சனி, 9 டிசம்பர், 2023

நீர் மேலாண்மையின் படுதோல்வியும், பெருவெள்ளப் பாதிப்புகளும்: மகாராசன்


அவரவர் வாழ்ந்த ஊர்களில் வேலைவாய்ப்புகளும், வாழ்வதற்கு உகந்த சூழல்களும் இருந்திருந்தால் சென்னையில் வந்து இப்படி மொத்தம் மொத்தமாய்க் குவிந்திருக்க மாட்டார்கள்தான். அவரவர் பூர்வீக ஊர்களையும் சொந்த உறவுகளையும் விட்டுவிட்டு நகரத்தில் அல்லல்பட ஆசைப்பட்டு எவரும் சென்னைக்குக் குடியேறவில்லை.

 சென்னையை மய்யப்படுத்தியேதான் அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழில்சாலைகள், கல்வி நிலையங்கள், வணிகங்கள், நகர உருவாக்கங்கள் என அத்தனையும் உருவாக்கப்படுகின்றன. இதனால், நீர் ஆதாரப் பகுதிகள் யாவும் மக்கள் வாழிடப் பகுதிகளாகவும் கட்டிடங்களாகவும் மாறிக் கிடக்கின்றன. இதுபோன்ற மழை வெள்ளப் பாதிப்புகள் அடுத்தடுத்து வரத்தான் போகின்றன.

ஒவ்வொரு தலைமுறையும் மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தம்மைத் தற்காத்து மீண்டு வந்திருக்கின்றன. கடந்த காலத் தலைமுறையின் தற்காப்பு முறைதான் நீர் மேலாண்மை. இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்படக் கையாண்டு நிலத்தையும் நீரையும் மக்களையும் காத்து வந்திருக்கின்றனர். இதைத் தனி மனிதர்களால் செய்திட இயலாது. ஒட்டுமொத்த சமூகமும் நீர் மேலாண்மையில் தத்தமது அளவில் பங்கெடுத்திருக்கின்றன. அன்றைய ஆட்சியாளர்களும் நீர் மேலாண்மை தொடர்பாகப் பல்வேறு வகையில் அக்கறையோடும் அறத்தோடும் செயலாற்றி வந்திருக்கின்றன. அதனால்தான், நீர் மேலாண்மை என்பது மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் இருந்திருக்கிறது.

அத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்கள் அடுத்தடுத்து வளப்படுத்தியும் வலுப்படுத்தியும் விரிவுபடுத்தியும் பாதுகாத்தும் பராமரித்தும் வந்திருக்க வேண்டும். ஆனால், விடுதலைக்குப் பிந்தைய அரசுகளிடம் நீர் மேலாண்மை குறித்தத் தெளிவான தொலைநோக்கான எந்தத் திட்டங்களும் இல்லாமல் போயின. 

மாறாக, நீர் ஆதாரப் பகுதிகளும் நீர்த்தடங்களும் முற்றாகச் சிதைக்கப்பட்டன. நீர் மேலாண்மை குறித்த எந்தப் புரிதலும் அரசுகளிடமும் இல்லை; அதிகாரிகளிடமும் இல்லை. நீர் மேலாண்மையின் படுதோல்விதான் இது போன்ற வெள்ளப் பாதிப்புகளுக்கு முழுமுதல் காரணமாகும். 

இனி வரும் காலங்களிலாவது நீர் மேலாண்மைத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும். நீரையும் மக்களையும் மண்ணையும் உளமார நேசிக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் களத்திற்கு வரும்போது வெகுமக்களும் கைகள் கோர்ப்பார்கள். அப்படித்தான் கடந்த தலைமுறையின் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மக்களின் பெருந்துணையோடு செய்து முடிக்கப்பட்டன. நம் முன்னோர்களிடமிருந்து இந்தத் தலைமுறை மக்கள் மட்டுமல்ல, அரசுகளும் அதிகாரிகளும் பாடம் படிக்க வேண்டும். 

மேலும் பார்க்க:

https://maharasan.blogspot.com/2021/11/blog-post_13.html

https://maharasan.blogspot.com/2021/11/blog-post_11.html

பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மீள வேண்டும். 

ஏர் மகாராசன் 

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக