வெள்ளி, 2 மார்ச், 2018

பசிக் கண்கள்.


கையூண்டு பிடிமண்கூட
அவனுக்குச் சொந்தமில்லாமல்,
காடுகள் மேவிய நிலத்தையெல்லாம்
பறித்துக் கொண்டு காட்டுமிராண்டியென
விரட்டி அடித்தார்கள்.

திருடியதாய்க்
குற்றம் சுமத்தியும்
கட்டி வைத்தும்
அடித்து வதைத்தும்
தோலோடு தோலாய்
ஒட்டிக் கிடந்த உயிரை
மனித வெறியர்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சாகடித்த போதும்,

அவனது கண்கள்
உயிர்ப் பிச்சை
ஏதும் கேட்கவில்லை.
அரண்டு மிரண்டு
அழவுமில்லை.
அவமானத்தால் வெட்கித்
தலை குனியவுமில்லை.

அவனது கண்களில்
நிரம்பி வழிந்ததெல்லாம்
பசி வலி தான்.

வலிக்க வலிக்கச்
சாவைத் தந்த போதும்,
பசி நிரப்பிய
அவனது கண்கள்
மனித வெறியின் மீது
அன்பொளியைத்தான் பாய்ச்சியது.

உயிர் இரக்கம் காணாது
தவித்தலைகின்றன
அவனது கண்கள்.

குற்றவுணர்வில் 
சாகடிக்கின்றன,
மனம் பூராவும் நெம்பியிருக்கும் மதுவின் கண்கள்.

மல்லன் மல்லியின்
பைத்தியக்காரப் பிள்ளையாய்
பசியோடும் பட்டினியோடும்
உலவித் திரிந்த மது,
நினைவில் வாழ்கிற
மனிதத்தின் உருவாய்
ஆகி நிற்கிறான்.

இனவெறிப்
பலி பீடத்தின் மீதமர்ந்து,
உயிர்போகும் எனத் தெரிந்தும் வெள்ளந்திப் பார்வை கொண்டிருந்த
பாலச்சந்திரக் கண்களும்,
நுகர்வெறி பீடித்த
சமூகப் பீடத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மதுவின் கண்களும்தான்
பயமறியாது நிலைகுத்தி நிற்கின்றன.

அவனது கண்களில்
இனத்தின் வலியும்,
இவனது கண்களில்
பசியின் வலியும்
நிலமெல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறது.

பசித்த கண்கள்
பழி தீர்க்கும்.

ஒரு நாள்
பசி ஆறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக