ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சொல்நிலம் : நாளைய விடுதலைத் தேசத்தின் விதை நெல் :- நா.காமராசன்


    சொல் நிலம் : தமிழ் மண்ணின் வேர்களைத்தேடி பயணிக்கிறது ஒவ்வொரு கவிதையும்.தோழர் மகராசன் தன் வாழ்ந்த வாழ்வியலிருந்தே ஒவ்வொன்றையும் கிளறி எடுத்து இங்கே படைத்திருக்கிறார்.

   "உயிர்க்கூடு
   வேர்கரைக்கும் விழுதுகள்
   தனியன்
   விதைச்சொல்
   சாவிப்பயிர்
   உலர்நிலச்சிறுக்கி
   நிலத்தாள்
   குறுணிமழை
    ஈசப்பால்
    உயிர்க்கொடி " தலைப்புகளே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது.
ஈரநிலங்களுக்கு பதிலாக செங்காடும் புழுதிக்காடும் எங்கும்
விரவிக்கிடக்கிறது . கோபத்தீ பற்றிக்கொண்ட ஒவ்வொருவரின் எழுத்திலும் இருக்கக்கூடிய நியாயங்களே இவர் நிலமெங்கும்
சொல்லாய் தெறித்து நிற்கிறது.

"அய்யா சாமீ ஆண்டே எனக்
கால்பிடித்து கதறி அழுது,
வயிற்றுப்பாட்டுக்காய்
கூடக்கொஞ்சம் கொடுங்களேன்
எனக் கேட்டிருந்தால்
போதுமடா போ போவென்ற
பதக்கு நெல்லை கொடுத்திருக்கலாம்
பழைய தோரணையோடு

நெல்லை விதைத்தவர்கள்
சொல்லை விதைத்தார்கள்
கூடவே தன்மானம் சேர்த்து
வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்"
ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின்
நியாயங்களையும் அவர்கள் போர்க்
குணங்களையும் வரிகள் முழுதும்
கொப்பளிக்கச் செய்திருக்கிறார் ஒரு படைப்பாளியைத்தாண்டி இந்த மண்ணின் மைந்தனாய்.

"சிறுவாட்டுக்காசும்
சுருக்கூப்பை காசும்
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடிந்துபோட்ட காசும்
ஆத்தா அப்பன் நெனைப்பாலே
எடுத்து வச்ச காசும்,
மூத்த புள்ளயக்
கட்டிக் கொடுக்க
அடுக்குப்பானைக்குள்
போட்டு வந்த காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக்கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாய் போட
வச்சிருந்த காசும்,
செல்லாக்காசெனப் போச்சே
செல்லாக்காசெனப் போச்சே"
குருவிகள் சேர்ப்பதைப்போல் எளிய
மனிதர்கள் சேர்த்தக்காசை ஒரே
இரவில் செல்லாதென அறிவித்த
கேடுகெட்டவர்களின் முகத்தில் காரிஉமிழ்கிறது இவ்வரிகள் ஒவ்வொன்றும்!

இதோ காவிரியின் அநீதியைப்ற்றி
அப்போதே
"பூநூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபட சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள்தான் அழிக்கின்றன"
ஒரு படைப்பாளியைத்தாண்டி போராளியின் குரலாய் கனன்று
விழுந்திருக்கிறது வரிகளில்!

ஈரமுள்ளவர்களாலும் அறத்தின்நின்று போராடுபவர்களாலும் மட்டுமே இத்தகைய படைப்புகளைத்தர முடியும்.அந்த வரிசையில் தோழர்
மகராசனின் "சொல்நிலம் " நாளைய விடுதலைத்தேசத்தின் விதைநெல்லாகவும் இருக்கும்.

மென்மேலும் படைப்புகள் செழிக்க
புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்!

தோழமையுடன்
நா.காமராசன்
மண்டகொளத்தூர்.

2 கருத்துகள்: