சனி, 10 செப்டம்பர், 2016

அறம் மறந்த கல்வி முறை

அறம் மறந்த கல்வி முறையும்
மனம் பிறழும்
இளம் தலைமுறையும்.

அண்மைக்கால  இளந்தலைமுறையினரின் வாழ்வுப் போக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. மேட்டிமை மற்றும் நடுத்தர வர்க்க வாழ் நிலைப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நுகர்வுவெறிப் பண்பாடே இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பண்பாட்டு வெளியாகக் கட்டமைக்கப்படுகிறது. ஆங்கில மேலாதிக்க மோகமும் நுகர்வுவெறிப் பண்பாடும் எளிய மக்களிடம் கூட திணிக்கப்படுவதை அண்மைக்காலச் சமூக நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
கல்வி தான் ஒரு சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தியாய்ப் பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழலில் கல்வி வணிகமயமாகிப் போனது. உலக வல்லாதிக்க நிறுவனங்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை விசுவாசிகளை உற்பத்தி செய்யும் கூடாரங்களாய் இன்றைய கல்வி நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இருப்பதை மனப்பாடம் செய், கேள்விகள் கேட்காதே, தானாய்ச் சிந்திக்காதே, மதிப்பெண் மட்டுமே இலக்கு, பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற குறுகிய மனவெளியை இன்றைய கல்வி முறை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
கல்வி என்பது வெறும் அறிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல. சமூக வெளியின் பொது அறத்தையும், வாழ்க்கையின் தனி மனிதருக்கான அறத்தையும் கல்வி தான் தந்து கொண்டிருந்தது. மனித வாழ்வின் இலக்கு இன்பம் தான். அந்த இன்பம் பொருள் சார்ந்ததுதான். ஆயின், அந்த இன்பமும் பொருளும் அறம்சார்ந்ததாய் இருத்தல் வேண்டும். அதைத்தான் தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. உலகின் பல மொழிகளிலும் காணப்படுகிற இலக்கியங்கள் அந்தந்த நிலம் சார்ந்த மக்கள் சார்ந்த அறத்தையே பேசுகின்றன.
அறிவு வளத்தையும் அறவாழ்வையும் ஒருங்கே செதுக்கும் கல்வி முறையே இந்தச் சமூகத்தை வளப்படுத்தும். ஆனால் , இங்குள்ள கல்விச் சூழலோ அறிவாளிகளைத் தான் உற்பத்தி செய்கின்றன. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம்சார் வகுப்புகளும் பாடத்திட்டங்களும் இப்போது இல்லை. அறம்சார் வாழ்வியலை எடுத்துரைக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் முதன்மை இல்லை. அவை வெறும் மொழிப் பாடங்களாக மட்டுமே சுருக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கல்வியில் மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே போதுமானது , மற்ற பாடங்களில் தான் உயர் மதிப்பெண் தேவை என்ற நிலையில் , உயர் கல்வி பயில்வதற்கு மொழிப் பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலை , உயர் கல்விப் பாடத்திட்டங்களில் மொழிப் பாடங்களே இல்லாத ஒரு நிலை என அறத்தை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைக்க முடியுமோ அந்தளவுக்கு ஒதுக்கி வைத்த பின்னால் , அறத்தை எங்கிருந்து தான் கற்றுக் கொள்வது?
அறத்தைப் புறந்தள்ளுகிற இன்றைய கல்வி முறையில் பயில்கிற இளந்தலைமுறை சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் பிறழக் காரணமாய் இருப்பது இன்றையக் கல்வி முறை தரும் பாடம் தான் காரணம்.
நட்பையும் காதலையும் வாழ்வையும் உறவுகளையும் சமூகத்தையும் ஒழுக்கத்தையும்  தன்னம்பிக்கையையும் தருகிற அறம்சார் கல்வியைப் பெறுவதற்கான சூழல் இல்லாமையே பெருங்குற்றங்கள், சீரழிவுகள், தற்கொலைகள், பாலியல் வன்முறைகள், சாதியக் கொடுமைகள், மனிதப் படுகொலைகள் நிகழக் காரணமாய் இருக்கின்றது.
மனதைப் பக்குவப்படுத்தாத கல்வி முறைதான் இளந்தலைமுறை தடம் பிறழக் காரணம். இது மாற்றப்படாத வரை  சமூகக் குற்றவாளிகள் உருவாகிக் கொண்டே தான் வருவார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக