவருடைய ஆய்வுப் பார்வைகள் ஒவ்வொன்றும் என்னைப் பல்வேறு சமயங்களில் ஆச்சரியப்பட வைத்துள்ளன.

தற்போது `நிலத்தில் முளைத்த சொற்கள்’ எனும் கவிதை நூலுடன் வந்திருக்கிறார். ஏற்கெனவே வெளிவந்த அவருடைய `சொல் நிலம்’ கவிதைகளே இன்னுமே என் நினைவில் இருந்து அகலவில்லை. அப்படியிருக்கையில் அடுத்தொரு நூலை வாசிக்கத் தந்து, அதற்கு அணிந்துரையும் கோரியிருக்கிறார். 

ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எல்லாக் கவிதைகளையும் ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தேன். முதல் வாசிப்பில் பிடிபடாத பலவும் அடுத்தடுத்த வாசிப்பில் என்னை அதீதமாக ஆட்கொண்டன. சொற்களைக் கட்டியாளும் மகாராசனாகவே இத்தொகுப்பு நெடுகிலும் அவர் தென்படுகிறார். 

`வெறுமை நிரம்பிய / மவுனத்தின் குளக்கரையில் / புல்லாங்குழலாய் / ஆழப் புதைத்திருக்கும் வேர்களை / இறுகப் பற்றிய ஈரமண்’ என்றொரு கவிதையில் எழுதியிருக்கிறார். அவ்வரிகள் என்னை என்னவோ செய்தன. 

மண்ணிசை என்று ஒற்றை வார்த்தையில் கடந்துவிடுவதை உள்நுழைந்து விளக்கியிருக்கிறார். அவருடைய ஆய்வுமனம், கவிதைகளின் ஊடேயும் பயணிக்கிறது. சொற்களின் சுருதியில் இசைமீட்டும் அவர், அக்கவிதையின் இறுதியை, `மண்மீட்டிய வேர்களின் இசை / காடெல்லாம் மணத்துப் பரவியது’ என அமைத்திருக்கிறார். `மண்மீட்டிய வேர்களின் இசை’ என்ற அவருடைய ஒரு பதத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். 

திரையிசையில் எப்படியாவது மண்ணையும், வேரையும் சொல்லிவிட மாட்டோமா என ஏங்கித் திரியும் எனக்கு, அவ்வரிகள் எவ்வகையான உணர்வுகளை வழங்கியிருக்கும் என்பதை ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். 'காடெல்லாம் பூ மணக்க’ என்று `ஜிப்ஸி’ திரைப்படத்தில் நானெழுதிய ஒரு பல்லவி, அந்த நாளை அழகாக்கியதை மறுப்பதற்கில்லை. ஒரு நல்ல கவிதை, மேலும் சில வரிகளையும் நினைவுகளையும் மீட்டும் என்பது பொய்யில்லை.

மகாராசனின் அக்கவிதை கொடுத்த உந்துதலில் பாரதி இசை குறித்து என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என தேடத் தொடங்கினேன். இசை எங்கிருந்து வருகிறது அல்லது தோன்றுகிறது என்பது பற்றி பாரதியும் ஒரு கவிதையில் நுட்பமாகச் சொல்லியிருக்கிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியே இசை எனும் தெளிவில் இருந்தே அவர் அக்கவிதையை எழுதியிருக்கிறார். எனினும், அவர் காதில் விழும் ஒலி, கண்ணனின் காதலே என்பார். 

`எங்கிருந்து வருகுவதோ / ஒலி / எங்கிருந்து வருகுவதோ’ எனத் தொடங்கும் அந்தக்கவிதை, குன்று, கொம்பு, அலை, இலை, ஆறு, காடு, பறவை, வாத்தியம் எனச் சகலத்தையும் வட்டமிட்டுச் செல்லும். அந்த வட்டத்திற்குள் அடங்காத ஒன்றுதான் இசையென்னும் முடிவிற்கு வருகையில் கவிதை நிறைந்துவிடும். `கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடி’ என ஒலிக்கு உரையெழுதியவர், `காதிலே அமுது / உள்ளத்திலே நஞ்சு’ என்பார். 

அத்துடன் முடித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், அவரோ அதற்கு மேலேயும் போய், `பண்ணென்றாமடி பாவையர் வாடப் / பாடி எய்திடும் அம்படித் தோழி’ என்றிருப்பார். பாடலென்பது பாவையர் வாட, கண்ணன் எய்திடும் அம்பாம். ஆனால், மகாராசனுக்கோ இசையென்பது ஈரமண்ணின் வாசனையாகத் தோன்றுகிறது. 

மகாராசன், தன்னுடைய கவிதைகளின் வெளியைச் சொற்சேர்க்கைகளின் வழியே கட்டமைக்கிறார். ஒரு கவிதையில், `துரோகப் பருந்து, ஊழிப் பாம்பு’ என்று யோசித்திருக்கிறார். கொத்திச்செல்லும் குணமுடையதே பருந்து. அதை, ஏன் துரோகத்துடன் இணைத்திருக்கிறார் என்பதுதான் விசேஷம். 

குஞ்சுகளைத் தூக்கிச்செல்லும் கிருஷ்ணப் பருந்துகளை மனதில் வைத்தே அவர் அச்சொல்லை ஆக்கியிருக்கிறாரோ எனத் தோன்றிற்று. இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் பறவையியலாளர்கள் புதிய மாற்றமொன்றை நிகழ்த்தினர். அதுவரை, `பறைப்பருந்து’ என்றழைக்கப்பட்ட ஊர்ப் பருந்துக்குக் `கரும்பருந்து’ என்று பெயரிட்டனர். பறவையில்கூட பறைப்பருந்து, பாப்பாரப் பருந்து என்னும் பேதமையைக் களையும் முயற்சியே அது. ஆனாலும், என்ன பிரச்சனையென்றால் பறைப்பருந்திற்குப் பெயரை மாற்றியவர்கள், பாப்பாரப் பருந்தான கிருஷ்ணப் பருந்தை அப்படியே பறக்கவிட்டதுதான். கிருஷ்ணப்பருந்து என்பதால் அது, அசைவத்தை உண்ணாமல் இருக்கிறதா என எழுத்தாளர் நக்கீரன் ஒரு கட்டுரையில் கேட்டிருக்கிறார். 

பெயர்களும் சொற்களும் மிக முக்கியமானவை. ஒரு சொல்லோ பெயரோ எப்படி உருவாகிறது என்பதுதான் அரசியல். மகராசன், அந்த அரசியலை மிகத் துல்லியமாக விளங்கிக்கொண்டவர். எனவே அவர் சொற்களையும் பெயர்களையும் கவனமில்லாமல் எங்கேயும் கையாளுவதில்லை. அதேபோல `ஊழிப்பாம்பு’ என்பதிலும் ஒரு குறியீட்டைக் கொண்டுவருகிறார். நிலம் சார்ந்தும், களம் சார்ந்தும் சிந்திக்கும் மகாராசன், ஒவ்வொரு கவிதையிலும் வைதீக எதிர்ப்புணர்வை வைத்திருக்கிறார். அவர் எழுத்தில் வெளிவந்த `பண்பாட்டு அழகியலும் அரசியலும்’ என்னும் நூலில், மேலதிகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

ஒரு கவிதையோ கலையோ அதன் அழகியலும் அரசியலும் எங்கிருந்து உருவாகின்றன என்னும் தெளிவு அவருக்குண்டு என்பதால் சொற்களை அவர் பொருத்தமாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்துகிறார்.

தொடர்ச்சியாக வேளாண் மரபின் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அவர், இலக்கியத் தரவுகளின் மூலமும், இன்னபிற ஆதாரங்களைக் கொண்டும் தமிழ் அடையாளத்தின் மீட்புப் போராளியாகத் திகழ்ந்து வருகிறார். காலத்தின் தேவை உணர்ந்தும், வரலாற்றின் அவசியம் கருதியும் உழைப்பதில் அவருக்கு நிகர் அவரே என்றுகூடச் சொல்லிவிடலாம். 

அவருடைய அறிதலில் மிக முக்கியமானதாக எனக்குப் படுவது, வேளாண் மரபை எத்தகைய ஒவ்வாமையுடன் ஆரியம் அணுகியது என்னும் ஆய்வு. பலரும் கவனிக்கத் தவறிய திரிகடுகத்தின் `கழகத்தால் வந்த பொருள் காமுறாமை / பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்’ என்னும் வரியிலிருந்து தன்னுடைய ஆய்வை மேலெடுத்துச் சென்றிருக்கிறார். 

அதுமட்டுமல்ல, ஆசீவகம், பெளத்தம் போன்றவற்றுக்கும் வேளாண் மரபிற்கும் உள்ள தொடர்ப்பையும் துலக்கப்படுத்தியுள்ளார். ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனின் அடையாளத்தோடும் சாயலோடும் எவ்விதத்திலும் வேளாண் மரபிற்குத் தொடர்ப்பில்லை என்பதையும் நிறுவி இருக்கிறார். 

மகாராசனின் கவிதைகளை வாசிக்கும்பொழுது அவர் ஏற்கெனவே ஆய்ந்து தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் முன் வந்து நிற்கின்றன. அவை அவருக்கு நல்லதா, கெட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், வெறும் அனுபவத்திற்காகக் கவிதைகளை வாசிப்பவர்களையும் உத்தேசித்து அவர் எழுதியிருக்கிறார். 

ஆழ்ந்து வாசிப்பவருக்குக் கருத்தியலைக் கடத்தும் இக்கவிதைகள், இரண்டாம் தரப்பினரையும் ஏமாற்றுவதில்லை. `உழவு நிலத்தின் / ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்து / முளைகட்டிய விதைச் சொற்கள் / வெண்முகம் காட்டிச் சிரித்தன’ என ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். உண்மையில், அவர் கவிதைகளுக்கு அவரே எழுதிக்கொண்ட அணிந்துரையாகவும் அவ்வரிகளைக் கருதலாம். 

நூல் முழுவதிலும் வயல்வாடை வீசுகிறது. உழவுக்குடியின் உக்கிரங்களும், ஓலங்களும் வேகத்துடன் வெளிப்படுகிறது. கசிந்துருகும் காதலைக்கூட மண்ணில் புரட்டி எடுத்த சொற்களைக் கொண்டே தீட்டியிருக்கிறார். நேரடித் தன்மையுடன் கவிதைகள் அமைந்திருந்தாலும், தோண்டத் தோண்ட வெவ்வேறு பொக்கிஷங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. மகாராசனின் கவிதைகளில்தான் மறுபடியும் தட்டானையும் முக்குளிப்பானையும் தரிசிக்க முடிகிறது. 

நவீனக் கவிதைகள் எனும் பெயரில் இன்று வந்துகொண்டிருக்கும் தட்டையான சொல்முறையை மகாராசன் அறவே தவிர்த்திருக்கிறார். கண்ணையும் மண்ணையும் விரிக்கும் இடத்திலெல்லாம் அவருக்குக் கவிதைகள் கிடைத்திருக்கின்றன.

எனக்குமே ஐந்திணை மரபை அடியொற்றி இன்றைய கவிதைகளை எழுத இயலுமா என்னும் கேள்வி, அவ்வப்போது எழுவதுண்டு. நுகர்வும் வணிகமும் பெருத்துவிட்டச் சூழலில் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்றுகூட எண்ணியிருக்கிறேன். ஆனால், மகாராசனோ என் எண்ணங்களைப் பொய்யாக்கும் விதமாக, `வெறுமை மண்டியிருக்கும் / வாழ்நிலத்தில் / கூந்தல் சூடத் தவிக்கின்றன / கைக்கிளைப் பூக்கள்’ என ஒரு கவிதையைத் தொடங்கியிருக்கிறார். அக்கவிதையில், `கிளைக் காம்பில் காத்திருக்கின்றன / பெருந்திணைக் கனிகள்' எனவும் எழுதி, என்னுடைய எல்லா மனத்தடையையும் மாற்றியிருக்கிறார். அனுபவங்களைப் பகிர்வதே கவிதைகள் எனப் பலரும் சொல்லி வருகையில், கவிதைகளையே அனுபவங்களாக ஆக்கிவிடுபவராக மகாராசன் தென்படுகிறார். 

தமிழிலக்கியப் பரப்பிலும், ஆய்வுப் புலத்திலும் மகாராசனுக்குத் தனியிடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், கவிதையிலும் தனக்கான இடத்தைப் பெற கைக்குட்டையைப் போல் இக்கவிதை நூலைப் போட்டிருக்கிறார். முதல் தொகுப்பிற்கும், இரண்டாம் தொகுப்பிற்கும் இடையே காலத்தின் இடைவெளி அதிகமென்றாலும், ஆக்கி அளித்துள்ள கவிதைகளின் அடர்த்தி குறையவில்லை.

விட்ட இடத்திலிருந்து கனவுகளையும் கவிதைகளையும் தொடங்க முடியாது என்பர். ஆனால், மகாராசன் தன்னுடைய மொத்தக் கனவுகளையும் நிலத்தில் முளைத்த சொற்களில் நிரப்பியிருக்கிறார். அவர் தொடர்ந்து கவிதைகளை எழுத வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை. 

சொற்களின் உச்ச பட்ச பயன் என்ன? அவரே ஒரு கவிதையில், `குவிந்து கிடக்கும் / ஒத்தடச் சொற்களால் / தணிந்து போகின்றன வலிகள்’ என்றிருக்கிறார். கவிதைகளை வாசிப்பதன் மூலம் ஆகக்கடைசியாக நமக்குக் கிடைப்பதும் அதுதானே?   

வாழ்த்துகள் மகாராசன்.

அன்புடன்
கவிஞர் யுகபாரதி,

*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை: உரூ 100/- 
(அஞ்சல் செலவு உட்பட),
வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.




மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலம்: முனைவர் அரங்க மல்லிகா



தம்பி 'ஏர்' மகாராசன் மிகச்சிறந்த பண்பாட்டு அடையாள மீட்பர். நிலம், இனம், மொழி என்ற முக்கோணப்பரப்பில் தெளிந்த நல்லறிவோடு ஆய்வு செய்து வருபவர். 'பெண்மொழி', 'ஏறு தழுவுதல்', 'எழுத்துப் பண்பாட்டு மரபு', 'வேளாண் மரபு' போன்றவை குறித்து இவர் எழுதிய ஆய்வு நூல்கள் அதற்குச் சான்றுகளாகும். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் ஒரு பண்பாட்டு விஞ்ஞானியின் வேர்த் தடங்களை அடையாளம் காண முடியும். 

இவர் முன்மொழியும் பண்பாட்டின் அடையாளத்திற்குள் தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் ஈழம் சார்ந்த உணர்வுகள்தான் நிரம்பி வழிகின்றன. அவ்வுணர்வுகள் விடுதலைச் சிந்தனையையும் பாதுகாப்பு விழிப்பையும் கொண்ட ஆழமான புரிதலையும் தந்திருக்கின்றன. மேற்சொன்னவற்றின் நீட்சியாகத்தான், மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதைப் பனுவல் அமைந்திருக்கிறது. 

வாழ்வின் புறச்சூழல் தாக்கத்தையும், கவிஞரின் அகவயக் கற்பனையையும் இணைத்துக் கவிதையின் கருத்தியலைக் கட்டமைக்கும் முயற்சிக்கு மொழி அடர்த்தி முதன்மைத் தேவையாகப் படுகிறது. அதனால்தான், இருவருக்கு இடையேயான உரையாடல்களில் 'சூழல்' பிரதிபலிக்கின்றது என்றால், அது மொழியால்தான் சாத்தியம் என்பார் வொலசினோவ். 

சங்க இலக்கியங்களில் காணலாகும் ‘கூற்று’ முறையில் அமைந்த கவிதைகள் பெரும்பாலும் அகச்சூழலையும் புறச்சூழலையும் புலப்படுத்தக்கூடியவை. அவ்வகையில், ஒரு யாழின் நரம்புக்கட்டுபோல சொற்கட்டுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கின்றன மகாராசனின் கவிதைகள். மொழி எனும் பத்தாயத்திற்குள் உலவும் இவரது கவிதைகள், தம் நிலத்தின் மீதான காதலையும் தவிப்பையும் ஏக்கத்தையும் கொண்ட அகச்சூழலையும் புறச்சூழலையும் காண்பிக்கின்றன.

ஆதிக் குடிகளின் நிலவாழ்வும், பச்சையம் காத்த உழைப்பின் வியர்வைத் துளியும், மூதாதைகளைத் தேடி அலையும் வேட்கையும் மிக அழகாகச் சொற்களால் ஒரு மாலைபோல கோர்க்கப்பட்டுள்ளன. உழுது போட்ட நிலத்தின் ஈரம் மொழியின் சொற்களாக வடிந்திருக்கின்றன. காலநதியில் நீராடிய தொல்குடிகளின் நீச்சலும் பாய்ச்சலும் நினைவுக் கிடங்கின் வழியாகச் சொற்களாகிக் கவிதைமொழியாகி வழிந்திருக்கின்றன. 

ஒரு நிலம் எப்படி  வளப்பமாய்ச் செழிக்கின்றது என்பதையும், அதே நிலம் எப்படி மெல்ல மெல்ல வாழ்விழக்கிறது என்பதையும் பல்வேறு காட்சிப்படிமங்களாகக் கவிதைகளில் தந்திருக்கிறார் மகாராசன்.

நகர்மயம், தொழில்மயம், வணிகமயத் தாக்குதல்களால் நிலமெல்லாம் பாழ்பட்டுச் சீரழிந்து போயின. பயிர் விளைந்த நிலங்கள், குறுகியகாலப் பயிர்கள், பதறாய்ப்போன விளைச்சல், மழை பொய்த்தல், நிலங்களை நம்பிக் காலங்காலமாய் உழுதவர்கள், கிராமத்து மனித உறவுகள், விலங்குகள், கண்மாய்க் கரைகள், துள்ளி நீந்தும் மீன்கள், சட்டையுரிக்கும் பாம்புகள்,  காளைகளின் திணவு, பசு மாடுகளின் ஈத்துகள், உணவுக் களஞ்சியம் என, கிராமம் சார்ந்த உயிர்ச் சூழல் வளங்கள் யாவற்றையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது நவீனச் சமூகமயம். 

இந்தச் சூழ்நிலையில், நிலத்தை நம்பியிருந்த ஒரு விவசாயியின் பரிதவிப்பும், கண் முன்னே தன் குழந்தையைப் பலி கொடுத்த ஒரு தாயின் அவலமுமாகத்  துயர் நிரம்பிய வாழ்வின் கோலங்களையும் நிலத்தில் முளைத்த சொற்களுக்குள் காண்பித்திருக்கிறார் மகாராசன். 

பூர்வீகத்தை மறைத்துப் பிடுங்கித் தின்னும் வல்லூறுகளின் வலிமைப்பிடியில் சிக்குண்டிருக்கும் ஒவ்வொரு நிலத்தின் விடுதலையும் உயிர்ப்பானவைதான். நிலத்துக்கான போர் எப்பொழுதும் கசப்பானதாகத்தான் இருக்கும்; உயிர்ப்பிச்சை கேட்கும்; காட்டிக்கொடுக்கும்; கயமை சூழும். ஆனாலும், ஒவ்வொரு இருளின் அடர்த்தியையும் மெல்ல மெல்லக் கிழித்து வெளிவரும் கதிர்க்கீற்றைப்போல, நிலத்தில் பெரு வெளிச்சம் பாய்ச்சும் ஒற்றை நம்பிக்கை மகாராசன் கவிதைகளுக்குள் ஓடும் இரத்த நாளத்துடிப்பாக இருக்கின்றது. ஓலங்களால் நிலம் விரிசலடைந்து கிடந்தாலும், தாயகத் தாகத்தில் இன்றும் நம்பிக்கை ஒட்டிக்கிடப்பதைப் பல கவிதைகளில் சுட்டிக் காண்பிக்கிறார் கவிஞர்.

மகாராசன் கவிதைகளில் நிலவியல், சூழலியல் சார்ந்த சிந்தனைகள்தான் நெல் முத்துக்களெனச் சொல் முத்துக்களாய் விரவிக் கிடக்கின்றன. நிலத்தின் கம்பீரம்தான் இவருடைய கவிதைச் சொற்களின் ஈரமாக இருக்கின்றது. நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் குயவர் பிசையும் மண்குழைவுபோலக் கவிதைகளில் ஒட்டிக் கிடக்கின்றன. 

இவரது கவிதைகள் வெவ்வேறு பாடுபொருட்களையும் கருப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன என்றாலும், எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒருவகையில் நிலத்தைத்தான் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலத்தில் முளைத்திருக்கும் சொற்கள், எங்கோ ஒரு மூலையில் ஒளித்து வைத்திருக்கக்கூடிய வாழ்வின் இரகசியங்களை, கடந்து வந்த அனுபவங்களை, இழந்துபோன வாழ்வின் சொர்க்கத்தை மீட்டெடுப்பதற்குத் துடிக்கின்றன.

நிரந்தரமற்ற வாழ்வை உணர்ந்து கொள்ளும் மனவலிமை, வாழ்வின் அன்றாடத் தவிப்பு, தனிமை, காதல், கனவு, வீரம், துரோகம், நேசித்த உறவுகள், இளவயது நினைவுகள் யாவும் கவிதைப் பூக்களாய் மிளிர்கின்றன. இவரது கவிதைகளில் இரசனையும் அவதியும் மட்டுமல்லாமல், தமிழ் நிலத்தைப் பாழ்படுத்தும் சதிவலைப் பின்னலை அறுக்கத் துணியும் கத்தரிக்கோல் சொற்களும் பரவி இருக்கின்றன. 

நம்பிக்கை இல்லாமல் வாழ்வதற்கு உரிய சூழலை உருவாக்கும் சமூக அமைப்பைக் கடுமையாகச் சாடுவதோடு, நிலவியல் சூழலை விட்டுவிட்டு வாழும் அவலத்தையும் சுட்டிக்காட்டி, வளரும் தலைமுறைக்கு நேர்ந்திட இருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்லும் கோடாங்கியாகவும் இருக்கிறார். அம்புகளைத் தொடுக்கும் சூத்திரம் அறிந்த அர்ச்சுணனைப்போல, மொழியின் சொற்களைக் கொண்டு கவிதை அம்புகளைத் தொடுத்திருக்கிறார் மகாராசன். 

நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப்போல நம்பிக்கையும் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது என்று சொல்லும் ஆன்ம பலம், மகாராசன் எழுத்துகளின் அடையாளமாக இருக்கின்றது. 

மனித நாகரிகப் பரிணாமத்தில் நிலமும் பொழுதும்தான் முதல்பொருளாய் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக, ஆதிக்குடி உழவர்களின் நில வாழ்வும் பொழுதும் நிலத்தில் முளைத்த சொற்களின் மையப்புள்ளியாக அமைந்திருக்கின்றன. 

நெடுங்காலமாய் அப்பிக்கிடக்கும் மன இருளைக் கிழித்து, ஒரு மின்னல் வெட்டில் ஆதித் துன்பங்கள் மறைந்து பொழியும் மழையில் நிலத்தைப் பண்படுத்தி, பயிர் வளர்த்துச் செழிக்கக்கூடிய அறுவடைக்குக் காத்திருக்கும் அடர் சொற்களின் வேர்கள், மகாராசன் கவிதைகள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன. குறிப்பாக, நிலம் பாடிய தமிழ்க் கவிதை மரபை இவரது கவிதைகள் உயிர்ப்பித்துள்ளன.

மனித உடலின் இயக்கத்திற்குக்  காற்றும் நீரும் எவ்வளவு அவசியமோ அப்படித்தான் இந்த உடலின் தெம்புக்கு நிலமும் நிலம் சார்ந்த பொருட்களும் அடிப்படைத் தேவையாக அமைந்திருக்கின்றன.  நிலத்தின் பண்புகள் பலவும் வளமையான பெண் குறியீடுகளாகவே இருக்கின்றன. ஆதித் தாயின் சமூகப் பண்புகள், மனித வாழ்வின் மலர்ச்சிகள், ஐவகை நிலங்களின் வளமைக் கோலங்கள் போன்றவற்றைப் பெண் குறியீடுகளாய்க் காட்டும் அழகிய சொற்கட்டுகளில் பிணைத்திருக்கிறார் மகாராசன். 

ஒரு நிலத்தில் வாழ்ந்த சூழல் களைந்து தனிமைப்படுத்தப்படுவதையும், தனித்துப் பாடுபட்ட பாடுகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்க்கக்கூடிய பார்வையில், வலிகளுக்கு வலிகளால்  ஒத்தடம்தரும் இலைகளின் முடுச்சுகொண்டு சொற்களால் ஒத்தி எடுத்திருக்கிறார் மகாராசன். தனக்கு நெருக்கமான காடு கழனிகளில் வாழக்கூடிய உயிரினங்கள் பற்றிய மிக நுட்பமான கூர்ப் பார்வை இவரது கவிதைகளின் உயிர்நாடியாக இருக்கிறது. 

இவரது கவிதைகளில் செம்புலப் பெயல் மணம் மழைக்காற்றில் மிதந்து வருகிறது. காதலாகிக் கசிந்து கவிதை பாடுகிறது. காதலியின் பிரியங்கள் சுருக்குப் பைக்குள் முடிந்து வைக்கப்பட்டுள்ளன. காதல் பேச்சுக்கள் ஈரம் சொட்டச்சொட்ட பனிக்காலத் தேநீர்க் கோப்பைகளை நினைவுப்படுத்துகின்றன. சில நேரங்களில் நினைவுகள் நத்தைக்கூடாய் நகர்கின்றன. 

ஐவகை நிலங்களின் அழகியல் இழப்பையும், தாயக நிலத்தின் மீதான ஏக்கப் பெருமூச்சுகளையும், தமிழ் மொழியின் அடர்த்தியில் காட்சிப்படிமங்களாகப் பல கவிதைகள் காண்பிக்கின்றன. நிலமும் வாழ்வும் ஒரு தூக்கணாங்குருவியின் கூடுபோல, கவிஞரின் சொற்கள் பல அடுக்கு நினைவுகளாக ஆதித் தொன்மங்களை  மொழிக்கிடங்கில் பத்திரப்படுத்தி வைத்துள்ளன. இந்த மொழிக்கிடங்கில் இருந்து வெளிவரும் மகாராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' நூலானது, தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலைத்திருக்கப் போகிறது எனும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 

எதார்த்த வாழ்வின் போக்கைச் சுட்டிக்காட்டும் ஒரு படைப்பு, தனக்கு முன்னால் நிகழக்கூடிய நல்லவை - அல்லவை; ஆதிக்கம் - அடிமை; இன்பம் - துன்பம் என்ற எதிர் எதிர் நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமையும் கொண்டிருப்பது. அது காலத்தின் வரலாற்றையும் தீர்மானிக்கக் கூடியது. அந்த வரலாற்றைத் தீர்மானிப்பதில் மகாராசன் எழுத்துகளும் பங்காற்றி வருகின்றன. 

சமூகப் பண்பாட்டு ஆய்வாளராய்த் தனித்து மிளிரும் தம்பி மகாராசன், 'சொல் நிலம்' கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து,  'நிலத்தில் முளைத்த சொற்கள்' வாயிலாகவும் நவீனக் கவிதைப் படைப்பாளியாக ஒளிர்கிறார். 

மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலமாய் அமைந்திருக்கக்கூடிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்' எனும் இக்கவிதைப் பனுவல் சிறப்படையவும், தமிழ்ப் படைப்புலகில் மகாராசனின் தனித்துவம் வளர்ந்து சிறந்திடவும் உளமார்ந்த அன்பைக் குவித்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்,
முனைவர் அரங்க மல்லிகா,
 பேராசிரியர் & தலைவர் (ப.நி),
தமிழ்த்துறை,
எத்திராஜ் மகளிர் கல்லூரி, 
சென்னை.   
          
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
முதல் பதிப்பு, மே 2024,
பக்கங்கள்: 112,
விலை: உரூ 100/- 
(அஞ்சல் செலவு உட்பட),
வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.

வெள்ளி, 24 மே, 2024

மூன்று தெலுங்கு நிலப்பரப்பில் வாழ்ந்த திரி வடுகர்களே திராவிடர் ஆவர் - சி.பா.ஆதித்தனார்


கேள்வி: திராவிடர்கள் யார்? 

பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி - வடுகர்களே திராவிடர்கள். 

கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? 

பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார்.

அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால், முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத்தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும்.

தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.

கேள்வி: திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா? 

பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்துதான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

கேள்வி: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே? 

பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத்தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.

கேள்வி: இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?

பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில்தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது. 

கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன்வழி ஒன்றுபடக் கூடாது?

பதில்: கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழிதான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே, லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பதுதான் உலக நியதி. 

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*



தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

திங்கள், 20 மே, 2024

காலத்தால் மறந்தும் மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசரைக் குறித்த உரையாடல் நூல்: டி.ஏ.பி.சங்கர்


தமிழர் சமூக அரசியலைப் பேசுபொருளாக்கும் முயற்சி மூலமாக அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் எனும் நூலை இயற்றி இருக்கிறார் முனைவர் ஏர் மகாராசன். 

நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பவுத்த ஆராய்ச்சியாளர் திரு.டி.தருமராஜ் அவர்கள் இயற்றிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' என்ற நூலின் மதிப்புரையாகவும், அதன் நீட்சியாகவும் அமைந்ததே இந்தக் கட்டுரை நூல். 

தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபின் நீண்ட வரலாற்றையும், அது, மையமும் விளிம்பும் கலந்த பன்முகத்தன்மையின் தொகுப்பு என்றும் சொல்லும் ஆசிரியர், அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலுக்கும், திராவிட இயக்க அடையாள அரசியலுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிடுகிறார். 

முனைவர் மகாராசன் அவர்கள் மொழி, பண்பாடு, அரசியல், நாட்டார் வழக்கியல் எனப் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு நூல்கள், கட்டுரைகள், கவிதை, உரை நூல்கள் போன்றவற்றை இயற்றியுள்ளார்.

ஆரியர்களாக நுழைந்து, இங்கு வந்து பிராமணர்களாகத் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர்களது ஆதிக்க நிலையை எதிர்த்துக் குரல் கொடுத்த வரலாறு; தமிழ்ச் சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் அரசியல் வடிவம் பெற்றது; அவ்வாறு, திராவிடர் இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் தோற்றம், அவர்கள் முன்னெடுத்த பார்ப்பனர் எதிர்ப்பு தொடங்கி, திராவிடக் கட்சிகளின் தற்போதைய நிலை வரை பட்டியலிடுகிறார்.

பிராமண ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்ததில், பிராமணர் அல்லாத இயக்கங்களின் நிலையையும், அயோத்திதாசர் அளித்த பங்களிப்பையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். அயோத்திதாசரின் பின்புலம் தொடங்கி, அவர் நிறுவிய அத்வைதானந்த சபை, திராவிட மகாஜன சபை, தமிழ்ப் பவுத்த சமய அடையாளத்தை முன்வைத்து - சாக்கிய பவுத்த சங்கம், மற்றும் அவரது இதழியல் பங்காக அமைந்த திராவிடப் பாண்டியன் இதழ், ஒரு பைசாத் தமிழன் இதழ் போன்றவற்றையும், அவற்றின் மூலம் அவர் நிறுவிய ஆதித் தமிழர் என்ற அடையாள முழக்கம் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஆசிரியர். 

1881ஆம் ஆண்டு - ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளை 'இந்துத்துவம்' என்ற வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த காலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிறிஸ்தவர், சமணர், பவுத்தர், இசுலாமியர், சீக்கியர் அல்லாத பிற அனைவரையும் 'இந்துக்கள்' என்ற ஒற்றை அடையாளத்திற்குள் வலிந்து திணிக்கப்பட்ட காலமாகவும் இருந்தது. இப்படி ஒரு நெருக்கடியான காலத்தில், அயோத்திதாசர் 'ஆதித் தமிழர்' என்ற அடையாளத்தை முன் வைக்கிறார். இதற்குக் காரணமாக அவர் கூறியது, இந்து மதம் ஆரிய பிராமணிய, வைதீக மரபுகளை அடிப்படையாகவும், அதன் வழியாகச் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருப்பதையும் எடுத்துரைக்கிறார். 

மேலும், அதிகாரத்தில் சம உரிமை கோரியது முதல், பிரதிநிதித்துவ அரசியலைத் தனது காலத்திலேயே முன்னெடுத்த அயோத்திதாசர், அப்போதே மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, இவ்வளவு ஏன், இந்திமொழி மேலாதிக்க எதிர்ப்பு எனப் பல்வேறு செயல்பாடுகளைப் பற்றியும் தனது எண்ணற்ற நூல்களில் எழுதியும் பேசியும் உள்ளார். இத்தகைய செயல்பாடுகளால் பகுத்தறிவு, இடஒதுக்கீடு, சமூக மாற்றம், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் தமிழக அளவில் பெரியாருக்கும், இந்திய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்திதாசர் என்று சொல்லலாம்.

ஆனாலும், பின்னாட்களில் வந்த அரசியல் தளங்களில் திராவிடர் கழகமோ, திராவிடர் இயக்கமோ, மற்ற திராவிடக் கட்சிகளோ, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகளைப் பற்றி மறந்தும் மறைத்தும் செயல்படுவது ஏன்.? எனக் கேள்வி எழுப்பும் ஆசிரியர், அதற்கான காரணமாக, அவருடைய அடையாள அரசியலையே சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்ததாக, அயோத்திதாசர் நால்வர்ண பேதத்தினைக் குறித்தும், அதனுள் குறிப்பிட்ட அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் வரிசையை மாற்றி, சூத்திரர், வைசியர், சத்திரியர், அந்தணர் என்ற வரிசையில் உழவினை முதல் நிலையில் வைத்துப் போற்றுகிறார். இந்த நான்கு தொழில் முறைக் குலங்களுக்கு இடையில் எந்தவொரு ஏற்றத் தாழ்வும் இருந்ததில்லை எனவும் வலியுறுத்துகிறார். பிறப்பினால் எந்த மனிதரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பாவிக்காமல், அவரவர் செய்த தொழிலின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் எனக் கூறும் தமிழ் மரபுகளை உதாரணமாகக் காட்டுகிறார் ஆசிரியர். 

அயோத்திதாசர், "அந்தணர்" என்ற சொல், கல்வி கற்பிக்கும் தொழில்முறைப் பெயர்தான் என்றும், தமிழ் மரபில் வகுக்கப்பட்ட குணங்கள் உடைய யார் வேண்டுமானாலும் அந்தணர் என்ற அடையாளத்தை அடைய முடியும் என்றும் விளக்குகிறார். இது ஒரு தொழில் முறைப் பெயர் மட்டுமே அல்லாமல், ஆரிய பிராமணர்கள் சொல்வது போல, பிறப்பால் உயர்ந்த நிலை எதுவும் இல்லை என்றும் பறைசாற்றுகிறார். அதே போல, ஒவ்வொரு வர்ணத்திற்கும், அதன் தமிழ் மரபு - ஆரிய பிராமணிய மரபு குறிக்கும் பொருள் வேறுபாடுகளை விரிவாக விளக்கியுள்ளார். இந்த நூலின் அடிப்படையாக இதைத் தான் பார்க்கிறேன்.

மேலும், தமிழ் மரபில் உள்ள தொழில் முறைப் பெயர்களை எடுத்துக்கொண்டு, அதற்கு, தங்களுக்கு ஏற்றார் போல பொருளை மாற்றியமைத்து, ' மநு ' என்ற பெயரில் மற்ற குலங்களை அதிகாரம் செய்த பிராமண மரபினையும், அயோத்திதாசர் வழியில் சான்றுகளுடன் தோலுறித்துக் காட்டுகிறது இந்நூல். இதன் வழியாக, அயோத்திதாசரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் சுருக்கமாக அறிந்து கொண்டாலும், அவரைப் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது.

காலத்தால் மறந்தும் மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசர் பற்றியும், அவருடைய தமிழர் அடையாள அரசியல் பற்றியும் மீண்டும் மீட்டெடுத்து வாசிக்கவும், மேலும் மேலும் உரையாடவும், ஒரு அறிமுக நூலாக அமைந்திருக்கிறது இந்த மதிப்புரை. அடுத்ததாக, 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூலையும் வாசிக்க வேண்டும்.

நூல்: அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
ஆசிரியர்: முனைவர் மகாராசன்,
பக்கங்கள்: 112,
வெளியீடு: 
ஆதி பதிப்பகம்,
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி. சங்கர்,
சென்னை.

வெள்ளி, 17 மே, 2024

மாணவர்களைக் குறித்த சமூக மனிதனின் பார்வை: டி.ஏ.பி.சங்கர்


இன்றைய காலகட்டத்தில் மாணவர்களைப் பற்றிய ஆய்வுகளையும், சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது இச்சிறிய நூல். 

சமூக மாற்றங்களுக்கான உரையாடல்களைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பேராசிரியர் ஏர் மகாராசன், இணைய இதழ்களில் எழுதிய இரண்டு முக்கியமான கட்டுரைகளே மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இந்நூல்.

கட்டுரை 1:

மாணவர்கள் கல்வியை விடுத்து இடை நிற்பதற்கான காரணங்கள் என்னென்ன என ஆராய்ந்து, அவற்றைப் பற்றி விரிவாகப் பேசத் தொடங்கும் போது, 2022-23 ஆண்டில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத வராத 50000 மாணவர்களையும், அவர்களைத் தடுக்கும் புற மற்றும் அகச்சூழல்களையும் அடுக்குக்கிறார். இப்போதுள்ள பாடத்திட்டப் பொருன்மையில் உள்ள குறைகளைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அதற்கான காரணமாக:

மீத்திறன் மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் கடினமாக உள்ளது. 

மெல்லக் கற்கும் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கற்க முடியாமல் திணறுவது.

அனைத்து வகையான மாணவர்களையும் உட்படுத்தாத கல்வி முறை

ஆகியனவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் புதிய பாடத்திட்டத்தைக் கண்டு தயங்கி, விலகி, தனிமைப் படுவதையும், அவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு வரச் செய்து படிக்க வைக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களையும் கண்டு வருந்துகிறார். 

இவ்வாறு பள்ளியைத் துறந்து, தேர்வுகளைத் தவிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட வகையில், மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்படும் இந்தப் பாடத்திட்டம் ஒரு வகையில், நவீனத் தீண்டாமை என்று குறிப்பிடுகிறார். 

இவ்வாறு, தேர்வுகளைத் தவிர்க்கும் மாணவர்கள், அடுத்த கட்டமாக உயர்கல்வி பெற முடியாத சூழலில், வேலை வாய்ப்பின்றி, சமூகத்தில் உதிரிகளாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

கட்டுரை 2:

அடுத்த முக்கியமான கட்டுரை, சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராசெல்வி மீது நடத்தப்பட்ட சாதி வெறியாட்டத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பற்றியது. 

கல்வி கற்க வரும் பள்ளிக்கூடத்தில் சாதிய வேறுபாடுகளை ஏற்படுத்தி, அதன்மூலம் சுயசாதிப் பெருமைகளையும், தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சீண்டல்கள், தாக்குதல்கள் முதலியவற்றைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார். 

இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்திய அந்த மூன்று மாணவர்கள் (16/17 வயதுடையவர்கள்) காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்களுடைய பெற்றோர் யாரும் அங்கு இல்லை. அதுமட்டுமின்றி, இப்படி ஒரு சம்பவம் நடந்ததைக் குறித்த எந்த ஒரு குற்ற உணர்வுமின்றித் தமக்குள் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்திருக்கின்றனர். இவர்கள் இப்படி ஒரு மனநிலைக்குச் செல்வதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, இவ்வாறான சாதி அடையாளம் கொண்ட நடவடிக்கைகளுக்குக் காரணம் அதே பகுதிகளில் ஏற்கனவே படித்து முடித்த சாதி இந்து இளைஞர்கள்தான் என்று எடுத்துரைக்கிறார். இவர்கள்தான் இப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சாதிய ரீதியாகத் தூண்டிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்கின்றனர்.

இவ்வாறு, அந்த நிகழ்வின் காரணங்கள், அதன் விளைவுகள், அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என, கள நிலவரங்களைத் தெரிவிக்கும் அதேநேரம், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கையாள்வது எப்படி? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உரிமைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுயமரியாதை மற்றும் சுதந்திரத்தையும் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

மேலும், அறம் சார்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் பாடங்கள் வெறும் மொழிப்பாடங்களாக, அவையும் குறைந்த அளவிலான மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே உள்ளன என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், மாணவர்கள் மத்தியில் அறம் என்ற ஒன்றை விதைக்கத் தவறி விட்டது என்கிறார் ஆசிரியர்.

லும்பர்கள் எனப்படும் இந்தச் சமூக உதிரிகளாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிப்பருவ வயதுடையவர்கள் மாற்றப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் என:

1. சாதிவெறி

2. போதை வெறி

3. அரசியல் கட்சிகள் பின்புலம்

4. அரசு அதிகார மட்டத்தின் செயல்பாடு

5. அந்நியப்படுத்தப்பட்ட கல்விமுறை

6. பெற்றோரின் வளர்ப்பு மற்றும் குடும்பச் சூழல்

7. சமூக ஊடகப் பயன்பாடு 

போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். 

இவர்கள் இவ்வாறு உதிரிகளாக்கப்படுவது உயர்சாதி என்று தன்னை நினைத்துக் கொள்பவர்கள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களையும்தான் என்னும் நூலாசிரியர், அதற்கான காரணிகளாக, சுயசாதிப் பெருமை பேசவும் பரப்பவும் நடத்தப்படும் சாதிவாரியான மாநாடுகள், திருவிழாக்கள், குருபூஜைகள் மற்றும் சாதியப் பதாகைகள் தாங்கிய திருமண நிகழ்வுகள் என்கிறார்.  

சமூகத்தில் உதிரிகளாக மாற்றப்படுபவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்களே எனக் குறிப்பிடும் மகாராசன், இவர்களை உதிரிகளாக ஆக்குவதில் சில ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார். சாதி அடையாளம் என்பதுவும், சாதி ரீதியான மனப்பான்மை என்பதும் சில ஆசிரியர்களிடமும் கல்வியாளர்களிடமும் இருப்பது வேதனைக்குரியது. அதனால், பாடத்திட்டத்தை உருவாக்குவதில் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பும், சமத்துவ மனப்பான்மையும் இன்றைய தேவை என்று வலியுறுத்துகிறார். 

பிறகு, இட ஒதுக்கீடு குறித்த முழுமையான புரிதல் என்பது இங்கு பெரும்பாலோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை என்றும், அதனுடைய நீட்சியே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் விளக்குகிறார். 

இறுதியாக, சாதிய மனநிலையில் பேசிய ஆசிரியரிடம், "எல்லாருமே சமம்தானே டீச்சர்?" எனக் கேட்கும் மாணவன் முனீசுவரனின் சமத்துவக் குரலுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறார்.

மாணவர்களின் வளர்ச்சிக்குச் சமூகம் எவ்வளவு முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பதை புரிந்து கொள்வதாலும், ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படுவதாலும், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.. தான் ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி, ஒரு சமூக மனிதனின் வாயிலாக இந்தப் பார்வையை முன்வைத்திருக்கிறார் மகாராசன்.

நூல்: மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து.
ஆசிரியர்: மகாராசன்.
பக்கங்கள்: 72.
வெளியீடு: ஆதி பதிப்பகம்.
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி.சங்கர்,
மண்டல மேலாளர், 
சுசூகி வாகனங்கள்,
சென்னை.

திங்கள், 29 ஏப்ரல், 2024

பாரதிதாசனின் திராவிட நிலைப்பாடும் தமிழ்த் தேசிய நிலைப்பாடும் : அறிஞர் குணா


திராவிடக் கருத்தியலும் அடையாள இழப்பும்.

திராவிட இனவழி மரபினில் ஊன்றி நில்!", "வாழ்க திராவிடத் தமிழ்த் திருநாடு!" என்றெல்லாம் பாவேந்தர் ஒருகால் பாடியதைக் கோடிட்டுக் காட்டி, இன்று அடிக்காலிலேயே ஆட்டம் கண்டுவரும் 'திராவிடக்' கருத்தியலுக்கு உரம் சேர்க்க முயல்வாருமுண்டு.

தொடக்கத்தில் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று எழுதியவர்தாம் அப் பாவேந்தர். சங்கதமொழி இலக்கியங்களைத் தழுவிக் கதைப்பாட்டுகளைப் புனைந்தவர்தாம் அவர். பின்னர் பெரியாரோடு இணைந்து அவர்தம் 'திராவிடக்' கொள்கைக்காக நின்றவரும், "திராவிடத் தமிழன்" போன்ற பொருந்தாக் கலப்புருவைக் கருவாக வைத்தும் அவர் பாடினார்.

ஆனால், தேவநேயப் பாவாணரோடும், அவருடைய தனித் தமிழ் இயக்கத்தோடும் தொடர்பேற்பட்ட பின்னர், அவர் அத் திராவிடத்தை மெல்ல விட்டுத்தொலைத்தார். தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகளேயெனச் சொன்ன பெரியாரின் தமிழெதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு நேரெதிராக,

'நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப் படி! - முறைப்படி
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி!
காலையில் படி, கடும்பகலில் படி, 
மாலை இரவு, பொருள்படும்படி'

என்று சொல்லி, பெரியாரின் திராவிட மெய்யினக் கொள்கைக்கு நேரெதிரான மொழிவழித் தமிழ்த் தேசிய இனக் கொள்கைக்காக அவர் பாடலானார். 

தமிழுணர்வை மிகவும் பழித்து வந்த கன்னடராம் பெரியாருக்கு மாறாக,

"பிள்ளை பிறந்தேன், யாருக்காக?
பெற்ற தமிழ்மொழிப் போருக்காக.
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக''

என்று பாடினார். 

தாம் பிறந்த புதுவை மண்ணில், மிகச் சிறுபான்மையராம் தெலுங்கர்கள் போடும் கொற்றங்களை எல்லாம் கண்டு வெம்பியவராயிற்றே. அதனால்தான் பாவேந்தர்,

தமிழ்நாட்டில் அயலார்க்கினி என்ன வேலை? 
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?”
என்றும்,
"அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க; மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் 
அடியோடு வீழ்க"
என்றும்,
"பழந்தமிழ்க் குடிகள் வழிவந்த நாமே
பச்சைத் தமிழர்கள் நமதிந்த நாடு! - நல்
உழுந்தன வேனும் நமைப் பிறர் ஆள 
உரிமையே இல்லை என்றுநீ பாடு"

என்றும் தமிழ்த் தேசியப் போர்ப்பரணி பாடினார்.

"எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! 
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்! 
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்"

என்று பாடிய பாட்டில், "திராவிடத் தமிழன்" என்னும் மாயை செத்துவிட்டது. 

தமிழைத் தாழ்த்தித் "தாய்ப்பால் பைத்தியம்" என்றெழுதிய பெரியாருக்கு நேர்மாறாக,

"தாய்மடியில் குந்தித் தமிழ்முலைப்பால் உண்ணுகின்ற 

சேய்தனக்கும் தாய்பேர் தெரிகிலையோ என்தாயே" 

என்று பாடினார். 

திராவிட மெய்யினக் கொள்கையை அப்பால் எறிந்துவிட்டு.

"தூங்கும் புலியைப் பறைகொண்டெழுப்பினோம்; 
தூய தமிழரைத் தமிழ்கொண்டெழுப்பினோம்’’

என்று பாடியவரும் பாவேந்தரே. 

"தமிழனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது” என்று எழுதிய பெரியாருக்கு மாறாக,

தமிழ்மொழி யெல்லாம் வடமொழி என்று 
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று; 
தமிழ்மொழி யெல்லாம் தமிழ்மொழி என்று 
சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று"

என்று பாடி, பாவாணர் மொழிந்த முதன்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர். பாவேந்தரின் இறுதிநிலை தமிழ்த் தேசியத்தோடு ஒன்றி, தமிழ்த் தேசியப் பாவலராக முதிர்ந்துவிட்ட செம்மையான கோலம்.

தமிழரின் இன்றைய இழிகேடுகளுக்கு, 'திராவிடம்' என்னும் நச்சுப்பூண்டு தமிழகத்தில் பற்றிப் படர்ந்ததும் ஒரு பெரிய காரணம். திராவிடக் கருத்தியலால் தமிழன் தன் அடையாளத்தை இழந்தான்; இன ஓர்மையை இழந்தான்.

கன்னடனுக்கு ஒரு கன்னடநாடும், தெலுங்கனுக்கு ஒரு தெலுங்குநாடும், மலையாளிக்கு ஒரு மலையாளநாடும் இருக்கையில், தமிழகம் மட்டும் தமிழ்நாடாக இல்லை. அது திராவிட நாடாகக் கெட்டு, தெலுங்கரும் கன்னடரும் மலையாளிகளும் அடுத்தடுத்து வந்து ஆளவும் சுரண்டவும் வழிவகுத்துள்ளது.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

கண்ணகித் தவிப்பு - மகாராசன்


காலத் தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர்முட்டக் கசிந்த
காத்திருந்த வாழ்வின் தனிப் பொழுதுகள்
மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு கேட்காத மனத்தொட்டிலும்
நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.

கண்களில் வழிந்த சுடு நீரும் 
அவள் ஆழ்மனத் தீயைக்
அணைத்திருக்கவில்லை.

ஏர் மகாராசன்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தேர்தல் பணி அனுபவங்கள்: மகாராசன்


இந்திய ஒன்றியத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல் பணியில், வாக்குச் சாவடித் தலைமை தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்று, மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் பணி செய்து முடித்திருக்கிறேன். கடந்த காலத் தேர்தல் ஏற்பாடுகளைப்போல, தேர்தலுக்குரிய பொருட்களையும் படிவங்களையும் சாக்கு மூட்டைகளில் கொண்டுவந்து குப்பைகளைப் போலக் கொட்டிவிட்டுப் போகாமல், தேர்தல் பொருட்களை அதற்கென்ற பெட்டிகளிலும், படிவங்களைக் கற்றைகளாகவும் (Booklets), தனித்தனியாக அச்சிட்ட உறைகளாகவும் ஒப்படைத்திருந்தமை புதுமையான நல்ல வழிமுறை. இந்தமுறை பாதியளவு பணிப் பளுவையும் பரபரப்பையும் குறைத்திருந்தது.

பெரும்பாலான அரசுப் பணியாளர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி என்றாலே மிகுந்த மன நெருக்கடியோடுதான் ஏற்றுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் முறை குறித்து எமக்கு மாற்றுக் கருத்துகள் நிறைய இருப்பினும், மக்களின் மனநிலை, தேர்தல் கள நிலவரம், தேர்தல் நடக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டுமென, அரசுப் பணிக்கென்று வந்த காலத்திலிருந்து பல தேர்தல் பணிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்திருக்கிறேன். இந்தத் தேர்தல் களமும் பணியும் பல்வேறு படிப்பினைகளைத் தந்திருக்கின்றன.
இளைய தலைமுறையினர் உட்பட பல தரப்பினரும் மாற்றத்தை உள்ளூர விரும்புவது தெரிந்தது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி இயக்கப்படுகின்றன? வாக்குப் பதிவுச் சின்னங்களின் எல்லாப் பொத்தான்களும் சரியாக வேலை செய்கின்றனவா? வாக்களித்த சின்னங்கள் ஒளிர்திரையில் அச்சாகி விழுகின்றனவா? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும் என்பதற்கான மாதிரி வாக்குப் பதிவு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு நடத்திக் காட்டுவது? வாக்குச் சாவடித் தேர்தல் நடைமுறைகள் என்னென்ன? வாக்குச் சாவடித் தேர்தல் அதிகாரிகளின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன? வாக்களிக்கும் வாக்காளர்களின் உரிமைகளும் நடைமுறைகளும் என்ன? இப்படிப் பலவகையான தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிதலும் புரிதலும் இளைய தலைமுறையும், தேர்தல் அரசியல் களத்தில் பணியாற்றும் புதியவர்களும் தெரிந்து கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவ்வாறு தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புவோருக்கு வழிகாட்டவும் விளக்கப்படுத்தவும் தயாராகவே இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் தென்படுகிற அரசியல் விழிப்புணர்வு, ஒவ்வொரு வாக்குச் சாவடி வரையிலும் வந்து சேர வேண்டும். குறிப்பாக, வாக்குச் சாவடி முகவர்களை ஒவ்வொரு கட்சியும் நியமித்து, அதற்கான களப்பணிகளை முன்கூட்டியே பல கட்சிகளும் செய்து முடித்து விடுகின்றன. அதன் அறுவடையை வாக்குச் சாவடிக்குள் நியமிக்கப்படும் முகவர்கள் மூலமாகவே செய்து கொள்கின்றன.

புதியதாகக் களம் காணும் கட்சிகள் பலவற்றுக்கும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் முகவர்களே நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்டிருக்கும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள்கூட ஏதாவது ஒரு பெரிய கட்சிக்கான வேலைகளைச் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஓர் அரசியல் கட்சி வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் அரசியலைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல; அந்தந்த வாக்குச் சாவடி அளவில் தேர்தல் பணியாற்றும் முகவர்களை நியமிக்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தியாக வேண்டும். இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே தேர்தல் முறையில் நடைபெறும் வெற்றியை எதிர்கொள்ள முடியும்.

வாக்குச் சாவடி அளவில் நடைபெறும் தேர்தல் குறித்து இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. வாய்ப்புகள் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

தேர்தல் பணிச் சான்று மூலமாக, தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்கும் முறை இருந்தமையால், அஞ்சல் வாக்கு செலுத்த வேண்டியதில்லை. பெரும்பாலும் நான் வாக்களிப்பதில்லை. இந்தமுறைதான் வாக்களித்திட வேண்டுமென முன்வந்தேன். ஆகையால், தமிழர் நிலத்துக்கும் இனத்துக்குமான குரலை ஓங்கி ஒலித்தவர்களுக்கு எமது வாக்கைப் பதிவு செய்தாயிற்று. எம் குடும்பத்தார்கள் அனைவரது வாக்கும் அவர்களுக்கே இந்தமுறை விழுந்திருக்கிறது. முதல்முறையாக வாக்களித்த எம் மகளின் வாக்கும், அவரது தோழிகள் பலரது வாக்கும் அவர்களுக்கே கிடைத்திருக்கின்றன.

காலம் களத்தைத் தீர்மானிக்கட்டும்.

ஏர் மகாராசன்
21.04.2024.

புதன், 17 ஏப்ரல், 2024

நானும் என் எழுத்துலகமும்: அங்கவை யாழிசை


புத்தகங்கள், புத்தக வாசிப்பு போன்றவை எனக்கு என்றும் புதிதல்ல. அவையெல்லாம் நான் பிறந்ததில் இருந்தே பார்த்தவைதான். இன்னும் சொல்லப்போனால் என் அப்பா அம்மாவுடன் சேர்ந்து என்னை இன்னும் வளர்ப்பவைதான்.

என் அப்பா பேசுவைதையும், எழுதுவதையும் எப்பொழுதுமே பார்த்து வளர்ந்த எனக்கு, அதையெல்லாம் உள்வாங்கி என்னுடைய நடையில் பிரதிபலிப்பது வழக்கம். என் அப்பா மகாராசன் அவர்களைப் போலவே நான் இருப்பதாகப் பலர் கூறக்கேட்கும்போது மிகப் பெருமிதமாக இருக்கும். உருவத்தோற்றத்தில் மட்டும் அல்லாமல், அவரைப் போன்று எழுத்தாளுமையும் பேச்சாற்றலும் எனக்கும் உண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

என் சிறுவயது முதலே எனது அப்பாவைப் பார்த்தே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். எந்தவொரு பயமோ தயக்கமோ இன்றி, எதுவொன்றைக் குறித்தும் என்னால் பேசவோ எழுதவோ முடியும் எனும் நிலைக்கு எனது அம்மாவும் அப்பாவும்தான் வளர்த்து ஆளாக்கியுள்ளனர். எனது குடும்பச் சூழலும், வீட்டில் இருக்கும் செம்பச்சை நூலகமும் எனது எழுத்துலகப் பயணத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் பலவற்றைப் பரிசாகக் கொடுத்து அறிமுகப்படுத்துவார் என் அப்பா.

எழுத்துலகுக்கான கதவு எனக்குப் புதிதல்ல என்றாலும், அதனூடான பயணம் புதிதானது. வாசிப்புலகு எனக்கு மிக வசீகரமானது. சிறு சிறு புத்தகங்களையும் படைப்புகளையும் சிறு வயது முதலே நான் படித்ததுண்டு. ஆனால், வாசிப்பின் மீதான ஓர் நாட்டத்தை எனக்களித்த புத்தகம், நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வாசித்த 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' என்ற புத்தகம்தான். அந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் வந்தது. அந்த வயதில் நான் படித்த புத்தகங்கள் மற்றும் படைப்புகள் அனைத்தும் சிறு படைப்புகளே என்றாலும் பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியவையாகும்.

எந்தச் சூழலாக இருந்தாலும் தன் சுயத்தையும், தன்னுள் இருக்கும் குழந்தையையும் இழக்கக் கூடாது. தன் வீட்டின் மீது குண்டுமழை பொழிந்தபோது நாட்குறிப்பு எழுதுவாள் ஸ்லெட்டா. வாழ்வைப் பதிவு செய்வதில் அவளுக்கு இருந்த திடம், என்னையும் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள் என்றது ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு.

யார் நம்மைத் தூற்றினாலும் ஏசினாலும் அவர்களுக்கான சிறந்த பதிலடியாக அமைவது, நாம் படித்து நம் தரத்தை உயர்த்திக் கொள்வதே; நம் படிப்பும் பட்டறிவும்தான் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்திய மற்றொரு புத்தகம் 'உனக்குப் படிக்கத் தெரியாது' எனும் உன்னதமான புத்தகம் ஆகும்.

வாழ்வில் நீ எதை இழந்தாலும் பெறுவதற்கு உலகம் உண்டு என்பதை உணர்த்திய இன்னொரு புத்தகம் 'ஹெலன் கெல்லர்' புத்தகமாகும்.

பின்நாட்களில், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் படிப்பின் மீதான - வாசிப்பின் மீதான ஓர் மோகத்தை எனக்களித்தது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆகும். அதன் மூலம் வரலாற்றுப் புனைவுகளின் மீது மிகுந்த வாசிப்பு ஈடுபாடு உண்டானது. அதைத் தொடர்ந்து 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு', 'வேள்பாரி' என்று விரிவடைந்தது. 

எந்தப் புத்தகமானாலும், எப்படிப்பட்ட புத்தகமானாலும், புத்தக வாசிப்பின் முதன்மை நோக்கமாக நான் கருதுவது, அந்த வாசிப்பின் மூலமாக நாம் என்ன பெறுகிறோம் என்பதுதான். 

வரலாற்றுப் புனைவுகளில் இருந்து நம்மால் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மட்டுமே பெற முடியும் என்று புரிந்து கொண்டேன். பிறகு என் வாசிப்பின் பயணத்தில் ஓர் மாற்றம் அடைந்தது. வரலாற்றுப் புனைவுகளில் இருந்து வெளிவந்து மற்ற புத்தகங்களையும் வாசிக்கச் சொன்னார் அப்பா. வாசித்த புத்தகங்களைக் குறித்துக் கட்டுரையாக எழுதித் தரவும் சொல்வார். அப்பா கூறிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவை எனக்கு ஒரு புதிய அனுபவத்தோடு அறிவையும் புகட்டுவதாகத் தோன்றியது. வாசிப்பானது பொழுது போக்கு என்பதையும் தாண்டி, தேடல் என்று ஆனது. அந்தத் தேடலின் வாயிலாக நான் அறிந்து தெரிந்து புரிந்தவையே இந்த விமர்சனக் கட்டுரைகள் ஆகும்.

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதற்கெல்லாம் எனக்கு வயது கிடையாது. அதற்கான அறிவையும் நான் இன்னும் பெறவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், இன்று எழுத்துலகில் உயரப் பறக்கும் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் தத்தித் தத்தி தவழ்ந்தவர்கள்தான்; நான் உட்பட அப்படித் தவழ்ந்து வந்தவன்தான் என்பார் என் அப்பா. நான் எழுதுவதற்கு என் அப்பாவும் அம்மாவும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.

இந்த நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. உன் எழுத்துப் பயணத்திற்கு இது ஒரு முதற்படியாக அமையட்டும் என்று சொல்லித்தான், நான் எழுதிய ஆறு கட்டுரைகளையும் புத்தகமாக உருவாக்கத் தொடங்கினார் அப்பா.

தமிழோடு வளர்ந்ததாலோ, தமிழ் என்னை வளர்த்ததாலோ என்னவோ, என்னைச் சித்த மருத்துவத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம். தமிழ் என்னை வளர்த்ததுபோல் சித்த மருத்துவமும் என்னை வளர்த்தெடுக்கும் இந்தக் கல்விச் சூழலும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், சித்த மருத்துவமும் தமிழும் இரண்டரக் கலந்தவை. இரண்டும் எழுத்துலகத்தோடு தொடர்பு உடையவை. ஆகையால், எனது வாசிப்புலகம் இன்னும் பலவாறாக விரிவடைந்திருக்கிறது. 

முதன் முதலில் நான் எழுதத் தொடங்கியபோது, என் எழுத்துகளைச் சமூக ஊடகங்களில் அப்பா பகிரும்போதெல்லாம் அப்பா அம்மாவின் நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் பலரும் எம்மை ஊக்கப்படுத்தி வாழ்த்துவதைக் காண்பிப்பார் அப்பா. அந்தப் பாராட்டும் வாழ்த்தும் நான் அடுத்தடுத்து எழுதுவதற்கு உருதுணையாக இருந்தன. நான் எழுதிய கட்டுரைகள் தாய்வீடு, புக்டே, அறம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, குறுநூலாக வெளிவருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்நூலை யாப்பு வெளியீடு மூலமாகப் பதிப்பித்து வெளிக்கொண்டுவரும் திரு செந்தில் வரதவேல் மாமா அவர்களுக்கும், என்னை எல்லா வகையிலும் வழிநடத்தி வளர்த்தெடுக்கும் அம்மா அம்சம், அப்பா மகாராசன், தம்பி அகரன் தமிழீழன் ஆகியோருக்கும் எம் நன்றியும் அன்பும்.

மருத்துவக் கல்விப் புலத்தில் வழிநடத்தும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மீனாகுமாரி அவர்களுக்கும், முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எம் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன். 

வாழ்த்திலும் அன்பிலும் நெகிழச் செய்யும் குடும்ப மற்றும் நட்பு உறவுகள் அனைவருக்கும் என் நன்றி.

இது, எனது முதல்நூல். தங்கள் அனைவரின் வாழ்த்திலும் வழிகாட்டலிலும் நான் இன்னும் வளர்வேன். வளப்படுத்துவீர்கள் எனும் பெருநம்பிக்கை எமக்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

மிக்க அன்புடன்
அ.ம.அங்கவை யாழிசை.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


வெள்ளி, 29 மார்ச், 2024

எழுத்தில் நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம் - கவிஞர் யாழ் தண்விகா


ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள். 

6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர். 

தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.

தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.

ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...

சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.

 முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.

கட்டுரையாளர்:
கவிஞர் யாழ் தண்விகா,
கல்வி மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம்.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,

முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.