திங்கள், 5 மார்ச், 2018

மீன் பேறு.


செங்குளத்துள்
நீந்தித் திரிந்து,
அலை வளையங்களோடு
கரை ஒதுங்கி,
செலவுகளில் பொதிந்த நண்டுகளின் வழித்தடம் தேடித் தனித்தலைந்து,
சுள்ளென்ற வெயில் பொழுதில் பளிச்சென்று துள்ளிக் குதித்து கரையின் மேலே
வந்து விழுந்தன மீன்கள்.

மூடித் திறந்த செவுள்களில்
நுழைந்த காற்று
உயிர் தரப் பார்த்துத்
தவித்துப் போனது.

நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து
ஈர வாழ்வைத் துடுப்பசைத்து
மிதந்த மீன்கள்,
கரை மணலில் புரண்டு புரண்டு
நிலத்தைப் பூசிக் கொண்டு
மீத வாழ்வின் பேறு பெற்று
வாய் திறந்து மாண்டு போயின.

உயிர்க்கொலைப் பழியிலிருந்து தப்பிப் பிழைத்த நினைப்பில் தக்கையில் தொங்கிக் கிடந்தது
மண்புழு கோர்த்த தூண்டில் முள்.

ஒளிப்படம் :
Palani Nithiyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக