சனி, 10 செப்டம்பர், 2016

மாறுதிணை - கவிதை



பெரு மரம்
துப்பிய எச்சிலாய்
நிழலடியில்
முளைத்துக் கிடந்தன
செடிகள்.

கிளைகளில் துளிர்த்து
மண்ணில் இறங்கிய
விழுதுகளைப்
பற்றிப் படர்ந்தன
கொடிகள்.

உதிர்ந்த சருகுகளை
உரமாக்கித் தின்று
முனை காட்டின
புற்கள்.

இதழ் விரித்த
பூக்களின்
மகரந்தத் தடம் பிடித்து
வந்து சேர்ந்தன
பூச்சிகளும் வண்டுகளும் .

முற்றிய
கிளைச் செதில்களுக்குள்
வேர் விட்டு
கீழ் மண் பார்த்துத்
தாவியாடின
தொத்துக் கொடிகள்.

கிளை விரித்த
இடுக்குகளில்
கூடுகள் வேய்ந்தன
பறவைகள்.

நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.

எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக