வியாழன், 21 மே, 2020

சொல் நிலக் கவிதைகளின் பேசுபொருள் நிலமே ஆகும்: திரு பெ.அந்தோணிராஜ், சமூகச் செயல்பாட்டாளர்.



இந்நூலின் ஆசிரியர் திரு. கவிஞர் ஏர் மகாராசன் அவர்கள் மதுரை மாவட்ட சின்ன உடைப்பு எனும் ஊரில் பிறந்து தற்போது தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் வாழ்ந்துவருகிறார். முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ் மீதும், தமிழ் நிலத்தின் மீதும் மிகுந்த பற்றினை கொண்டவர். இவருடைய கட்டுரை நூல்கள் ஏறு தழுவுதல், கீழிருந்து எழுகிற வரலாறு, பெண்மொழி இயங்கியல், தமிழ்நிலமும் புது வன்குடியாதிக்க எதிர்மரபும் மொழியில் நிமிரும் வரலாறு, தமிழர் எழுத்து பண்பாட்டு மரபு போன்றவைகளாகும்.

இவரின் கவிதைகளில் அதிகம் பேசப்பட்டுள்ள பொருள் நிலமேயாகும். நிலத்தின் மீது தான் கொண்டுள்ள பற்று கவிதைகளாக வெளியாகும்போது அது உயிர்த்துடிப்பு மிக்குள்ளதாக இருக்கிறது. தன்னுடைய நூலின் முதல் கவிதையே அம்மாவை பற்றி எழுதுகிறார்.
"அன்பின் உயிர் முடிச்சை
மொழியின் உயர்திறளை
விதைத்தவள் "
என்று அம்மாவை பலவாறு சிறப்பித்துள்ளார். கவிஞர் தன் அம்மாவின் மீது கொண்டுள்ள பாசத்தை மற்றொரு கவிதையிலும் காட்டியுள்ளார்.
"என்னதான்
வாங்கியாந்தாலும்
வெத்தல பாக்கும்
போயல பொட்டலமும்
அப்பனுக்குத் தெரியாம
நான்தருகையில்
உசிரையே
அள்ளிக்கொடுத்தாப்போல
முகமெல்லாம் சிரிச்சு நிக்கும்". இந்த வரிகளை வாசித்து முடிக்கும்போது இப்படி ஒருநாளும் என்தாயை நான் சிரிச்சு நிக்க வைக்கலையே என என் மனது பாவமன்னிப்பு கோருகிறது. நிச்சயம் அவள் என்னை மன்னிப்பாள். ஏனெனில், அவள் தாய். கண்கள் நீர் பனிக்க அக்கவிதையை மேலும் வாசித்தேன்.
"வரும்போதே
சிறுவாட்டுக் காசெடுத்து
கைபிடித்து உள் நுழைப்பாய்
அந்த காசெல்லாம் சுருக்குப் பை வாசம் வீசும்
அதுதானம்மா
உன் உயிர் வாசம் " இந்த வரிகளைப் படிக்கும் யாவரும் ஒரு நிமிடம் தன் அம்மாவை மனதில் இருத்திதான் நகரமுடியும். இத்தோடு இந்த நூல் பற்றிய அறிமுகம் போதுமென்றே எனக்குத் தோணுகிறது. இருந்தும் மேலும் என்னை ஆட்கொண்ட கவிதைகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் நண்பர்களே.

இவர் ஒரு ஆய்வுக்கட்டுரையாளர். அப்படியிருந்தும் கவித்துவமிக்க இவரின் எழுத்துக்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. பெருமரத்தின் கீழே முளைத்துள்ள சின்னஞ்சிறிய செடிகளை பெரு மரம் துப்பிய எச்சில் என்கிறார். அடுத்து
"உதிர்ந்த சருகுகளை
உரமாக்கித்தின்று
முனை கட்டின
புற்கள்" என்றும், அந்த மரத்தைத் தேடி வரும் வண்டினங்கள், கூடு கட்டும் பறவைகள் இப்படி ஒரு மரம் மனிதனின் காலடிபடாத இடமெல்லாம் பச்சைப்பசேல் என்றுள்ளது. ஆனால், மனிதனின் நாடுமட்டும் வெயிலால் வெந்து சாகிறது என்று மனிதனின் தவறுகளை மறைமுகமாகக் சுட்டிக்காட்டிச் செல்கிறார் கவிஞர்.

துயர்ப் படலம் என்ற கவிதையில் உழவர்களின் துயரத்தை மிக உருக்கமாகச் சுருக்கமாக உணர்த்துகிறார்.
"செங்காட்டில்
ஏரோட்டி உழுகிற
கருத்த மேனிகண்களில்
முளைகட்டிக் கிடக்கிறது
பசி ஒளி.
அழுது கொண்டிருந்தாலும்
உழுதுகொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்".
எத்தகைய சோகம் பாருங்கள். உழுது உழுது ஒன்றுமில்லாமல் போய், பசியினால் தவித்தாலும் என்னை உழுதுஉழுது வைத்திரு. இல்லையெனில், நான் மலடாகப் போய்விடுவேன் என்று நிலம் உழவனிடம் கெஞ்சுகிறது. வேறுவழியற்றுப் பசி வந்து இறந்தாலும் பரவாயில்லை; தனைக்காப்பாற்றிய நிலத்தைக் கைவிட்டு விடாமல் அவனும் நிலமும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உள்ளனர் என்று உணர வைக்கிறார்.

கீழ வெண்மணிக் கொலை நிகழ்ச்சியைக் கண்முன் கொண்டுவருகிறார். அவர்கள் என்ன நிலத்தையா கேட்டார்கள். இல்லையே, அரைப்படி நெல் கூலி அதிகமாகக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அந்த நிலஉடைமையாளன் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை மிகக்கொடியது. ஏறக்குறைய முப்பது உயிர்களை நெருப்பிட்டுப் பொசுக்கியது அந்த ஆண்டை அதிகாரம். வாழ்நாளெல்லாம் உழைத்து உழைத்துக் கைகளும் உடலும் களைத்துப் போயிருந்த அந்த அப்பாவிக் குடியானவர்களுக்காகச் செந்நெல் மனிதர்கள் என்றொரு கவிதை. அதன் இறுதியில் இப்படி முடிக்கிறார் கவிஞர்.
"வடுக்களோடும் வலிகளோடும்
வயிற்றுப்பாட்டோடும்
நெருப்பையும் சுமந்து
சாம்பலாகிப்போனார்கள்
வெண்மணி வயலில்
செந்நெல் மனிதர்கள்."

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட ஏழைகளின் துயரத்தினைப் பாடுகிறார்.
"சிறுவாட்டுக்காசும்,
சுருக்குபை காசும்,
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடிந்து போட்ட காசும்,
ஆத்தா அப்பன் நினைப்பாலே
எடுத்துவச்சக்காசும்,
மூத்த பிள்ளையைக்
காட்டிக்கொடுக்க
அடுக்குபானைக்குள்ள
போட்டு வச்ச காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாய்ப் போட
வச்சிருந்த காசும்
செல்லாமப் போச்சே
செல்லாமப் போச்சே ".

"செல்லாமல் போனது
இத்துப்போன வாழ்வைப்
போர்த்திக்கிடக்கும்
சீவன்களும்தான் ".

பணமதிப்பிழப்பில் மிகவும் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான் என்று கவிஞர் கூறும்போது, தற்போது புலம்கடந்து நடந்து செல்லும் லட்சக்கணக்கான அந்த ஏழைத்தொழிலாளர்களை நினைக்கும்போது மனம் கலங்கத்தான் செய்கிறது. செய்திகளை கேட்கும்போது ஏற்படும் உணர்வுகளை விட கவிதைகள் அதிகமாகவே நம் உணர்வுகளை அதிகமாக்குகிறது.

ராம்குமார் கொலைவழக்கு பற்றி ஒரு கவிதை. "இதுவும் ஒரு ஆணவ படுகொலை "என்ற தலைப்பு. சிறையில் இருக்கும் போது மின்சாரத்தால் தாக்குண்டு இறந்துபோனது இன்றுவரை சந்தேகப்படும்படியே உள்ளது.
"மறைந்திருந்து கொல்லும்
ராமன் காலத்து
மநுநீதியே,
கழுத்தறுத்தும்
அடைத்து வைத்தும்
கொன்று போட்டது ".

கார்காலம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நியதி இப்போது மாறிப்போனது பற்றி "கார்காலச் சொற்கள் "என்ற கவிதையில் கவிஞர்,
"எத்தனை நாள் தாகமோ
விழ விழக் குடித்தது
மானாவரிக்காடு ".

"மழையைத் தேக்கிய
அணைக்கட்டுகளாய்
இலைகளில் துளிகள் ".

மண் கவ்வி ஆட்டுவிக்க
மயிர்கள் விரித்து நின்றன
ஆலங்கள் ".

"கார் காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தேதான் கிடக்கின்றன.

அப்துல் ரகுமானின் துளிப்பாக்கள் போல அருமையாக இருந்தது இக்கவிதை. அழகு.

இறுதியாக எனக்கு ரொம்பப் பிடித்த கவிதை. இதன் அழகில் சொக்கிபோனேன். இப்படியெல்லாம் எழுதமுடியுமா என்றால், முடியும் என்பவர்கள் அவர்களின் பால்யத்தை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். கவிதையின் தலைப்பே மிகச்சிறப்பாக நம்மை ஈர்க்கிறது.
"உலர்நிலச் சிறுக்கி "இதுதான் தலைப்பு.

"வெம்பாலைச் சுரந்து
தாய்மையை வடித்து
உயிர்ப்பைக் கொப்பளிக்கும்
உலர் நிலத்துச் சிறுக்கியின்
பசுந்தோல் மேனியில்,
காக்கா முள்ளின்
கூர் நுனியால்
நம் பெயர் எழுத எழுத,
பால் ஈரம் சுரந்த
அம்மாவின் மனசு போலவே
பச்சை உடுத்திச்
சிரித்து நிற்கிறாள்
கள்ளி ".
என்ன அழகு. சங்கப்பாடலுக்கு இணையாக இக்கவிதையைக் கூறமுடியும். இக்கவிதையைப் படித்து முடிக்கவும், என் மனதுள் வந்த வருத்தத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வருங்காலச் சிறுவர்களுக்கு இந்தக் கள்ளிச்செடி தெரியுமா? தெரிந்தாலும் இப்படிப் பெயர் எழுதி ரசிக்கப்போகிறார்களா? அப்படியொரு சூழ்நிலையில் தற்காலக் குழந்தைகள் இல்லையே. இயற்கையை ரசிக்கும் ஒரு மனத்தை உருவாக்கினால் எதிர்காலச் சந்ததியினர் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் காப்பாற்றும் இளகிய மனத்துடையவர்களாக தாவரங்களும் நம்மை போன்ற உயிர்களே என்று உணரும் நாள் வரவேண்டும். அந்தக்கள்ளி என் மனதை விட்டு நீங்கலயே.
*
நூல்: சொல் நிலம் (கவிதைகள் )
ஆசிரியர்: ஏர் மகாராசன்
வெளியீடு: ஏர்
விற்பனை உரிமை: ஆதி பதிப்பகம்
விலை =ரூ 100/
*
அன்புடன்
பெ. அந்தோணிராஜ்
தேனி.

2 கருத்துகள்:

  1. வரும்போதே
    சிறுவாட்டுக் காசெடுத்து
    கைபிடித்து உள் நுழைப்பாய்
    அந்த காசெல்லாம் சுருக்குப் பை வாசம் வீசும்

    ரசனை

    அதுதானம்மா
    உன் உயிர் வாசம் "
    "வெம்பாலைச் சுரந்து
    தாய்மையை வடித்து
    உயிர்ப்பைக் கொப்பளிக்கும்
    உலர் நிலத்துச் சிறுக்கியின்
    பசுந்தோல் மேனியில்,
    காக்கா முள்ளின்
    கூர் நுனியால்
    நம் பெயர் எழுத எழுத,
    பால் ஈரம் சுரந்த
    அம்மாவின் மனசு போலவே
    பச்சை உடுத்திச்
    சிரித்து நிற்கிறாள்
    கள்ளி ".

    அற்புதமான மதிப்புரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்புரைக்கும் ஒரு மதிப்புரை தந்தமைக்கு நன்றியும் அன்பும் தோழர்.

      நீக்கு