புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல் : கருத்துரையும் பதிலுரையும்.

 நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூலைக் குறித்துத் தோழர் பாவெல் பாரதி பள்ளு இலக்கியத்தின் குறியீட்டு அரசியல் கட்டுரையை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரை குறித்துத் தோழர் சிறீரசா அவர்கள் கருத்துரை பதிந்திருந்தார். இதற்கு தோழர் பாவெல் பாரதி பதிலுரை அளித்துள்ளார். அவை வருமாறு.

சிறீரசா கருத்துரை:

 பள்ளு இலக்கியம் தோன்றிய களம் பற்றிய ஆய்வாகவும், அதில் வரும் சித்தரிப்புகள் பற்றிய புறநிலைப் பார்வையுடனான ஆய்வாகவும் அதனை வளர்த்தெடுத்தலே நம் காலத்தின் ஆய்வாளர்கள் செய்ய வேண்டியது. மாறாக, அந்தப் பனுவலுக்குள்ளே மட்டும் நின்று மல்லடிக்கும் வகை ஆய்வுகள் மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்ப்பதில்லை. தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை. மாறாக, பனுவல்கள் சார்ந்த ஆய்வுகளைப் பனுவல்களுக்குள்ளேயே மட்டும் நின்று நிகழ்த்துவனவாகவே உள்ளன. சைவம், வைணவம் என்பதே கூட குறியீட்டு வகை மதங்கள்தான். சைவத்துக்கும் வைணவத்துக்குமான முரண் என்பதும குறியீட்டுவகை முரண்தான். அடிப்படை முரண்பாடாக வரலாற்றில் முதன் முதலில் எழுந்த பால் முரண்பாட்டின் குறியியலில் இருந்து அவை தோற்றம் கொள்கின்றன. பள்ளு இலக்கியத்தில் சொல்லப்படும் சைவ வைணவக் கூறுகளின் புறநிலைகள் 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கத்தின் தோற்றம் கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளோடு, அவற்றில் பால் சார்ந்த ஆண், பெண் குறியீட்டு ஆதி முரண் சார்ந்த கண்ணோட்டங்களும் முரண்களை உருவாக்குகின்றன. வைணவம் பெண் சார்ந்த குறியீடு என்றால், சைவம் ஆண் சார்ந்த குறியீடாக உள்ளது. அது மாமன் மச்சான் உறவாகிற குறியீடும் அதிலிருந்தே தோற்றம் கொள்கிறது. இடைக்காலத்தில் சமுகத்தின் பெரும்பிளவு இரு மதங்கள் சார்ந்த நிலவுடைமைப் பிரிவுகளாகத் தோற்றம் கொள்கிறபோது, அரசு முறையின் ஆதிக்கத்தில் அடங்கிப்போன அத்தனை உப கூறுகளும், குல முறைகளும், சைவ வைணவச் சார்பெடுக்கும் வகையில் தகவமைக்கப்பட்டன, அல்லது தகவமைந்து கொண்டன. நாட்டார் தெய்வங்கள், குல முறைக் கடவுள்கள் இத்தகைய தகவமைப்புக்குள்ளாயின. அவை நாட்டார் மரபியலோடு, சைவ, வைணவ அடையாளங்களையும் தரித்துக் கொண்டன. ஏற்கெனவே இங்கிருந்த கருப்பு, கிருஷ்ணன், விஷ்ணுவோடு இணக்கம் கண்டார், அல்லது வேஷங்கட்டப்பட்டார். அதுபோலவே தாய்த் தெய்வங்கள், பிற தெய்வங்கள் சிவன், ஈஸ்வரி போன்ற கடவுள் முறைகளோடு கணக்கில் சேர்க்கப்பட்டனர். நாட்டார் தெய்வ வழிபாடுகள் முழுக்க இன்றைக்கு இத்தகைய கலப்பு இன வழிபாடாகவே உள்ளன. அவை விநோதக் கலவைகளாக உள்ளன. அதுபோலவே பள்ளு இலக்கியத்தின் மாந்தர்களை வெறும் உழைப்பாளர் என்று சொல்வது சரியானதல்ல, அவர்கள் விவசாய உழைப்பாளர்கள், உழைப்பாளர் என்றார் அது நவீனத் தொழில் முறை சார்ந்த உழைப்பாளர்களைப் பொதுவில் குறிப்பதாக உள்ளன. விவசாயத் தொழிலாளர்களா? அல்லது விவசாயக் கூலிகளா என்பது போன்ற பதங்களை இலக்கியத்தின் வருணனைகள் மூலம் தெளிவுபடுத்திப் பயன்படுத்துவதே சிறந்தது. அதுபோலவே பிரித்தாளுதல் என்கிறது நவீன உத்தியல்ல, அவை பழஞ்சமூகத்திலிருந்து நவீன சமூகம் தனதாக்கிக் கொண்டவை. பள்ளு இலக்கியங்கள் இடைக்காலத் தமிழகத்தின் நிலவுடமைச் சமுக அமைப்பின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், உற்பத்திப் பொருட்கள், உற்பத்திப் பங்கீடு, உற்பத்திப் பண்பாடு, பண்பாட்டு உற்பத்தி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதி. அதிலிருந்து, வானமாமாலை விட்ட இடத்திலிருந்து, நொபுரு கரோஷிமா போன்றவர்கள் தொட்டுத் தடவிச் சென்ற இடத்திலிருந்து, தமிழச் சமூக அமைப்பு பற்றிய புறநிலை ஆய்வைத் தொடர வேண்டிய கடப்பாடு மார்க்சிய ஆய்வாளர்களுக்கு உண்டு. அவர்களோடு நின்றால் கிட்டத்தட்ட ஆய்வுலகம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதென்றே பொருள்...


பாவெல் பாரதி பதிலுரை:

மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்க்க வேண்டிய அல்லது தேக்கத்தைப் போக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிற அக்கறை மிக்க பின்னூட்டம்.

ஆய்வு வளர்ச்சிக்கேற்ப பள்ளு பற்றிய ஆய்வு வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழ் ஆய்வுச் சூழலில் அது நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் இக்கட்டுரைகளை மகாராசன் கொண்டுவந்துள்ளார்.

இன்று 50 ஆண்டுகளுக்கு முந்திய நொபுரு கரோஷிமாவே கூட இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை.  தற்பொழுதுதான் தமிழ் வாசகர்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார். இன்னொரு கரோஷிமாவும் வானமாமலையும் உருவாகவும் இல்லை. என்பதுதான் தமிழ் ஆய்வுச் சூழல்.

சைவ, வைணவக் குறியீட்டம்சம் குறித்த உங்கள்  கருத்து மிக முக்கியமானது.

இந்தக்கட்டுரை நா.வா.அவர்களின் ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை  அறிமுகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டதே!. கூடுதலாக பள்ளுப்பாட்டில் வரும் இரண்டு கூறுகளை மட்டும் எடுத்துக் கொண்டு  குறியீட்டுத் தன்மை எப்படி பள்ளுவில் இயக்கம் பெற்று அரசியலைப் பேசுகிறது என்று தொட்டுக்காட்டும் முயற்சிதான்.

பள்ளு இலக்கியம் என்ற வயல் சார் உற்பத்திபற்றிப் பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிற  உழைப்பாளர் என்ற பதம் பொருட்பிழையைக் கொடுத்து விடாது என்றே கருதுகிறேன். விரிவான கட்டுரையில் உழைப்பின் வகைமை குறித்தே தனித்து எழுதலாம்.

//திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.//

என்ற கருத்து பிரித்தாளுதல் நவீன உக்தியல்ல பழம் உக்தி என்ற உங்கள் பார்வையோடு  உடன் படுவதுதானே! தோழர்.

//தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை.//

உண்மைதான். இதனை இடதுசாரி ஆய்வாளர்கள்தான் செய்யமுடியும்.

எனக்குத் தெரிந்து கிராமப்புறத்தில் நில உடைமை (Land holding) அதன் சமூகப் பின்னணி, கிராமப்புற உற்பத்தி உறவு நில உடைமை எப்படி அது கைமாறுகிறது  என்பது குறித்து 1977 ல் தமிழகத்தில் தேனி மாவட்டம் கோகிலாபுரம் என்ற ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து  ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வைச் செய்தவர்கள் தற்போது கேரளாவின் திட்ட கமிசன் துணைத்தலைவராக உள்ள பொருளாதார வல்லுநர் தோழர் V.K.ராமச்சந்திரன், மதுரா சுவாமிநாதன்.(D/0 M.S.சுவாமிநாதன்- தற்போது V.K.ராமச்சந்திரன் மனைவி ) என்.ராம் உள்ளிட்ட அன்றைய மாணவர் குழு.

மீண்டும் 1999 ல்  IGDR மும்பை ,கொல்கத்தா ISI  நிறுவனம் ஆகிய ஆய்வு நிறுவனங்களில் அப்பொழுது முக்கியப் பொறுப்பில் இருந்த வி.கே.ராமச்சந்திரன். அவரது ஆய்வு மாணவர்களைக் கொண்டு Reasearch for Agrarian studies என்ற ஆய்வைச் செய்தார்.
அம்மாணவர்கள் பலர் .

நானும் என் சகோதரர் வழக்கறிஞர் பாலதண்டாயுதமும் அவர்களோடு 1999 ல் இரண்டுமாத காலம் அவ்வாய்வில் கலந்து கொண்டோம்.

எனது சகோதரர் ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்காளத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளிலும் அவர்களோடு கலந்து கொண்டார். இந்திய அளவில் கிராமப் புறச் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் மாதிரித் தரவாக V.K.ராமச்சந்திரன் அவர்கள் அதனை வளர்த்தார்.

இப்படியான ஆய்வுகளின் அடிப்படையை வரலாறு, இலக்கியங்களோடும்  ஒப்பிட்டு விரிக்க வேண்டியுள்ளது.
மொத்த பள்ளு இலக்கியத்தையும் தற்கால பல்துறை  ஆய்வுத் தரவுகளையும்  உள்வாங்கிக் கொண்டு மார்க்சிய நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பணியைச் செய்யவேண்டி உள்ளது.

ஆரோக்கியமான பின்னூட்டத்திற்கு
நன்றி தோழர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக