வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நீரின்றி அமையாது தமிழகம் - கவிதை

நீரின்றி அமையாது தமிழகம்.

மேடாய் இருந்தாலென்ன,
குளமாய் இருந்தாலென்ன,
வேங்கடமாய் இருந்தாலென்ன,
குடகாய் இருந்தாலென்ன?

எல்லாமே இந்தியாவுக்குள்ள
இருக்குதுன்னு சொன்னதைப்
பச்சையாய் நம்பி,
விட்டுக் கொடுத்துக்
கெட்டுப் போனதற்கு
எல்லா
காலத்திற்குமான சான்று,
ஏழரைக் கோடித்
தமிழர்களைத் தவிர
யாராக இருக்க முடியும் ?

ஆற்றின் அளவறிந்து ஈக
என்பதெல்லாம் மறந்து
ஆறுகளையெல்லாம் ஈந்து
கையேந்தும் மடயர்களாய்
வாய்பொத்தி நிற்கிறோம்
இந்தியராய்.

பூநூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.

நாம் எல்லோருமே
இந்தியர்கள் இல்லை
தமிழர்கள் தானென்று
கன்னடர்களும்
மலையாளிகளும்
தெலுங்கர்களும்
சொல்லிக் கொண்டேதான்
இருக்கிறார்கள்
பொட்டில் அறைந்தபடி.

முல்லைக்குத்
தேர் கொடுத்த
பாரிகள் நாம்.
மயிலுக்குப்
போர்வை கொடுத்த
பேகன்கள் நாம்.
நாமும்
கொடுத்தும் கெட்டும்
கொடை மடத்துச் சான்றாவோம்.

நரிமணம்
நெய்வேலி
கல்பாக்கம்
கூடங்குளம்
மிச்சமிருக்கும் மானம் என
அனைத்தும் கொடுத்து
அம்மணமாய்க் கத்துவோம்
நாம் இந்தியர் என்று.

நீரின்றி
அமையாது தமிழகம்.

நீரும் இல்லையென்றால்
இந்தியமும் அப்படித்தானா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக