வெள்ளி, 20 அக்டோபர், 2023

பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்: பாண்டியா


ஒரு மாணவன் சமூக உதிரியாக மாறுவதற்குக்  கடினமான பாட நூல்களும் காரணம் ஆகும்.
அந்தக் கடினத் தன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்,  எவையெல்லாம் எளிதாகக் கிடைக்குமோ  அவைகளைக் கையில் எடுத்துக் கொள்கிறான்.  குறிப்பாக, பீடி, சிகரெட், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எளிதாகப் பழக்கப்படுத்திக் கொள்கிறான். அப்பழக்கத்தைச் சினிமாத்துறையும் கற்றுத் தருகிறது.

போதைப் பழக்கத்தோடு சேர்த்து  சாதி வெறியையும் சாதி  வெறியர்களால்  ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள் மாணவர்கள். 

ஆகவே, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்  பாடத்திட்டங்களை  வகுத்துக் கொடுப்பது  அரசின் கடமையாகும் என்று இடித்துரைக்கிறார் தோழர்.


மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறிப்போவதற்கு  முக்கிய காரணியாக விளங்குவது  சாதி. சாதி என்ற பெயரில்  ஒருவன் கல்வியைப் பறிப்பதும்,  அவன் பொருளாதாரத்தை அழிப்பதும்,  அவன் உரிமைகளைத் தடுப்பதும்,    பாலியல் வன்கொடுமை செய்வதும்,  காதல் செய்தால் ஆணவக் கொலை செய்வதுமாகச் சாதிய ரீதியாகத் தொடரும் அவலங்கள் ஏராளம்.  சாதியால் ஒரு மனிதனை இழிவுபடுத்தும்  சாதி வெறியர்களைத்  தன் எழுத்துக்களால்  ஓங்கி உதைத்து இருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். 


அதேபோல்!  உயர்த்திக்கொண்ட சாதியில் பிறந்த ஒருவர்,  சாதி மறுத்துச் சமத்துவம் பேசுவதையும்  தோழர் ஏர் மகாராசன்  பாராட்டத் தயங்கவில்லை. 

 

அரசியல், சினிமா, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில்  சாதிகள் அறவே துறந்து, சமத்துவத்தையும் மனித நேயத்தையும்  வளர்த்தெடுக்க நாம் அனைவரையும்  போராட வலியுறுத்துகிறார் தோழர் ஏர் மகராசன்.


அனைத்து வீடுகளிலும் பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. அனைத்துப் பள்ளிகளிலும்  ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆசிரியர்களும் காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் நலன் கருதி  தங்களை அப்டேட் செய்துகொள்வது அவசியம்.

கற்றுக் கொடுக்கும்  ஆசிரியர்களாக இல்லாமல்,  கற்றுக்கொள்ளும் மாணவராகவும் இருப்பதே சிறப்பு. 


ஒரு மனிதனுக்கு  மனசு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒரு நெடுஞ்சாலையில்  டூவீலரில் பயணம் செய்யக்கூடிய யார் எவர் என்றே தெரியாத ஒருவரை, அவர் என்ன மதம்?  அவர் என்ன சாதி? அவர் எந்த ஊர்? அவர் பெயர் என்ன!?  என்பதையெல்லாம் கேட்டறியாமல், உடுக்கை இழந்தவன் கைபோல   "சைடு ஸ்டாண்ட எடுத்துவிட்டு வண்டி ஓட்டுப்பா" என அறிவுறுத்தும் அந்த மனிதநேயக் குரலும் மனசும் அனைவரிடத்திலும்  இருக்க வேண்டும்; அனைத்துக் காரியங்களுக்காகவும் எதிரொலிக்க வேண்டும்.  

 

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல் அருமையான படைப்பு; வாசிக்க வேண்டிய புத்தகம் ஆகும்.

பாராட்டப்பட வேண்டியவர் தோழர் ஏர் மகாராசன்.


'மாணவர்கள் சமூக

உதிரிகளாகும் பேராபத்து' 

என்ற நூலை எழுதிய தோழர் ஏர் மகாராசன் அவர்களுக்குச்  சிறப்பு நன்றிகளும் வாழ்த்துகளும். ஏனெனில், இந்நூலை   எழுதுவதற்குத் தனி தைரியம் வேண்டும். 


யாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. இச்சமூகச் சீரழிவுக்கு  நாம் அனைவருமே காரணம் என்கிறார்.  அதைச் சரி செய்வதற்கும்  நாம்தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்கிறார்.  


நன்றியும் வாழ்த்துக்களும் தோழர்.  


கட்டுரையாளர்:

பாண்டியா,

கவிஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்.

பெரியகுளம்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக