திங்கள், 25 மே, 2020

அறிவுச் செயல்பாடு என்பது யாதெனில் : மகாராசன்


அறிவு என்பது பொதுவானது. நமக்கும் இருக்கிறது. நம்மை எதிர்க்க நினைக்கும் அல்லது கீழ்மைப்படுத்த நினைக்கும் அல்லது ஒடுக்க நினைக்கும் அல்லது சுரண்ட நினைக்கும் எதிராளிக்கும் இருக்கிறது.
*
அறிவு சார்ந்த ஒரு செயல்பாடு நமக்கு வாய்க்கிறது எனில், எதிராளிக்கும் அவர் சார்ந்த அறிவுச்செயல்பாடு இருக்கத்தானே செய்யும்.
*
ஆக, அறிவுச்செயல்பாடு நமக்கும் இருக்கும்; எதிராளிக்கும் இருக்கும். இருவரின் அறிவுச் செயல்பாடு களில் எது சரியானது? எது தவறானது? எது குறைவுடையது? எது உண்மையானது? எது நேர்மையானது? எது நிரூபிக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக முக்கியமானவை.
*
இதையெல்லாம் அளவீடுகளாக வைத்துத்தான் எத்தகைய அறிவுச்செயல்பாட்டை முன்னெடுப்பது அல்லது எத்தகைய அறிவுச்செயல்பாட்டின் பக்கம் நிற்பது என்கிற முடிவுக்கு வர முடியும்.
*
வர்க்கம் என்பது பொதுச்சொல். அதில் சுரண்டும் வர்க்கம் X உழைக்கும் வர்க்கம் என முரண்நிலை உண்டு. அதேபோல் அறிவுச்செயல்பாடு என்பதும் பொதுச்சொல். அதில் சுரண்டும் வர்க்க அறிவுச்செயல் X உழைக்கும் வர்க்க அறிவுச்செயல் என்ற இரண்டு முரண்நிலைகள் இருக்கின்றன.
*
பிராமணியம் என்பதும் அறிவுச் செயல்பாட்டால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களால், அதிகார பலத்தைப் பயன்படுத்தி அதற்கு உகந்த சமூகக் கட்டமைப்பைக் கட்டமைக்க முயன்றிருக்கிறது.
*
அத்தகைய பிராமணிய அறிவுச்செயல்பாட்டை எதிர்த்தும் மறுத்தும் இடைநிறுத்தியும்தான் பிராமணியத்திற்கு எதிரான ஓர் அறிவுச்செயல்பாட்டை இந்தியாவின் பலபகுதிகளிலும், தமிழ் மரபின் நெடுகிலும் காணமுடியும்.
*
பிராமணியம் என்பது ஆதிக்கக் கருத்தியல்; பாகுபாட்டைக் கட்டமைக்கும் கருத்தியல். கருத்தியல் உருவாக்கம் என்பது அறிவுச்செயல்பாட்டின் ஓர் அங்கம். அத்தகைய பிராமணியக் கருத்தியலை எதிர்த்தும் மறுத்தும்தானே தமிழ்மரபின் கருத்தியல் உருவாக்கமும் நிகழ்ந்து வந்திருக்கிறது.
தமிழ்மரபின் பிராமணிய எதிர்ப்புக் கருத்தியல் உருவாக்கம் என்பதும் ஓர் அறிவுச்செயல்பாட்டின் அங்கம்தான். அறிவு, கருத்தியல் என்பதெல்லாம் பொதுவாகக் குறிக்கும் சொல்லாடல்கள்.
*
முதலில், பிராமணியம் என்பது ஆதிக்கக் கருத்தியலை உருவாக்கி வைத்திருக்கும் அறிவுச்செயல்பாடுதான் என்று புரிந்துகொண்டால்தான், பிராமணியத்திற்கு எதிரான - மறுப்பான கருத்தியலை உருவாக்கும் அல்லது மீட்டெடுக்கும் அறிவுச் செயல்பாட்டைக் கட்டமைக்க முடியும்.
*
பிராமணியத்தை எதிர்ப்பதான திராவிடக் கருத்தியல் என்பது பிராமணியக் கருத்தியலின் எதிர் வடிவம்தானே. அப்படிப் பார்த்தால், திராவிடக் கருத்தியல் எனும் அறிவுச்செயல்பாடு இன்னொரு அறிவுச்செயல்பாட்டை எதிர்ப்பது/மறுப்பது என்றுதானே பொருள்.
*
பிராமணியம் என்பதும் ஓர் அறிவுச்செயல்பாட்டின் விளைவுதான் என்பதை விளங்கிக்கொண்டால் மட்டுமே, பிராமணியத்தை எதிர்க்கிற, மறுக்கிற அறிவுச்செயல்பாட்டை முன்னெடுக்கவும் தீவிரப்படுத்தவும் முடியும்.
*
அறிவுச்செயல்பாடு என்பதில் இரு வகைப் போக்குகள் இருக்கின்றன. ஆளுவோர் / சுரண்டல் தரப்பு அறிவுச்செயல்பாடு ஒருபுறம்; அதை எதிர்க்கும்/மறுக்கும் புரட்சிகர அறிவுச்செயல்பாடு இன்னொருபுறமுமாக இருக்கின்றது.
*
அதாவது, அறிவுச்செயல்பாடு என்பது எப்போதும் இரு முகாம்களைக் கொண்டதாகவே இருக்கின்றது. அந்தவகையில், பிராமணியம் நமக்கு எதிரான அறிவுச் செயல்பாட்டைக் கட்டமைக்கிறது. நாம் இதற்கு எதிரான அறிவுச் செயல்பாட்டைக் கட்டமைக்க வேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல், பிராமணியம் ஓர் அறிவுச்செயல்பாடு என்று சொன்னவுடன் பொங்கி எழுதுவதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
*
மாறாக, பிராமணியம் எனும் அறிவுச் செயல்பாட்டிற்கு எதிராக வள்ளுவரும் வள்ளலாரும் சித்தர்களும் அயோத்திதாசரும் புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் எழுதியவையும் பேசியவை யாவும் பிராமணியத்திற்கு எதிரான அறிவுச்செயல்பாடுதான் என அடையாளப்படுத்த வேண்டும்.
*
பிராமணிய அறிவுச் செயல்பாட்டிற்கு எதிராகத்தான் தமிழ் மரபின் / இந்திய நாத்திக மரபின் அறிவுச்செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என உரத்துச் சொல்ல வேண்டும். அறிவுச் செயல்பாடு என்பதற்குள் நிலவும் அரசியலைப் புரிந்துகொண்டால் மட்டுமே, நாம் எந்த அறிவுச்செயல்பாட்டின் பக்கம் நிற்கப்போகிறோம் என்பது தெளிவாகும்.
*
தமிழ் மரபின் அறிவுச்செயல்பாடு, பிராமணிய அறிவுச் செயல்பாட்டிற்கு எதிராகத்தான் கருத்தியலைக் கட்டமைத்திருக்கிறது.
*
ஆகவே, பிராமணிய அறிவுச்செயல்பாட்டை எதிர்க்கிற, தமிழ் மரபின் அறிவுச்செயல்பாட்டின் பக்கமே நாம் என்பதையும் தெளிவுறச் சொல்வோம்.
*
ஏர் மகாராசன்
23.05.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக