வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இதுவும் ஓர் ஆணவப் படுகொலை - கவிதை

இதுவும் ஓர்
ஆணவப் படுகொலை .

சாதியத்திற்கு
அதிகாரக் குணமும்,
அதிகாரத்திற்குச்
சாதிய முகமும்
இருப்பதென்பதும் ,
காலங்காலமாய்
இந்த இரண்டையும்
இணைத்திருப்பது
பூநூல் தானென்பதையும்
இந்தச் சாவும்
உலகுக்குக் காட்டியிருக்கிறது.

மறைந்திருந்து கொல்லும்
இராமன் காலத்து
மநு நீதியே,
கழுத்தறுத்தும்
அடைத்து வைத்தும்
கொன்று போட்டது.

மநுவின் சாயம்
பூசிக் கொண்ட நீதியால்
இன்றுமொரு படுகொலையில்
செத்துப் போனான்
ஒரு சாமானியன்.

ஒருவர்
பேசாவிட்டாலும்,
பேச விடாவிட்டாலும்,
பேசி விடுகிறது
அவரது சாவு
பல உண்மைகளை.

இதுவும் ஓர்
ஆணவப் படுகொலை தான்.
அதிகாரப் படுகொலையும் கூட.

அதிகாரத்தின் ஆணவத்தால்
கொல்லப்பட்டான் கோவலன்.
கள்வன் அவனில்லையென
வழக்குரைத்து,
அதிகாரத்தைச்
சாகடித்தாள் கண்ணகி.
கண்ணகியே கொல்லப்பட்ட
கொடு நிலத்தில் நாம்.

ஆணவப் படுகொலைகளுக்குக்
காரணங்கள் தேவையில்லை.
சாமானியராய் இருத்தலே
போதுமானது.

அந்தப் படுகளத்திற்கு
நாளை
நாமும்
அழைத்து வரப்படலாம்.

செத்ததற்குப் பிறகு
நீதி வழங்கப்படலாம்.

அது
அநீதியைக் காட்டிலும்
கோரமாய்க் கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக