செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணம் தான் சொல் நிலம் :- கூடல் தாரிக்

சொல் நிலம் -  மகாராசனின் முதற்கவிதை நூல்.முனைவர் பட்டம் பெற்ற ஒர்  உழவனின் நூலில் நிலம் இழத்தலின் வலியைத்தவிர வேறு பெரிதான வலி எதுவும் இருந்துவிடப்போகின்றது என்று சொல்ல இயலாது .அதனை விடவும் பெரிதாக வேறு எந்த வலி இருந்து விடப்போகின்றது.
   வயல் குறித்தும், உழவு குறித்தும்,விவசாயம் குறித்தும் கொந்தளிப்பான தருணத்தில் கவிதை எழுதிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பும் மனநிலைக்கு அப்பாற்பட்டது,ஏர்பிடித்து உழுதவனின் கரங்களில் இருந்து வெளியாகும் வார்த்தைகள்.
    நிலத்தோடு தனது வாழ்வியலைப்பிணைத்துக்கொண்ட மனிதனின் மனநிலையில் கவிதைகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.எந்த விதத்தாக்கமும் இல்லாமல் தனித்துவமான மொழிநடை கவிஞனின் தேர்ந்த ஆற்றலைப்புலப்படுத்துகின்றது.சுனாமியைக்குறித்தக்கவிதைக்கு அலை நிலம் என்று தலைப்பிட்டிருப்பது அனைத்தையும் நிலமாகவேப்பார்க்கும் மனநிலையைப்புலப்படுத்துகின்றது.நிலத்திலேயே தன் வாழ்வைத்தொலைத்தவனின் காதலும் தனிமையும் முளைப்பதுவும் பூப்பதுவுமான மானாவாரிக்காடு நீ /மழைக்கடுத்துச்செழிக்கும் எனதூர் மண்போல/ பாழ் நிலம் நினைத்துத்தவித்துக்கிடக்கும் கலப்பை போல் தனித்துப்போனது யாவும் / என்று நிலத்தோடு தொடர்புடையதாக வரிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
     அன்றாட வாழ்வில் எளிமையாகப்பயன்படுத்தி விட்டு நகர்ந்து செல்லும் சொல்லுக்கும் அதனை வாழ்வியல் சூழலுக்குள் உட்புகுத்தி வெளிப்படுத்துபவனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை சற்றும் வலி குறையாமல் பதித்துவிட்டுச்செல்கின்றன பல கவிதைகள்.விவசாயத்தைத்தவிர வேறெந்த தொழிலும் அறியாதவனிடம் அழுது கொண்டிருந்தாலும் /உழுது கொண்டே இருந்தாலும் இருவென்று /காலில் விழுந்து கிடக்கிறது நிலம்/.
     மண்ணை வாரி தூத்திப்போடவும் மனசில்லயே  மக்கா/ என்று கதறுபவனின் வார்த்தைகள் காற்றில் கலந்து கண்ணீரை சுவாசிக்க வைக்கின்றன.
     உடலில் மழை பூத்து /ஒழுக ஒழுக உழைப்பைக்கற்பதற்கும்/உழவு மழையில் நனைவதற்கும், உவர் நிலச்சிறுக்கியின்  செல்லச்சிணுங்கல்களை இரசிப்பதற்கும், களையெடுத்துக்காய்த்துப்போன கைகளால் கோதி விடும் கருப்பிகளின் வியர்வை நாற்றத்தை நுகர்வதற்கும் நடை பயிற்சிக்காக வரப்பில் நடப்பவனால் இயலாது நிலத்தவனால் தான் வாய்க்கப்பெறும். ஆனாலும் கவிஞனின் வரிகள் அதன் வலியை வாசிப்பவனுக்கும் உணர்த்து விடுகின்றன.
     நிலத்தை ஆத்தாளாகவே வர்ணிக்கும் கவிஞனும் நெடும் பனைக்காடு நினைத்தே மண்ணுக்குள் தவித்துக்கிடக்கும் அப்பனும் ஆத்தாளும்,மண்ணின் அருவி போல /முண்டியடுத்துப்பூத்து /சட்டென மேலே பறந்து இறக்கை உதிரக/்கீழே விழுந்து /அம்மணமாய் ஊர்ந்து திரியும் ஈசல்களும் செங்காட்டின் புழுதியை கண்களுக்குள் அப்பிவிடுகின்றார்கள்.
      விவசாய நிலத்தை இழந்து கொண்டிருப்பவனின் மனநிலையில் நிலமிழந்த அகதியின் மனநிலையையும், வெண்மணியின் வெப்பத்தையும் இணைத்திருப்பது நிலம் வாழ்க்கைத்தேவைக்கான குறியீடாக பதிவு செய்யப்பட்டுள்ளது தொகுப்பின் கூடுதல் பலம்.
   காற்றசைப்புகளில் /உதிர்ந்து விழுகிற/பன்னீர்ப்பூக்கள்/முகம் சிரித்துச்/செந்தரையில் கிடப்பதைப்போல/கூட்டமாய்ச் சலசலத்து/குரல் சிந்திய கூட்டிசை/காற்றில் கரைந்து/செவியில் நுழைந்து/செல்லத் துள்ளலாய்க்/கண்ணில் மணக்கின்றன/பூனைக் குருவிகள்/என்கின்றது தொகுப்பின் ஒரு கவிதை.எனக்கென்னவோ இத்தொகுப்பினை வாசித்து முடித்தவுடன் நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணத்தைத்தான் நுகரமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக