செவ்வாய், 13 மார்ச், 2018

வனத்தாளின் கொலைத் தீ.


வனத்தாளின் கொடுந்தீயில்
கதறித் துடித்து
மாய்ந்தவர்களின் உயிரோசை,
கருகிச் சாம்பலாகி
வனத்தோடே கலந்திருக்கிறது.

பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுங்க நடந்தாள் கண்ணகி.
அவள் நடந்த பெருங்காடு
காலத் தடங்களின்
கங்குகளைச் சுமந்து கிடந்தாலும்,
கானுயிர்க்கெல்லாம் உயிர்த்தடமாய்த்தான் கிடந்தது.

கண்ணகியின் கோபத் தீயைக்
கண்களில் வழிந்த சுடு நீரும் அணைத்திருக்கவில்லை.

குன்றக் குரவர்களின்
குல தெய்வமாய்
வனத்தாள் மடி விரித்துக்
கிடந்த போதெல்லாம்
பெருந்தீ பற்றிடவில்லை.

நெடுமரங்கள் நின்ற போதும்
செடி கொடிகள் படர்ந்த போதும்
சருகு சுள்ளி மண்டியபோதும்
மூங்கில் கழைகள் உரசிய போதும்
தீ விளையாடிப் பார்க்கும் தான்;
தீயணைக்கும் வித்தைகளை
அது அதுவாய்க்
கற்றிருந்தன தான்.

வனத் தீ
கொலைத் தீயாய் மாறியதெல்லாம்,

வனத்தாளின்
மனிதப் பிள்ளைகளை
மெல்ல மெல்லக் கீழிறக்கி,
வனத்தையெல்லாம்
நிலத்திற்கும் இனத்திற்கும் சொந்தமில்லாதவர்க்குத்
தாரை வார்த்த பின்புதான்.

இயற்கையின்
எச்சம் நாமென்பதைத்
துச்சமாய்த் தூர வீசி,
நுகர்வெறியின்
உச்சம் தொடுகிற
மிச்சச் சமூகத்தைத்
தீயால் காரி உமிழ்ந்திருக்கிறாள் வனத்தாள்.

வனத்தாளின் கொலைத் தீ
படர்ந்திருக்க வேண்டியது
சுரண்டல் வர்க்கத்தின்
எச்சை அதிகாரத்தின் மீது தான்;
இந்தப் பிஞ்சுகளிடத்திலில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக