செவ்வாய், 13 மார்ச், 2018

செம்பாதங்கள்.



இந்தப் பாதங்கள்
வெறும் பாதங்கள் அல்ல;
நிலத்தோடு தோய்ந்து கிடந்த
உழவுக் குடிகளின்
உழைப்புத் தடங்கள்.

இந்தப் பாதங்களின் கொப்புளங்கள்
நடந்த வலிகள் அல்ல;
நிலத்தின் ஆத்மாக்களின்
அழுகைத் துளிகள்.

கால்கள் நோகவும்
கொப்புளங்கள் பூக்கவும்
அரத்தம் கசியவும்
நடந்த பாதங்கள்
நிலத்தின்  ஒளிகள்.

உயிர்போகும் நிலத்தின் அழுகையை
நிலம் தோய நடந்து நடந்து
நைந்து போயிருக்கும்
உயிர்ச் சாமிகள்.

கன்னச் சுருக்கங்களும்
ஒட்டிக் கிடக்கும் வயிறும்
விரிப்போடிய நிலத்தின் சாட்சியங்களாய்
இந்தப் பாதக் கோடுகள்.

ஊருக்குச் சோறிடும்
இந்தப் பாதங்கள்,
ஏந்திய கொடியின்
நிறம் கசியக் கசிய
ஒரு பாதைக்கு வந்திருக்கின்றன.

இப்போது
இந்தப் பாதங்களை
வணங்க மறுத்தால்,
நிலத்தில் நாளை
இறங்க மறுக்கும்
இதே பாதங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக