வியாழன், 8 பிப்ரவரி, 2018

சொல் நிலம் - மண்ணின் காதல் : - கண்மணிராசா

சமீபத்தில் அறிமுகமான தோழர் ஏர் மகாராசன்.ஆனால், அவரது கவிநூலான "சொல் நிலம்"வாசித்தவுடன் ஆண்டாண்டு காலம் தொடர்ந்த தோழமை உணர்வு மனதில்.
மக்களைப் பாடுவதே மகத்தான இலக்கியம்..என்பதில் உடன்பட்டு இந்த மண்ணை..மக்களைப் பாடும் எந்தக் கவிஞனும் நம் தோழனே.

ஒற்றைப் பசுங்கால்
வெள்ளோவியச் சிறுக்கிகளின்
வெள்ளந்திச் சிரிப்புக்குள்ளும்
மணம் கமழ்கிறது
களையெடுத்துக் காய்த்துப் போன
கைவிரல் கோதிய கருப்பிகளின்
வியர்வை.
...இது   நூலிலுள்ள மல்லி  கவிதையின் வரிகள்.
இதில் என்ன அழகில்லை..
என்ன உணர்வில்லை...உழைக்கும் மக்களை இதைவிட உன்னதமாகச் சொல்லமுடியுமா...?

நம் நிலமும்....ஐந்திணையும்
எங்கிருந்தோ நீளும் ராட்சதக் கரங்களால் தின்னப் பட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில்
ஆறாம் திணையாய் கவிதையும் கவிதையின் நிமித்தமுமாய் எழுந்து யாராடா அவன் எம்நிலத்தில் என குரலெழுப்பும் கவிஞன் நம் கவிஞனல்லவா...?


முல்லைக்குத் தேர் கொடுத்த
பாரிகளும்
மயிலுக்குப் போர்வை கொடுத்த
பேகன்களும்
வாழ்ந்திட்ட பெருநிலத்தில்
நரிமணம்
நெய்வேலி
கல்பாக்கம்
கூடங்குளம்
நெடுவாசல்
கதிராமங்கலம்
மிச்சமிருக்கும் மானம் எனக்
கொடுத்தும் கெட்டும்
கொடை மடத்துச் சான்றாவோம்
அம்மணமாய்க் கூவியபடி.

இந்தக் குரல் நம் குரல்.
இது நம் கவிதை.

சாதியவன்மமும் ...மதமும் கூறு போட்டு நம்மைக் காவு வாங்குகையில் அதைப் பேசாது எழுதாது உன்னத இலக்கியங்களை படைக்கும் போக்கின் நடுவே
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்தங்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக் கடன்
போட சேர்த்த பணத்தை ஒற்றை இரவில் செல்லாது என அறிவித்த திமிரை  எதிர்த்து பாடும் நூல் நம் நூல்.

அழுதுகொண்டிருந்தாலும்
உழுது கொணடிரு எனக் காலில் விழும் நிலத்தை கசியும் கண்களோடு கையிலேந்தி....அதன் கேவலை கவிதையிலேந்தி வந்திருக்கும் நூல் சொல்நிலம்.

கள்ளியை உலர்நிலச் சிறுக்கியென்னும் மகாராசன்
மண்ணின் காதலன்.
வார்த்தைகளின் வழியாக மட்டுமல்ல, நேரில் பழகிய தருணங்களிலும் இதை யாவராலும் உணர முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக