புதன், 13 ஏப்ரல், 2022

பொன்னேர் - நாளேர் பூட்டல் பண்பாடு - வரலாற்றுக் குறிப்புகள் : மகாராசன்




தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். 

சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும், நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். எனினும், கோடை உழவுத் திருநாளாக - நாளேர் பூட்டுத் திருநாளாக - பொன்னேர் பூட்டுத் திருநாளாக - ஏர்பூட்டுத் திருநாளாக, ஆரியத்தின் சாயல் படாமல் உழவுப் பண்பாட்டுச் சடங்கை முன்னெடுத்து வந்துள்ளனர் உழவுத் தொழில் மரபினர். பழந்தமிழ் நூல்களும் இத்தகைய மரபைப் பதிவு செய்திருக்கின்றன.

கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து

விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்

பாருடைப்பனர்போற் பழிச்சினர் கைதொழ

ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்

என வரும் சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதைப் பகுதியானது, ஏர் மங்கலம் பாடி நல்லேர் உழுததைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 

கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்

தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; 

பொன்னேர் பசலை பாவின்று மன்னே;

பொன்னேர் பசலை ஊர்தரப் பொறிவரி

நல்மா மேனி தொலைதல் நோக்கி

என, அகநானூற்றின் பாடல்கள் பொன்னேர் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. பொன்னேர் உழுதலை, நல்லேர் நடத்தல் என்பதாக மதுரைக்காஞ்சி கூறுகையில்,

நல்லேர் நடந்த நகைசால் விளைவயல்

என்கிறது. இதனைக் கடி ஏர் என்னும் சொல்லால் அடையாளப்படுத்தும் வகையில், 

அருஞ்செலல் பேர்யாற்று இகுகரை உடைத்து

கடியேர் பூட்டிக் கடுக்கை மலைய

வரைவில் அதிர்சிலை முழக்கிப் பெயல் சிறந்து

ஆர்கலி வானம் தளி சொரிந்து ஆங்கு

என்கிறது பதிற்றுப்பத்துப் பாடல். 

மழை காக்கவேண்டும் என்று வேண்டி, ஆண்டில் முதல்முதலாக ஏர் பூட்டுவது கடியேர் எனக் குறிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதனால்தான், வானம் கடியேர் பூட்டி பேர்யாற்றுக் கரையை உடுத்து உழுதது எனக் கூறுவதன் மூலம், கடியேர் விழாவினை அப்பாடல் நினைவூட்டுகிறது. 

திருவிளையாடற்புராணம், இத்தகைய உழவுச் சடங்கு நிகழ்வை

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடல்

குளமகிழ் சிறாரின் ஏறும் ஒருத்தலும் உவகை தூங்க

வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற

அளமரு பொறிபோலே வலாற்றவாள் வினையின் மூண்டார்

எனப் பதிவு செய்திருக்கிறது. இவ்வாறு, முதன் முதலாக உழுகின்ற உழவுச் சடங்கைப் பல பெயர்களால் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன.

தமிழர்களின் பண்பாடும், பண்டிகையும் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. நாளேர், நல்லேர், சித்திர மேழி என்றழைக்கப்படும் பொன்னேர் நிகழ்வும் வேளாண் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போனதாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் ஆந்திரம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் பொன்னேர் விழா நடக்கிறது. 

இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மன்னர்களும் மக்களும் பொன்னேர் உழுதலை (Royal Ploughing Ceremony) கொண்டாட்டமாகவே நடத்துகின்றனர் எனக் கூறும் கப்பிகுளம் ஜெ.பிரபாகர், பொன்னேர் உழவு எனும் இச்சடங்கைப் பருவ காலத்தோடு தொடர்புடையது என்பதாக விவரிக்கிறார். 

பண்டையத் தமிழர்கள் அறுபது நாழிகை, ஆறு சிறு பொழுதுகள், ஆறு பருவங்கள் எனக் காலத்தை வகுத்தனர். தை, மாசி - இளவேனில்; பங்குனி, சித்திரை - முதுவேனில்; வைகாசி, ஆனி - கார்; ஆடி, ஆவணி - கூதிர்; புரட்டாசி, ஐப்பசி - முன்பனி; கார்த்திகை, மார்கழி - பின்பனி என்று காலங்களுக்கு ஏற்பவே வேளாண்மை செய்தனர். வைகாசி, ஆனியில் தென்மேற்குப் பருவமழை அடைமழையாகப் பெய்யும். ஐப்பசியில் வடகிழக்குப் பருவமழை. சித்திரையில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்யும்; வெயில் அதிக உச்சத்தை அடைந்து முதுவேனில் தொடங்கும். 

அறுவடைத் திருநாளைத் தைத் திங்களில் நடத்தி விட்டு, இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி, மாசி, பங்குனியில் இளவேனிற்கால வசந்தத்தை வரவேற்று, பங்குனி முழு நிலவில் குல தெய்வங்களை வழிபட்டு, சித்திரைத் திங்களில் கடற்கரை, ஆற்றங்கரை மணலில் முழு நிலவு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் சித்ரா பெளர்ணமி நாளில் இந்திர விழாக்கள் நடைபெற்றுள்ளன. அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறைந்திருக்கும் சித்திரை மாதம் வேளாண் மக்களின் கொண்டாட்ட மாதமாகும் என்கிறார் கப்பிகுளம் ஜெ.பிரபாகர்.

வேளாண் மக்களின் இத்தகைய உழவுச் சடங்கு பற்றிய செய்திகள் கல்வெட்டுக் குறிப்புகளிலும் காணப்படுகின்றன என்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். முதன்முதலாகப் பிடிக்கும் ஏர் உழவுச் சடங்கை - பொன்னேர் உழுதல் எனும் சடங்கை உவா ஏர், உவாவேர், கரிழ்சணை, கர்சணம் எனக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. முதல் ஏர் பூட்டி முதன் முதலாக உழுகின்ற உழவுச் சடங்கைப் பொன்னேர் உழவு எனக் குறிக்கப்பட்டதன் பின்புலத்தை விவரிக்கும் பாண்டிய மள்ளர், இச்சடங்கை வேந்தர்களே ஏர் பிடித்துத் தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, மருதநில மள்ளர்கள் உழுதலை முறையாகத் தொடங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒரு சடங்கினைச் செய்தனர். அதனைப் பொன்னேர் பூட்டுதல் என்று அழைத்தனர். இதற்கு, நாளேர் பூட்டுதல் என்ற பெயரும் உண்டு. சங்க காலத்தில் வேளிர்கள் முதற்கொண்டு வேந்தர்கள்வரை தங்கள் எல்லைக்குட்பட்ட ஒரு பொது இடத்தில் இவ்விழாவைத் துவங்கினர் என அறிஞர்கள் கூறுவர். இன்றும் மள்ளர் சமூகத்தவர்கள் வாழும் ஊரில் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. 

முதலில் ஊர்க் குடும்பன் ஏர்பூட்டி தன் நிலத்தை உழுது, நெல்மணிகளைத் தூவி வழிபடுவார். அதைத் தொடர்ந்து உழவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஏர்களைப் பூட்டி தங்கள் நிலத்தை உழுது நெல்மணிகளைத் தூவி வழிபடுவர். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர்க் கலப்பையை - பொன் ஏர் கொண்டு, வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவைத் தொடங்கி வைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து, முதலில் நான் உழவன்; அதன்பிறகே அரசன் என்பதை, இந்நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்பட்டது என்கிறார் அவர்.

இத்தகைய உழவுச் சடங்கு, பழங்காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வந்திருப்பதைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் சான்று பகர்ந்துள்ளன. வேந்தர்களாலும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினராலும் நிகழ்த்தப்பட்டு வந்த, பொன்னேர் உழவு எனும் இச்சடங்கின் பண்பாட்டு முக்கியத்துவத்தை அறிந்திருந்த கம்பரும், வடநாட்டுச் சனக மன்னனைப் பற்றிக் குறிக்கும் ஓரிடத்தில், பொன்னால் செய்த கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுதார் என்று பதிவு செய்திருக்கிறார். 

வரம்பின்மணிப் பொற்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு

உரம்பொருவி நிலம் வேள்விக்கலகில் பல சால் உழுதேம் 

என, பொன்னேர் உழுதலைப் பொற்கலப்பை உழவு என்பதாகக் குறித்திருக்கிறது கம்பராமாயணம்.

இதேபோல, பொன்னால் செய்த நுகத்தடிகளில் எருதுகளைப் பூட்டி, ஒளி பொருந்திய பங்குனி உத்திர நன்நாளில், விண்ணயன் எனப்பட்ட இந்திரனைத் தொழும் மள்ளர்கள் எனும் உழவுத் தொழில் மரபினர் பொன்னேர் பூட்டி உழுதனர் என்பதைத் தென்புதுவைப் புராணம் கூறுகையில், 

மன்னியவேலுடன் மணிவொறுத்தலும் 

பொன்னிய நுகத்திடை புணர்த்து வீக்கியே 

ஒண்ணிய பங்குனி உத்திரத்தினில்

விண்ணயன் மள்ளர் பொன்னேர்கள் பூட்டினார்

எனத் தெரிவிக்கிறது. அதேபோல, மருத நில வேளாண்மையை எடுத்துரைக்கும் எல்லாப் பள்ளு இலக்கியங்களும் பொன்னேர் பூட்டுதலான உழவுச் சடங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. 

உழவுத் தொலில் மரபினர் தமது உழவுச் செயல்பாடுகளை வானியல் கணிப்புகளுக்கு ஏற்பவே நடத்தியிருக்கின்றனர். இதனை நாளேர் எனவும் குறிப்பது வழக்கம். நல்ல நேரத்தில் நாளேர் பூட்டி உழுததாகத் திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு கூறும்போது, 

உழவுமள்ளர் திரண்டு சஞ்சுவங் கொண்டு

உழுங் காளைகள் அனைத்தும் பற்றிக் கொண்டுபோய் 

புலவர்தமிழ் மணக்கும் நல்லூர்த் தருமன்

பிள்ளையார் குளப்புரவில் உட்கிடைச் செய்யில் 

வலவர் அடியில் நின்ற செடியும் வெட்டி

வரம்பில் மடை உயர்த்திப் புனல் நிறுத்திக் 

குலவு கணக்கன் ஓரை ராசத வேளையும் வந்து 

கூடும் கடிகையில் நாளேரைப் பூட்டினரே

எனக் குறிப்பிடுகிறது. 

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல், அரசாட்சியின் எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும், அதன்பொருட்டுத் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஓர் அரச நிகழ்வுகளுக்கு முன்பும், பொன்னேர் பூட்டி உழும் சடங்கை ஒரு வழக்கமாக மேற்கொண்ட வழக்கமும் இருந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. 

அரிகேசரி பராக்கிரம பாண்டியன், காசி விசுவநாதர் ஆலயம்போல் ஒன்றை, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கட்டுவதெனத் தீர்மானித்து கி.பி. 6.5.1446ஆம் நாளில் பொன் ஏர் பூட்டி உழுது, உழுத இடத்தில் கோயில் கட்டும் பணியைத் தொடங்கியதாகவும், ஆலயத்தை ஓராண்டில் கட்டி முடித்து 15.6.1447ஆம் நாளில் அபிசேகம் செய்தார் எனவும் கல்வெட்டு கூறுகிறது. 

அக்கல்வெட்டில் உள்ள கரிழ்சணை பற்றிய வாசகப் பகுதி வருமாறு:

அன்பினுடன் சகாத்தமாயிரத்து முன்னூற்றறுபத் தெட்டதன்மெல் வைகாசித்திங்கள் மன்தியது யீரைந்திற் பூறுவபக்க மருவு தெசமியில் வெள்ளிவாரந் தன்னில் மினதி சூழுத்திரநாள் மீனத்தில், வாகைவெலரிகேசரி பராக்கிரம மகீபன் தென்திசையிற் காசி நகரக்கோயில் காணச்சென்று நின்று, கரிழ்சணை தான் செய்வித்தானெ என்பதாகக் கூறும் அக்கல்வெட்டு, பொன்னேர் உழவு எனும் உழவுச் சடங்கை நிகழ்த்திய செய்தியைத் தருகின்றது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 26 / 537 and A. R. No. 507 of 1909). 

பொன்னேர் உழும் சடங்கைக் கரிழ்சணை எனக் குறிக்கும் அக்கல்வெட்டுச் செய்தி பற்றிய தொல்லியல் துறையின் குறிப்புரையானது, It records that the king visited the temple at Tenkasi on Saka 1368, Vaikasi 10, Su. 10, Friday, Uttiram=1446 A.D., May 6 and arranged for the performance of the ceremony of ploughing (karilsanai Skt. karshanam). Then on the date quoted above the construction of the central shrine of the Siva temple at Tenkasi was completed (SSI No.537, Page No 366, A. R. No. 507 of 1909) என விவரித்திருக்கிறது.

அரிகேசரி பராக்கிரம பாண்டியருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியரும், அந்த ஆலயத்தில் சிற்சிலக் கோயில்களைக் கட்டியுள்ளார். அந்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பும், தன் தந்தையைப் போல் அவரும் கரிழ்சணை என்கிற பொன்னேர் உழவுச் சடங்கு விழா நடத்தியே பணிகளைத் தொடங்கியுள்ளார் எனக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. 

கரிழ்சணை பற்றிய அக்கல்வெட்டு வாசகப் பகுதி வருமாறு:

நமக்கு தட்சிண காசியாக ஆலயஞ் செய்து தரவேனும் என்று, எங்களுடைய கர்த்தர் பெருமாள் அரிகேசரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர் இருந்தருளிய இடத்தின் உடனே சுப்னத்திலே திருவுள்ளம் பற்றி அருளுகையாலே, முன்னாள் சகாத்தம் ஆயிரத்து முன்னூற்று ஆறுபத்தெட்டின் மேல் ரிஷப ஞாயற்றுப் பத்தாத் தியதியும் பூர்வ பக்ஷத்து தசமியும் சுக்ரவாரமும் பெற்ற உத்திரத்து நாள் மீனமு சுத்தமாக, கரிழ்சணையும் செய்து.. 

தட்சிண காசியாகத் திருப்படை வீடும் உண்டு ஆக்கி, உடையார் விஸ்வநாயனையும் நாச்சியார் உலகமுழுதுமுடைய நாச்சியாரையும் பிரதிஷ்டித்து, இன்னாயனார்க்குத் திருக்கோயில் உபாநாஷித்துபெயத்தமாகவும் அர்தமண்டபம் இடைய நாழிகை மகாமண்டபம் சோபானம் ஆவர்ண ஹொவீராஷிகளுந் திருப்பணி செய்து, நாச்சியார் உலகமுழுமுடைய நாச்சியார்க்குந் திருக்கோயிலும் ஆவரணமுங் குறைவற திருப்பணியுஞ் செய்து, ஹொபுரமுமாரம்பித்து சகஸ்வரலிங்காலயமும் சக்திபீடாலயமும் செய்து ரிஷபதேவர் முதலாக உள்ள பரிவார நாயன்மாரையும் பிரதிஷ்டித்து…. 

அரிகேசரி நங்கை என்று திருநாமமுடைய பிடாரியையும் பிரதிஷிடித்து, பிடாரி கோயிலும் மேலை அஞ்சாந்திருவீதியில் அரிகேசரிப் பிள்ளையார் திருக்கோயிலும் ஆரூட்டு மண்டபமும் வெச்சமுது மண்டபமும், மற்றுமிக் கோயில்களிலுள்ள திருப்பணிகளும் மஹாகோபுரமும் எங்கள் கர்த்தர் இருந்தளிய இடம் முன்னாள் இரண்டாவதின் எதிர் இருப்பதிரண்டாவது வைகாசி மாதந் துடங்கி, முப்பத்து ஒன்றாவதின் எதிர் ஒப்பதாவது வரை பதினேழு வருஷத்துக்குள்ளுத் திருப்பணி செய்து நிறைவேற்றின இது, மானுஷமல்ல தேவிகமென்று எல்லாருமறிந்து கொள்ளவும், எங்களுடைய கர்த்தர் இருந்தருளிய இடம் திருவுள்ளம் பற்றி அருள நாங்களுங் கரிழ்சணை துடங்கி… 

இந்தத் திருப்பணியெல்லாங் கூடச் செய்கையுஞ் செய்து, எங்கள் இருந்தருளிய இடம் இன்னாயனார்க்கும் நாச்சியார்க்கும் மற்றுள்ள நாயன்மார்க்கும் பூஜாங்கத்துக்கு வேண்டும் அனைத்துக் கொத்திலுள்ளாரையுங் கற்பித்து திருவாபரணமும் பரிகல பரிஸந்நமுங் குடுத்து பூசையுங் குறைவற நடத்த.... என, பொன்னேர் உழவுச் சடங்கு பற்றிய வரலாற்றுக் குறிப்பைத் தந்திருக்கிறது அக்கல்வெட்டு. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 26 / 561 and A. R. No. 531 of 1900).

அதேபோல, திருக்கோயிலூரில் உள்ள திருவிக்கிரம பெருமாள் எனும் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டானது, அக்கோயிலுக்கு இராசராச சோழன் இரண்டு பொன் ஏர்கள் (தங்கக் கலப்பைகள்) கொடுத்ததை, பொந்நெர் இரண்டு திருமஞ்சணமுஞ் செய்து இப்பொந்நில் திருமஞ(ச)ணம்தொறும் எண்ணாழிக்காலால் கலக்கல அரிசி அமுது செய்வித்து என, அக்கல்வெட்டு வாசகம் குறிப்பிடுகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 7 /142. and A.R. No. 129 of 1900).

இதேபோல, பல இடங்களில் தங்கள் திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, பாண்டிய வேந்தர்கள் பொன் ஏர் பூட்டி உழுது உழவுச் சடங்கு விழாவை நடத்தியுள்ளனர் என்பதைப் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரன் குளத்தில் கிடைத்த தங்க ஏர் (கலப்பை) பற்றிய செய்தி அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அருமைராஜ், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய மின்சக்தித் தகடு (சோலார்) பணி நடந்து வருகிறது. இதில் கயத்தாறு மற்றும் ஓட்டபிடாரம் தாலுகாக்களில் தெற்கு மயிலோடை மற்றும் கோவிந்தபுரம் கிராமங்களில் சோலார் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தப் பகுதிகளில் சோலார் பணிக்காகத் தோண்டியபோது பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் தினந்தோறும் கிடைத்து வருகிறது. சித்தாறு ஆற்றுப்படுகையில் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் அமைந்துள்ள பகுதியில் கற்சிற்பங்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன...

ஏற்கனவே இந்தப் பகுதியில் தங்க ஏர்க் கலப்பை கண்டெடுக்கப்பட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் பகுதியைத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பிற பணிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இங்கு கண்டெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ள செய்தி கவனிக்கத்தக்கது. அதேபோல, கோவைக்கு அருகில் உள்ள முட்டம் அகழாய்வில் சிறிய காளைகளுடன் கூடிய பொன் ஏர்த் திருமேனி கிடைத்துள்ளதாகவும் இரா.ப.கருணானந்தன் குறிப்பிடுகிறார். 

இந்நிலையில், கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரமேழிக் கல்வெட்டானது, பழங்கால உழவுத்தொழிலின் சிறப்பை விளக்கும் வகையிலும், பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கைக் குறிப்பதாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகேயுள்ள கல்நார்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது உருவம் செதுக்கப்பட்டிருந்ததை ஆ.பிரபு தலைமையிலான குழுவினர் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர். 

இது குறித்து ஆ.பிரபு கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் களப்பணி மேற்கொள்கையில் கல்நார்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம். தொடர்ந்து அந்தக் கல்லினைச் சுத்தம் செய்து மாவு தடவிப் படியெடுத்துப் பார்க்கையில், அது பழமையான ‘சித்திரமேழி’க் கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது. 

‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும். சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். சித்திரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவிற்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது. 

கல்நார்சாம்பட்டியில் உள்ள இக்கல்வெட்டில் பூமாதேவி (தமிழில் நிலமகள்) தலையில் கிரீடத்துடன் அமர்ந்த நிலையில் தம் இரு கைகளிலும் மலர்ச்செண்டுகளை ஏந்தியவாறு காட்சியளிக்கிறாள். அவளது வலது பக்கம் இரு அடுக்குகளைக் கொண்ட குத்துவிளக்கும் அதன் மேல் கும்பக் கலசமும் உள்ளன. பூமாதேவியின் இடதுபக்கம் கலப்பையும் கண்ணாடியும் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்லானது 3 அடி அகலமும், 2அடி உயரமும் கொண்டதாக உள்ளது. இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக் குழுக்கள் செயல்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரிய நாட்டார் சபை’ என்று அழைக்கப்படும் என்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இந்தக் கல்வெட்டு பழங்கால உழவுத் தொழிலின் சிறப்பை விளக்குகிறது. ஏரோட்டும் சடங்குகளாக, கல்நார்சாம்பட்டி மக்கள் பொங்கல் பண்டிகையின்போது காணும் பொங்கலன்று கரகம் எடுத்துச் சுற்றிவந்து, இக்கல்வெட்டின் அருகே மாடுகளை அழைத்து வந்து இவ்விடத்தில் கட்டி வைத்துப் பாரதம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் முதல் புதன் கிழமையன்று ஏர்பூட்டி தங்கள் நிலத்தில் உழுது, முளை கட்டிய நவதானியங்களைத் தூவி வழிபடுகின்றனர். இவ்வழக்கமானது பண்டைக் காலத்தில் ‘பொன்னேர்‘ பூட்டி உழும் சடங்கினை நினைவூட்டுவதாக உள்ளது என்கிறார். 

இவ்வாறு, ஆங்காங்கு மேற்கொள்ளப்படும் தொல்லியல் அகழாய்வில் கிடைத்திருக்கும் தங்கக் கலப்பைகள் (பொன் ஏர்கள்) பண்டைக் காலத்தில் வேந்தர்கள் ‘பொன்னேர்’ பூட்டி உழுத சடங்கினைப் புலப்படுத்துகின்றது. இத்தகையப் பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கை வேந்தர்கள் மட்டுமல்லாமல், உழவுத் தொழில் வேளாண் மரபினரும் நிகழ்த்தி வந்துள்ளதையும் தொல்லியல் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் மெய்ப்பித்துள்ளன. பொன்னேர் பூட்டும் இத்தகைய உழவுச் சடங்கு, ஆதிகாலம் தொட்டு இன்றுவரையிலும் உழவுத் தொழில் மரபினரால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506




பொன்னேர் உழவுச் சடங்கு - உழவுப் பண்பாட்டின் அகமும் புறமும்: மகாராசன்



சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடைக் காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கிக் காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். 

கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடைக் காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். 

கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைக் காலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். 

கோடை உழவு செய்வதால், இறுகலான நிலம் பொலபொலவென நெகிழ்ந்து காற்றோட்டத்தைப் பெறும். மேலும், பயிர்களுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாகக் கிடைக்கும். உழவுச் சால்கள் மழைநீரை உறிஞ்சி வேளாண்மை செய்யும் நிலத்திற்குள் தக்க வைப்பதோடு, மண்ணரிப்பையும் தடுத்திடும். 

இத்தகையக் கோடை உழவானது, வேளாண் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புழு, பூச்சிகள், களைச்செடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தவும் செய்வதோடு, வேளாண்மை நிலத்தின் வளம் பாதுகாக்கப்படும். வேளாண்மை உழவுத் தொழிலின் பட்டறிவு இதுபோன்ற உழவுச் செயல்பாடுகளில் புலப்படுவதைக் காணலாம். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது. இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர். 

கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும், ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்து சேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். 

ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி, வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். 

இத்தகையக் கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நல்லேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். வரலாற்றுச் சான்றுகள் பலவும், இத்தகையக் கோடை உழவுச் சடங்கைப் பல்வேறு பெயர்களில் குறித்துள்ளன. கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது. 

இத்தகையப் பொன்னேர் உழவு பற்றிக் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறும்போது, தமிழக மரபில் பொன்னேர் உழவுக்கு ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஏர்க் கலப்பை, எருதுகள், நிலங்களை வைத்துச் செய்யப்படும் ஒரு புனிதமான சடங்கு இது. கோடையில் உழும் உழவுதான் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. 

இன்னொன்று, இந்தச் சடங்கின் போது சிறிய தங்கக் கலப்பையை வைத்து வழிபடுவதும் வழக்கம். இது வட்டார வழக்குதான். வட்டாரத்துக்கு வட்டாரம் இந்த வழக்கம் மாறுபடும். இதோடு கலப்பைகளுக்கு மஞ்சள், சந்தனம் பூசியும் வழிபடுவார்கள். சித்திரையில் உழவு செய்யப்படும் மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் களைகள் அழிந்து, அந்த நிலம் விதைப்புக்குத் தயாராகிவிடும். அடுத்து வருகிற தென் மேற்குப் பருவ மழைக்கு நிலங்களில் விதைப்பு தொடங்கிவிடும். 

எப்போது பொன்னேர் கட்டணும் என்பதற்கும் பஞ்சாங்கத்தில் நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும். அந்தந்த வட்டாரப் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாட்களில் பொன்னேர் கட்டலாம். பஞ்சாங்கக் கணிப்புகள் வானியல் அடிப்படையில் கணிக்கப்பட்டவைதான். இந்த வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை. ஆந்திரா மாநிலத்திலும் உண்டு. தமிழ் நூல்களிலும், சுவடிகளிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார். 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் - வேளாண்மை உழவுத் தொழில் நடைபெறும் சிற்றூர்ப் புறங்களில், கோடைக் காலத்து உழவுச் சடங்குகள் இன்றளவிலும் நடைபெற்று வருகின்றன. இச்சடங்கு, சில வட்டாரங்களில் சித்திரை பத்தாம் நாள் நடைபெறுவதாகக் கூறும் வெள் உவன், வருடம்தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறும் ஒரு நிகழ்வு பொன்னேர் பூட்டுதல் ஆகும். அன்று ஊர்க் கோயில் நிலத்தில் அனைத்து வேளாண் மக்களும் தங்கள் ஏர் கொண்டு உழுவதே இந்நிகழ்ச்சியின் தலையாயது. சில பகுதியில் இதை நல்லேர் கட்டுதல் என்பர். 

அன்று அதிகாலையிலேயே வீடுகளைக் கழுவி, மாடுகளைக் குளிப்பாட்டிக் குளித்து, கலப்பையைத் தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க, அவர்களின் பின்னால் மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் பூஜைப் பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர். கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு கொஞ்சமும் எடுத்துச் செல்வர். 

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்துப் பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்தத் திசை நல்ல திசையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். 

குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் அனைவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள். இது ஒரு சம்பிரதாய உழவு என்பதால், வயலின் சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவைக் கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு, எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டிப் பூஜைகள் செய்து, இனிப்பு கலந்த பச்சரிசியைப் பிரசாதமாக வழங்குவர். 

இந்தச் சித்திரைப் பத்து என்பது, இன்றைய தமிழ்ப் பூமியில் சூரியன் உச்சிக்கு வரும் நாள் என்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த நாளே புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதின் குறியீடாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. சில அம்மன் ஆலயங்களில் இந்த நாள் ‘பத்தாம் உதயம்’ என்ற பெயரில் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு. 

சில ஊர்களில் அங்குள்ள தச்சு ஆசாரியை அழைத்து ஊர்க் கோயிலில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து சன்மானம் வழங்கும் வழக்கமும் இருக்கிறது. உழவுக்கு வேண்டிய கருவிகளைச் செய்து கொடுப்பதால் அவருக்கு இந்தச் சிறப்பு மரியாதை வேளாண் மக்களால் செய்யப்படுகிறதாம். இந்தப் பொன்னேரு பூட்டல் சடங்கு சிந்து வெளியிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று என்று சொல்லப்படுகிறது என்கிறார். 


மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506



சனி, 26 மார்ச், 2022

வேளாண் மக்கள் குறித்து ஓர் உரையாடல் : பா.ச.அரிபாபு


வேளாண்மை என்பது உணவுத் தேவை சார்ந்த உற்பத்தி நடவடிக்கை மட்டுமல்ல;  சமூக இயக்கத்தின் உயிர்நாடியாகவும் எல்லாக் காலத்திலும் நிலவிவரும் அடிக்கட்டுமானமும் ஆகும். உற்பத்தி சார்ந்த இத்தகைய அடிக்கட்டுமானம்தான் சமூகம், வாழ்க்கை முறை, அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம், பண்பாட்டுப் பெறுமானங்கள் வரையிலுமாக அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் ஆகப் பெரும் சிந்தனைவெளியை உள்ளீடாகக் கொண்டிருக்கிறது. 


மூவேந்தர் காலம் தொடங்கி, பல அந்நியப் பேரரசுகள் தமிழகத்தில் காலூன்றியபோதும் அறுபடாத கண்ணியாக, அரசியலையும் பொருளாதாரத்தையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தியாக வேளாண்மை உற்பத்திதான் இருந்திருக்கிறது. இங்கு நிலைகொண்டிருந்த ஆங்கிலேய காலனியத்தின் நவீன சமூதாய உருவாக்கத்திலும்கூட வேளாண்மையும் அதுசார்ந்த உற்பத்தியுமே மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, பல்வேறு ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டினாலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான  நீர்ப்பங்கீட்டுக்  கொள்கைகள், அணைத் திட்டங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நகர மற்றும் தொழில் துறை விரிவாக்கத் தேவைக்கென வேளாண் நிலங்கள் அழிப்பு, குறைவான மற்றும் காலம் தவறிய மழைப்பொழிவுகள், வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைவான கொள்முதல் விலை, அரசு மற்றும் பொதுச் சமூகத்தின் பாராமுகம் எனப் பல்வேறு  காரணிகளால் வேளாண் தொழில் வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. இதிலுள்ள அபாயத்தைத் தமிழ்ச் சமூகம் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்தப் பொதுச் சமூகத்துக்கும் அடிப்படைத் தேவையாக அமைந்திருக்கும் வேளாண்மையும், வேளாண் மக்களும் பல்வேறு காரணிகளால் பல்வேறு காலகட்டங்களிலும்  ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. இன்றும்கூட அந்த நெருக்கடி தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும், அதுபற்றிய உரையாடல்களை, ஆய்வுகளை மையப்படுத்திய ஓர் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் இன்னும் உருவாக்கப்படவில்லை. வீழ்ச்சியில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் காத்திரமான  உரையாடல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியது சமகாலத் தேவையாகும். 

தமிழ்ச் சூழலில், வேளாண்மையையும்  அது சார்ந்த மக்களின் பண்பாட்டு வெளியையும் கோட்பாட்டு வெளிச்சத்தில் வாசிக்கும் முறையானது  கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, நா.வானமாமலை, கோ.கேசவன், ஆ.சிவசுப்பிரமணியன், பெ.மாதையன், ராஜ்கௌதமன், டி.தருமராஜ், தே.ஞானசேகரன் போன்ற ஆய்வாளர்களால்  வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், வேளாண்மை சார்ந்தும், வேளாண் மக்கள் சார்ந்ததுமான கோட்பாட்டு ஆய்வுகளாக - முழுமையான ஆய்வுகளாகத் தொடர்ச்சியாக  அவை முன்னெடுக்கப்படவில்லை. 

நிலம், நீர், விதைகள், உற்பத்தி, மனிதர் உள்ளிட்ட பல்லுயிர் வாழ்வு எனப் பரந்துபட்டிருக்கும் வேளாண் தொழில் மரபுகளைக் குறித்தும், வேளாண் மக்களின் தொழில் முறைகள், தொழிலோடு இணைந்து வெளிப்படும் வழக்காறுகள், வாழ்க்கை முறையோடு பிணைந்திருக்கும் பண்பாட்டு வரலாறு என அனைத்தையும்  இணைத்து உரையாடும்போது, அதன் போக்கில் ஓர் கோட்பாடாக வடிவமையும் வாய்ப்புகள் நேரும். அவ்வகையில், ‘வேளாண் மக்களியம்’ (Agrarianism) என்ற அளவில் பரந்துபட்ட கோட்பாட்டை அது உள்ளீடாகக் கொண்டிருப்பதையும் கண்டறிய முடியும். இந்நிலையில், மகாராசன் எழுதிய ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம்’ நூல் மிகுந்த கவனம்பெற வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கிறது.  

மனித சமூகத்தின் ஆதிகாலம் தொடங்கி, சமகாலம் வரைக்குமான காலவெளியினூடாகப் பரிணமித்திருக்கும் வேளாண் மரபுகளையும்,  அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் மிக விரிவாக ஆராய்ந்திருப்பதோடு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண் மக்களின் பண்பாட்டு மரபுகளையும் விரிவாக ஆராய்ந்து,  சமூகப் பண்பாட்டு  வரைவியலாகவும் முன்வைத்திருக்கிறது இந்நூல்.

நூலின் முதல் இயலானது, உழவுத் தொழில் மரபின் பண்பாட்டு வரைவியலையும், வேளாண் மரபினரின் சமூக வரைவியலையும் மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, வழக்காறு, சடங்கு, வாழ்வியல், வழிபாடு, பண்பாட்டு நடத்தை எனப் பல்வேறுபட்ட பன்முகத் தரவுகளோடு மிக விரிவாகப் பேசுகிறது. இரண்டாவது இயலானது, வேளாண்மைக்கு அடிப்படை வித்துகளுள் ஒன்றான நீர் அறுவடைப் பண்பாடு பற்றியதாகும். அதாவது, நீர் மேலாண்மை குறித்து மிக நுணுக்கமான பண்பாட்டு வரைவியலை அவ்வியல் முன்வைக்கிறது. 

வேளாண்மைத் தொழில் மரபு, நீர் மேலாண்மை மரபு, அவ்விரண்டையும் மேற்கொண்டிருந்த வேளாண் மக்களின் பண்பாட்டு மரபு என, இம்மூன்றைக் குறித்தும் மிக ஆழமாக விவரித்திருக்கும் இந்நூலானது, ‘வேளாண் மக்களியம்' எனும் கோட்பாட்டு வரைவியலைப் பல்வேறுபட்ட புதிய தரவுகளோடு முன்வைக்க முனைந்திருக்கிறது.

கட்டுரையாளர்:

- பா.ச.அரிபாபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, அமெரிக்கன் கல்லூரி. தொடர்புக்கு: arivusallo@gmail.com

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்
மகாராசன்
யாப்பு வெளியீடு, சென்னை-76
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080514506.

நன்றி:

தி இந்து தமிழ்த் திசை நாளிதழ், 19.03.2022.


திங்கள், 21 மார்ச், 2022

ஏறு தழுவுதல் பண்பாட்டு வரலாற்று ஆவணம் - செ. தமிழ்நேயன்

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் - நூல் மதிப்புரை.

*

வரலாறு என்பது பெரும்பாலும் அரசுகள் மற்றும் அதிகாரம் சார்ந்து எழுதப்படும் சூழலில், எளிய மக்களின் நிலம், தொழில், வாழ்நிலை, பண்பாடு  பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் மகாராசன், தமிழர்  பண்பாட்டு அடையாளங்களில்   ஒன்றான ஏறு தழுவுதல் மற்றும் அதைச் சார்ந்து இயங்கிய மக்களின் பண்பாட்டுப் பங்களிப்பைத் தனக்குரிய வகையில் பண்பாட்டு வரலாற்று ஆவணமாகப் படைத்துள்ளார்.

ஏறு தழுவுதல்  என்பது மாடு பிடி விளையாட்டு என்று தான் பொதுவாக எல்லோராலும் கருதப்படுகிறது. ஆனால், அதற்குள் மறைந்திருக்கும்  உயிர், உணவு, நிலம், அரசு, வணிகம், பண்பாடு போன்ற கருப்பொருளை மிக ஆழமாக விவரிக்கிறது இந்நூல்.

தேடல், தேவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவையாகும். தேடல் என்பது தேவையின் காரணமாக ஏற்பட்ட ஒன்று. பசி தேவையின் பொருட்டு அலையோடியாகவும், நிலைக்குடியாகவும் துவக்க காலச் சமூக நிலையாக இருந்துள்ளது என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். உணவுத்தேவையின் போட்டி காரணமாக பல்வேறு குழுக்கள் கிளைத்தன என்பதையும் நிறுவுகிறார்.

வேட்டைச் சமூகநிலையில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் போக, பிடிக்கப்பட்ட சில விலங்குகளைத் தம்முடைய தேவைக்காகப் பழக்கப்படுத்தினர். அப்படிப் பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு  என்கிறார்.

வேட்டைச் சமூக நிலையில்  இருந்த சமூகம், இரும்புப் பயன்பாட்டிற்குப் பிறகு உணவு உற்பத்தித் தொழிலான உழவை மேற்கொள்ள எருதுகளைப் பயன்படுத்தினர் என்றும், முல்லையில் உழவுத் தொழில் துவங்கப்பட்டாலும், மருத நிலத்தில் தான் செழுமையும் ஒழுங்கு வடிவமும் பெற்றது என்பதை விரிவாக விளக்குகிறார் மகாராசன்.

ஒழுங்கு வடிவம் பெற்ற வேளாண்மை காரணமாக, உற்பத்திச் சமூகமான உழவுச்சமூகத்திடம் இருந்து பல கிளைச் சமூக அமைப்புகள் தோன்றியுள்ளன என்பதையும், அரசு உருவாக்கம் பெற்றதன் பின்புலத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஏறு தழுவுதல் என்ற பண்பாட்டு அடையாளம்  நிலத்தோடு தொடர்புடைய ஒன்றாகும். மாடுகள் செல்வத்தின் குறியீடாகக் கருதப்பட்டது என்பதையும், உணவு, உற்பத்தி, உழைப்பு இவற்றை மாந்தர்களிடம் பகிர்ந்து கொண்டு தோழானாக இருந்திருக்கின்றன என்பதையும், மாடுகள் மீதான ஈர்ப்பு படையெடுப்புச் சூழலுக்கு நகர்த்திச் சென்றதையும் விவரிக்கிறது இந்நூல். புறத்திணைகளில் முதல் இரு திணைகளான வெட்சி, கரந்தை என்பது மாடுகளைக் கவர்ந்து செல்வதும் மீட்பதும் பற்றித் தான் கூறுகிறது என்பதையும் நினைவுப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும், நிலம் சார்ந்த இயங்கு முறையில் தோற்றம் பெற்ற அரசுகளினால் நிலவுடைமைக் கிழாரியம், உற்பத்தி செய்வோர் என்ற வகையில் பல பிரிவுகள்  உருவாகியதையும் விவரித்துள்ளார். 

அதோடு, நிலங்களின் மீதான அரசியல் போர்களினால்  உழவுப்பெருங்குடிகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டனர் என்பதையும், குடியேற்றங்களின் பின்னணி அரசியல் பற்றி பார்வையும், வேளாண் மக்களின் ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றார் மகாராசன்.

அரசதிகாரத்தினால் நிலங்களின் பொதுவியல் வடிவமைப்பு சிதைக்கப்பட்ட பின்னணியில், நிறுவன சமயங்களின் பங்களிப்பு உள்ளது என்பதையும் விளக்குகிறார். நிறுவன சமயங்களினால் நிலம் எவ்வாறு சுரண்டலுக்கு உள்ளாகிப் போனது? சமயத் தலைமைகளினால்   வேளாண் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்ட  வலிகளுடன், சமய நிறுவனங்களின் இருப்பிடங்கள் (கோவில்) வளர்ச்சிக்காக வேளாண் மக்கள் கடும் உழைப்பை எவ்வாறு செலவழித்தனர்? என்பதையும் பதிவு செய்கிறது நூல்.

உணவு உற்பத்தியின் ஆணி வேரான வேளாண் நிலங்கள் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் பட்டியலிடுகிறார் மகாராசன்.

நிலங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக வேளாண் மக்களின் போராட்டங்கள்  தோல்வியைத் தழுவியதன் பின்புலத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார் .

நிலம் சார்ந்த மக்களின்  போராட்டங்கள் எல்லாம் வன்முறை நிகழ்வுகளாகத்தான் கருதப்படுகிறது என்ற முரண்பாடுகளையும் பதிவு செய்துள்ள இந்நூல், நில உரிமை மறுக்கப்பட்டு, சொந்த நிலங்களில் கூலிகளாக, அடிமைகளாக விற்கப்பட்ட நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார். மேலும், பண்பாட்டு அடையாள ஒடுக்குமுறையுடன், பொருளியல் ஒடுக்குமுறைக்கும் தள்ளப்பட்ட அவலங்களையும் பதிவு செய்துள்ளார்.

நிலங்களின் மீதான வரிகளில் வேறுபாடுகள், சமூகப் பாகுபாடுகள் போன்றவற்றில் நிறுவன சமயத்தலைவர்களின் பங்களிப்பு உள்ளது என்பதையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல்.

தன்சார்புப் பொருளியல் வாழ்நிலை ஏன் தேவை என்பதையும் விவரிக்கிறார். உலக மையமாக்கினால் ஏற்படும் விளைவுகளையும் பற்றியும் இந்நூல் வழியே பேசுகிறார் மகாராசன்.

அவ்வகையில், ஏறு தழுவுதல் என்ற சொல்லின் பின்னணியில் உள்ள பண்பாட்டு அடையாளங்களை விரிவாகவும் விறுவிறுப்பாகவும் ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல்.

*

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்,
மகாராசன்,
முதல் பதிப்பு 2017,
அடவி வெளியீடு,
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.
*
கட்டுரையாளர்:
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.

திங்கள், 14 மார்ச், 2022

திராவிடக் கற்பிதங்களைக் கட்டுடைத்திருக்கும் நூல் : மா.ஜெயச்சந்திரன்


தமிழ் - தமிழர் மரபுகளை மீள்பார்வைக்கு உள்ளாக்கி, தமிழர் அடையாளத்தை மறுவரையறை செய்ய, குறுகிய மொழி, இன நோக்கங்களுக்கு அப்பால் விரிந்த ஆய்வு மனப்பான்மையோடு தமிழ்மொழியின் தோற்றத்தையும், பிராமணர்/பிராமணரல்லாதோர் அரசியலின் சூழ்ச்சியையும், பூர்வீகத் தமிழர்களின் வீழ்ச்சியையும், திராவிடக் கருத்தியலின் போதாமைகளையும் பேசுபொருளாக முன்வைத்து, மகாராசனால் எழுதப்பட்டுள்ளதே 'அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்' எனும் இந்நூலாகும்.

ஒரு ஒடுக்கப்படுகிற வர்க்கம், ஒடுக்குகிற வர்க்கத்திற்கு எதிராகத்  தன்னை அணிதிரட்டிக் கொள்ளும்போது அடையாள அரசியலே விடுதலை அரசியலாகவும் பரிணமிக்கிறது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 19ம்நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டங்களிலும் தோன்றிய அடையாள அரசியல்கள் மிக முக்கியமானவையாகும்.

அவற்றில் ஒன்று, பார்ப்பனர் /பார்ப்பனரல்லாதோர் அரசியல். மற்றொன்று, அயோத்திதாசர் முன்னெடுத்த 'தமிழர் அடையாள அரசியல்'!

இந்த இரு அடையாள அரசியலுக்கு அப்பால் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளால் முன்னெடுக்கப்பட்ட "தமிழ்ச் சைவம்" எனும் அடையாள அரசியலும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது.

தமிழ் - தமிழர் என்ற அடையாளங்களை மறைமலையடிகள் சைவத்துடன் இணைத்தார். 'சைவமே தமிழர்களின் சமயம்' என்பது அவரது கருத்து.

தமிழர்களை சைவ சமயத்துக்குள் அடக்கும் பொருட்டு "தமிழர் மதம் சைவம்" என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டு, தூயதமிழ் மொழியாக்கம் என சமஸ்கிருத நீக்கத்தின் பொருட்டு தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டமைத்தார்.

ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வேதாந்த எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என்பவற்றை நவீன சைவ இயக்கம் முன்வைத்து, கருத்தொற்றுமையின் அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது, பின் முரண்பட்டது.

மறைமலையடிகள் தலைமையில் இயங்கிய 'சைவ மறுமலர்ச்சி இயக்கம்தான்' பக்தி இயக்க காலத்துக்குப் பிறகு மீண்டும் மேடைக்குத் தமிழைக் கொண்டுவந்தது.

பின்பு திராவிட அரசியல் அதை கைப்பற்றிக்கொண்டு, தமிழை வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. என்னதான், தமிழ்மொழி / தமிழ் சைவம் என முதன்மைபடுத்திப் பேசினாலும், சாதித் தீண்டாமைக்குக் குரல் எழுப்பினாலும், இவர்களில் பெரும்பாலானோர் மேட்டிமைச் சாதியினரே ஆவர்.

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் பிராமணர் அல்லாதோரில் மேட்டிமைச் சாதியினரை முதன்மைபடுத்தும் அமைப்பாகவே தொடர்ந்து செயல்பட்டது. மேலும், 'வேளாளரே (சைவ வேளாளர்) திராவிடர்' என்ற கருத்தையும் முன்வைத்தார் அடிகளார்.

பிராமணியத்திற்கு எதிராக தமிழ்ச் சைவம் முன்னெடுக்கப்பட்டபோது, அது பிராமணியத்தை எதிர்க்கிறதே ஒழிய, சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசவில்லை என்று கூறி அதை நிராகரித்தார் அயோத்திதாசர்.

அதேசமயம், அயோத்திதாசர் பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். அதை ஒரு மதமாகப் பார்க்காமல் தமிழர்களின் பண்டை மரபுகளில் ஒன்றெனக் கருதித் "தமிழ் பெளத்தம்!"என்ற பெயரில் அழைத்தார்.

'தமிழ்க்கெழு கூடல்' என்று தமிழோடு இணைத்து 'மதுரையை' 'தமிழ் வையை' என்று தமிழை ஆற்றோடு, நதியோடு இணைத்தும், நகரத்தோடு இணைத்தும் தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, அயோத்திதாசர் 'பெளத்தம்' என்கிற சமயத்தையும் தமிழோடு இணைத்து 'தமிழ்பெளத்தம்' என்றே அழைத்தர்.

தென்மொழியிலுள்ள 'அமுத எழுத்திற்கு தமிழ்' என்றும், 'நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம்' என்றும் பெயர் என்கிற அயோத்திதாசர், திராவிடம் எனும் சொல்லாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையும் ஒருங்கே குறிக்காது எனவும், மேற்குறித்த நான்கு மொழிகளையும் குறிப்பதற்கான பொதுப்பெயராகவும் 'திராவிடம்'என்பதைக் குறிக்கக்கூடாது என்பதாகவுமே அயோத்திதாசர் கருதியாகக் கூறுகிறார் மகாராசன்.

அயோத்திதாசரைப் பொருத்தவரை 'திராவிடன் என்றால் ஆதித்தமிழன்!' ஆதித்தமிழன் எனும் மொழி அடையாளமே அயோத்திதாசர் முன்னெடுத்த பிரதான அடையாளமாகும். அயோத்திதாசர், திராவிடம் என்றால் அது தமிழ்தான்; தமிழ் மட்டுமே. அது நான்கு பாஷைக்கும் பொதுவானது என்பது திரிபாகும் என்கிறார்.

அயோத்திதாசர் மொழியில் கூறுவது என்றால்,  நூதன மத வித்வானான கால்டுவெல்லின் கருத்தியல் வாரிசுகளான/பெரியாரின்/திராவிட அரசியலின் 'திராவிடம்' என்பதே திரிபாகும்!

நான்கு மொழிபேசும் மக்களை திராவிடன் என்றும் நான்கு (தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம்) மொழிகளையும் 'திராவிடம்' எனும் பொதுச்சொல்லால் குறிப்பதே பெரியாரிய-திராவிட அடையாள அரசியலாகும்.

இதை, அயோத்திதாசர் வழிவந்தவரான கா.அப்பாதுரையோ, 'வடதேசம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும், 'இலங்கா தீவம்' எங்கணும் தமிழையே திராவிடம் என்றும் வழங்கி வந்தனர். மேலும் நான்கு மொழிக்கே, திரவிடம், திரமிடம் என்ற பெயர் உண்டு என்று கூறுவார்களாயின்?! பூர்வ 18 மொழிக்கும் என்ன பெயர் கூறுவார்களோ?!என்று எள்ளி நகையாடுகிறார்.

அயோத்திதாசரைப் பொருத்தவரை அவருக்கு ஆதிக்கம்தான் முதன்மையான எதிரி! அத்தகைய ஆதிக்கம் யாருடையது?எனும் கேள்வி எழும்போது அவர் பார்ப்பனர் /பார்ப்பனரல்லாதோர் உள்ளிட்ட சாதி இந்துக்களையும் ஒரு சேரவே கைகாட்டுகிறார்.

சாதிபேதம் நிறைந்த இவர்களது அடையாளத்தைக் கட்டுடைக்க 'சாதிபேதமற்ற தமிழ்பெளத்தம்' எனும் விடுதலைக்கருத்தியலைக் கட்டமைத்துச் செயல்படுகிறார். 

பார்ப்பனர் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாதோரில் சாதி பேதமுற்றவர்கள் யாவரும் பிராமணக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களே!அதனால்தான், பிராமணரல்லாதார் இயக்கம் என்பது பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே எனும் வகையில் அதிலிருந்து விலகியே நிற்கிறார் அயோத்திதாசப் பண்டிதர். மேலும், சாதி ஆதாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் தழுவிக்கொண்டே (Non Brahmins) பிராமணரல்லாதோர் என்பது ஏமாற்றுவேலை என்கிறார்.

பிராமணர்கள் மேல்சாதி, கீழ்சாதி எனும் வரம்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் 'பிராமணக்கூட்டத்தைச் சார்ந்தவர்களே' என்றார் அயோத்திதாசர். ஆக, பிராமணரல்லாதோர் இயக்கமும் பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே என்பதே அவருடைய பார்வையாக இருந்தது.

மேலும், சைவம் / வைணவம் / வேதாந்தம் என்னும் சமயங்களையும் அப்பிராமணர்களே ஏற்படுத்தி, அச்சமயங்களை எவரெவர் தழுவி நின்றார்களோ, நிற்கிறார்களோ?!அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே என்கிறார் அவர்.

சாதிபேதமுள்ளவர் யாராயினும், தமிழர்களேயாயினும் அவர்களையும் "திராவிட பிராமணாள்தான்"என்றுதான் விளித்தார் பண்டிதர். அதற்கு மாற்றாக, பழங்குடியினரை, ஒடுக்கப்பட்ட தமிழர்களை /சாதிபேதமற்றோரை "தமிழ் பெளத்தர்கள்" என்றே அடையாளப்படுத்தினார். தமிழ் புத்திஸ்டான திராவிட பெளத்தர்களையே 'சாதிபேதமற்ற தமிழர்' என்றார். மேலும் அவர்களையே பூர்வீகக் குடிகள் என்கிறார்.

சாதிபேதமற்ற பூர்வத் தமிழர்களை 'திராவிட பெளத்தர்' என்றும், 'சாதிபேதமுள்ள தமிழர்களை' 'திராவிட பிராமணாள்' என்றுமே அவர் வரையறை செய்கிறார்.

பார்ப்பனிய சடங்குகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையில் இந்த ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களைத்தான் கால்டுவெல்லும் பார்ப்பனரல்லாதோர் எனக் குறிப்பிடுகிறார் மதமாற்ற நோக்கில். அயோத்திதாசரும் அதையேதான் கூறுகிறார் சாதிபேதமற்ற ஆதித்தமிழர்களின் விடுதலைக்காக!

திராவிடன் என்பது தமிழையும் குறிப்பதாகக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். 'திராவிடர்'எனும் சொல்லாடல் தமிழரை மட்டுமே குறிப்பதாக கூறுகிறார் அயோத்திதாசர்!

அயோத்திதாசரின் இக்கருத்தை வழியொற்றியே, தமிழினத்தை /தமிழின மொழிகளை தமிழின நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைக்கத்- 'தமிழ்'என்ற சொல்லின் போதாமையை உணர்ந்து, " தேயாத பழம் பெருந்தமிழ்"எனும் பொருளுடைய திராவிடம் என்ற சொல்லை வழங்கியுள்ளனர் என்கிறார். அயோத்திதாசரின் வழிவந்தவரான கா.அப்பாதுரையார்.

த்ரமிள(ம்)-த்ரவிட(ம்) த்ரவிட(ம்)-(த்ராவிடம்) எனும் முறையில் தமிழம் எனும் சொல்லே 'திராவிடம்' என்று திரிந்தது என்கிறார் தேவநேயப் பாவாணர்.

தமிழைத் தனியாகவும், அதன் கிளைமொழிகளான தெலுங்கு/கன்னடம்/மலையாளம்/உட்பட்ட மொழிகளை 'திராவிட மொழிகள்' என்றும் குறிக்கவேண்டும் என்று கூறும் பாவாணர், தமிழை தனியாகவும் /திராவிடம் தனியாகவும் இவ்விரண்டையும் சேர்த்து தென்மொழிகள் எனக் குறிக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

தமிழ்/தமிழர்/தமிழம் என்பதைச் சரியாக ஒலிக்கத் தெரியாமல் அயல் இனத்தவரான ஆரியர் த்ரமிள, திரவிட, திராவிட என்று அழைத்தனர் என்கிறார் மொழியியல் அறிஞரான தேவநேயப் பாவாணர் .

ஆனால், 1856 ல் திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை (A Comparative Grammar of the Dravidian (or)South Indian Family of Language) என்ற நூலை வெளியிட்ட கால்டுவெல்லோ, "மொழிக்குடும்பத்தின் பெயரே திராவிடம்" என்கிறார்.

ஒரே இயல்புடைய வேர்ச்சொல்லையும், ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை, ஒரே இனத்தை சேர்ந்தவை. எனவே இவ்வின மொழிகளை திராவிடம் என ஒரு பொதுப்பெயர் இட்டு அழைத்துள்ளேன் என்கிறார் கால்டுவெல்.

திராவிட மொழிகளில் தமிழ் மட்டுமே சமஸ்கிருதத் துணையின்றித் தனித்து இயங்ககூடியது என்ற உண்மையை ஒத்துக்கொண்ட கால்டுவெல், அதேசமயம் தமிழை, திராவிட மொழிகளுள் ஒன்றாகச் சுருக்குகிறார். தமிழ்/தெலுங்கு /மலையாளம்/கன்னடம் இந்நான்கு மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்கிறார்.

வரலாற்றுண்மைக்குப் புறம்பாக, தமிழை வெறும் மொழியடையாளமாக மட்டுமே சுருக்கிவிட்டு, திராவிடத்தை ஒரு இன அடையாளமாகக் கட்டமைப்பது ஆங்கிலேயர்களின் மதமாற்றம் மற்றும் பிரித்தாளுதல் போன்ற சுயநல நோக்கத்துக்காகவே இருந்தாலும், அதையேதான் பிராமணரல்லாதோர் இயக்கமான ஜஸ்டிஸ்(Justice party) எனும் நீதிக்கட்சியும்/அதன் வழிவந்த திராவிட இயக்கங்களும் தொடர்ந்து செய்தன.

அதேசமயம், தமிழ்பெளத்தம் எனும் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டே 1898 ல் சென்னையில் சாக்கிய பெளத்த சங்கத்தையும்,1907 ம் ஆண்டில் "ஒரு பைசா தமிழன்" இதழையும் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.

அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயர் "தமிழன்!" ஆனால், 1916ம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி எனும் நீதிக்கட்சி தமிழ்/தெலுங்கு /ஆங்கிலம் மூன்று மொழிகளில் தனித்தனியே மூன்று நாளிதழ்களைத் தொடங்கி நடத்தின.

அவற்றின் பெயராக! "தமிழ் நாளிதழுக்குத் திராவிடன்" என்றும், தெலுங்கு நாளிதழுக்கு "ஆந்திர பிரகாசிகா" என்று தெலுங்கு இனத்தின் பெயரிலும், ஆங்கில நாளிதழின் பெயராக ஜஸ்டிஸ்(Justice) என்பதுமாக அமைந்தது. தமிழ்நாட்டுப் பகுதியில் வெளிவந்த தமிழ் ஏடு மட்டும் தமிழ்/தமிழன் எனும் பெயர்களை மறைக்கும் விதமாக 'திராவிடன்' என்ற பெயரைப் பெற்றன.

ஆந்திரரிடையே ஆந்திர மகாசபையும்,கேரளரிடையே 'கேரள சமாஜமும்' இருந்ததைப்போல? தமிழரிடையே இனவழியில் அமைப்பில்லை?! இருந்த ஒரே ஒரு அமைப்பான ஆதிதிராவிட மகாஜன சபையையும், அதன் வழிவந்த பெளத்த சங்கங்களையும், அயோத்திதாசரின் மறைவிற்குப்பிறகு உள்வாங்கிச் செரித்துக்கொண்ட திராவிட இயக்கம், தமிழரல்லாதோர் நலனையே முதன்மையாகக்கொண்டு, தமிழர் நலனை இரண்டாம் பட்சமாகவும் கருதி செயல்படத் தொடங்கியது மட்டுமின்றி, புதிதாக மேலெழுந்துவந்த "தமிழர் அடையாள அரசியலை" இருட்டடிப்பு செய்தது! உள்வாங்கிச் செரித்துக்கொண்டது.

கேரளரிடையே கேரள சமாஜமும்/ஆந்திரரின் ஆந்திர மகாசபையும் தெலுங்கர்/மலையாளிகளின் இனவுணர்வு அரசியலுக்கான களமாக அமைந்தது. ஆனால், ஜஸ்டிஸ் கட்சி மற்றும் திராவிட இயக்கங்களின் வரவால் தமிழர் நிலைதான் மிகவும் பரிதாபகரமானதாக மாறியது.

எழுந்து வந்த தமிழர் அடையாள அரசியலை மடைமாற்றி, நீர்த்துப்போகச்செய்த திராவிட இயக்கங்கள் அவ்வியக்கங்களை தன்வயப்படுத்திக் கொண்டன.

அதனால்தான் தமிழர் எனும் இனஉணர்வு மறையவும், ஆந்திர, கேரள, கன்னட இனத்தார் தமிழகத்திலே வேலைவாய்ப்பிலும், அரசியல் உள்ளிட்ட பிறதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்தவும் காரணாமாய் அமைந்தது. அதற்கு முழுக்காரணமாக இருந்தது இந்த பிராமணர் அல்லாதோர் இயக்கமும், அவற்றின் வழிவந்த திராவிட இயக்கங்களுமே என்பதே எவராலும் மறுக்கமுடியாத உண்மை வரலாறாகும்.

"தமிழர் என்றால் பார்ப்பான்" உள்ளே வந்துவிடுவான். 'திராவிடன்' என்றால் உள்ளே வரமாட்டான். அப்படியே வந்தாலும் அவர்களுடைய ஆச்சாரங்களையும், அனுஷ்டானங்களையும் விட்டுவிட்டு வந்தால் சேர்த்துக்கொள்வது பற்றி யோசிக்கலாம் என்கிறார் பெரியார். மேலும், தமிழர் என்றால் நான் சேர்க்கநினைத்த அத்தனைபேரையும் சேர்க்கவும், விலக்க நினைக்கும் கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா ?என்கிறார் பெரியார்.

ஆக, திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த திராவிட அரசியலானது, "தமிழர் எனும் அடையாள நீக்கம்!" செய்யப்பட்டதாகவும்,"தமிழர் அல்லாதவர்களை"(தெலுங்கர்/கன்னடர்/மலையாளி) உள்ளடக்கியதாகவுமே இருந்திருக்கிறது; இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால், அதற்கு முந்தைய காலத்திலேயே திராவிடம்-திராவிடர் என்ற சொல்லாடல் கொண்டே அடையாள அரசியலை முன்னெடுத்த அயோத்திதாசர் 'தமிழர் 'எனும் அடையாளத்தையே முன்வைக்கிறார். 

அயோத்திதாசர் முன்னெடுக்கும் திராவிட அடையாளம் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை, குறிப்பாக சாதிபேதமற்ற தமிழர்களையே குறிப்பதாயிருக்கிறது.

பிறமொழி பேசுவோரையும், வந்துகுடியேறிய பிற தேசத்தவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கும் அயோத்திதாசர், சாதிபேதத்தை கடைபிடிக்கும் பூர்வ தமிழ்க்குடிகளையும் தமிழராக அடையாளப்படுத்த முடியாது; கூடாது என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

 இதையே, வந்துகுடியேறிய பிராமணர்களிடமோ அல்லது வந்துகுடியேறிய தமிழரல்லாத பிறஇனத்தவரிடமோ?!ஆட்சி அதிகாரம் போய்ச்சேர்ந்தால் பூர்வக்குடித் தமிழர்களின் அடையாளமும் இருப்பும், வாழ்வும் பாழ்பட்டுப்போகும் என்பதில் தெளிவாய் இருந்து எதிர்த்திருக்கிறார் என்கிறார் மகாராசன்.

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் என்பது, திராவிட இனம்/திராவிடத் தமிழர் / '1956'க்கு முன்வந்தோரெல்லாம் தமிழராய் ஏற்கிறோம்/தமிழ்மொழி பேசுபவரெல்லாம் தமிழரே! என்று திராவிடன்/தமிழ்/தமிழர் என முன்வைக்கப்படுகிற எல்லாவகை அரசியலிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும்.

அவரைப்பொருத்தவரை, திராவிடமே தமிழ்! தமிழே திராவிடம்! ஆதித்தமிழர் என்பதும்/தமிழ் பெளத்தம் !என்பதுமே தமிழர்களை விடுதலைப்படுத்தும் கருத்தியலாகும். சாதிபேதமற்ற திராவிடர்களே(தமிழர்)! ஆதித்தமிழர்கள் அவர்களே இந்த மண்ணின் பூர்வகுடிகள். சாதிபேதமுள்ளோர் யாவரும் (தமிழராக இருப்பினும்) பிராமணக் கூட்டத்தைச் சேர்ந்தோரே!பிராமணரல்லாதார் இயக்கமும் பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே!

தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஆதித்தமிழர்களே இந்தமண்ணின் மைந்தர்கள்! அவர்களே பூர்வ பெளத்தர்கள் !

சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும்/திராவிட பாஷையாம் தமிழினையும் வரிவடிவில் போதித்தவர் புத்தரே! "நஞ்செழுத்து திராவிடம்! அமுத எழுத்து தமிழ்!"

அதாவது,தென்மொழியிலுள்ள அமுத எழுத்திற்குத் தமிழ் என்றும், நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம் என்றும் பெயர் என்றார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் முன்வைத்த இத்தகைய கருத்தியல் அடிப்படைகள்தான் திராவிட இயக்கங்களுக்கும், அயோத்திதாசரின் கருத்தியலுக்கும் இடைவெளியை அதிகப்படுத்தியது என்கிறார் மகாராசன்.

1919ல் வழங்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்,1935 ல் அரசியல் சட்டத்தின் மூலம் நாடு விடுதலை பெறுமுன்பே உயர் உத்தியோகங்களை இந்தியமயமாக்கின. அவை பிராமண மயமாகிவிடாமல் தடுக்கவே நீதிக்கட்சி என்று கூறி தொடங்கியவர்கள், தமிழரல்லாதோரின் வேட்டைக்காடாக மாற்றிக்கொண்டார்கள்.

நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) பிராமணரல்லாதோர் கட்சியாக தோன்றினாலும், உண்மையில் அது 'பிராமணரல்லாத சாதி இந்துக்களின் கட்சி'யாகத்தான் செயல்பட்டது.

இதைத்தான் அயோத்திதாசர், சாதி ஆதாரங்களையும்,சமய ஆச்சாரங்களையும் வைத்துக்கொண்டு நான் பிராமின்ஸ்(No Brahmins) என்பது வீணாகும் என்றார்.

நூதன மதவித்வானான கால்டுவெல்போப்பின் கருத்தியல் வாரிசுகளான பிராமணரல்லாதோர் இயக்கம்(Justice party)/திராவிட இயக்கம் மற்றும் திராவிட கழகங்களால், 'திராவிடன்' என்பது தென்னிந்தியர்! அவர்களிலும் "பிராமணரல்லாதோருக்கான பொதுப்பெயர்" என்றே கூறப்பட்டது. உண்மையில், தமிழ்நாட்டில் தமிழரல்லாத பிறமொழியினரின் ஆதிக்க அரசியலுக்கே இக்கருத்தியல் பயன்பட்டது.

பல நூற்றாண்டு காலம் தங்களின் அடையாளத்தைத் தொலைத்த மக்களின் அடையாள மீட்டெடுப்புக்கு அம்பேத்கருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் அயோத்திதாசர் பண்டிதர் ஆவார்.

உண்மையில், ஆரிய பார்ப்பனீய வைதீக தீய வேதமதத்தின் அனைத்துப் பொய் பரப்புரைகளையும் புரட்டுகளையும் கட்டுடைத்து, தென்னிந்தியாவில் முதன்முதலில் பகுத்தறிவையும் சமதர்மம், சமூக நீதிக் கோட்பாட்டையும் நிறுவியவர். திராவிட சித்தாந்தக் கருத்தியலின் முன்னோடி !அயோத்திதாசரே!!

என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாருமே ஆவார்கள் என்று பெரியாரே அயோத்திதாசரது பங்களிப்பைப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். (பெரியார் 68 வது பிறந்தநாள் விழா பேச்சு பெங்களூர்). பெரியாரே!அயோத்திதாசரை எனது முன்னோடி எனச் சொன்னபிறகும், அயோதிதாசரை திராவிட இயக்கங்கள் இன்றுவரை, தொடர்ந்து புறகணிப்பது ஏன்?!

அப்படிப்பட்டவரை முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் பேசுபொருளாக்கி இருக்கவேண்டிய, திராவிட இயக்கம், அவ்வாறு செய்யாமல் மறைத்ததன் பின்புலத்தில் உள்ள நுண்ணரசியல் என்ன?!என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது இந்நூல்.

திராவிடம் என்ற சொல்லுக்கும்/அரசியலுக்கும் ஒட்டுமொத்த அடையாளம் பெரியார்தான், Non-Brahmins politics, சமூகநீதி, பகுத்தறிவு என்பதே பெரியாரின் கண்டுபிடிப்புகள்தான் போன்ற திராவிட இயக்கங்களின்/திராவிட கழகங்களின் கற்பிதங்களையெல்லாம் கட்டுடைத்துப்போடுகிறது.

சாதி எதிர்ப்பு/பிராமணிய வைதீக எதிர்ப்பு/ஆரிய எதிர்ப்பு என்பதான ஓர் எதிர்மரபு தமிழரின் அறிவு மரபில் அறிவுச்செயல்பாடுகளாகத் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏர்.மகாராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள "அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்" எனும் இந்நூல் மற்றுமொரு சான்றாகும் என்றால் அது மிகையல்ல..

கட்டுரையாளர் :
கவிஞர்.மா.ஜெயச்சந்திரன்,        
எழுத்தாளர் - சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.
மாவட்ட பொறுப்பாளர்.
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு.

சனி, 12 மார்ச், 2022

வேளாண் மக்கள் ஆய்வுகளும் சமூகத் தேவையும் : மகாராசன்




நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைந்து உயிரை உருவாக்க முடியும் எனக் கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும். ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அது, உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது. தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு. எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும்கூடத் தொடர்புகள் உண்டு. அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன. 

வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும். சொல்லப்போனால், கடந்த அய்யாயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சிந்தனையை வேளாண்மையே - நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது. அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது. 

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும், ஆய்வுகளும், படைப்புகளும், கலைகளும், மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது. 

காலங்காலமாகவே ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத் தொழிலும், அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர். 

எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற - சுரண்டப்படுகிற - ஒடுக்கப்படுகிற - இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள் - கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள் - அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. 

தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை. 

இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு, உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை - வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றனர். தமிழ்ச் சமூகத்தில்தான், வேளாண்மை குறித்தும் - வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கின்றன. 

வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies) முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டிய சமூகத் தேவைகளும் உள்ளன. 

இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies) முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும். 

பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில், ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான், வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies) முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism) எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும். 

அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies) முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர். வேளாண் மக்களின் வாழ்வியலையும், வேளாண் மக்களின் பிரச்சனைப்பாடுகளையும், அவர்களது கோரிக்கைகளையும் பொதுச் சமூக வெளியில் பேசுபொருளாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இது ஒருபுறமிருக்க, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு தொழில் பிரிவினருக்கும் - சாதியினருக்கும் - வட்டாரத்தினருக்கும் - சமயத்தினருக்கும் என ஒவ்வொரு வகையிலும் தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்களும், வரலாற்றுப் பின்புலமும், உற்பத்திப் பங்கேற்பும் நிரம்ப உண்டு. இங்குள்ள சமூகக் குடிகள் குறித்தச் சமூக மற்றும் பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு, இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை உருவாக்கவோ தொகுக்கவோ மீளாய்வு செய்யவோ முன் வருவதில்லை; அவ்வாறு முன்வைத்திருக்கவுமில்லை. 

இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும், புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும்கூட, தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன அல்லது புரிந்து வைத்திருக்கின்றன. 

ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களை - வகிபாகத்தை - சமூகப் பங்கேற்பை - பொருளாதாரப் பின்புலத்தை - சமூக உளவியலை - கல்வி வேலை வாய்ப்புகளை - சமூக வளர்ச்சிக் கட்டங்களை - உடலியல் மற்றும் அறிவு தொடர்பான மனித வளம் உள்ளிட்ட தரவுகளை உள்ளடக்கிய சமூக வரைவியல் - இன வரைவியல் ஆய்வுகள் சார்ந்து எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பதும்கூட, பிற்போக்கானதாகவும் சமூக விரோதமானதாகவும் பொதுப்புத்தி நோக்கிலேயே கருதப்படுகின்றன. 

ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களையும், அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக்கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் - நட்பையும் முரணையும், அச்சமூகம் கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அதில் நிலவக்கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அதன் வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள்.. என நீளுகிற ஒரு சமூகம் சார்ந்த அத்தனை விவரிப்புகளையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.

சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள்கூட சமூக வரைவியல் - இன வரைவியல் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியேதான் இருக்கின்றன. ஒவ்வொரு மக்கள் திரள் சமூகங்களைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும்கூட இன்னொரு வகையில் சமூகக் கல்விதான். நிலவுகிற சமூக அமைப்பில் சமூக, அரசியல், பொருளியல், அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு சார்ந்த சமூக மாற்றப் பணிகளை - சீர்திருத்தத்தை - போராட்டத்தை - புரட்சியை உருவாக்குவற்கு முன்பாகவோ அல்லது உருவாக்கும்போதோ, ஒவ்வொரு சமூகக் குழுவைப் பற்றியுமான புரிதல்கள் அடிப்படைத் தேவையாகும். இத்தகையப் புரிதலுக்குச் சமூக வரைவியல் - இன வரைவியல் சார்ந்த ஆய்வுகள் பேருதவி புரியக் கூடியவையாகும்.

எத்தகையச் சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும், ஒவ்வொரு சமூகப் பிரிவினரிடமும் நிலவுகிற சமூகக் கோலங்கள் என்ன? அவற்றின் சமூகப் பண்பாட்டுத் தகவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள்கூட, அவற்றின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்கு, பல்வேறு சமூகப் பிரிவினரைக் குறித்த வரைவியலையும் வரைவுகளையும் இதுவரை முன்வைக்கவில்லை. 

சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவுகிற தமிழ்ச் சமூகச் சூழலில், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் - பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிற பண்பாட்டு அடையாள அரசியலும் இருந்துகொண்டேதான் வருகின்றது. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் - அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கி விடுகிறோம். 

ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் - அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பார். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் வேளாண் தொழில் மரபினர் நிகழ்த்திய பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம். 

வேளாண் மக்களைப் பற்றிய சமூக வரைவியலை - தொழில் மரபுகளை - பண்பாட்டுக் கோலங்களை - வரலாற்று வகிபாகத்தைச் சமூகத்தின் பொதுப் பார்வைக்கும் புரிதலுக்கும் விவாதத்திற்கும் உதவும் வகையில்தான், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டத்தின் சமூக ஆய்வுகள் அமையவிருக்கின்றன. அதன் சிறுமுயற்சிதான், ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்’ எனும் நூலாக வெளி வருகின்றது. நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்கும் இந்நூல் உதவும். 

வேளாண் மக்களின் சுய மரியாதை மற்றும் சமூக நீதிக்கான உரையாடல்கள் பொதுச் சமூகத்தாலும், சமூக மாற்ற இயக்கங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும்; வேளாண் மக்களின் வேட்கையும் கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நூலாக்கத்திலும் - நூல் சார்ந்த உரையாடல்களிலும் துணை நின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றி. 

வரலாற்றை நேர் செய்வோம்.

தோழமையுடன்
மகாராசன்
maharasan1978@gmail.com
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்  
(Agrarian Studies Conclave).
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை.
விலை: உரூ 250/-
கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.

வெள்ளி, 11 மார்ச், 2022

நீர் மேலாண்மைப் பண்பாட்டு ஆவணம் : செ.தமிழ்நேயன்


ஆறுகளைப் பாதுகாக்க ஆற்றுத் திருவிழா கொண்டாடுங்கள் என்று,  இந்தியத் தலைமை அமைச்சர்  அண்மையில் பதிவு செய்திருந்தார்.

எனினும், ஆற்றுத் திருவிழா தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற பெயரில் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்பட்டு வருவதையும், ஆடிப்பெருக்குத் திருவிழா நீர் மேலாண்மைப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒன்றாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பல தரப்பினரும் கவனிக்கத் தவறியுள்ளனர்.

நீர் மேலாண்மையில் தமிழ் மரபினர் சிறந்து விளங்கினர். அதன் குறியீடாகத் தான் ஆற்றங்கரையில்  நாட்டார் வழிபாட்டுச் சின்னங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

நீரின் பயன்பாட்டை அலகீடு செய்வதற்காகப் பண்டைய நீர் மேலாண்மை மரபினர் நீர்த் தடங்களுக்குப் பெயரிடும் முறையைச் செயல்படுத்தினர்.ஆறு, ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று பலவாறாக வகைப்படுத்தி இருந்தனர்.

இன்றைய தமிழகத்தில் பல்வேறு இடங்களின் பெயர்களில் பின்னெட்டடாக ஏரி, கரணை, தாங்கல், குளம், ஏந்தல் போன்ற சொற்கள் காணப்படுவதன் பின்னணியில் நீர் மேலாண்மையின் குறியீடுகள் மறைந்துள்ளன. ஆயினும், அத்தகைய இடங்களின் பெயர்களில் மட்டுமே அத்தகையக் குறியீட்டுச் சொற்கள் உள்ளன. நீீர் மேலாண்மைச் சமூகத்தின் பங்கேற்புகள் அறுத்தெறியப்பட்டிருக்கின்றன. நீர் மேலாண்மைச் சமூகம் பல்வேறு வகையில் ஒடுக்கப்பட்டதால், அந்த இடங்களில் இருந்த நீரின் இருப்பும் நீர் மேலாண்மையும் ஒடுங்கி உள்ளன. சில இடங்களில் நீரிடங்களும் நீர் மேலாண்மையும் ஒழிக்கப்பட்டும் உள்ளன. 

நீர் மேலாண்மை என்பது காலத்தின் தேவை என்பதை ஒவ்வொரு இயற்கைச் சீற்றங்களும் நினைவுபடுத்தித்தான் செல்கின்றன.

ஆனால், ஆட்சியாளர்கள்  நீர் மேலாண்மை பற்றிய தெளிவு இல்லாமல், தற்செயல் நடவடிக்கை என்ற பெயரில் தடுப்பு முயற்சிகள் தான் செய்கின்றனர். சிக்கலின் வேர்களைத் தேடமால் விழுதுகளைத் தேடுவதால் தான் நீர் மேலாண்மை பற்றி யாரும் பேசுவதில்லை. நீர் மேலாண்மையைப் பேசுபவர்கள் நீர் மேலாண்மையில் ஈடுபட்ட மரபினரை அடையாளம் செய்வதில்லை; அங்கீகரிப்பதுமில்லை.

திருவிழாவின் நாயகன் இல்லாமல் திருவிழா கொண்டாட முடியாது. அதேபோல நீர் மேலாண்மை மரபை அடையாளம் காணாமல் ஆறுகளைப் பாதுகாக்கவும் முடியாது என்பதை உணரும் வேளை இது.

நீரைத் தேக்குவது மட்டுமே நீர் மேலாண்மை என்று கருதப்படுகிறது. நீர்த் தடங்களைச் சரியாக வடிவமைத்து நீர் சூழற்சியை நிலை நிறுத்துவது தான் நீர் மேலாண்மை.

நீர் மேலாண்மை மரபை அடையாளம் காண வேண்டும். நீர் மேலாண்மைச் சமூகம்  மீண்டும் நீர் மேலாண்மையில் ஈடுபட்டாலே நீர் வளம் காக்கப்படும். 

இந்நிலையில், நீர் மேலாண்மை மரபினரின்  அடையாளங்களையும், நீர் மேலாண்மைத் தொழில் மரபுகளையும், நீர் மேலாண்மைப் பண்பாட்டையும், நீர் மேலாண்மைச் சமூகம் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் நீர் மேலாண்மையும் வீழ்த்தப்பட்டிருப்பதையும், நீர் மேலாண்மையின் வீழ்ச்சியில் வேளாண் தொழிலும் வீழ்த்தப்பட்டு வருவதையும் மிக விரிவாகவும் ஆழமாகவும் அக்கறையோடு ஆவணப்படுத்தி விவரித்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.  இந்நூலின் இரண்டாவது இயல் நீர் அறுவடைப் பண்பாடு என்பதாகும். நீர் மேலாண்மையைத்தான் நீர் அறுவடைப் பண்பாடு என்கிறார் மகாராசன்.

நீர் மேலாண்மை குறித்துப் பேசுவதற்கு முன்பாக, நீர் மேலாண்மைப் பண்பாட்டுப் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது மிகமிக அடிப்படையானது ஆகும். நீர் மேலாண்மைப் பண்பாட்டை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல், ஒருவகையில் நீர்ப் பண்பாட்டு ஆவணமாகவும் திகழ்கிறது எனலாம்.

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை.
விலை: உரூ 250/-
கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506

ஏறு தழுவுதல் - பண்பாட்டு வரலாறு பேசும் தனித்துவமான நூல் : செ. தமிழ்நேயன்


மகாராசன் எழுதிய 'ஏறு தழுவுதல்:  வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' நூல் பற்றிய மதிப்புரை.

: செ. தமிழ்நேயன்.

*

நூலின் தலைப்பே வாசகனை ஈர்க்கும் வகையில் உள்ளது. பண்டையத் தமிழரின் வாழ்வியல் முறையில் விலங்குகளின் பங்களிப்பு எவ்வாறு இருந்திருகின்றன என்பதை இலக்கியச் சான்றுகளோடு நிறுவுகிறார். 

உயிர்நேயத்தைக் காப்பதில் பண்டையத் தமிழ் முன்னோர்கள் சிறந்து விளங்கினர் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பக்கங்களையும் வாசிக்கும் போது பண்டைய நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் வகையில் நூலாசிரியரின் மொழியாளுமை புலப்படுகின்றது.

ஏறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டு நிகழ்வு என்ற வகையில்தான் பொதுவாக எல்லோராலும் கருதப்படுகிறது. விளையாட்டு என்பதைக் கடந்து, அதனுள் மறைந்திருக்கும் பண்பாட்டு விழுமியங்கள் புதைந்திருப்பதைப் பட்டியலிட்டிருக்கிறது இந்நூல்.

பண்டையத் தமிழர், விலங்குகளை எவ்வாறு பழக்கினர்; பழகினர் என்பதை மிக விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். மாடு என்பது செல்வத்தின் குறியீடாகத் தான் கருதப்பட்டது. பண்டமாற்று வணிக நடைமுறையில் மாடுகளின் மீதான ஈர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது.

மாந்தரின் மொழி மற்றும் நாகரிகத் தேடலில் மாடுகள் வழித்துணையாகப் பயணித்து இருக்கின்றன. உணவு உற்பத்தியிலும், உடல் உழைப்பிலும் மாடுகள் மாந்தருக்குத் தோழனாகத் தோள் கொடுத்திருக்கின்றன.

மாடுகளின் பண்புக்கூறுகள், உடல் மொழிகள் பற்றி இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், மாடுகளின் உலகத்தை மாந்தருக்கு நுழைமுகம் செய்துள்ளார் மகாராசன்.

திணை வாழ்வியல் கோட்பாட்டில் மாடுகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. பண்டையத் தமிழர்கள் வாழ்வியல் நெறிகளை அகம், புறம் வகைப்படுத்தி இருந்தனர். புறம் என்பது பெரும்பாலும் போர்த்திறம், விளையாட்டு, பண்டிகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளடக்கியதாகும். அவற்றில் மாடுகளின் பங்களிப்பு இருப்பதையும் இந்நூல் வழியாக நிறுவுகிறார்.

தமிழர் பண்பாட்டுப் பண்டிகையான பொங்கல் திருநாள் சிறப்புகளில் ஒன்றான மாடுகளுக்கு நன்றி கூறல் நிகழ்வின் வெளிப்பாடு தான் மாட்டுப்பொங்கல்.

தமிழர் மரபில் ஒவ்வொரு உயிரின் நிலைக்கும் பெயரிடும் வழக்கம் உள்ளது. ஆணின் பருவப் பெயர்களில் ஒன்றான காளை என்பது வலிமையைக் குறிக்கும் நோக்கில் உள்ளது. திணை வழி வாழ்நிலையில் பாலைத் திணை மக்கட்பெயர்களில் ஒன்றான காளை என்பதும் வலிமையைக் குறிக்கிறது. இரண்டு குறியீடுகளும் மாடுகளுக்கும் மாந்தருக்கமான தொடர்பைத் தான் வெளிப்படுத்துகிறது.

மாடுகளுக்கும் மாந்தருக்கமான தொடர்பு பற்றிய குறிப்புகளைப் பள்ளு இலக்கியத்தின் வழியே மெய்ப்பிக்கிறார். பள்ளு இலக்கியங்களில் வேளாண்மை பற்றிய குறிப்புகளோடு எருதுகளின் வகைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏறு தழுவல் நிகழ்வு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் இன்றும் நடைபெறுகிறது. அந்நாட்டின் தேசிய அடையாளங்களில் மாடு ஒன்றாகும். தமிழர் வாழ்வியலிலும் பண்பாட்டு நடத்தைகளிலும் மாடுகள் மிக முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றன. மாடு தொடர்பான தமிழர் பண்பாட்டு வடிவங்களில் ஏறு தழுவலும் ஒன்றாகும். ஆனால், அந்தப் பண்பாட்டு நடத்தைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏறு தழுவல் தடை என்பது ஒரு பண்பாட்டு ஒடுக்குமுறையாகும். அந்த ஒடுக்கு முறைக்கு எதிராகத் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக ஏறு தழுவுதல் தடை நீக்கப்பட்டது. 

ஏறு தழுவுதல் பண்பாட்டு மரபைத் தமிழர்கள் மீட்டெடுத்திருந்தாலும், ஏறு தழுவல் பற்றிய பண்பாட்டு எடுத்துரைப்புகள் தனித்துவமாக இதுவரையிலும் வெளிவரவில்லை. மகாராசனின் ஏறு தழுவல் நூல்தான், ஏறு தழுவுதல் பற்றிய பண்பாட்டு வரலாற்று நோக்கில் எடுத்துரைக்கின்றது. ஏறு தழுவல் பற்றிய பண்பாட்டு வரலாற்றுச் சித்திரத்தை மிக அழகாகவும் நுணுக்கமாகவும் இந்நூல் விவரித்திருக்கிறது. நூலாசிரியருக்கும் அடவி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

*

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்,
மகாராசன்,
முதல் பதிப்பு: 2017,
வெளியீடு: அடவி - ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
விலை: உரூ 60/-
தொடர்புக்கு: 
தில்லை முரளி 
99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ்த் தேசியர்களின் வரலாற்றுக் கருத்தாயுதம்: செம்பரிதி


தன் அடையாளத்தையும் வேர்களையும் அறிந்து கொள்ளும் வேட்கை உடையோருக்குக் கிடைத்த நல்வரவாக இருக்கிறது முனைவர் ஏர் மகாராசன் அவர்களின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல்

கடகடவென இழுத்துச் செல்லும் மொழி அடுக்குகளும், அவ்வாறு சென்று விடாமல் பக்கத்திற்குப் பக்கம் நிறுத்தி, சிந்திக்கச் செய்யும் தரவுகளாகப் படிப்பின்பத்தையும் அறிதலின்பத்தையும் தருகிறது இந்நூல்.


உழவு வாழ்வில் ஈடுபடாமல், அதை பார்வையால் மட்டும் பார்ப்பவர்கள், உழவு நிலத்தையும் வாழ்வையும் திரைகளிலும் - பயணங்களிலும் மட்டுமே பார்க்கும் உழவு நிலம் நீங்கிய நகர்புறங்களில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தலைமுறையினர் அனைவருக்கும், உழவையும் அவர்தம் பண்பாட்டு வாழ்வையும் அறிந்து கொள்ளும் வகையில் மனத்திரையில் திரைக்காட்சிகளாக விரித்துக் கொண்டே செல்கிறது இந்நூல்.

எல்லா பக்கங்களுமே நினைவுக்காக அடிக்கோடிட்ட வரிகளால் நிரம்பி விட்ட அளவிற்கு, வியத்தகு செய்திகளின் அணிவகுப்பாக இந்நூல் இருக்கிறது.

அறியாத செய்திகள் மட்டுமன்றி, அறிந்த செய்திகளும் எப்படிப் பிழையாக அறியத் தரப்பட்டிருக்கின்றன என்ற விளக்கப்படுத்தலை விளங்கிக்கொள்ளும் போது வியப்போடு வேதனையும் பொங்குகிறது.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை ஆரியம் தன்வயப்படுத்திக் கொண்டதால், தமது பண்பாட்டு அடையாளங்களையே ஆரிய அடையாளம் எனத் தமிழர்கள் ஒதுக்கவும் ஒதுங்கவும் நேர்ந்த துயர வரலாற்றைப் பேசுகிறது இந்நூல்.

இந்திர வழிபாடென்பது, தமிழர்களால் வணங்கப்பட்ட மழை வழிபாடே. ஆரிய இந்திரன் வேறு; தமிழர் இந்திரன் வேறு என்றும், சோழர் கொடியில் பறக்கும் புலிச் சின்னமானது ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான் என்றும் தரவுகளோடு நிறுவுவதைப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது.

தமிழர் மரபில் பன்னெடும் காலமாக இந்திர அடையாளம் இருந்து வந்திருக்கும் நிலையில், இந்திரன் அடையாளம் என்றாலே அது ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனாகவே கருதும் பொதுப்போக்கைத் தகர்க்க அடுக்கடுக்கான இலக்கியச் சான்றுகளை முனைவர் அடுக்குகிறார்.

தமிழ் இந்திரன் வேறு; ஆரிய இந்திரன் வேறு என ஆய்வு முடிவுகளோடு நிறுவுகிறார்.

வேளாண் மரபில் இருக்கும் பண்பாட்டு வடிவங்களான சடங்குகள் - வழிபாடுகள், உழவு நிலத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் வேளாண் பணிகள், யார் யாரெல்லாம் வேளாளர்?யாரெல்லாம் வெள்ளாளர்? வேளாளர் என்பது குலத்தின் அடிப்படையிலான பிறப்பைக் குறிக்கிறதா? என்பதையெல்லாம் விளக்கியும் விவரித்தும், தன் விருப்பமாக இல்லாமல், இலக்கிய வரலாற்றுத் தரவுகளோடு தமிழர் வேளாண் வரலாறாக இழுத்துச் செல்கிறது இந்நூல்.


வேளாண் குடிகளும், வேளாண்மை அல்லாத குடிகளும் விழாக்களில் பின்பற்றும் சடங்குகளில் இருக்கும் அசல் கூறுகளை அறியும் போது, பகுத்தறிவின் பெயரால் ஏற்பட்ட அறச்சிதைவும் பண்பாட்டு வீழ்ச்சியும் கனமாகக் கனக்கிறது.

இந்நூல் படைப்பதற்காகப் படித்த நூற்றுக்கணக்கான நூல் பட்டியலே, நூலாசிரியரின் உழைப்பையும் செம்மையையும் காட்டுகிறது.

இந்நூலை நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்குமான நூல் என்கிறார் நூலாசிரியர். இது சரியானது.

அது மட்டுமல்ல, தமிழ்த் தேசியர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்றுக் கருத்தாயுதம் தான் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்'.

*

கட்டுரையாளர்:
தோழர் செம்பரிதி,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
ஓசூர்.

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு,
செந்தில் வரதவேல்
9080514506

இன்னும் எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா : மகாராசன்

 


நிலம்தான் தற்சார்பான வாழ்வையும், தன்மான மதிப்பையும் தரக்கூடியது என்பதை அப்பாவிடமிருந்தே உள்வாங்கியிருக்கிறேன். 

வாழ்வின் இறுதிவரையிலும் தன்மான உணர்வையும் தற்சார்பான வாழ்வையும் இழந்துவிடாமல் பார்த்துக்கொண்டவர். ஆனாலும், நிலத்தில் கிடந்து தவிக்கும் வாழ்க்கைக்குள் நான் வந்துவிடக் கூடாது என்று மிகமிகக் கவனமாக இருந்தார் அப்பா.

படிச்சு ஆளாகுறதப் பாரு தம்பி. இந்தப் பொழப்பு ஒனக்கு வேணாந் தம்பி. எங்க காலத்துல எல்லாருமா சேந்து ஒழச்சோம். எங்க ஒழப்புக்கு

 நாலுகாசு மிச்சமா சேந்துச்சு. இப்பெல்லாம் சம்சாரி வேல பாக்குறதுக்கு ஆள் கெடைக்க மாட்டேங்குது. வெத, மருந்து, உரம், வேலக்கூலினு எக்குத் தப்பா எகிறிப்போச்சு. மிச்சப்படுத்துறதுக்கு ஒன்னுமில்ல. படிப்புல கோட்ட விடாம ஒழுங்கா படிச்சு ஆளாகுறதப் பாரு. எங்க காலத்துல நாங்களா ஒழச்சோம்; யாரு தயவும் இல்லாம மதிப்பு மருவாதியா வாழ்ந்தோம். இப்ப நெலம மாறிப்போச்சு. வெள்ளாமத் தொழிலப் பாக்கனும்னா மத்தவங்கள எதிர்பாக்க வேண்டி இருக்கு. சம்சாரிக மேல இருக்குற மதிப்பும் மருவாதியும் கொறஞ்சு போச்சு. மதிப்பும் மருவாதியவும் தொலச்சுப்புட்டு நெலத்துல கெடந்து எதுக்குச் சாகணும். மதிப்பும் மருவாதியும் எங்க இருக்குதோ அங்க போ. அங்க போயி நீ யாருன்றதக் காட்டு. அதுக்கு நீ நல்லா படிச்சாகணும் தம்பி. எதுவரைக்கும் படிக்க முடியுமோ அதுவரைக்கும் படி. கடேசிப் படிப்புனு எதுவரைக்கும் இருக்குதோ அதுவரைக்கும் படி என, படிப்பைப் பற்றியே எப்போதும் போதித்துக்கொண்டே இருப்பார் அப்பா. அப்பாவுடைய ஆசைப்படி படிப்பதிலேதான் குறியாய் இருந்தேன். படிப்பதும் கூட மிகப் பிடித்துப்போயிற்று. 

ஒவ்வொரு முறையும் படிப்புச் செலவுக்காகக் காசு தரும்போதெல்லாம், இது வெறும் காசில்ல தம்பி. நெலத்துல வெளைஞ்ச என்னோடதும் ஒங்க ஆத்தாவோடதும் ஒழப்பு; வெயர்வ; ரத்தம்னு நெனச்சிக்கோ. பாத்துச் செலவழி. இது பூராம் எங்க சம்பாத்தியம். நீ என்னைக்கு நாலு காசு சம்பாரிக்கிறயோ, அன்னிக்கி ஓம்பாட்டுக்குச் செலவழிச்சுக்கோ. ஓங்காசு எங்களுக்கு வேணாம் என்று மட்டும் சொல்லிவிட்டு, கேட்டதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவே காசு கொடுப்பார். இளவட்டப் பய கையில காசு பணத்த கூடக்கொறையா கொடுத்தா கெட்டுப்போக மாட்டானா என்று கோபப்படுவார் அம்மா. தோழர்கள்னு சில ஆளுகளோட சேர்ந்து பழகுறான். அவங்க நல்லவங்களாத் தெரியுறாங்க. அதனால நம்ம புள்ள கெட்டுப்போக மாட்டான் எனும் பெரும் நம்பிக்கையை வைத்திருந்தார்.

படிச்சு வேலைக்குப் போயி, முதல் மாத ஊதியத்தை அம்மா அப்பாவிடம் கொடுத்த போது, அப்பா அதை வாங்க மறுத்துவிட்டார். இது நீ ஒழச்சது. எனக்கு வேணாம்பா. ஒங்க ஆத்தாகிட்டயே கொடுத்துக்கோ வாங்கிக்கோன்னு சொல்லிவிட்டார். அம்மாவும் அதை வாங்கி கண்ணில் ஒற்றி வைத்துவிட்டுத் திருப்பித் தந்துவிட்டார். 

என்னுடைய எந்த முடிவிலும் அப்பா தலையிட்டதே இல்லை. நான் எடுக்கும் எந்த முடிவையும் அவர் ஒத்துக்கொண்டேதான் இருந்தார். இந்தப் பொண்ணத்தான் கட்டிக்கலாம்னு இருக்கேன் எனச் சொன்னபோது, அம்மா மட்டும் அழுது புலம்புனாங்க. அப்பா மட்டும்தான் மறுப்பு ஏதும் சொல்லாமல், அம்மாவையே ஒத்துக்கொள்ள வைத்தார்.

அப்பாவும் அம்மாவும் எதிர்பாத்த மாதிரியே அவங்களப் புரிஞ்சுக்கிட்ட மருமக அமைஞ்சது அவங்களுக்கு ஆகப் பெரும் நிம்மதி. 

ஒருநாள் திடுதிப்பென்று அம்மாவுக்கு முடியாமல் போனது. வெளியூரிலிருந்து நான் வருகிறவரைக்கும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்து, நான் வந்ததும் என் கையைப் பிடித்துக்கொண்டே கண்ணீரைப் பொலபொலவென்று வடித்தார். அருகிலிருந்த அப்பாவைக் காட்டி, பாத்துக்கோ என்று சொல்வதுபோல சைகை காட்டினார். பாத்துக்கிறேன். அழாதம்மான்னு சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கை விரலைப் பிடித்தபடி உயிர் நின்றுபோனது.

அம்மாவின் இழப்பிலிருந்து நானும் அப்பாவும் மீண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை. பணி நிமித்தமாய் வெளியூரில் இருந்த நான், அப்பாவைப் பார்த்துக்கொள்வது எப்படி என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது. தம்முடைய மிச்ச வாழ்வ ஒத்தையா இருந்து எப்படிக் கடத்திக் காலம் தள்ளுவது என்பதுதான் அப்பாவைக் குடைந்து கொண்டிருந்த பெருங்கவலை. 

என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தவர் அப்பா. அவரது மீத வாழ்க்கையில நாம தான் உடனிருக்க வேண்டும் என்று கருதி, கிட்டத்தட்ட அய்ந்தாண்டுகள் அப்பா கூடவே இருந்து, நாங்களா சமைச்சு, அவருக்கான நல்லது கெட்டது எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்.

நாஞ் செத்துப்போன பெறகுதான், நீ சீப்பட்டுச் சாகப்போற என, வாழ்வின் இறுதிக் காலங்களில் அப்பாவிடம் அம்மா கோபத்தில் சொல்லிக்கொள்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் சொல்லிக்கொள்வது 'எம் மகென் பாத்துக்குவான்' என்பதுதான். அந்தளவுக்கு முழுதார எம்மை நம்பினார்.

அப்பாவுக்கு கிட்டத்தட்ட எண்பது வயதுக்கும் மேலிருக்கும். வயது ஆக ஆக குழந்தையாய் மாறிவிடுவதை அப்பாவிடம் பலமுறை கண்டிருக்கிறேன். இதை இரண்டாவது குழந்தைப் பருவம் என்பார்கள்.

ஒரு நாள் மாலையில், நான் வீடு வருவதற்குத் தாமதமாயிற்று. இரவில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஊருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவிருக்கும். அந்தக் கும்மிருட்டில் மெழுகுவர்த்தியைப் பொருத்திக்கொண்டு சூடான மெழுகு நீர் கையில் ஒழுக ஒழுக கையில் ஏந்தியபடியே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். மகராசன் வந்துறுவான்னு மத்தவங்க சொன்னப்பகூட அத அவர் கேட்கல. பேருந்தவிட்டு எறங்குனதும் அப்பா நிக்குறதப் பாத்துட்டேன். என்னப்பா இங்க நிக்குறன்னு கேட்டேன். ஒரே இருட்டா இருந்துச்சு. அதான் ஒன்னய கூட்டிப்போக வந்தேன்னு மெழுகுவத்திய கையில வச்சுக்கிட்டு பேசினாரு. எனக்குக் கடுமையான கோபம். நான் இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்னு நெனப்பா. ஏம்பா இப்படில்லாம் அசிங்கப்படுத்துறன்னு கோபப்பட்டேன். 

ஆமப்பா. நீ எனக்குப் பிள்ளதாம்பா. சின்னப் பிள்ளதாம்பான்னு சொன்னப்போ, அப்பா குழந்தையாகி நின்றதை அப்போதும் உணர்ந்தேன்.

அம்மாவைத்தான் கூட இருந்து கவனிக்க முடியவில்லை; அப்பாவைக் கூட இருந்து கவனித்துக்கொண்டது அவருக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது. 

என்னைக்கு விழுகிறனோ, அத்தோட உசுர விட்றனும் தம்பின்னு சொல்லுவார். நான் விழுந்து ஆசுபத்திரி அது இதுன்னு நீயும் குடும்பமும் அலைஞ்சி திரிஞ்சி அல்லாடக்கூடாது. எல்லாத்தையும் பாத்துட்டேன். இனி வாழ்க்கைய முடிச்சுக்க வேண்டியதான் என்பார். 

ஒருநாள் விழுந்து விட்டார். அன்றிலிருந்து எதுவுமே சாப்பிட மறுத்து விட்டார். பச்சத் தண்ணீர்கூட அருந்தவில்லை. கண்கள் திறந்திருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு நாட்கள். கண்களைத் திறந்தபடியே படுத்திருந்தார். வடக்கிருத்தல் பாணியில் தம் உயிரை மெல்லமெல்ல நிறுத்திக்கொண்டு விட்டார். அப்பா உயிருடன் இல்லை. ஆனாலும், எனது அத்தனைச் செயல்பாடுகளிலும் அப்பாதான் நிறைந்திருக்கிறார். 

எனது குடும்பம், பணி, எழுத்து, ஆய்வு, சமூகப் பணி, நடத்தை, சமூக உறவுகள் என எதிலும் வெளிப்படுகிற எனது புலப்பாடுகள் யாவும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டவை; பெற்றுக்கொண்டவை.

எதிலும் ஒரு செய்நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டிய பண்பு அப்பாவிடமிருந்தே வந்துசேர்திருக்கிறது.

எந்தவொரு வேலயச் செஞ்சாலும் அதுல கெட்டிக்காரப் பயலா வரணும்டா தம்பி என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா.

சால்பிடித்து உழும்போதும், அரி வரப்பு - அப்பு வரப்பு வெட்டும்போதும், தொளி புரட்டும்போதும், பரம்படிக்கும்போதும், விதை நெல் பாவும் போதும், நாற்று முடிக் குப்பங்களைக் கட்டும்போதும், உரம்போடும்போதும், கதிர் அறுப்புக்கட்டு கட்டும்போதும், கை கதிர் வாங்கி நெற்கதிர் அடிக்கும்போதும், நெல்பொலி தூற்றும் போதும், நெல்மூட்டைகளைத் தைக்கும்போதும், பாத்தி கட்டும்போதும், ஆடு மாடுகளைப் பராமரிக்கும்போதும், இப்படி வெள்ளாமை சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளிலும் அப்பா வெளிப்படுத்துகிற அத்தனையும் செய்நேர்த்தியோடு தனித்துவமாக இருக்கும்; அவ்வளவு அழகாகவும் இருக்கும்.

சிறு வயதுக் காலங்களில், வயக்காட்டில் அப்பா உழும்போதெல்லாம் உழவுச் சாலுக்குப் பின்னாலே ததக்குப் பொதக்கென போய்க்கொண்டே இருப்பேன். அந்த மேழியைப் பிடித்து ஒரு சாலடித்து வரவேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்போது.

மூனு நாலு சால் சுத்தி வந்ததுக்கப்புறமா, மேழி மேல கைய வைக்கச் சொல்லி அழுத்திப் பிடித்துக் கொண்டு கூடவே வருவார் அப்பா.

காலம் பூரா இப்படியே ஏரப் பிடிச்சி உழுதுக்கிட்டுத் திரியனும்னு நெனைக்காத தம்பி. நிலமே கதினு வம்படியா கெடக்கிறது எங்க காலத்தோட போகட்டும். மழ தண்ணி இல்ல; நாம வெள்ளாம செஞ்சத வரவு செலவு பாத்து விக்க முடியல; நம்மகிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போயி விக்கிறவன் காசு பணம்னு சம்பாதிக்கிறான். நாமதான் ஒழச்சு ஒழச்சு ஒன்னுமில்லாமக் கெடக்கொம். ஊருக்குச் சோறு போடுறம்னு நாமதான் பெருமையா நெனைக்கிறோம். ஒரு பயலும் நம்மள மதிக்கவும் மாட்டான். உழுகனும்னு ஆச இருந்தா, போயி படிச்சி ஆளாகி, நாலு பேரு படிக்கிற மாதிரி நீயும் எதாவது எழுது. ஒன்னோட எழுத்த இந்த ஒலகம் படிக்கிற மாதிரி எழுது. அதுவும் உழவுதான் தம்பி என்று அப்பா சொல்லிக்கொண்டே வந்த அந்தச் சொற்கள்தான் என் சொல்லேர் எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்.

வில்லேர் உழவு மரபின் மேழி பிடித்த கைகளால், சொல்லேர் உழவு மரபில் பயணிக்கிறேன். நிலம் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் சொல்லேர் எழுத்துழவாய் உழுது போகும் என் ஆய்வுகள், நிலம் பற்றியும் நிலத்தில் தவித்த-தவிக்கும் மக்களைப் பற்றியும் கிளரிக்கொண்டேதான் இருக்கும்.

நிலத்தில் உழுத அப்பாவின் வாழ்வைப் போல, எழுத்தில் நான் உழுதுகொண்டுதான் இருக்கிறேன்.


இன்னும் 

எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா.

ஏர் மகாராசன் 

08.03.2022

*

நன்றி:

ஓவியம் Raju

ஞாயிறு, 6 மார்ச், 2022

வேளாண் சமூகத்தின் மீது பின்னப்பட்டிருக்கும் மாயவலைகளை அறுத்தெறியும் நூல் : கல்பனா



மகாராசனின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல் குறித்த மதிப்புரை.

*

பண்பாடு என்பது பண்படுத்துதல் என்பதன் திரிபு. பண்படுத்துதல் என்பது பயனுடையதாய் மாற்றி அமைத்தல் என்று பொருள்படும். தமிழரின் பண்பாட்டு மரபுகளை தொல்காப்பியம் மற்றும் செவ்விலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். அதில் வேளாண் பண்பாடு குறிப்பிட இடத்தை வகிக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையில் முதல் பகுதியாக விளங்கியது வேளாண் தொழிலும் அதனைச் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளுமேயாகும் எனலாம்.  அத்தகைய தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் விதமாக ஆசிரியர் ஏர் மகாராசன் அவர்கள் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலினைப் பண்படுத்தியுள்ளார்.


பண்டைய தமிழ் மக்கள் வேளாண் தொழிலை வாழ்வின் அங்கமாகச் செய்து வந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் நமக்குப் பலவகைகளில் சான்றளிக்கின்றன. அத்தகையச் சான்றுகளையெல்லாம் தரவுகளாகத் திரட்டி வேளாண் பண்பாட்டிற்கு எனத தனி அழகியலையும், வரையறைகளையும், அறிவுரைகளையும், அதிசயங்களையும், நுட்பங்களையும், வரலாறுகளையும், அனைவரும் அறியப்படவும் ஆராயப்படவும் வேண்டிய ஒன்றாகும் என்ற உயர்ந்த நோக்குடன் படைத்துள்ளார்.


எந்தவொரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாட்டு கூறுகளையும் இலக்கியங்களையும் போற்றிப் பின்பற்றி வருகிறதோ அதுவே உயிருள்ள சமுதாயமாக இனம் காணமுடியும். அவ்வகையில், பழந்தமிழரின் மரபுகளைப் பின்பற்றிச் செய்யப்படும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உறுதுணையாக நிற்பதும் தமிழனாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்பதனை, "வேளாண்மைதான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது"  எனத் தெளிவுப்படுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர்.


சுழன்றும் ஏர்ப்பின்னது என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க, இப்பூவுலகிற்கு உணவளித்து வரும் வேளாண்மக்கள் தலைச்சிறந்தவர் ஆவர். அத்தகைய வேளாண் மக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? அவர்களுக்கான குறைந்தபட்ச மனிதநேயமாவது காட்டப்படுகின்றனவா? என்பதே ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. 


வேளாண் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலைகளை அறுத்தெரிவதே ஆசிரியரின் தலையாய நோக்கமாக இருக்கிறது என்பதை இந்நூலை வாசிக்கும் நமக்கு புலனாகிறது.


சங்க இலக்கியத்தில் இடம்பெறும் குறிஞ்சி முல்லை நெய்தல் இனமக்களுக்கு இல்லாத பெருமை மருத நிலத்திற்கு இருந்தது. மருதநில மக்கள் மள்ளர் என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதை நிகண்டுகளின் வாயிலாகவும், ஏர் மாடுகள் பூட்டி உழவில் ஈடுபடும் மள்ளர்களைப் பற்றி கம்பராமாயணத்தில் காட்சி படுத்தியதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். 


வேளாண் தொழில் விரிவடைந்தபோது பெருநிலக்கிழார்களும், குறுநிலக் கிழார்களுமாக மாற்றம் பெற்ற நிலையினையும், இதன் மூலம் வணிகர்களாகவும், பொதுவுடைமைத் தொழிலாகவும், தனியுடைமைத் தொழிலாகவும், உழுதுண்ணும் சமுதாயம் - உழுவித்துண்ணும் சமுதாயம் எனப் பிளவுற்றதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார்.


வேளாண் தொழிலுக்கு இன்றியமையாத கருவியாக இருப்பது உழவு மாடுகள் ஆகும். அத்தகைய மாடுகளின் பங்களிப்பினைப் பற்றி முக்கூடற்பள்ளு இலக்கியம் வாயிலாக மாடுகளின் வகைகள், உழைப்பின் பன்முகத் தன்மைகள், 'ஏறுதழுவல்' போன்ற தமிழினப் பண்பாட்டு அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருப்பது அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று.


'நிலத்தோடும் உழவுத்தொழிலோடும் வேளாண்மையோடும் நெல்லோடும் மாடுகளோடும் பின்னிப்  பிணைந்திருக்கின்ற பன்னெடுங்கால அறிவும், உழவும், உழைப்பும் உணர்வும் தான் வேளாண் பண்பாட்டு மரபுகளாக இன்னும் சமூக வழக்கில் இருந்து கொண்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.


வேளாண்மை சார்ந்து நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளுள் மழைவளச் சடங்குகள், உழவுச்சடங்குகள், விதைப்பு மற்றும் நடவுச் சடங்குகள், அறுவடைச் சடங்குகள் போன்றன நுண்ணிய பண்பாட்டின் வரலாற்று மரபினை

கொண்டுள்ளதையும், வேளாண்மையின் உயிர் நாடியாக விளங்குவதையும், உழவுத்தொழிலுக்கு அவை எவ்வாறு துணைபுரிகின்றன என்ற பதிவையும் ஆசிரியர்

நம் முன்வைக்கிறார்.


தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், தமிழரின் பண்பாட்டு நடத்தைகளின் காரண காரிய இயல்பைக் கொண்டிருப்பதையும் பண்பாட்டு அடையாளங்களாக ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.


எடுத்துக்காட்டாக சித்திரை முதல் நாள் கோடை உழவின் பொன்னேர் 

திருநாளாகவும், ஏர்ப்பூட்டுத் திருநாளாகவும், உழவுப்

பண்பாட்டு சடங்கை ஆரியத்தின் சாயல்படாமல் உழவுப் பண்பாடாக முன்னெடுத்து வந்துள்ளனர் வேளாண் மரபினர் என்பதை இங்கு எடுத்தியம்புகின்றார்.


வேளாண்மைக்குத் தேவையான

நீர்மேலாண்மை பற்றிய பயன்பாடுகளும்,வரலாறுகளும், ஏராளம் உத்திகளும், எடுத்துரைக்கப்பட்டிருப்பது நீரின் இன்றியமையாத அறிவைப்பற்றிய முழுமைத்தன்மையை நமக்கு விளங்கச்செய்கிறது என்பதை நம்மால் மறுக்க இயலாததாகும்.


வேளாண்மையைத் தொழிலாக மட்டுமல்லாமல், அதனை தமிழினப் பண்பாட்டின் அடையாளமாக ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். 


மண்ணும் நீரும் எவ்வாறு உணவாகிறது? அவ்வுணவினைக் கொடுக்க வேளாண் மரபினர் எத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் செய்தனர் என்பதனை ஆசிரியர் இந்நூலின் மூலம் விளக்குகையில், ஒவ்வொருவருடைய வீட்டிலும் வணங்கப்பட வேண்டிய தெய்வங்களாக வேளாண் மக்களே இருப்பர் என்பது மிகையாகாது.


வேளாண் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஐயா. மகாராசன் அவர்களின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.

*

கட்டுரையாளர்:

திருமதி கல்பனா,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த் துறை,

பெரியார் பல்கலைக் கழகம்,

சேலம்.