செவ்வாய், 13 மார்ச், 2018

சொல் நிலம் : நிலமும் சொற்களும் ஊடுபாவாய் நெய்து கொண்டிருக்கிறது. :- பீமராசா ஆனந்தி.


மஞ்சள் வெளியில் இலைகளோடு கிளையில் அமர்ந்திருந்த குருவியின் கண்கள், சிவப்பு எழுத்துகள் என்னை வாசியேன் என்று சொல்வதைப் போல இருந்தது. கட்டுரைகளோ என்று நினைத்து தான் வாங்கினேன். மெல்லப் பிரித்தேன். ஆகா, கவிதைகள் ! அப்படியொரு சந்தோசம்.

நிதானமாக வாசிக்க வாசிக்க, மிரண்டு போய் விட்டேன். ஒரு கவிதை வாசிப்பேன்; நூலை அப்படியே மூடி வைத்துவிட்டு ஒன்றுமே தோன்றாமல்  தலையைப் பிடித்துக் கொள்வேன். எதைச் சொல்வேன்? எதை விடுவேன் ? தவிக்கிறேன்.

"உழைப்புச் சொற்களால் நிலத்தை எழுதிப் போன அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே தவித்துக் கிடப்பார்கள் மண்ணுக்குள் "
இந்தக் கவிதை போதும் சொல் நிலத்திற்கு.

நிலமும் சொற்களும்
ஊடுபாவாய் நெய்து
கொண்டிருக்கிறது மனசை !
ஈரம் கோதிய சொற்கள்
தணிக்கின்றன
வாழ்வின் தாகத்தை.
நிலத்தின் மீதுள்ள காதலால்
சொற்களின் மீதுள்ள
காதலால்
கவிதைகளை
ஆட்சி செய்கிறாய்.
கசிந்துருக கவிதைகள்
சொல்லிப் பகிர (பருக)
வார்த்தைகள்
இன்னும் வேண்டுகிறது மனசு.
காலத்தே மழை;
பருவத்தே விளைச்சல்.


முதலில் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் பெயரில் விருது வழங்க உங்கள் நூல் தேர்வு செய்யப்பட்டு, நீங்கள் அறிமுகம் ஆனதால் தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

செம்மாந்து நிற்க. மனிதம் வெல்க.
வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக