வெள்ளி, 22 மார்ச், 2024

நீர்ப்பால் தாய்ச்சிகள் - மகாராசன்



மேகங்கள் முட்டிக்கொண்டு
சோவெனப் பெய்த
பெருமழையின் ஈரப்புள்ளிகள்
சிற்றோடை நீர்க்கோடுகளால்
ஆறுகளை வரைந்துகொண்டிருந்தன.

கார்காலத்தின் பசுங்கனவு
ஆறுகளில் மிதந்து வழிந்தோடின.

நுரைகள் மிதக்க 
நாணலைக் கோதி
கரைகளை இறுகத் தழுவி
கழனிகளில் பாய்ந்து
பயிர்த் தாலாட்டை இசைத்த
ஆறுகளின் நாவுகள்
ஈரம் பாடுதலை நிறுத்திக்கொண்டன.

நீர் முகந்த ஊருணிகள்
பள்ளமடை பாய்ந்த கண்மாய்கள்
வெக்கை குளிர்வித்த குளங்கள்
காடுகளில் கசிந்த 
ஓடைகள் யாவும்
நீர் அத்துக் கிடக்கின்றன.

நிலத்தின் சாவையும்
நீர்த்தடக் கொலைகளையும்
ஒப்பாரியாய்ச் சொல்லி அழ
கரைகளும் இல்லை; 
ஆறுகளும் இல்லை.

நீர்ப்பால் தாய்ச்சிகள்
சீரழிந்த வதைகளை
ஆறுகள் யாரிடம் சொல்லி அழும்?
கரைகளிடம்தான் சொல்லி அழும்.

கரைகள் காணாத ஆறுகள்
ஊர்களை மூழ்கடிக்கும் கனவுகள்
வந்து வந்து போகின்றன.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 22 - உலகத் தண்ணீர் நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக