ஞாயிறு, 10 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனைப் பெயர் :பாவலரேறு பெருஞ்சித்திரனார்.


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. 

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் (தமிழ்மொழி) அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது. 

பின்னர் அது, தமிழ் தவிர்த்த - தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும் புலவர்களும், திராவிட மொழிகளுக்கும் மூலமொழியாக இருந்த ஒரு பழம்பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக்கொண்டனர். 

ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று. தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று. எனவே, தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட வேண்டியவராகவும் ஆயினர்…

தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும் கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூலமொழி என்று ஏற்றுக்கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.

*

மகாராசன் தொகுத்த திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து..

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக