வெள்ளி, 1 மே, 2020

கதிர் அரிவாளும் சுத்தியலும்: பாட்டாளி வர்க்கத்தின் குறியீடு:- மகாராசன்

கதிர் அரிவாள் என்பது உழவர்களை அடையாளப்படுத்தும் குறியீடு.
சுத்தியல் என்பது தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் குறியீடு.
அவை, பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றிணைவை அடையாளப்படுத்தும் புரட்சிகரக் குறியீடுகள்.

உழவர் தொழிலாளர் ஒற்றுமையாலும் ஒருங்கிணைந்த போராட்டங்களாலும்தான் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகள் நடந்திருக்கின்றன. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர நாள்தான் மே முதல்நாள்.

மார்க்சியம் முன்வைத்திருக்கும் புரட்சிகரக் கோட்பாடுகளை திரிபுவாதம் இல்லாது, திருத்தல் வாதம் இல்லாது, சந்தர்ப்பவாதம் இல்லாது முன்னெடுக்க வேண்டிய தேவைதான், உலகம் முழுவதும் இருக்கின்ற தேசிய இனங்களின் பெருங்கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

மார்க்சியம் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறது; உலகில் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கிறது. ஆனால், மார்க்சியத்தின் பெயரால் இயங்கும் பல இடதுசாரிக் கட்சிகளும் அமைப்புகளும் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை இனவாதம் என்று பொத்தாம் பொதுவாகச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய உலக வல்லாதிக்கத்தை வீழ்த்த வேண்டுமானால், உலகில் உள்ள தேசிய இனங்கள் யாவும் தங்களது தேசிய இன விடுதலைப் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும். அந்தவகையில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதும், புரட்சிகரத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் திசைவழியில் பயணிப்பதுமே தமிழர்களின் தலையாயக் கடமையாகும்.

ஆகவே, உயர்த்திக்கொண்ட சாதித் திமிரை ஒதுக்கி வைப்போம்; உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என மே நாளில் சூளுரைப்போம்.

உழவர் தொழிலாளர் அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக