திங்கள், 11 மே, 2020

இடதுசாரிகள் - வலதுசாரித்தனம் - சந்தர்ப்பவாதம் : மகாராசன்

புத்தரின் ஆண்குறியில் அறிவைத் தேடும் அம்பேத்கர் என, அவரைக் குறித்த சொல்லாடல்கள் முன்வைக்கப்பட்டிருப்பதைக் குறித்தும், சாதிய நிலைமைகள் குறித்தும் இடதுசாரிகள்கூட விவாதிப்பதில்லை. அவற்றைக் குறித்து விவாதிக்கவும் அவர்கள் தயங்குகின்றனர்.

ஒருவரைக் குறித்தும், அவரது சமூகப் பங்களிப்புகள் குறித்தும், அவரது எழுத்துக்களைக் குறித்தும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் விமர்சன ரீதியாக எது ஒன்றையும் முன்வைப்பதில் தவறில்லை. மீளாய்வுக் கருத்துகள் வருவதும் சமூகத் தேவைதான்.

ஆனால், ஒருவரைக் கண்ணியக் குறைவான சொற்களால் மதிப்பீடுகளை முன்வைப்பதில் அறம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒருவரைக் குறித்து எழுதவும் பேசவும்கூடிய சுதந்திரத்தை இந்தச் சமூகத்தின் சட்ட வாய்ப்புகளே வழங்கியிருக்கின்றன. அதேபோல ஒருவர் மீதானஅவதூறு கருத்துக்கு வழக்குத் தொடுப்பதற்கும் இந்தச் சமூக அமைப்பின் சட்ட வாய்ப்புகளே இடம் தந்திருக்கின்றன.

இந்நிலையில், அம்பேத்கர் குறித்த குறிப்பான சொல்லாடல்களைத் திரும்பப் பெறுவதற்கான எந்த அறிவுறுத்தல்களும் இல்லாமல், வழக்கை மட்டும் திரும்பப்பெற வேண்டுமென இடதுசாரிகள் அறிவுறுத்துவது அறம்சார்ந்த நிலைப்பாடாகத் தோன்றவில்லை.

புத்தரின் ஆண்குறியில் அறிவைத் தேடும் அம்பேத்கர் என்கிற மதிப்பீட்டுச் சொல்லாடல்கள் குறித்துதான் வழக்கும் விவாதமும் அமைந்திருக்கிறது. இந்த மதிப்பீட்டுச் சொல்லாடல்கள் குறித்துக் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் இருப்பதும், வழக்கை மட்டும் திரும்பப்பெற வலியுறுத்துவதும், அம்பேத்கரைக் கண்ணியக் குறைவாய் மதிப்பீடு செய்யும் போக்கிற்கே துணை செய்யும்.

ஒருவரை அவதூறு செய்யும்போது மான நட்ட வழக்கு, அவதூறு வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படுவதற்கான சட்ட வாய்ப்பும் உரிமையும் இருப்பதைப் போலத்தான், இந்த வழக்கும் அதற்குரிய வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கி இருக்கிறது.

வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் எனும் குரலையே இடதுசாரிகள் பலரும் முன்வைக்கிறார்கள். இந்நிலையில், அந்த வழக்கையே பயன்படுத்தக்கூடாது; அந்தச் சட்டப்பிரிவையே நீக்க வேண்டும் என்று இன்னொரு புறமிருந்தும் வலதுசாரிகளின் எதிர்ப்புக் குரல் இருந்து கொண்டே இருக்கிறது.

இடதுசாரிகளின் இந்தக் குரலுக்கும், வலதுசாரிகளின் அந்தக் குரலுக்கும் இடைவெளி அதிகமிருப்பதாய்த் தோன்றவில்லை.

அம்பேத்கரை மட்டுமல்ல; பிரபாகரன், பெரியார், அயோத்திதாசர், நா.வானமாமலை உள்ளிட்ட எந்தவோர் ஆளுமைப் பண்புகளையும் கண்ணியக் குறைவான சொற்களால் மதிப்பீடுகளை முன்வைப்பதும் அதை ஆதரிப்பதும் மனித அறப்பண்பல்ல. இதைக் கண்டும் காணாது கடந்துபோவதும் இடதுசாரிப் பண்பும் அல்ல.

பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பிரபாகரனைக் கொண்டாடுவதிலும், பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி அம்பேத்கரைக் கொண்டாடுவதிலும், நா.வானமாமலையைக் கொச்சைப்படுத்தி அம்பேத்கரைக் கொண்டாடுவதிலும் இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் எனப் பலவகைப்பட்ட அரசியல் முகாம்களைச் சார்ந்தவர்களிடமிருந்தும் சந்தர்ப்பவாதப் போக்குகளும் வெளிப்படவே செய்கின்றன. இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்குகளையும் மறைப்பதும் மறப்பதும் அரசியல் அறமல்ல.

எவருடைய கருத்தையும்  வெளிப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அதை மறுப்பதற்கும் எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதை வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லைதான். அதேவேளை, எவரையும் யாரும் அவமதிப்பதற்கும் உரிமை இல்லைதான்.

கருத்து சுதந்திரத்தின் பக்கம் நிற்பதாய்க் கருதி, அவமதிப்பின் பக்கம் நின்று கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள் பலரும்.

ஏர் மகாராசன்
11.05.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக