சனி, 15 பிப்ரவரி, 2020

மகாராசனின் சொல் நிலம்: வேளாண் நிலத்தின் வலி மொழியான சொல்லாக்கம்:- ம.கருணாநிதி



“தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம் வேர்கள் இல்லாத மரம் போன்றது, கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால் தான், மகாராசனின் மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கின்றது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.” என சொல் நிலத்தின் முன்னத்தி ஏராக அமைந்துள்ளது.

மகாராசனின் ‘சொல் நிலம்’ கவிதைப் படைப்புலகில் ஆதிப்புள்ளி. கீழிருந்த எழுகின்ற வரலாறு, பெண் மொழி இயங்கியல், ஏறு தழுவுதல், தமிழ் நிலமும் வன்குடியாதிக்க எதிர்ப்பும், மொழியில் நிமிரும் வரலாறு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு, பண்பாட்டு அழகியலும் அரசியலும் எனும் நூலாக்கங்களின் வழியாக கருத்துலகில் சஞ்சரித்த இவர், சொல் நிலத்தின் மூலமாக படைப்புவெளியில் உலாவ அடியெடுத்து வைத்துள்ளார்.

ஏர் வெளியீடாக இந்நூல் வந்துள்ளது. 52 பொருண்மைகளில் அமைந்துள்ள கவிதைகள் யாவும் வேளாண் சமூகப் பண்பாட்டு அரசியலை முன்வைக்கின்றன. ஆற்றுப்படை நூல்களில் ஏர்க்களம் பாடும் பொருநன், போர்க்களம் பாடும் பொருநன், பரணி பாடும் பொருநன் எனும் வகைப்பாட்டில் பாடிய கவிமரபின் நீட்சியாகவே ஏர்க்களம் பாடும் பொருநனாக மகாராசன் ‘சொல் நிலம்’ வழியாக அடையாளப்படுகிறார். கவிதைகள் முழுக்க விவசாய வாழ்வியலைப் படைப்பாளரின் சிறுவயதிலிருந்தே பெற்ற அனுபவத்தை சமகாலப் பின்னணியில் வேளாண் சமூகத்தின் இருப்பையும் இயலாமையையும் கவிதைகள் பதிவு செய்துள்ளன.
கூதிர் கால நிலம் பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும் / வயல் நீர் பாய்ச்சும் / பின்னிரவுப் பொழுதில் / வரப்பில் நடக்கையில் / சில்லிடுகின்றன கால்கள் (2017:ப. 30) உணர்தலின் வழியாக மெய் சிலிர்க்கும் உடல் பசுமையான பொழுதுகளும் வாழ்வுகளும் நினைவில் மட்டும் வாழ்கின்றன. கனவிலும் நனவிலும் கூதிர்காலத்து நினைவுகள் பாடாய்ப் படுத்துகின்றன. இப்போதெல்லாம் கவிதைகளில் மட்டுமே செழுமை நிற்கின்றன என இயற்கையின் மாறுபாட்டை அதன் வழியான கவிமனம் கனவிலும் நனவிலும் உழல்கின்ற சூழலை அகவெளியில் மனம் உழல்வதும் புறவெளியில் மெய்சிலிர்ப்பதும் பசுமை மனம் கொள்வதுமான தன்மையில் கூதிர்காலம் கவிதை எடுத்தியம்புகிறது .

எரிமலைக் குழம்பின் தாக்கத்தை முதலாளி வர்க்கத்தின் எச்சிலோடு பொருத்திப் பார்த்திருப்பது, முதலாளி வர்க்கத்தின் வன்மத்தை எரிமலைக் குழம்போடு உவமைப் படுத்தியிருப்பது, அதிகார வர்க்கத்தைத் தோலுரிக்கின்றது. செம்புலம் கவிதை சிறுவயதில் செம்மண் புழுதி படர்ந்த மேனியாக குளத்தில் குளிப்பதும் சிறு விளையாட்டுத்தனம் சண்டையில் முரண் நீக்கி சிரித்து மகிழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறது. பெயல் நீர் சுவைத்துப் / பசப்பை ஈன்றது / செவல் காடு (மேலது. ப. 77) எனும் சூழலியல் சார்ந்த கவிதை, சங்க மரபுக் கவிதையான ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ எனும் கவிதை மரபை மறுவாசிப்பு செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இக்கவிதையில் நீரில் இருந்து நிலத்தைப் பார்ப்பது ஒரு வகை; நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பது இன்னொரு வகை. மேலே குறிப்பிட்டுள்ள சங்கக் கவிதை நீரின் வழியாக நிலத்தை பார்ப்பதுமாகவும், மேலிருந்து நோக்குவதாகவும் அமைந்துள்ளது. இக்கவிதையோ நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பதுமான கீழிருந்து பார்க்கப்பட்டிருப்பது சங்க மரபிலிருந்து மாற்றுத்தளத்தில் செம்புலப் பெயல் நீர் கருத்தாடல் அமைந்துள்ளது.

உழைப்பின் சுரண்டலை பேசும்பொழுது உரத்த சொல்லாடலாக வெளிப்பட்டுள்ளது. விவசாயத்தின் மீதான பற்று கவிதையில் உயிர்பெற்று இருப்பதைப் போல தாய்மை, காதல், மொழி இவைகளின் மீதான பற்றுக்கோடுகள் கவிதையின் சொல்லுருக்களாக வெளிப்பட்டுள்ளன. நிலம் உற்பத்தியின் விளைவால் மகசூல் கிடைப்பதைப் போல வேளாண் வளமைக்கான மொழி தவிப்பின் விளிம்பில் ஈரம் சுரக்கும் தாய்நிலத்தின் மொழியின் குவிமையத்தைத் தாங்கி நிற்கின்றன சொல்நிலம் கவிதைகள். அன்பின் உயிர் முடிச்சை மொழியின் வழி விதைத்தவள் என்று கூறுவது, அன்பு வயப்பட்ட தாய்மையும் அன்பு வயப்பட்ட மொழியையும் ஒப்புநோக்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது.
“உழைப்புச் சொற்களால் / நிலத்தை எழுதிப்போன / அப்பனும் ஆத்தாவும் / நெடும்பனைக் காடு நினைத்தே / தவித்துக் கிடப்பார்கள் / மண்ணுக்குள். ” ;(மேலது, ப. 87) எனக்கூறுவது, சங்கக்கவி மரபில் உள்ள கையறுநிலைப் பாடலின் தொனிப்பொருளைப் பெற்றுள்ளது இக்கவிதை. பொற்றோரும் நிலமும் இல்லாத தவிப்பின் இருத்தலைக் காட்டுகிறது. விளைநிலத்தை நம்பியே தம் வாழ்நாளின் முழுவதும் காலம்கழித்த விவசாயப் பூர்வீகத்தை தன்னிலைசார்ந்த படைப்பாக்கத் தன்மையை சொல்நிலத்தின் வழியாக அவதானிக்க முடிகிறது.
வேளாண் நிலத்தின் வலி மொழி :
  வடுக்களோடும் வலிகளோடும் / வயிற்றுப்பாட்டோடும் / நெருப்பையும் சுமந்து / சாம்பலாகிப் போனார்கள் / வெண்மணி வயலின் / செந்நெல் மனிதர்கள் (மேலது, ப. 25) விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வியல் இன்றைய சூழலில் பல்வேறு நிலைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றன. கூலி உயர்விற்குக்காகப் போராடிய கீழவெண்மணி தொழிலாளர்களைக் காவு வாங்கிய அதிகார மையத்தை ‘உயிர் அறுப்புகள்’கவிதை, கடுமையாகச் சாடுகிறது. நிலமே கதியென்று / உழைத்துக் கிடந்தவர்களின் / கையளவுக் காணிகளை / அதிகாரக் களவாணிகள் / களவாடிய பின்பும் / குத்தகை வாரத்துக்கும் / கொத்துக்கும் கூலிக்குமாய் / உழைத்துமாய்ந்திடத் / தஞ்சமடைந்த ஆவிகள் / தொப்பூள்க்கொடிகள் / வியர்வை வழிந்த நிலத்தையே தான் / சுற்றிக் கிடந்தன. (மேலது, ப. 79) நிலம் வைத்திருந்த உழைப்பாளிகள் இடத்தில் கையளவு காணிகளையும் கூட இழந்து அடிமைகளாய் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்புச் சுரண்டலை உயிர் அறுப்புகள் கவிதை எடுத்தியம்புகிறது. தொப்பூள்க் கொடி உறவுதேடும் தன்மை, பஞ்சமி நிலமீட்பு தேடுகின்ற கவிதையாக முடிகிறது. ஈரம் கோதிய சொற்கள், பாழ்மனம், இனம் அழுத நிலம் எனும் கவிதைகள் தமிழ்நிலத்தின் வலிமொழியின் சொல்லாக்கங்களாகும். திணைமயக்கம் கவிதை வேளாண்நிலத்தின் தொன்மத்தைத் தேடிச் செல்கிறது.
குலைகள் பூத்து / உதிர்ந்த விதைகள் / வரலாறு படித்தன / வடுக்களே / விதைகளாகும் காலம் முளைக்கிறது / கூடுகள் இழந்து / காயங்கள் சுமந்த / தூக்கணாங்குருவிகள் / மீண்டு மீண்டும் வரும். (மேலது, பக். 56-57)

அழுது கொண்டே இருந்தாலும் / உழுது கொண்டே இருவென்று / காலில் விழுந்து கிடக்கிறது / நிலம் (மேலது, ப. 19)
சாதிய வெறியும் / நிலவுடைமைச் சதியும் / சகதி மனிதர்களைச் / சாவடிக்கக் காத்துக் கிடக்கின்றன. (மேலது, ப. 24)
ஆத்தாளின் வலியை / இப்போது / நிலத்தாயும் / சுமந்து கிடக்கின்றன. (மேலது. ப. 62) எனும் கவிதைகள் உழைப்பாளிகளின் வலியினையும் இழிவுகளும் மனிதர்களை இறப்பின் விளிம்பில் அமிழ்த்துகின்றன. கழுநிலம் எனும் கவிதை கையறுநிலை ஒப்பாரிப்பாடலைப் போன்று வலிமிகுந்ததாய் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளைப் கொலை செய்யும் ஆம்குழாய் கிணறுகளை, உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும் / கொத்துக் குழிகள் / நிலப் படுகொலையின் / படு களங்கள் (மேலது, ப. 64) என நிலப் படுகொலை கவிதை காட்டுகிறது. நிலத்தடிநீரை உறிஞ்சும் அதிகாரத்திமிரின் படுகளமாக நிலமாகிவிடுகின்றதை எண்ணி கவிமனம் கலங்குகின்றது.
கவிதையின் உவமையாக்கம் :
சொல்நிலம் கவிதைகளனைத்தும் வாழ்வின் வலியை உணர்வுப்பூர்வமாக ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகின்றன. இந்த ஒப்புமையாக்கமனைத்தும் வேளாண்மை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. உலகைப் போர்த்தும் / கதிர் போல / ஒளியாய் / நுழைந்தவள்(மேலது, ப. 11) தன்னிருப்பை வளமையாய் அணுகுவதும் வாழ்வினைச் செழுமை சேர்ப்பதற்கும் தாய்நிலத்தின் பரிசத்தை இன்பம்கொள்ளும் மனநிலை கவிதையில் வெளிப்பட்டுள்ளது. நிலத்தின் வளர்ச்சிபோல கைத்தளம் பற்றிக்கொள்கிறது கவிமனசு. சொல் நிலக் கவிதையாக்கம் மகிழ்வில் விளிம்பிலும், துன்பத்தின் விளிம்பிலும் உலவும் இருவேறு நிலையைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.
வயல் நீர் வற்றி / பசுந்தாளெல்லாம் / பறித்து நின்ற / நெற்கதிர் அடுத்து / களம் சேர்த்த / கருத்த மனிதர்களின் கவலைகள் / ஊமணி எழுப்பிய ஓசை போல் / ஊருக்கு கேட்காமலே / ஒட்டிக் கிடந்தன வாழ்வில். (மேலது, ப. 23) உழைப்பாளிகளின் உடலை கருத்த மனிதர்கள் கூறியதோடு அவர்களின் கவலை வாய் பேசாதார் எழுப்பும் ஓசை போல கேட்காமலே போனதாகக் கூறுகிறத இக்கவிதை.

பாழ் நிலம் நினைத்துத் / தவிர்த்து கிடைக்கும் / கலப்பை போல் / தனித்து போனது யாவும். (மேலது, ப. 27) காதலின் பால் ஆட்பட்டுத் தனிமையில் தவிக்கும் மனத்தினை பாழ்நிலத்தோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது.
விழுகின்ற மழைநீரில் / கலந்து விட்ட கண்ணீர் / காணாது போலவே / அவர்களின் கனவும் / கலைந்து போனது / பல காலமாய் (மேலது, ப. 31) உழைப்பாளிகளின் கனவும் களைந்து போகின்றன. வாழ்வில் கண்ணீர் மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
தன்னை அழித்து / முளைக்கும் விதை போல் / உயிர்த்தீ விதைத்து, / தம்மை கொளுத்தி / இனத்தின் விழிப்பை / சாவுகளில் உயிர்ப்பித்து / முளைக்க செய்த / அறத்தீ மனிதர்களின் / தாகம் தணியும் ஒரு நாள். (மேலது, ப. 42) இயற்கைச் சீற்றத்தாலும், கைட்ரோ கார்பன் திட்டத்தாலும், உயர்மின் கோபுரம் உருவாக்கத்தாலும், பன்னாட்டுத் தொழிலின் விரிவாக்கத்தாலும் விளைநிலம் அழிக்கப்படுவதை எண்ணி வேளாண் தொழிலாளிகள் தன்னுடலில் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை மண்ணில் அறத்திற்காக விதைக்கப் படுகிறார்கள் எனக் கவிதையின் அர்த்தம் வெளிப்படுகிறது. எல்லாக் கவிதைகளும் எவ்வித பூடகமற்ற அர்த்தத்தளத்தில் பயணிக்கின்றன.
இயற்கையின் வளமையைக் கொண்டாடுதல் :
வேளாண் சமூக வளமைசார் வாழ்வில் மகிழ்ச்சி சார்ந்ததாக இருப்பதோடு வளமைசார் சடங்கினை மையப்படுத்துவதோடு இயற்கையை நேசிப்பின் தன்மை கவிதைகளில் தொனிப்படுகின்றது. மழைநீர் வேளாண்மைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அம்மழை வெள்ளமாகப் பெருக்கெடுக்கும்போது அழிவையும் தருகிறது. மழை வளக்கானதாகவும் வளமை அழிப்பிற்கானதாகவும் இருமை எதிர்வுத்தன்மை கொண்ட மழையை, கண்ணீரோடு ஒப்புமையாக்கம் செய்துள்ளார் மகாராசன். குறுணி மழை, ஈரம் கோதிய சொற்கள், மழைக்காலம், ஈசப்பால், செம்புலம், உயிர்க்கொடி, பன்முகம், ஈழப் பனையும் குருவிகளும் எனும் கவிதைகள் இயற்கையையும் வேளாண் வளமையையும் கொண்டுதலைக் காட்சிப்படுத்துகின்றன.
இரவில் ஒழுகும் / மழை நீர் போல / மனம் அழுது அழுகின்றது இன்னும் / உசிரப்பிடுச்சி வச்சிருந்த / உனை நினைத்து (மேலது, ப. 47)
பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும். (மேலது, ப. 30)
பன்னீர் பூக்கள் / முகம் சிரித்துச் / செந்தரையில் / கிடப்பதைப் போல / கூட்டமாய் சலசலத்து / குரல் சிந்திய கூட்டிசை / காற்றில் கரைந்து / செவியில் நுழைந்து / செல்லத் துள்ளலாய்க் / கண்ணில் மணக்கின்றன / பூனை குருவிகள். (மேலது, ப. 61)

வானத்தில் உழுது விதைத்த / ஒற்றை விதையைப் போல, / வெறிச்சோடி கிடந்தாலும் ஒளியாய் துளிர்விடுகிறது / நிலா. (மேலது, ப. 72)
ஒரு மழைக்காலத்தில் / மண் தளர்த்தி / முளை விடுவதைப் போல / பச்சையம் பூக்கிறது / மனம். (மேலது)
மண்ணில் அருவிபோல் / முன்டியடித்துப் பூத்து / சட்டென மேலே பறந்து / இறக்கை உதிரக்/ கீழே விழுந்து / அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன (மேலது, ப. 76)
ஈரக்காற்றில் மஞ்சள் மஞ்சள் இதழ் படுக்கை பீர்க்கம்பூ,
மூக்குத்தி பூத்தேடி / பயணித்த பாதங்களைக் / குத்திகுத்திச் சிரிக்கிறது / நெருஞ்சி. (ப. 84)
பால்வடியும் மரங்களில் / பொட்டலங்களுக்குள் / உறங்கிக் கிடக்கின்றன / ஈத்துக் கொடிகள். (மேலது, ப. 80)
ஈச்ச மர இலைகள் கிள்ளி / உள்ளங்கைகளில் / சுருட்டி ஊதிய பீப்பிகள் / இசை கற்றுத் தந்து போயின. / அலைந்து திரிந்த வெயிலில் / நிழல் அள்ளி பருகிய போது / இனித்து கிடந்தது / வாழ்க்கை. (மேலது, ப. 67)
ஈசல் வயிற்றுப் / பால் சவுச்சியில் / கசிந்து கிடந்தது / நிலத்தாளின் முலைப்பால். (மேலது, ப. 76)
நெல்லை விதைத்தவர்கள் / சொல்லை விதைத்தார்கள் / கூடவே தன்மானத்தையும் (மேலது, ப. 24) எனும் கவிவரியின் வழியாக, நெல்-சொல் இரண்டினையும் ஓர்மைப்படுத்தப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. மேற்காணும் சொல் நிலக் கவிதைகள் யாவும் இயற்கைப் புனைவினை மையப்படுத்திய சொல்லாக்கங்கள் சங்க இலக்கிய இயற்கைப் புனைவினைப் போன்று அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
இருண்மை எனும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு கவிதையின் பாடுபொருள் திறந்த மனதுடன் வாசிப்பிற்குள் உள்நுழையும்போது சொல் நிலக்கவிதைகள், இயற்கையைப் பிரதியாக்கம் செய்வதாகவும் இயற்கையின் ஊடாக மனித வாழ்வைப் பொருத்திப் பார்ப்பதும், உலகமயச் சுழலால் இழந்து வரும் வாழ்வாதாரத்தையும், வேளாண் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்வையும் கவிதைகள் தாங்கி நிற்கின்றன. கவிதை உருவாக்கத்தில் இயற்கைப் பருப்பொருட்கள் ஆளுமை செலுத்துகின்றது. படைப்பாளுமைக்கும் இயற்கைக்குமான உறவுநிலை கவிதையாக்கத்திற்குத் துணையாக நிற்கின்றது. படைப்பு மனம் இயற்கை, இயற்கை மாற்றம், ஒவ்வொரு இயற்கைப் பொருளையும் தன் கவிதைவெளிக்குள் கொண்டு வருவது என்பது இயல்பான படைப்பு மனத்தின் செயலாக்கம் சொல் நிலத்தில் வெளிப்பட்டுள்ளது. சொல் நிலத்தில் இயற்கையைப் புனைவாக்கத்தோடு வேளாண் நிலத்தின் வலி மிகுந்த வாழ்வினை உணர்ந்து படைப்பாக்கம் செய்தல் தன்னிலை சார்ந்து நிகழ்ந்திருக்கின்றது. நவீனக் கவிதைகள் உருவாக்கச் சூழலில் வேளாண் பண்பாடு சார்ந்த தளத்தில் பல பொருண்மையை நோக்கி நகர்கிறது ‘சொல் நிலம்'.

- ம.கருணாநிதி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் - 625514.

நன்றி:
கீற்று மின்னிதழ்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஓர் அரசுப் பள்ளியின் படைப்பு விளைச்சல்: "தமிழ்க் கழனி" இதழ் :- மகாராசன்.



எளிய மக்களின் வெள்ளந்தியான சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலில், இளைய தலைமுறையின் கல்வித் தாகத்தைத் தணித்து, அதன் எதிர்காலச் சமூக வாழ்வுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருப்பது அரசுப் பள்ளிகள் மட்டுமேதான். வசதிகள் இன்றித் தவிக்கும் எளியோரின் குழந்தைகளுக்குக் கல்விக்கான புற வாய்ப்புகளை அரசாங்கம் உள்ளிட்ட இந்தச் சமூகம் ஏற்படுத்திக் கொடுத்தாலும், மாணவர்களின் அகத்தெழுச்சி சார்ந்த படைப்புத் திறன்களை அடையாளப்படுத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் பள்ளிக் கூடங்களுக்குப் பெரும் பங்கு  இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, மாணவர் சார்ந்த கல்விச் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், வகுப்பறைக்கு வெளியேயும், பாடப் புத்தகங்களுக்கு அப்பாலுமாக மாணவர்களின் படைப்புத் திறன்களை உயிரோட்டமாக வெளிக்கொண்டு வருவதில் ஓர் ஆசிரியரின் பங்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒரு தலைமுறையானது பள்ளிக்குள் உயிரோட்டமாய் உருவுடன் உலவிக்கொண்டிருக்கும் சூழலில், அந்தந்தத் தலைமுறையை வெறுமனே பாடங்களைக் கற்கும் எந்திரங்களாக முழுவதுமாகப் பாவிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஒரு தலைமுறையைச் சார்ந்த மாணவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்தந்தத் தலைமுறை மாணவர்கள் நிறைய நிறையப் படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் கவிஞர்களாக, கதை சொல்லிகளாக, கட்டுரை எழுதுபவர்களாக, பேச்சாளர்களாக, ஓவியர்களாக, ஆடல், பாடல், நடிப்பு உள்ளிட்ட நிகழ்த்துக் கலைஞர்களாக, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வகைக்குள் தென்படும் இன்னும் பல கலை இலக்கியத் திறமையாளர்களாகவும் ஆவதற்குரிய அறிகுறிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படுத்தும் முதல் பெருங்களம் பள்ளிக்கூடம்தான் என்பதை இந்தச் சமூகம் முழுவதுமாய் உணரும்போதுதான் பாடத்துறை சார்ந்த அறிவாற்றலோடு படைப்பாளுமை மிக்க நல் மாணவத் தலைமுறையை உருவாக்க முடியும். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் தமிழ்க் கழனி எனும் இந்த இதழாய் உருக்கொண்டு வெளிவருகின்றது. தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியாகத் திகழ்ந்துவரும் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தமிழ் மன்றமானது, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகத் தமிழ்க் கழனி இதழைக் கொண்டு வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பு முயற்சிகளுக்கு வடிவம் கொடுக்கும்  வகையில், அரசுப் பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியத் தரப்பின் எளிய முயற்சியும் கூட்டுப் பயிற்சியும்தான் தமிழ்க் கழனி இதழாய் விளைந்திருக்கிறது.   தமிழ்க் கழனிக்கு அறத்துணையாய் வழிநடத்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கோபிநாத் அவர்களுக்கு மிகுந்த நன்றி. இதழுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் கனிவான நன்றி. தமிழ் மரபின் அடையாளத்தோடு புதுமைப் பாய்ச்சலைத் தொடங்கும் தமிழ்க் கழனி இதழில் தங்கள் ஓவியங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய ஓவியர்கள் இரவி பேலட், நித்யன் ஆகியோருக்கு அன்பு நன்றி. ஓர் அரசுப் பள்ளியிலிருந்து வெளிவரும் இதழாகத் "தமிழ்க் கழனி" பெருமிதம் கொள்கிறது.

தோழமையுடன்
முனைவர் மகாராசன்,
தமிழ்க் கழனி இதழ் ஆசிரியர்.
04.02.2020.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மழைக்கோலம்: மகாராசன்

ஏறுவெயிலின்
வெக்கைப் பொழுது
அவரை துவரையின்
நிழல் கோதியபடி
பூஞ்சிரிப்புச் சிந்தல்களை
எண்ணிக் கொண்டிருக்கிறது.

ஓலைகளில் முளைகட்டிய
வெண்பாக்கள் பரவிய
கழனி வரப்பில் வேர்பிடித்த
அருகம்புல் நுனிகளில்
நுரைப் பூக்களை
யாமத்தில் சொருகிப்போகிறது
வெம்பா.

கொடாப்புத் தொழுவில்
தாய்மடு ஏங்கும்
இளங்குட்டிகளை நினைத்தபடியே
மேய்ச்சல் முடித்துப்
பொழுதுசாயத் திரும்பும் வெள்ளாடுகளின்
புழுக்கை விதைகளில்
தரைக் காட்டின் தான்தோன்றிப் புற்களின் வாசம்
கம்மென்று மணத்துக் கிடக்கிறது.

தொளி வயலின்
சனிமூலையில் குலவையிட்டு
பிள்ளைமுடி வணங்கிய
குடும்பச்சிகளின் நடுகையில்
தூர்கட்டிப் பொதியாடும்
கரும்பச்சைத் தாள்களுக்குள்
வயிற்றுப் பிள்ளையாய் உள்ளிருக்கும் வெங்கதிர்களைப்
பரியச் செய்து ஈன்று கொண்டிருக்கும் நெற்பயிர் வாசம்
சம்சாரிகளின் பாடுகளாய்
மணத்துக் கிடக்கிறது.

தெப்பென்று நிரம்பியிருக்கும்
கண்மாய் மடைத்தூம்புக் கண்களின் நீர்ப்பாய்ச்சலில் தாவி
வெயிலில் மினுமினுத்து நீந்திப்போய்
வாய்க்கால் வாமடையில் நுழைகின்றன கெண்டைகள்.

பூப்பெய்திக் கிடக்கின்றன துரவுகளெல்லாம்.

நெடுநாள் ஊடல் முடித்துக் கொஞ்சும் கிளிகள் போல
நிலத்தாள் உடம்பில்
பசப்பேறிய கோலங்களை வரைந்திருக்கிறது கார்காலத்தில் பெய்த பெருமழை.

வெள்ளந்தி மக்களின்
வயிற்றுப்பாட்டுக்கும்
வாழும் பாட்டுக்கும்
கசிந்துருகும் இந்த மழை
இந்திரர் அமிழ்தமே தான்;
தெய்வமும் இதுவேதான்.

ஏர் மகாராசன்
10.01.2020

ஒளிப்படம்
ஓவியர் நித்யன்

திங்கள், 2 செப்டம்பர், 2019

பிள்ளையார் வழிபாடு: ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது :- மகாராசன்



உ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில்  அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில்  சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே,  பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.

சமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.

ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

அதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக  நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.

தமிழக  நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.

அரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.

மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே

என, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

தமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என  இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது.  நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டிருக்கிறது.

சிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.

மேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

என்கிறது தொல்காப்பியம்.

உயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.

இந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.

வடக்கே தெற்கே ஒட்டி

வலதுபுறம் மூரிவச்சு

மூரி ஒழவிலே

முச்சாணி புழுதி பண்ணி

சப்பாணிப் பிள்ளையாருக்கு

என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே

முளைச்சாராம் பிள்ளையாரு.

ஒடு முத்தும் தேங்காயை

ஒடைக்கறமாம் பிள்ளையாருக்கு,

குலை நிறைஞ்ச வாழைப்பழம்

கொடுக்கறமாம் பிள்ளையாருக்கு,

இத்தனையும் ஒப்பதமாம்

எங்கள் சப்பாணிப் பிள்ளையாருக்கு!

என, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனும் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.

தாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும்,  வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன.  ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.

தமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான்,  எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

பிள்ளையார் சுழி எனும் எழுத்துக் குறியும் தமிழரின் உலகக் கண்ணோட்ட மரபும் : மகாராசன்


எழுத்து என்பது மனித அறிவின் புலப்பாடாகப் பரிணமித்த ஒன்றாகும். தமிழ் எழுத்தும் தமிழர் அறிவு மரபைப் புலப்படுத்தும் மொழி வெளிப்பாட்டுக் கருவியாய்ச் செயலாற்றி வந்திருக்கிறது. இத்தகையக் கலை, இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட எழுத்துச் செயல்பாடுகளை ‘உலகம்’ எனும் சொல்லால் குறித்துவிட்டுத் தொடங்குதல், தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபாகவே கருதப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான், தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் ‘உலகம்’ என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.

உலகச் சொல்லுடன் நூலைத் தொடங்குதல் தமிழ் மரபாய் இருந்திருக்கிறது. இதைக் குறித்து உ.வே.சாமிநாதர் கூறுகையில், நூல்களின் முதலில் மங்கல மொழிகளுள் உலகம் என்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும், அதன் பரியாய மொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு என்கிறார்.

பலர் புகழும் சூரியனைக் கடலில் இருந்து எழும் போது கண்டவர்களைப் போல, உலகம் மகிழ்ச்சி அடையும்படியாக இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில்
சுடர்விடுகிறது ஒளி எனும் பொருள்தரும்படி,
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பத்துப் பாட்டுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை.

உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது மணிமேகலைக் காப்பியம்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது கம்பராமாயணக் காப்பியம்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பெரியபுராணக் காப்பியம்.
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்
திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது வளையாபதிக் காப்பியம்.
உலகம் மூன்று மொருங்குணர் கேவலத்து
அலகிலாத அநந்த குணக் கடல்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது யசோதர காவியம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என, உலகு எனும் சொல்லைக் கொண்டுதான் திருக்குறளின் முதல் குறளும் முடிகிறது.

உலகம், உலகு என்பதைத் தலைச்சொல்லாக - முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களைப் போலவே, உலகம் என்பதை அடைமொழியாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களும் தமிழில் இருக்கின்றன.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக் காஞ்சி.

மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது சீவக சிந்தாமணிக் காப்பியம்.

மலர்தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியின் ஒருதான் ஆகி
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நன்னூல் சிறப்புப் பாயிரம்.

மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நம்பி அகப்பொருள் இலக்கண நூல்.

 உலகம் என்பதைக் குறிக்கும் வேறு சொற்களைக் கொண்டும் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லில் தொடங்குகிற பாரதம் பாடிய பெருந்தேவனாரின் வாழ்த்துப் பாடலோடுதான் எட்டுத்தொகையின் நற்றிணைப் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி
புலம் பெயர் புலம்பொடு கலங்கி
என, உலகத்தைக் குறிக்கும் வையகம் என்கிற சொல்லில் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை.

மணி மலைப் பணைத் தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லாலும் அடைமொழியாலும் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை.

இவ்வாறாக, உலகம் அல்லது உலகைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு எழுத்துச் செயல்பாட்டை மேற்கொண்ட தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபைக் காண முடிகிறது.

இலக்கியம் உலகப் பொதுவானது; எனவே, தனிப்பட்டவற்றைக் கருத்தில் கொள்ளும் வரலாற்றைவிட இது தத்துவரீதியானது எனக் குறிக்கிறார் அரிசுடாட்டில். இலக்கியம் என்பது உலகளாவியது என்பதே தமிழ்ப் படைப்பாளிகளின் கருத்தும் நோக்கமுமாக இருந்து வந்திருக்கிறது எனத் தமிழண்ணல் கூறுகிறார். ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான இப்போலைட் தெயின் கூறும்போது, ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்ல வேண்டும் என்கிறார். அவ்வகையில், இலக்கியத்தின் உலகப் பொதுமையை நிலை நிறுத்தும் மரபு அடிப்படையிலேயே தமிழ் இலக்கியமும் கால்கொண்டிருப்பதாக அறிஞர்கள் சுட்டுவர்.

இலக்கியத்தை மனித இனப் பண்புடையதாக ஆக்க வேண்டும் அல்லது மனித இனத்திற்குப் பயன்படச் செய்ய வேண்டும். காலத்தை வென்று வாழும் இலக்கியமனைத்தும் என்றும் இன்பம் தருகின்றன. தம் இனத்தது, பிற இனத்தது என்ற வேறுபாடின்றி, இவை மக்கள் அனைவரின் இலக்கியமாய்த் திகழ்கின்றன. மனித இனத்தார் அனைவராலும் படைக்கப்பட்ட எல்லா இலக்கியமும் மனித இனம் அனைத்திற்கும் பொது உரிமையாகும். அம் மனித இனப் பொதுமையைக் கண்டறிய உதவும் முதன்மை வாய்ந்த கருவியும் இலக்கியங்களே ஆகும்.

இலக்கிய வெளிப்பாடு உலக மனித இனம் அனைத்தினது பொதுவியல்புகளின் வெளிப்பாடு. காலக்கோட்பாடும் நாட்டெல்லையும் மொழித்தடையும் கடந்து இலக்கியம் ஒருமையுடையதாய்க் காட்சி அளிப்பதற்கு, மனித இன ஒருமைப்பாடே காரணமாகும் என இலக்கிய ஒருமைப்பாடு குறித்துக் கருத்துரைக்கிறார் தமிழண்ணல். அவ்வகையில், உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் ‘உ’ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர்.

உலகைக் குறித்துப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு மட்டுமல்ல; தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் இன்றளவிலும் நிலவி வருகின்றன.

உலகம், உலகம்மை, உலக மணி,  உலகமா தேவி, உலக மாமணி, உலக மாமதி, உலக மாமயில், உலக மாலை, உலகமுடையாள், உலக முத்து, உலக வாணி, உலகத் தாய், உலக நங்கை, உலக நதி, உலக நாயகி, உலக மங்கை, உலக மதி, உலக முதல்வி, உலகோவியம்.. முதலிய பெண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகக்கடல், உலகக்கதிர், உலகக்கனல், உலகக்காவலன், உலகக்கிழான், உலகக் கிள்ளி, உலகக்கிளி, உலகக்கீரன், உலகக்குடிமகன், உலகக்குமரன், உலகக் குரிசில், உலகக் குளத்தன், உலகக்குன்றன், உலகக்கூத்தன், உலகக் கேள்வன், உலகக் கொடி, உலகக்கோ, உலகக் கோமான், உலகக் கோவன், உலகக்கோன், உலகச் சான்றோன், உலகச்சீரன், உலகச்சுடர், உலகச் சுடரோன், உலகச் செம்மல், உலகச் செல்வன், உலகச் செழியன், உலகச்சென்னி, உலகச் சேந்தன், உலகச்சேய், உலகச் சேரன், உலகச் சோலை, உலகச் சோழன்..

உலகண்ணல், உலகத்தம்பி, உலகத்தலைவன், உலகத் தனையன், உலகத் தானையன், உலகத்திண்ணன், உலகத்திருவன், உலகத் தோன்றல், உலக நம்பி, உலக நல்லன், உலக நல்லோன், உலக நன்னன், உலக நாகன், உலக நாடன், உலக நிலவன், உலக நிலவு, உலக நெஞ்சன், உலக நெறியன், உலக நேயன், உலக நேரியன், உலகப் பரிதி, உலகப்பன், உலகப்பாண்டியன், உலகப்பாரி, உலகப்பாவலன், உலகப்பிள்ளை, உலகப்பிறை, உலகப்புகழன், உலகப் புலவன், உலகப்பூவன், உலகப் பெரியன், உலகப்பேகன்..

உலகப்பொருநன், உலகப்பொருப்பன், உலகப்பொழில், உலகப் பொழிலன், உலகப் பொறை, உலகப் பொறையன், உலகம், உலக மகன், உலகமணி, உலகமதி, உலக மருதன், உலக மல்லன், உலகமலை, உலக மலையன், உலக மழவன், உலக மள்ளன், உலக மறவன், உலக மாண்பன், உலக மாறன், உலக முகன், உலக முகிலன், உலக முத்தன், உலக முத்து, உலக முதல்வன், உலகமுதன், உலக முரசு, உலக மெய்யன், உலக மேழி, உலக மைந்தன், உலக மௌவல், உலகரசன், உலகரசு, உலகருவி, உலக வண்ணன், உலக வரம்பன், உலக வலவன், உலக வழுதி, உலக வள்ளல், உலக முடி, உலக வளத்தன், உலக வளவன், உலக வாணன், உலக வாரி, உலக வீரன், உலக வெற்பன்,  உலகவேள், உலக வைகை, உலகழகன், உலகவெற்றி, உலகவேங்கை, உலக வேல், உலக வேலன்,  உலகவேலோன், உலகழகு, உலகறவோன், உலகறிஞன், உலகறிவன், உலகறிவு,  உலகுழவன், உலகூரன், உலகூரான், உலகெரியன், உலகெழிலன், உலகெழிலோன், உலகெழினி,   உலகேந்தல், உலகேந்தி, உலகையன், உலகொலி, உலகன், உலகொளி, உலகொளியன்,  உகோவியன்..    முதலிய ஆண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

இவை மட்டுமல்லாது, தமிழர்களின் வாழ்விட ஊர்ப் பெயர்களும் உலகம் எனும் சொல்லில் அமைந்திருக்கின்றன. கிருசுணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்தில் உலகம் எனும் பெயரிலேயே ஒரு சிற்றூர் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் உலகாணி, உலகநேரி, உலகுப்பிச்சன் பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டி எனும் ஊர் இருக்கிறது. இதே பெயரில் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் ஓர் ஊர் இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உலகம் காத்தான்,  உலகிய நல்லூர் (உலகில் வலிய நல்லூர்), உலகானத்தம், உலகுடையாம்பட்டு, உலகலப்பாடி எனும் ஊர்கள் உள்ளன. அதே மாவட்டத்தில் உலகலாம் பூண்டி எனும் சிற்றூரும் உண்டு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உலகம்பட்டு எனும் ஊர் உண்டு. அதே மாவட்டத்தில் உலகமாபுரம், உலகஞ்சேரி எனும் ஊர்களும் உள்ளன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் உலகபுரம் எனும் ஊர் இருக்கிறது. திருச்செங்கோடு அருகில் ஓர் ஊரின் பெயர் உலகப்பம்பாளையம். விருதுநகர் மாவட்டம் கமுதி அருகில் உலகநடை  எனும் ஊர் உண்டு. திருவள்ளூர் மாவட்டம் மரக்காணம் அருகே உலகாபுரம் எனும் ஊர் இருக்கிறது. பரமக்குடியில் ஒரு பெருந்தெருப் பெயரொன்று உலக நாதபுரம் எனும் பெயரில் உள்ளது. மேற்குறித்த ஊர்களைப் போன்று உலகம் என்கிற சொல்லோடு தொடர்புடைய பல ஊர்ப் பெயர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடும்.

உலகம் எனும் சொல்லோடு தொடர்புடைய வாழ்விட ஊர்ப்பெயர்களைப் போலவே, தமிழர்களின் வழிபாட்டு வழக்காறுகளோடு தொடர்புடைய குலசாமிகள், வழிபடு தெய்வங்கள், கோவில்கள் போன்றவையும் உலகம் என்கிற சொல்லோடு தொடர்பு கொண்டதாயும் இருக்கின்றன.

 சான்றாக, தாமிரபரணி ஆறு தோன்றும் பாபநாசத்தில் உள்ள கோயிலில் வழிபடு தெய்வத்தின் பெயர் உலகம்மை ஆகும். திருநெல்வேலி வண்ணாரப் பேட்டைக்கு முன்பாகவும் உலகம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள உலகம்பட்டியில் உலகம்மன் கோவில் உள்ளது. அதேபோல, காரைக்குடிக்கு அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் உலகநாயகி அம்மன் கோயில் இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகம்மன் கோவில் உள்ளது. இராமனாதபுரத்தில் உள்ள ஒரு தெருவில் உலகம்மா கோவில் சிறியதளவில் இருக்கின்றது.  அதேபோல, திருவாடானை அருகாமையில் கடம்பாகுடியில் உலகம்மா கோவில் உள்ளது. தேவிபட்டினத்திலும் உலகமாதேவி கோவில் உள்ளது. மேலும், திருக்கோயிலூரில்  உலகளந்த பெருமாள் கோயில் இருக்கின்றது. மதுரை மாவட்டம் கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் கோயிலில் உள்ள காவல் தெய்வத்தின் பெயர் உலகநாதன் ஆகும்.

இவ்வாறாக, தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபிலும் வாழ்வியல் வழக்காற்று மரபிலும் உலகம் என்கிற சொல் இரண்டறக் கலந்திருக்கிறது. உலகம் மதிக்கத்தக்கது; வணக்கத்திற்குரியது; போற்றுதலுக்கு உரியது. மனித வாழ்க்கை உலகு தழுவியது; மனித அறிவும் உலகத்திற்கானது என்கிற உலகப் பொதுமை அறம் தமிழர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. இதன் வெளிப்பாடே உலகைச் சுருக்கமாகக் குறிக்கும் ‘உ’ எனும் எழுத்துக் குறியை எழுத்துச் செயல்பாடுகளின் தொடக்கத்தில் பண்பாட்டு அடையாள மரபாகக் குறித்து வந்துள்ளனர்.

இது, சமயக் குறியாகவோ அதிகாரக் குறியாகவோ பாகுபாட்டுக் குறியாகவோ அல்லாமல், உலகப் பொதுமையைக் குறிக்கும் பொதுமைப் பண்பாட்டுக் குறியாகவும் பயிலப்பட்டு வந்திருக்கிறது. அவ்வகையில், தமிழின் ‘உ’ எனும் எழுத்துக் குறிக்கு இவ்வகைப்பட்ட எழுத்துப் பண்பாட்டு விளக்கமே பொருத்தமுடையதாய் இருக்கும் எனக் கருதலாம்.

ஆக, ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் குறிக்கப்படும் பிள்ளையாரும் பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் கிரந்த எழுத்துக் குறியும் வேறு; தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும், தமிழ் எழுத்துச் செயல்பாட்டில் குறிக்கப்படும்  பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியும் வேறு ஆகும் எனலாம்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005



செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மகாராசன் எழுத்துழவு: தமிழ் நிலத்தின் பன்மை அறிவு அழகியல் அரசியல் பண்பாட்டியல் பற்றிய மகாராசன் நூல்கள்.



தமிழ் நிலத்தின் பன்மை அறிவு அழகியல் அரசியல் பண்பாட்டியல் பற்றிய மகாராசன் நூல்கள்.

/1/
* கீழிருந்து எழுகின்ற வரலாறு *


வரலாறு என்று நமக்குச் சொல்லப்பட்டவை எல்லாம் மேலிருந்து சொல்லப்பட்டவைதான். சாதி, சமயம், மொழி, இனம், நிறம், பாலினம், பொருளாதாரம், பண்பாடு, நிலம் அடிப்படையிலான ஒடுக்குதலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிக் கிடக்கும் பெருவாரி மக்களின் வரலாறுகள் பொதுவெளியில் முன்னெடுக்கப்படவில்லை. அண்மைக் காலமாகத் தான் அவை குறித்த உரையாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், ஒடுக்குண்டு கிடக்கும் தமிழ் நிலம், இனம், மக்கள், பண்பாடு, கலை இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் நூலாய் வெளி வந்திருக்கிறது. 
பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.


/2/
* அரவாணிகள்: 
உடலியல் - உளவியல் -  வாழ்வியல் *


சமூகத்தின் அக வெளியிலும் பொதுவெளியிலும் குறை மனிதர்கள், இழி மனிதர்கள் என்றெல்லாம் நிராகரிக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மனிதர்கள் தான் அரவாணிகள் எனப் பொது வெளியில் அழைக்கப்படுகிற திருநங்கையர்கள்.

ஆணிலிருந்து பெண்ணாகவும், பெண்ணிலிருந்து ஆணாகவும் மாறுகிற மனிதர்களின் உடலியல், உளவியல், வாழ்வியல் குறித்துப் பொது வெளிச் சமூகம் முழுமையாய் அறிந்திருக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த புரிதலை நேர்படுத்த உதவும் வகையில், திருநங்கையர் குறித்த விரிவான ஆவணப் பதிவாய் எனது தொகுப்பில் வெளிவந்த நூல்
"அரவாணிகள்: உடலியல் - உளவியல் - வாழ்வியல்" ஆகும்.

இந்நூல் திருநங்கையர் பதிவுகள், திருநங்கையர் அல்லாதவர்களின் பதிவுகள், கூட்டுப்பதிகள் என விரிவான தரவுகளைக் கொண்டது.
தோழமை வெளியீடு இந்நூலை வெளியிட்டது.


/3 /
* ஒரு கோப்பைத் 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும் *
பெண் விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்கள்.


சமூக விடுதலையின் அங்கமாகத் திகழும் பெண் பாலின விடுதலை குறித்த உரையாடல்கள் தீவிரம் பெற்று வருகின்றன. 

பெண்ணியம், பெண் உடல் அரசியல், பாலியல் சுதந்திரம், பெண் மொழி என்றெல்லாம் அதன் தளம் விரிந்து கிடக்கிறது. இந்நிலையில், பெண் விடுதலை குறித்த விரிவான உரையாடல்களை இலெனினும் கிளாரா செட்கினும் முன்னெடுத்தனர். 

பெண் விடுதலை பேசுவோரும் , மார்க்சியம் பேசுவோரும் கூட இந்த உரையாடல்கள் குறித்துப் பேசுவதில்லை.

பெண்ணைக் குறித்து ஆணும் , ஆணைக் குறித்துப் பெண்ணும் புரிந்து கொள்ளவும், பாலின மற்றும் சமூகச் சமத்துவம் காணவும் வெளிப்பட்ட அவ்வுரையாடல்களைத் தொகுத்து ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் எனும் தலைப்பில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறேன். எனது தொகுப்பில் வெளிவந்த இந்நூலைத் தோழமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது


/4/
* ஈழத்தில் சாதியம்:
இருப்பும் தகர்ப்பும் *


ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஊடாகச் சாதியம் எப்படி மெல்ல மெல்லக் கரைகிறது? 
ஈழத்தில் அது சாத்தியப்பட்டதா? 

தேசிய இனத்தின் விடுதலைக்கும் சாதியத் தகர்வுக்கும் உள்ள முன்நிபந்தனைகள் என்ன? தமிழ் ஈழ மண்ணில் நிலவியிருந்த சாதியத்தின் வேர்கள் யாவை? தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் சாதியத்தை எவ்வாறு பின்னுக்குத் தள்ளியது?என்பதையெல்லாம் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் விவரிக்கும் வகையில் ஈழத்தில் சாதியம் - இருப்பும் தகர்ப்பும் எனும் நூல் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. 

ஈழத்து ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தமிழ் ஈழ நிழல் அரசு நடந்து கொண்டிருந்த, தமிழின அழித்தொழிப்புப் போருக்கு முந்திய கால கட்டத்தில் வெளிவந்த இந்நூல், போராளிகளின் வாசிப்புக் கவனத்தையும் பெற்றிருந்தது. ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் சாதியம் தலைவிரித்தாடுகிறது என அவதூறு பரப்பிக் கொண்டிருந்த ஒரு சூழலில், தமிழீழ விடுதலைப் போராட்டம் அங்கு நிலவிய சாதியத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தகர்த்தும் முன் நகர்ந்ததை வரலாற்றுச் சாட்சியமாய் இந்நூல் ஆவணப்படுத்தியிருக்கிறது. இனியும் அந்தச் சூழல் வருமென்ற நம்பிக்கை இருக்கிறது.
கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீடு இந்நூல்.


/5/
* மொழி இயங்கியல் *


மொழியின் தோற்றுவாய்ப் பின்புலங்களைக் குறித்து கருத்து முதல்வாதக் கற்பிதங்களும், கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டங்களும் நிரம்பி வழியும் எடுத்துரைப்புச் சூழலில், மொழியை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் எடுத்துரைக்கும் வகையில் மொழி இயல்பையும் அதன் இயங்கு தளத்தையும், பெண் மொழி எனும் கருத்தாடல்கள் குறித்தும் விளக்கப்படுத்தும் முயற்சியாக வெளிவந்த நூலே மொழி இயங்கியல் எனும் நூலாகும். இதனைத் தோழமை வெளியீடு வெளிக்கொண்டு வந்தது.


/6/
*  தமிழில் பெண் மொழி மரபு *


தமிழ் இலக்கிய மரபில் பெண் புலவர்களின் எழுத்தும் தொனியும் ஆண் புலவர்களின் எழுத்துப் பாணியிலிருந்து தனித்த வகையிலான அறிவையும் பாடுகளையும் பதிவு செய்திருக்கும். 

பெண் புலவர்களின் இத்தகைய கவிதை மொழி பெண் நோக்கிலான பெண் மொழி எனும் தனித்த வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கும் மரபை வெளிக்கொணரும் நூலே தமிழில் பெண் மொழி மரபு என்பதாகும். தோழமை வெளியீடாக வந்திருக்கிறது.


/7/
* மார்க்சியமும்
மொழியியல் - தேசிய இனப்
பிரச்சினைகளும் *


தாய் மொழி என்பது கற்பனை என்கிறார்கள் சிலர். தாய் மொழி என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்றும் சொல்கிறார்கள் சிலர். அதே போல, தேசிய இனம் என்பதும் கற்பிதம் என்கிறார்கள் சிலர். 

மொழி என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகிற ஊடகம் மட்டும்தானா? மொழிக்கும் மனிதர்களுக்கும் என்ன உறவு? மொழிக்கும் சமூகத்திற்கும் என்ன உறவு? மனித அறிவும் அனுபவமும் புதைந்து கிடக்கும் கிடங்கு எது? தேசிய இனத்தின் அடையாளம் எது? சமூகக் கட்டுமானத்தில் மொழியின் பங்கு என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் மார்க்சியத்தில் விளக்கம் இருக்கிறதா ? 

ஆம், மொழி குறித்து மார்க்சியம் அறிவியல்பூர்வமான விளக்கத்தை மிக விரிவாக முன்வைத்துள்ளது. 
சமூகத்தின் இயங்குதலுக்கு மொழியின் இயங்கியல் குறித்து ஜே.வி.ஸ்டாலின் எழுதிய "மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்" எனும் நூல் முதன்மையானது.
மொழியைக் குறித்து விவரித்த ஸ்டாலின் எழுதிய மற்றொரு நூல் "மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும் " என்பதாகும். 

மார்க்சியம் குறித்துப் பேசக்கூடியவர்களும் அறிவுலகத் தடத்தில் இயங்கக்கூடியவர்களும் திட்டமிட்டே கண்டு கொள்ளப்படாத அல்லது புறக்கணித்த நூல்கள் தான் மேற்குறித்த நூல்கள்.
ஸ்டாலின் எழுதிய மேற் சுட்டிய இரண்டு  நூல்களும் மீள் பதிப்பு பெறாமலே இருந்தன.

 மொழி குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையிலான விளக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய அந்நூல்களை விரிவான முன்னுரைக் குறிப்புகளுடன் தெளிவான உட் தலைப்புகளுடன் ஒரு சேரத் தொகுத்து 
"மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும்" எனும் தலைப்பிலான நூல் எனது தொகுப்பில் தோழமை  வெளியீடாய் வெளி வந்திருக்கிறது.


/8 /
* பெண் மொழி இயங்கியல் *


மொழியில் பெண் மொழி, ஆண் மொழி இருக்கிறதா? 
ஆம், இருக்கிறது. 
மொழியில் படிந்திருக்கும் ஆண் நோக்குக் கருத்தாடல்களையும், பெண் நோக்குக் கருத்தாடல்களையும் அடையாளம் காண்பது எப்படி? தமிழில் பெண் மொழி இயங்க முடியுமா? அதற்கான பதிவுகள் உண்டா? 
தமிழில் பெண் மொழியும் இருக்கிறது. 
பெண் மொழி குறித்த கோட்பாட்டுப் புரிதல்களோடு சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையிலும் பெண் மொழி இயங்கிக் கொண்டிருப்பதை மிக விரிவாகவும் ஆழமாகவும் விளக்கப்படுத்தும் வகையில், நான் எழுதிய " பெண் மொழி இயங்கியல் " எனும் நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூல் தோழமை வெளியீடாக வந்தது


/9/
* தமிழ் நிலமும்
புது வன்குடியாதிக்க
எதிர் மரபும் *


ஆங்கிலேய வன்குடியாதிக்க அரசமைப்பைக் காலனியம் என்றும், 1947க்குப் பின்பான இந்திய வல்லாதிக்கச் சமூகச் சூழலைப் பின் காலனியம் அல்லது புதுக்காலனியம் எனவும் பொதுவெளி மரபில் குறிப்பர்.

முன் காலனியமோ பின்காலனியமோ, காலனிய எதிர்ப்பைப் பெரும்பாலோர் எழுதவும் பேசவும் செய்கின்றனர். காலனிய எதிர்ப்பைப் பேசும் போதெல்லாம் காலனியம் எனும் ஆங்கிலச் சொல்லைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தான் பேசுகிறார்கள்.

காலனியத்தை எதிர்க்க வேண்டுமானால், நம் அடையாளத்தையும் மரபையும் முன்னெடுக்க வேண்டும். முதலில் சொல்லிலிருந்தே தொடங்க வேண்டும். ஆம், சொல்லில் இருந்தே தொடங்க வேண்டும் என்று தான், நான் எழுதிய நூலுக்கு " தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" எனத் தலைப்பிட்டேன்.

தமிழ்ச் சமூகம் உலகமய - தனியார்மய - தாராளமயச் சமூகமாய் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கமும் பார்ப்பனிய வல்லாதிக்கமும் தமிழ் நிலத்தின் மொழி, இனம், நிலப்பரப்பு, வளம், பண்பாடு, அதிகாரம் போன்ற யாவற்றையும் சுரண்டியும் ஒடுக்கியும் வருகின்றன.

தமிழ்ச் சமூகமும் நிலமும் புதியதான அடிமைக் கூடாரமாய் மாறிக் கொண்டு வருகின்றன. தமிழ் நிலத்தின் மீது புதியதான வன்குடியாதிக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதேவேளையில், அதிகாரத்திற்கு எதிரான ஓர் எதிர் மரபு தமிழ் மரபில் தொடர்ச்சியாக வெளிப்பட்டும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ்ச் சமூகப் புலப்பாடுகளைக் குறித்தும் மீள் கருத்தாடல்களைக் குறித்தும் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளி வந்த நூல் தான் "தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" எனும் நூலாகும். தோழமை வெளியீடாக இந்நூல் வந்தது.

/10/
* முல்லைப்பாட்டு : 
உரைப் பனுவல் *


சங்க காலத்தியத் திணை மரபில் வெளிவந்திருந்த முல்லைப்பாட்டு எனும் நூலானது பெண் ஆண் இருத்தல் உளவியல் குறித்துப் பேசக்கூடியது. நப்பூதனார் இயற்றிய இந்நூலுக்குப் பலரும் உரையெழுதியிருந்தாலும் கூட , நவீன காலத்திய உரையாடல்களைப் பொருத்தியும் இணைத்தும் பார்க்கிற வகையில் உரை நூல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், முல்லைப்பாட்டுக்கு நவீனத்துவ நோக்கிலான உரையொன்றை முல்லைப்பாட்டு - உரைப் பனுவல் எனும் நூல் வழியாக வெளிக்கொணர்ந்துள்ளேன். மரபையும் நவீனத்தையும் இணைத்துப் பார்க்கும் முயற்சியாய் வெளி வந்த இந்நூலை மதுரை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.


/11/
* மொழியில் நிமிரும் வரலாறு *


தமிழ்ச் சமூகப் புலப்பாடுகள் குறித்த கருத்தாடல்களை முன்வைக்கும் முகமாய் 
நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளி வந்திருக்கிறது  
'மொழியில் நிமிரும் வரலாறு' எனும் நூல். 

தமிழ் மொழி, இலக்கியம், கலை, நிலம், பெண், வேளாண் மனிதர்கள், தொல்லியல் குறித்து நான் எழுதிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  கருத்து = பட்டறை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது . 


/12/
* அவதூறுகளை முறியடிப்போம் : தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் *


தமிழ் ஈழத்திற்கான அரை நூற்றாண்டு காலப் போராட்டம் கோரமாய் ஒடுக்கப்பட்ட போது , தமிழ் ஈழக் கோரிக்கையே தவறானது , போராளிகளே தோல்விக்குக் காரணம், இனி ஈழ விடுதலையே சாத்தியமில்லை என்றெல்லாம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த சமயத்தில் , தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் , அவதூறுகளுக்குப் பின் மறைந்திருக்கும் வன்மம் குறித்தும் நேர்மையான உரையாடல்களை முன்வைக்கும் வகையில் எனது தொகுப்பில் வெளிவந்த நூல் தான் அவதூறுகளை முறியடிப்போம் என்கிற நூல்.

சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கோர முகங்களையும், அவற்றுக்கெல்லாம் துணை போன துரோக சக்திகளையும், இவைகளோடு கைகோர்த்து அவதூறுகளைப் பரப்பி வந்த அறிவு சீவிகளையும் எதிர்ப்புரட்சியாளர்களையும் அம்பலப்படுத்தியதோடு, அவதூறுகளுக்கான மறுப்புகளையும் விரிவாகப் பேசியிருக்கிறது இந்நூல்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வுக்குப் பின்பாகப் பெருஞ்சோகமும் பேச முடியாப் பேரமைதியும் கையறு நிலையும் கவ்விக் கொண்டிருந்த அந்தச் சூழலில், தமிழ் ஈழத்தின் குரலை உரத்துப் பேசியது இந்நூல். இதனை மதுரை பாலை _ கருத்து = பட்டறை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


/13/
* ஏறு தழுவுதல்:
வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்*

மாடு தழுவல் பண்பாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் வெளிவந்த உரையாடல்கள் அனைத்தும், மாடு தழுவல் பண்பாட்டைப் புரிந்து கொண்டதில் போதாமைகள் இருந்ததையே காட்டின. உற்பத்திக்கும் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பு, பண்பாட்டுக்கும் மாட்டுக்கும் உள்ள பிணைப்பு, மனித சமூக வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மாடுகளின் பங்களிப்பு, தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்தியில் மாடுகளின் பங்கேற்பு, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் இருக்கிற பண்பாட்டு உயிர்ப்புகள், நிலத்திற்கும் பண்பாட்டிற்குமான உறவு போன்றவற்றைக் குறித்து வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான எடுத்துரைப்புகள் மிகக் குறைந்தளவிலேயே வெளிவந்துள்ளன. இந்நிலையில்தான், வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாட்டு வடிவமாய்த் திகழும் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் பண்பாட்டின் வரலாற்றை முக நூல் மற்றும் வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இது தொடர்பான தேடலும் பகிர்வும் தொடர்ந்தன. அதுவே நெடுங்கட்டுரையாய் விரிந்து போனது. 

பசு மாடுகளோடும், உழவு மாடுகளோடும், மஞ்சு விரட்டுக் காளைகளோடும் தான் என் இளவயதுக் காலங்கள். 
மாடுகளே எனது முதல் தோழனும் தோழியுமாய் உறவாடிக் கிடந்தவை. நிலத்தின் மண் வாசம் மட்டுமல்ல; மாடுகளின் கவுச்சி வாசமும் நினைவுகளிலும் எழுத்துகளிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பவை.

மாடுகளோடு எனக்கிருந்த நட்பின் கைம்மாறு தான் நான் எழுதிய ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூல். இதனை ஆதி பதிப்பகம் வெளியிட்டது.


/14/
* நா.வானமாமலையின்
பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி *


பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத் தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தியுள்ளார். இந்நூல்
ஆதி பதிப்பத்தின் வெளியீடு.


/15/
* சொல் நிலம் *


தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால்தான், மகாராசனின்  கவிதைமொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது. ஏர் பதிப்பு நிலம் வெளியீடு இந்நூல்.


/16/
* பண்பாட்டு அழகியலும் அரசியலும் *



பட்ட பாடுகளும் படுகின்ற பாடுகளுமான வாழ்க்கைப் பாடுகளையே மனித சமூகம் பண்பாட்டு வெளியாய்க் கட்டமைத்திருக்கிறது. தமிழர் வாழ்வியலோடு பிணைந்திருக்கிற பண்பாட்டுக் கூறுகள் தனித்த அழகியலோடும் அறத்தோடும் அரசியலோடும் புலப்படக் கூடியவை. 

 ஒற்றைப் பண்பாடு அல்லது ஒருமுகப் பண்பாடு என்பதெல்லாம் அதிகாரத்தோடும் அடக்குமுறைகளோடும் தொடர்புடைய சாயலைக் கொண்டிருப்பவை.

தமிழ் நிலப் பெருவெளியில் காணலாகும் பண்பாடு என்பதெல்லாம் பன்மைப் பண்பாடுகளின் கூட்டுத் தொகுப்புதான்.

பண்பாட்டு வெளிகளை அறிதலும் புரிதலும்கூட, மக்கள் வாழ்வியலைக் கற்பதுதான். ஏனெனில், மக்கள்தான் பண்பாட்டை வாழ வைக்கிறார்கள்; தம் வாழ்வையே பண்பாடாய் வடிவமைத்திருக்கிறார்கள்.

 பன்முகப்பட்ட பண்பாட்டுக் கோலங்களைக் குறித்த அறிதலும் புரிதலும் சற்றுக் குறைவாய் நிலவிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில், தமிழரின் பண்பாட்டுத் தனித்துவங்களைக் குறித்த எடுத்துரைப்புகளை முன்வைத்திருக்கிறது இந்நூல்.
ஆதி பதிப்பகத்தின் வெளியீடாய் வந்துள்ளது இந்நூல்.


/17/
* தமிழர் 
எழுத்துப் பண்பாட்டு மரபு *


தமிழ் எழுத்துகள் வெறுமனே ஒலி வடிவங்களையும் வரி வடிவங்களையும் மட்டுமே கொண்ட மொழியாலான ஊடகம் மட்டுமல்ல; 

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் வாழ்வையும் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் ஒவ்வொரு கீறலுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் சொல்லுக்குள்ளும் அடைகாக்கும் தாய்க் கோழிக்கு நிகரானது.



தமிழர்களின் பண்பாட்டு மரபுகள் தமிழ் எழுத்துகளின் வரிகளிலும் ஒலிகளிலும் புதைந்திருக்கும் அழகியலையும் அறத்தையும் அரசியலையும் பண்பாட்டு ஆவணமாக வெளிக்கொணரும் சிறு முயற்சியே தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்னும் நூலாக வெளிப்பட்டிருக்கிறது.



தமிழ் எழுத்தின் வரலாறு என்பது மொழியியல் வரலாறு மட்டுமல்ல. அது, மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், அறிவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பின்புலங்களோடும் உறவாடிக் கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும்போதுதான் தமிழ் எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கான உரையாடல் திறப்புகளைக் கொண்டிருப்பதோடு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபானது தனித்துவமான அறத்தையும் அழகியலையும் அரசியலையும் உள்ளீடாகக் கொண்டிருப்பதை அடையாளப்படுத்துகிறது தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு எனும்

இந்நூல். இது ஆதி பதிப்பகத்தின் வெளியீடு.


/18/
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்.



இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் - அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கி விடுகிறோம். 

ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் - அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

தமிழர்களுக்கும் ஆரியர்களுக்குமான முதல் பகையும் முரணும் வேளாண்மைத் தொழில் விரிவாக்கத்திலிருந்தே தொடங்கி இருக்கின்றது. வேளாண்மைச் சமூகத்திற்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்குமான தொழில் பகையே இனப் பகைமையாகப் பரிணமித்திருக்கிறது. 

குறிப்பாக, வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான மோதலே தொழில் பகையாக - பண்பாட்டுப் பகையாக - இனப் பகையாக - சமயப் பகையாக நீடித்து வந்திருக்கிறது. 
அவ்வகையில், வேளாண் மக்களின் சமூக வகிபாகத்தையும் பண்பாட்டு வரலாற்றையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

நூல் தலைப்பு: 
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: 
உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்: மகாராசன்.

வெளியீடு: யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு: முதல் பதிப்பு, அக்டோபர் 2021.
*


/19/
அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்.


தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும் தமதாக்க முயன்றதோடு, அதிகாரப் பீடங்களைக் கைப்பற்றுவதற்கும் உரிய சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி இருக்கின்றனர். ஆரியப் பிராமணர்களின் சூழ்ச்சியில் தமிழரின் அதிகாரப் பீடங்கள் பலியாகிப்போனது அந்தந்தக் காலங்களில் நிகழ்ந்திருந்தாலும், ஆரியப் பிராமணர்கள் கட்டமைத்து வந்த பிராமணியக் கருத்தாக்கத்தை எதிர்ப்பதும் மறுப்பதுமான கருத்தியல் போர் மரபைத் தமிழர்கள் தமது அறிவுச் செயல்பாடுகளின் வழியே வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றனர். 

‘பிராமணிய எதிர்ப்பு’ எனவும், ‘ஆரிய எதிர்ப்பு’ எனவுமான ஓர் ‘எதிர்மரபு’ தமிழரின் அறிவு மரபிலும் அறிவுச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆரியப் பிராமணிய மரபுக்கெதிரான குரலும் அதனையொட்டிய செயல்பாடுகளும் தமிழர் வரலாற்றில் நடந்தேறியிருக்கின்றன. இத்தகைய ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் வரலாற்று நீட்சியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் குரல் தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், அரசியல் வடிவமும் பெறத்தொடங்கியிருக்கிறது. 

அயோத்திதாசர் முன்னெடுத்த தமிழர் அடையாள அரசியலானது, அக்காலத்தில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட மற்ற அடையாள அரசியல்களிலிருந்து வேறுபட்டிருக்கக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முன்பான காலகட்டத்தில் - பல்வேறு அடையாள அரசியல்கள் முன்னெடுக்கப்பட்ட அதே அரசியல் சமூகச் சூழலில்தான் அயோத்திதாசரும் தமது அடையாள அரசியலை முன்வைத்திருக்கிறார். 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகிற அடையாள அரசியல்களுள், ‘பிராமண மேலாதிக்க எதிர்ப்பு’ அரசியலும் ஒன்றாகும். அயோத்திதாசர் முன்னெடுத்த அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்திருக்கிறது. அவருக்குப் பிந்தைய திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலிலிருந்து முற்றிலும் முரண்பட்டதான - வேறுபட்டதான அடையாள அரசியலையே அயோத்திதாசர் முன்வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிவுச் செயல்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது. 

பிராமண மேலாதிக்கத்தை எதிர்க்கும் வகையில் உருவான அயோத்திதாசரின் அடையாள அரசியலையும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலையும், தமிழ்ச் சமூகத்தில் நிலைகொண்டிருந்த அவற்றின் வகிபாகத்தையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போதுதான் இருவேறு அடையாள அரசியலின் முரண்கள் - வேறுபாடுகள் இன்னதென்று தெளிவாகும்.
*
அயோத்திதாசரின் 
தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு, 
முதல் பதிப்பு: டிசம்பர் 2021.