வியாழன், 8 பிப்ரவரி, 2018

சொல் நிலம் – மொழி வயலில் விளைந்து நிற்கும் சொற்கதிர்கள் : - அன்பரசு

தோழர் மகாராசனின் எழுத்துக்கள் எப்போதும் மொழியையும் நிலத்தையும் மையமாக கொள்பவை,உழவுக்குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை தனது கட்டுரைகள் பலவிலும் ஆழமான ஆய்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார்.அவரது அண்மைய எழுத்து கவிதையாக சொல்நிலம் கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது.இது அவரின் முதல் கவிதை தொகுப்பும் கூட வயல் சார்ந்து விளைச்சலின் ஒவ்வொரு கணத்தையும் கண்டு வளர்ந்த அகத்தின் தன்னுணர்வு வெளிப்பாடாய் அமைந்துள்ள கவிதைகள் அவை.தனது எழுத்துக்களின் உள்ளீடாய் அமையும் மொழி,நிலம் அது சார்ந்த மனித மனத்தின் தவிப்புக்களுக்கு கவிதை வடிவம் தந்திருக்கிறார் மகாராசன். தமிழ்நிலத்தோடு இயைந்து வாழும் உழவுக்குடியின் மொழியாக, இயற்கையோடு உறவாடும் மனித மனத்தின்,ஓர் இனத்தின் தவிப்புகளை,கோபங்களை,கலக உணர்வை வெளிக்காட்டுகின்றன கவிதைகள், மகாராசனுக்கு வாழ்வின் சகல பரிமாணங்களும் ஒரு விளைச்சல் செயல்பாடாகவே பட்டிருக்கின்றன இயற்கையின் செயல்பாடுகளுக்குள்,குறிப்பாக
விளைச்சலுக்கு மனிதத் தன்மையேற்றும் வகையில் அவருடைய பல கவிதைகள் அமைந்துள்ளன.

“மகரந்த மனிதங்களால்
சூல் வலி கூடி
பூக்கும் அழுகையில்
காய்த்த ஈரம்
தேங்கியது கூட்டில்”(உயிர் கூடு)

“நீங்கள்

நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களை சுமக்கும்
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம்.

கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வை சுவைத்திருக்கிலாம்” (அறத்தீ மனிதர்கள்)

போன்ற கவிதை வரிகள் இயற்கைக்கும் மனிதத்திற்கும் இணக்கமான உறவை காணும் மனநிலையின் வெளிப்பாடாய் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாததும் எதிராக நிறுத்த முடியாததுமான நிலையை சுட்டிக்காட்டுகின்றன.

மேலும்,இன்றைய தமிழ் இனம் எதிர்கொள்ளும்,காவிரி,ஈழம்,மீத்தேன்,மற்றும் சாதீய சிக்கல்கள்
குறித்து மகாராசனின் கவிதைகள் அறவுணர்வோடு,தமிழ்நிலத்தின் உரிமைக்குரலை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன,அது குறித்து இன்னோரு பொழுதில் விரிவாக எழுத விரும்புகிறேன்.

“நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில்தானே
செழித்து நிற்கின்றன’(கூதிர் காலம்)

 என மகாராசனே கூறுவது போல தனது உயிர்ப்பான நினைவுகளை கவிதைகளாக வளர்த்திருக்கும் தோழர் மகாராசனுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக