செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நீர்த்தீ அறம் விதைத்தவன்.


நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களைச் சுமக்கும் 
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம் நீ.
கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வைச்
சுவைத்திருக்கலாம் நீ.
சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளோடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம் நீ.
பொழுது சாய்ந்தால்
கொஞ்சம் அரட்டை
பொக்கைச் சவடால் எனப்
போதை கரையக் கரையக்
குடித்தும் படுத்தும்
கவலைகள் இன்றி
களித்து மகிழ்ந்திருக்கலாம் நீ.
அதிகாரக் குத்தகை
வகையறாக்களின்
உடன்பிறப்பாகவோ
இரத்தத்தின் இரத்தமாகவோ
பல்லக்குத் தூக்கியும்,
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம் நீ.
இந்தியம் பேச
நேர்ந்துவிட்ட இடதுகளின்
தோழனாய் இருந்தாலாவது,
பன்றிகளின்
தொழுவத்தில் நுழைந்து,
வாக்குப் பொறுக்கிப் புரட்சியில்
அலுங்காமல்
அய்க்கியமாகி இருக்கலாம் நீ.
இதுவும் இல்லையென்றால்,
உரிமைகள் இழந்து
கொடுமைகள் சகித்து
அடையாளம் மறந்து
மனிதம் பேசியே
வாழ்ந்து நொந்து
மெல்லச் செத்திருக்கலாம் நீ.
ஆனாலும்,
சிறுமை கண்டு பொங்கினாய்,
கொடுமை கண்டு கொதித்தாய்.
விடலையின் உணர்வெல்லாம்
தலைதூக்கும் வயதில்
இன மானத்தை
நீ நுகர்ந்தாய்.
சாதி சாதியாய்ச்
சகதியாய்க் கிடக்கும் நிலத்தில்
எளிதாய்ச் சாதி கடந்து
தமிழரெனும்
பேருரு காட்டினாய்.
வாழத் தெரியாத
வாழ முடியாத கோழை எனத்
தூற்றுவோர் முகத்தில்
எச்சிலுக்குப் பதிலாகச்
சாவைக் காரி உமிழ்ந்தாய்.
இனத்தின்
நீர்த் தாகம் தணியவே
நெருப்பை நீ அள்ளிக் குடித்தாய்.
நீருக்கு அழுத கண்ணீர்
நீரிலே கரையுமென்றா
நீரிலே
நெருப்பெழுதிப் போனாய் ?
உணர்வற்று
இருளில் தவிக்கும்
இனத்தின் மீது
வெளிச்சம் படரத்தானா
நெஞ்சில் மூண்ட நெருப்பை
உன்னுடலில்
ஏந்திக் கொண்டாய் ?
உசுப்பேத்தி
உணர்வேத்தி
தட்டேத்திப் பாடையிலேற்றியதாய்ச்
சொற்புணர்ச்சிப் பகர்வோரெல்லாம்
வாய்பொத்தி நிற்காமல்
பெருங்களம்
கண்டிருந்தால்,
நீ
செத்திருக்க மாட்டாய் தான்.
உனக்கென்று
உடலும் உயிரும்
உணர்வும் அறிவும்
ஆசையும் கனவும் மனமும்
இருக்கத்தானே செய்தன?
அத்தனையும்
துச்சமாய் எரித்து
நீர்த் தீ அறமாய்
தமிழ் நிலத்தில்
நீ படர்ந்தாய்.
சிறு நிலத்தில்
பெருங்கொலையே நடக்க
வேடிக்கை பார்த்த பேரினம்,
உன் உயிர்க்கொடையை
ஏந்தவா போகிறது ?
அப்துல் இரவூப்
முத்துக்குமார்
பள்ளபட்டி இரவி
செங்கொடி என
உயிர்த் தீ விதைத்து
அறம் வளர்ந்த மண்ணில்
நீயும்
நீர்த் தீ
ஆகிப் போனாய்.
தன்னை அழித்து
முளைக்கும் விதை போல்
உம்மைக் கொளுத்தி
அறத் தீ
முளைக்கச் செய்தாய்.
உனது சாவில்
இனத்தின் விழிப்பை
உயிர்ப்பித்திருக்கிறாய்.
ஆனாலும்
தம்பி விக்னேசு ,
தீ விழுங்கி
நீ செத்திருக்கக் கூடாது தான்.
உன்
தீச் சாவு தந்த
வலியைக் காட்டிலும்,
உன் சாவுமேல் எறிந்த
சொல்லடிகளே
எம்மைக்
காயப்படுத்துகின்றன.
கூடவே,
உனது சாவு மறக்கப்படவே
இராம்குமாரின் சாவையும்
தந்திருக்கிறது அதிகாரம் .
நீர் குடித்து
விதைகள் முளைக்கும்.
நெருப்பைக் குடித்து
அறமாய் நீ முளைத்தாய்.
உயிர்த் துளிக்காய்
துளி உயிரைத்
தீக்குத் தந்து
உயிர்ப்பாய் மடிந்த உமக்கு
எம் வீர வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக