ஞாயிறு, 31 மார்ச், 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு : தமிழ் மொழியியல் ஆய்வுலகிற்கு ஓர் நல்வரவு. :- வழக்கறிஞர் சுதாகரன். பேரா. தொ.ப வாசகர் வட்டம்.



“நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்த விலங்கு மனிதன்,  பரிணாமத்தில் பின்னாலிருக்கும் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கும் போது, நடக்கப் பயன்படாத முன் இரண்டு கால்களும் கையாகி சைகை எனும் புதுச் செயலைச் செய்யப் பயன்படுகிறது.

தொடர் பரிணாமம் நேரான முதுகிலிருந்து மூச்சுக் குழல் வழி ஒலியை எழுப்ப உதவுகிறது. நாளடைவில் அந்த ஒலிக்கு ஒலிவடிவம் கிடைத்து பேச்சாகியது. அந்தப் பேச்சு ஒரு நாள் சித்திரத்தையும் சித்திரம் ஒரு நாள் எழுத்தாகவும் ஆனது.”
இது தான் மனிதன் கண்டடைந்த முதல் மொழியின் எழுத்து வரலாறு. இதைதான் இந்நூலின் ஆசிரியர் மகாராசன், "சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல” என்று தொடங்குகிறார்.

உழைப்பும் பேச்சும்தான் மனிதப் புலன்களின் வளர்ச்சிக்கும், மூளையின் படிப்படியான வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன என்கிறார் மகாராசன். இதில் எனக்கு முழு உடன்பாடு. கணிணி மயமான இன்றைய காலத்திலும் இவ்விரு செயல்களே அடுத்தடுத்த பரிணாமங்களைத் தீர்மானிக்கின்றன.

திரு.ஜமாலன் அவர்களின் கூற்றுடன் ஒன்றுபட்டு, பேச்சொலிகளை முறைப்படுத்தும்போது மொழி பிறக்கிறது என்கிறார்.

ஆதி நிலைமைகளில், ஒவ்வொரு சமூகமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தனக்கென ஒரு சொந்த மொழியையோ அல்லது குல வழக்கையோ கொண்டிருக்கிறது.  இவ்வாறு, மனம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அனைத்தையும்  பேசிவந்த மனித இனம், அவற்றில் சிலவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பேசும்போது, அங்கு எழுத்து எனும் செயற்பாட்டிற்கான தேவை பிறக்கிறது.

முதலில் சித்திரம், பின் குறியீடு அதன் தொடர்ச்சியாக எழுத்து பிறந்துள்ளது. இதனை ஆசிரியர் மிக விரிவாக ஆராய்ந்து இந்நூலைப் படைத்திருக்கிறார்.

மகாராசன் தன் கடும் உழைப்பை இந்த நூலிற்குக் கொடுத்திருக்கிறார் என்பதற்குச் சான்று, அவர் இந்நூலின் இறுதியில் ஆறு பக்கங்களில் பட்டியலிட்டிருக்கும் பார்வை நூல்களே சாட்சி. மொத்தம் 56 நூல்களை வாசித்துள்ளார். கூடுதலாக 16 வலைத்தளக் கட்டுரைகள் மற்றும் நண்பர்கள் பட்டியல்.

புத்தகத்தின் நடுப்பகுதியாக, கிட்டத்தட்ட 40 பக்கங்களுக்கும் மேல், தமிழின் ஒட்டுமொத்த எழுத்து வரலாற்றையும் ஆய்வுக்குட்படுத்துகிறார். இந்தப்பகுதி என் போன்ற நபர்களுக்குப் புதிய தளம். மொழியியலில் போதிய அனுபவம் கொண்டோர் விரிவாக இது குறித்து விவாதித்தால் நலம்.

இறுதிப்பகுதியில் பேசியிருக்கும் பிள்ளையார் அரசியல் ஒரு புது அறிமுகம். சில சமயங்களில் மகாராசன் அந்தப்பகுதியைக் கையாண்டுள்ள விதம் கம்பி மேல் நடப்பதற்கு ஒப்பாக உள்ளது. மிகச்சரியாக ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கருத்துகளைக் கையாண்டுள்ளார். கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள  எழுத்துகளின் அட்டவணை மற்றும் குறியீடுகள் எல்லாம் ஒரு ஒப்புமை நோக்கிலான ஆய்வுக்கான தொடக்கமாக கருதலாம். ஏனெனில், மொழியியல், தொல்லியல், மானிடவியல் எனத் தனித்தனியாக உள்ள ஆய்வுகளையும் ஆவணங்களையும் ஒப்பீடு செய்து ஒரு comparative study ஐ மகாராசன் செய்துள்ளார்.

இதில் சிறப்பு என்னவென்றால், என்போன்ற துறைசாரா நபர்களுக்கும் புரியும் வண்ணம் நூல் அமைந்ததே. ஆய்வாளர்களும் ஆய்வு மாணவர்களும் வாசிப்புக்குட்படுத்தி இதன் சரிதவறுகளை விவாதித்தால் சிறப்பாக இருக்கும்.

என்னளவில், இந்நூல் தமிழ் மொழியியல் ஆய்வுலகிற்கு ஓர் நல்வரவு.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு-
மகாராசன்
ஆதிப்பதிப்பகம்
விலை-ரூ.120

ஞாயிறு, 17 மார்ச், 2019

தமிழர் - தமிழர் அல்லாதோர் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது எப்படி? : மகாராசன்


ஒரு தேசிய இனம் என்பதற்கான வரையறை என்ன? அதே தேசிய இனம் வாழ்கிற நிலப்பரப்பில் வாழ்கிற வேறு வேறு இனங்களை எவ்வாறு வரையறுப்பது? மொழிச் சிறுபான்மையினர், தேசிய இனச் சிறுபான்மையினர் என்போர் யார் யார் என்பதைக் குறித்தெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கருத்துரைப்பதும் இனவெறிவாதம் என்று பொத்தாம் பொதுவாக முத்திரை குத்துவது உண்டு.
மேற்குறித்த பொருண்மைகள் குறித்து மார்க்சிய ஆசான்களே தமது நூல்களில் திறம்படவும் தெளிவுடனும் விளக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
அவ்வகையில், மொழி குறித்தும் தேசிய இனம் குறித்தும் மார்க்சியம் அறிவியல்பூர்வமான விளக்கத்தை மிக விரிவாக முன்வைத்துள்ளது.
சமூகத்தின் இயங்குதலுக்கு மொழியின் இயங்கியல் குறித்து ஜே.வி.ஸ்டாலின் எழுதிய "மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்" எனும் நூல் முதன்மையானது. மொழியைக் குறித்து விவரித்த ஸ்டாலின் எழுதிய மற்றொரு நூல் "மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும் " என்பதாகும்.
மார்க்சியம் குறித்துப் பேசக்கூடியவர்களும் அறிவுலகத் தடத்தில் இயங்கக்கூடியவர்களும் திட்டமிட்டே கண்டு கொள்ளப்படாத அல்லது புறக்கணித்த நூல்கள் தான் மேற்குறித்த நூல்கள்.
வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் மார்க்சியத்தின் அடிப்படையிலும்தான் ஒரு தேசிய இனத்தின் அடையாளங்கள் வரையறுக்கப்படுகின்றன. அதே வேளையில், ஒரு தேசிய இனத்தோடு சமூக உறவு கொண்டிருக்கிற மற்ற இனத்தவரை - மொழியினரையும் எம்மாதிரியான வரையறுப்புக்குள் கொண்டு வருவது என்பதையும் மார்க்சியமே வழிகாட்டுகிறது. இந்தப் பின்புலத்தில் தான் தமிழர் என்கிற தமிழ்த் தேசிய இனம், தமிழ் அல்லாத மொழிச் சிறுபான்மையினர், தமிழர் அல்லாத இனச் சிறுபான்மையினர் பற்றிய கருத்தாடல்கள் அரசியல் வடிவம் பெற்று வருகின்றன. இது போன்ற கருத்தாடல்கள் தமிழ்ச் சமூக அறிவியலின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவுமே பார்க்கப்பட வேண்டும். இதை நேர்மையாகவும் திறந்த மனதோடும் வரலாற்றுப் புரிதலோடும் கருத்தாடுவதே மார்க்சியத்தின் பக்கம் நிற்பதாகும். எதன் காரணம் கொண்டும் இந்தக் கருத்தாடல்களை எதிர்ப்பதும் நிராகரிப்பதும் என்பது, மார்க்சியத்தை எதிர்ப்பதும் நிராகரிப்பதுமே ஆகும்.
இது போன்ற கருத்தாடல்களுக்கு உதவும் வகையில் மொழி குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையிலான விளக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய ஸ்டாலினின் நூல்களை விரிவான முன்னுரைக் குறிப்புகளுடன் தெளிவான உட் தலைப்புகளுடன் ஒரு சேரத் தொகுத்து
"மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும்" எனும் தலைப்பிலான நூல் எனது தொகுப்பில் தோழமை  வெளியீடாய் வெளி வந்திருக்கிறது.
பின்னிணைப்பு:
தமிழர் தேசிய இன அடையாளம் குறித்த
தமிழர் முன்னணியின் வரைவறிக்கை.
தமிழர்கள், தமிழக தமிழீழத் தாயகங்களில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். தனித்த மொழி, பண்பாடு, மரபு, கலை இலக்கியம், வரலாறு, சமயம், மெய்யியல் எனத் தனக்கான தனித்தன்மைகள், நாகரிகங்கள் கொண்ட மக்கள் சமூகம் தான் தமிழர்கள். இனங்களின் சமூகமான மாந்த சமூகத்தில் மூத்த இனங்களில் ஒன்றாகவும் மூல மரபினங்களில் ஒன்றாகவும் உள்ளனர். தமிழர்கள் அவர்களின் தாயகங்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்த்தாலே நம் இனத்தைப் புரிந்துகொள்ள உதவும். பாவாணர் முன்வைத்த மாந்தம் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் ஆய்வும், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என்ற வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்பெறும் ராபர்ட் புரூஸ்பூட்டதால் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த 459 பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும் 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. இன்று சென்னையில் உள்ள பல்லாவரம்; திரிசூலம் மலைப்பகுதிளில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி களையும்; திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகே அத்திரப்பாக்கம் ஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் வாழ்ந்த குடியம் குகையையும்,  திருநெல்வேலி மாவட்டம் தேரி பகுதியில் நுண் கற்காலக் கருவிகளையும் அதை உருவாக்கும் தொழிற்சாலைகளையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் சேகரித்த பழங்காலப் பொருட்கள் எல்லாம் திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி அருகே அருங்காட்சியகத்திலே உள்ளது.
தமிழர்கள் மூல மரபினங்களில் ஒன்று என்று அறிவுலகத்துக்கு ஒரு பிரிவினர் தங்கள் ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இத்துணைக் கண்டத்தின் தொல்குடிகள் தமிழர்கள்தான் என்பதை நவீன மரபியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதையே அறிஞர் அம்பேத்கார் அவர்களும் தன் ஆய்வில் பதிவு செய்கிறார். தமிழர்களிடம் காணப்படக்கூடிய தாய்வீட்டில் தலைப்பிரசவம் என்ற மரபும்; சேய்வழி அழைத்தல் (பிள்ளையின் பெயர்கூறி அவரின் தந்தை என்று அழைப்பது) அப்பா பெரியப்பா சித்தப்பா என அனைவரையும் ஒரே மாதிரி அழைக்கும் வழக்கம், தமிழ் சமூகத்தில் காணப்படும் உறவு முறைகளும்; தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களாக, மக்களினங்கள் குறித்து ஆய்வு செய்த மார்கனும், பிரடெரிக் ஏங்கெல்சும் பதிவு செய்கின்றனர். இதன்மூலம் மனித குலத்தின் தொடக்கமான தாய்வழி சமூக நிலையிலிருந்தே தமிழர்கள் நீடித்து வருகின்றனர் என்பது உறுதியாகின்றது.
சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை அங்கு கிடைத்த எழுத்துக்கள் சின்னங்கள் பிற ஆதாரங்களைக் கொண்டு அஸ்லோ பர்போலா உறுதிப்படுத்துகிறார். அசோகரின் சமகாலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் (கி.மு.250) கலிங்க மன்னர் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு 113 ஆண்டுகள் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு நீடித்து வந்ததை சுட்டுகின்றது.
அதுபோலத் தமிழகத்தில் நடைபெற்ற அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்..... அகழ்வாராய்ச்சிகள் இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சுவடிகள், தமிழர்களின் தொன்மையையும் நாகரிகத்தையும் உறுதிப்படுத்துகின்றன.
நமக்குக் கிடைத்ததிலேயே மிகவும் பழைமையான தேர்ந்த செம்மையான சிந்தனை தொகுப்பாக உள்ள தொல்காப்பியம் அதன் வடிவத்திலேயே ( தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழ் எண்) தமிழ் வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என உலகம் கடவுள் படைப்பு அன்று; தானே தோன்றியது, மண், நெருப்பு, தண்ணீர், காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள்களும் கலந்து உருவாகி இருப்பதே இவ்வுலகம் எனப்பாடும் தொல்காப்பியப் பாடல் இவ்வுலகத் தோற்றம் பற்றியும்,
ஒன்று  அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மன்னே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
என உயிர்களின் அறிதல் வேறுபாடு குறித்த தொல்காப்பியர் பாடலும், சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்ற குறள் மூலம் உலகம் உருண்டை என்பதையும் அது சுழல்கிறது என்பதையும் சுட்டும் குறளும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று பிறப்பால் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் குறளும் தமிழர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் உலகக் கண்ணோட்டம் குறித்த சான்றுகளாக உள்ளன.
""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு'' என்ற தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தின் மூலம் வட வேங்கடம் தென் குமரி தமிழ்உலகின் எல்லை என்பதையும், அதில் தமிழ் மொழி பேசப்படுகிறது என்பதையும், அதைப் பேசிய தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதையும் தெளிவு படுத்துகிறது. இதையே பிந்தைய சங்க இலக்கியங்களும் தெளிவுபடுத்துகின்றன.
ஆறாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தேவாரத்தில் உள்ள தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய் என்ற வரி தமிழர்கள் இருப்பை உறுதி செய்வதோடு ஆரியரின் பரவலையும்; ஆரியர் தமிழருக்கு இடையிலான இனப்போராட்டத்தையும் உறுதிப்படுத்துகிறது.
செப்பு வினாவும் வழா அல் ஓம்பல் என்ற தொல்காப்பிய வரிக்கு 12‡ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய நச்சினார்க்கினியர் வினாவும் விடையும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக உன் நாடு எது என்று வினா எழுப்பினால் தமிழ்நாடு என்று கூறுவதே தெளிவான விடையாக இருக்கும் என விடையிறுக்கிறார். இதுவே தமிழ் மக்களின் வரலாறாக உள்ளது.
ஒருபுறம் தமிழர்கள் ஓரினம் என்ற நிலையில், அவர்களின் மொழி, மரபு, பண்பாடு, வரலாறு, கூட்டு நினைவு, பரஸ்பர உறவு, சார்பு என்பது பொது நிலையாகவும், மறுபுறம் அவர்களின் சமூக அரசியல் வாழ்வு பல்வேறு தேச நிலைகளில் கட்டப்பட்டு,  வேறுபட்ட நெருக்கடிகளையும் வேறுபட்ட சமூக அரசியல் அடிப்படைகளையும் கொண்டவர்களாக உள்ளார்கள். வரலாற்று வழியில் ஓர் இனம் என்ற வரையறுப்பு கொண்ட தமிழர்கள் அவர்களின் தேசிய சமூக அரசியல் இருப்பு நிலையைக் கொண்டு ஐந்து வகையாகப் பகுக்கலாம். 1. தமிழ்த்தேசிய இனம், 2. தேசிய இனச் சிறுபான்மையர், 3. மொழிச் சிறுபான்மையினர், 4. அகதிகள், 5. தேசங்கடந்து பணிபுரிவோர். முதல் இரண்டு நிலைகள் நிலைத்ததாகவும் மூன்றாவது நிலை ஒப்பீட்டளவில் நிலைத்ததாகவும், நான்கு மற்றும் ஐந்தாவது நிலைகள் தாயகத்தில் ஏற்படும் சமூக அரசியல் மாற்றங்களைச் சார்ந்தாகவும் உள்ளன.
ஒரு தேசியம், தேசிய இனம் என்பதற்கான தோழர் ஸ்டாலின் 1912இல் வகுத்தபடி 1. ஒரு பொதுமொழி, 2. பொது வரலாற்றுப் பிரதேசம், 3. பொதுப் பொருளாதாரத் தொடர்பு, 4. பொது மன இயல்பு ஆகிய வரைவிலக்கணங்களின்படியும் இதில் மாறுபட்ட, வேறுபட்ட இலக்கணங்களின்படியும் தமிழகத் தமிழர்கள் தமிழீழத் தமிழர்கள் தனித்த தேசிய இனத்திற்குரிய தகுதி நிலையில் உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் என பல தேசங்களில்  அத்தேசத்தின் தேசிய இனத்தை விட சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ளதால் இவர்கள் அத்தேசத்தில் தேசிய இனச் சிறுபான்மையினராக உள்ளனர்.
தமிழர்கள் தாயகத்தோடு கொண்டு கொடுத்தலையும் பொருளாதார உறவுகளையும் தனது தாயகத்தினையே நிலையானதாகக் கருதி வாழும் தேசங்களில் கலக்காமல் தன் மொழி இன அடையாளங்களைக் காத்துக் கொண்டு உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மொழி இனச் சிறுபான்மையராக வரையறுக்கலாம்.
முதன்மையாக தமிழீழத்தில் நடந்த கட்டமைக்கப்பட்ட இனக்கொலையின் விளைவாக உலகம் முழுவதும் தஞ்சம் கோரி இன்றும் அந்நாடுகளில் குடியுரிமை பெறாத தமிழர்களை அகதி என்றும், இதே நிலையில் உள்ள வேறு தேசத் தமிழர்களையும் குறிக்கவும் இது பொருந்தும்.
தன் பிழைப்பிற்காக தேசம் கடந்து பணிபுரியும் தமிழர்களை தேசம் கடந்து பணிபுரிவோராக அழைக்கலாம்.
இனி ஒவ்வொரு நிலையாகப் பார்ப்போம்.
தமிழக தமிழ்த்தேசிய இனப் போராட்டம்
தமிழர்கள் உலகின் பல இன மக்களோடு வணிகம், அரசியல், பரிமாற்ற உறவுகளைக் கொண்டு இருந்தது போல், பிற இனத்தார்களும் தமிழகத்தோடு இவ்வுறவுகளைக் கொண்டிருந்தனர். இப்படி தமிழர்களும் தமிழகமும் உலகின் தனித் தீவாக இல்லாமல் உறவுகளோடு இருந்தாலும் தனக்கான தனித் தன்மைகளை உருவாக்கி வளர்த்து, பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இவர்களோடு வேறுபட்ட எல்லாரோடும் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலில் சமணம் பவுத்தம், வேத மதத்தின ரோடான உரையாடல் முக்கியமானது. சமண பவுத்த வேத மதத்தினரோடான உரையாடலில் சிலவற்றை ஏற்றும் அடிப்படையில் மறுத்தும் உள்ளனர். வேத மதத்தைச் சேர்ந்த ஆரியர் குடியேற்றமும் அதன் செல்வாக்கும் பெருகும்போது அதற்கு எதிரான கருத்துப் போராட்டம் இனப்போராட்டமாகவும் மாறியது. 12ஆம் நூற்றாண்டு வரை கருத்தாக உலா வந்த ஆரிய பார்ப்பனியம், இசுலாமிய அரசுகளின் தெற்கு நோக்கிய பரவலுக்கு எதிராக ஆரிய பார்ப்பனிய தர்மங்களைக் கட்டிக் காக்க உருவாகிய விஜயநகரப் பேரரசிடம் தன் அரசதிகாரத்தை இழந்த தமிழ் இனமும் தமிழ் நிலமும் இன்றுவரை அரசதிகாரத்திற்காகப் போராடி வருகின்றன.
விஜயநகர ஆட்சி, நாயக்கர்கள் பாளையக் காரர்கள் ஆட்சியில் செழித்து வளர்ந்த பார்ப்பனிய அரசதிகாரத்திற்கு எதிராக இங்கு சித்தர் மரபுகள் தமிழர்களின் இனப்போராட்ட அடையாளமாக உள்ளன. தமிழகம் பிரிட்டிஷ் காலனியாக மாற்றப்பட்ட பிறகு எழுந்த பூலித்தேவன், மருதிருவர், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், குயிலி, வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், ஜீவா போன்றோரின் தாயக விடுதலைப் போராட்ட மரபும் இதே காலத்தில் உருவாகி வளர்ந்த ஆரிய பார்ப்பனிய இந்துமத உருவாக்கம், இந்திய உருவாக்கத்திற்கு எதிராக எழுந்த வள்ளலார் மரபும், தமிழ் பவுத்த மரபை முன்னிறுத்திய அயோத்திதாசப் பண்டிதர், நாத்திக பகுத்தறிவு மரபை முன்னிறுத்திய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர், சி.தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோரின் தமிழ் நூல்கள் தொகுத்து பதிப்பித்த பணியும், தனித்தமிழ் மரபை முன்னிறுத்திய மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கமும், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக ஜனநாயகத்தை வலியுறுத்திய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு நாத்திக இயக்கமும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தமிழ் இஸ்லாமியர் உரிமை இயக்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் விடுதலையையும், காலனிய எதிர்ப்பை முன்வைத்த பொதுவுடமை இயக்கமும் உருவாகி வளர்ந்தன.
வள்ளலார் தொடங்கி... ஈவெரா வரையிலான சமயம் மொழி சமூகத் தளத்தில் நடந்த இயங்குதலும் பூலித்தேவன் தொடங்கி பொதுவுடமை இயக்கங்கள் வரையிலான காலனிய எதிர்ப்பு இயங்குதலையும் தொகுத்து, பகுத்து சாரப்படுத்தினால் அன்று உருவாகி வந்த ஆரிய பார்ப்பனிய, இந்து, இந்திய எதிர்ப்பு என்ற பொதுத்தன்மையை வெளிப்படுத்துவதையும் பல்வேறு சிந்தனைப் போக்கின் முரண் இயக்கத்தில் தமிழ்த்தேசியம் வளர்ந்ததையும் காணலாம்.
இதன் வெளிப்பாடாக நவீன தமிழ்த்தேசிய விடுதலைக் கருத்தாக 1938இல் இந்தி எதிர்ப்பு இனப்போரில் அனைத்து போக்கினராலும் இணைந்து எழுப்பிய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பிறந்தது. இச்சசூழலையும் அதன் நவீன பொதுத்தன்மையையும் பற்றிப் பிடித்து முன் நகர்த்தியிருந்தால் காலனிய வெளியேற்றத்தின்போதே தமிழ்த்தேசம் மலர்ந்திருக்கும். ஒரு தேசிய இயக்கத்தின் மைய அச்சான தேசிய இன இயக்கம் இல்லாததன் காரணமாக அப்பொதுப்போக்கு அரசியல் அமைப்பு உருவாக்கம் நடந்தேறாமலே உருத்திரிந்தது. இப்பொதுப்போக்கின் துணைக்கூறுகளாக விளங்கிய சில சிந்தனைப் போக்கினரைத் தவிர பல்வேறு சிந்தனைப் போக்கினரும் பங்கு அரசியலில் மூழ்கியதும், திராவிடமாகவும், இந்தியமாகவும் திரிந்து போயினர்.
1942இல் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை முன்வைத்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மக்களைத் திரட்டிய காங்கிரஸ் இயக்கம் பின்பு அதனைக் கைவிட்டது. காங்கிரஸ் தான் சொன்னபடி தேசிய இன அடிப்படையில் இந்தியாவை மறுசீரமைக்கத் தயாராக இருந்தால் தன்னுடைய பாகிஸ்தான் கோரிக்கையை கைவிடத் தயாராக இருந்தார் ஜின்னா. காங்கிரஸ் இக்கோரிக்கையை மறுக்கவே அரசியலாகவும் அமைப்பாகவும் மக்கள் திரட்டப்பட்டு இருந்ததால் பாகிஸ்தான் கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது. மற்ற இந்தியப் பகுதிகளில் தேசிய இனங்கள், தனித்தனியாக திரட்டப்படாததால் ஆளும், பிரிட்டிஷார் அன்று பல்வேறு அரசுகளாக இந்தியாவைப் பிரிக்கத் தயாராக இருந்தும் ஆரிய பார்ப்பன இந்து மத, இந்தி சக்திகளின் அரசியல், அமைப்பு செல்வாக்கும் நேரு பட்டேலின் தலைமையால், இந்து, இந்தி பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இந்திய தேசியம் உருவாக்கப்பட்டது.
இத்துணைக் கண்டத்தில் தேசிய இன வழிப்பட்ட பல தேசங்கள் முகிழ்ந்திருக்க வேண்டிய நிலையில் இந்து இஸ்லாமிய மத முரணைக் கட்டமைத்து, சாதி முரணைக் கட்டிக்காத்து ஆரிய பெருமையையும்? இந்தி பெரும்பான்மையையும் பயன்படுத்தி இன்று நிலவும் ஒற்றை ஆதிக்க இந்தியா கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் ஒற்றை ஆதிக்கக் கட்டமைப்பை தமிழத்தேசிய இனம் ஏற்றுக் கொண்டதா? 1947 ஆகஸ்ட் 15 (இந்திய விடுதலை நாள்) துக்க நாளாக அறிவிப்பு செய்தார் ஈவெரா இச்சூழலிலேயே தமிழகத்திற்கு சுய நிர்ணய உரிமையும் கூட்டாட்சியும் கோரினார் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம.பொ.சி. 1949இல் திராவிடநாடு கோரிக்கையோடு அண்ணா தலைமையில் திமுக தொடங்கப்பட்டு 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் தமிழ்த் தேசிய இனத்தின் ஆற்றலே செயல்பட்டது. (திராவிட தத்துவம் மற்றும் அதன் தலைமையின் திரிந்த தன்மையும் இரட்டை குணாம்சமும் இன்றைய சரணாகதி அரசியலாக உள்ளது.) தட்சணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம், தேசிய இன அடிப்படையில் தாயகத்தைத் திருத்தி அமைக்கக் கோரிய போராட்டம் ( மொழிவழி மாநில உரிமைக்கான போராட்டம், வடக்கு தெற்கு எல்லை மீட்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் போராட்டம்,) தமிழரின: முகவரியாக மாறிப்போன பாவேந்தரின் வரிகளும், ஈ.வி.கே.சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சி உருவாக்கமும் சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி உருவாக்கமும், தேசிய மொழிக்கான உரிமைப் போராட்டம் (இந்தி எதிர்ப்புப் போராட்டம்) தேசிய இன சுயநிர்ணய உரிமையைக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்ற இ.க.க (மா.லெ) கட்சி உருவாக்கமும், தனித்தமிழ்நாடு கோரிய பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும், தமிழகத்தில் நடந்த அவசர நிலைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டமும், தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு விடுதலைப்படை உருவாக்கமும் அதன் தொடர் செயல்பாடும், அவர்களின் ஈகமும், இந்தியப் படை தமிழீழத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக தமிழகத்திலே எழுந்த ஈழ ஆதரவுப் போராட்டமும், சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கான போராட்டமும், அதன் பிறகு தமிழகத்தில் உருவான தன்னுரிமை, தமிழ்த்தேச விடுதலை, தமிழ்த்தேசிய விடுதலைப் புரட்சி ஆகிய லட்சியங்களோடு உருவான தமிழர் தேசிய இயக்கம், (தற்போது தமிழர் தேசிய முன்னணி) தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி (தற்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம்) தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம் (தற்போது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்) இப்படியாக இந்தியாவின் ஒற்றை ஆதிக்கத்தின் எதிர்ப்பு வரலாறாக தமிழகம் வினையாற்றியது. அதன் தொடர்ச்சியாக தற்காலத் தமிழகத்தில் நடைபெற்ற நடைபெறும் அணுஉலை, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டங்கள், தமிழர் தாயகத்தில் தமிழர்கள் அனுமதி இல்லாமல் நடக்கும் இந்நாசகர திட்டங்களை தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என்றே போராடி வருகின்றனர். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நீர் உரிமைகளுக்கான போராட்டங்கள், தாயகத்துக்கு சேர வேண்டிய ஒவ்வொரு சொட்டு நீரும் தாயகத்தின் பகுதியே என்ற அடிப்படையில் நீர் உரிமைக்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடக்கும் தமிழீழத்திற்கான ஆதரவு, இனக்கொலை எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்கள் சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழகமே தீர்மானிக்கும் என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன. மூன்று தமிழர் மீதான தூக்கு, தமிழர் மீதான இந்தியாவின் தூக்காகவே கருதி, மரண தண்டனையை தமிழகம் முறியடித்தது. தமிழர்கள் அனைவரும் சம தகுதி உரிமை படைத்தவர்களே, அதற்கு மாறாக உள்ள பாகுபாட்டை ஒடுக்குமுறையை ஒழித்து சம தகுதி உரிமை உடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்க வேண்டும் என்பதே இங்கு நடக்கும் சாதி ஒழிப்புப் போராட்டங்களின் சாரமாக உள்ளன. கச்சத் தீவு மீட்பு கடல் உரிமைப் போராட்டம்  என தற்போது தமிழக்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்துப் போராட்டங்களின் சாராம்சமும் தமிழர் தாயகப் பாதுகாப்பு, தேசிய இன உரிமைக்கான, தேசிய விடுதலைக்கான இனப் போராட்டங்களாகவே உள்ளன.
இந்தியக் கட்டமைப்பின் மூல ஆற்றலாக உள்ள ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி வகையறா தான் இன்று ஆட்சியைப் பிடித்து தங்களது ஆரிய ஆரிய, பார்ப்பன, பாசிச நோக்கங்களின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கெதிரான தமிழ்த்தேசிய இனத்தின் இனப்போராட்டத்தை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமாகக் கட்டமைத்து முன் நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கும் தமிழர்களுக்கும் அவர்களின் முன்னணி ஆற்றல்களாக விளங்கக் கூடியவர்களிடமுமே தங்கி இருக்கின்றது.
தமிழீழத் தமிழர்களின்
தேசிய இனப் போராட்டம்
தேசிய இன வரைவிலக்கணத்தின்படியும் ஈழத் தேசிய இனம் ஒரு தேசிய இனமாகவும் அதனைத் தன்னுணர்வுடன் முன்னெடுப்பதோடு வலியுறுத்தியும் நிற்கின்றனர். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகமும் தமிழீழமும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒரே தாயக வரலாற்றையும் கற்கால, இடைக்கால மனித நாகரிகத்தையும் நிலம் கடலால் பிரிக்கப்பட்டாலும் குறிப்பான சில பண்புகளைத்தவிர இவர்கள் வரலாற்றில் இணைந்த பண்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான குறிப்பான வேறுபட்ட பண்பு இலங்கைத் தீவில் சிங்கள பவுத்தம் யீ தமிழர்கள் என்ற வகையில் ஒடுக்கும் இனமும் ஒடுக்கப்படும் இனமும் என முரண்பாடு அமைந்ததும், தன்னுடைய ஆரியப் பார்ப்பனிய இனச்சார்பை மறைத்து மழுப்பலாக பொதுவான அரசு எனக் காட்டிக்கொள்ளும் இந்திய அரசிலிருந்து வேறுபட்டு தான் ஒரு சிங்கள பவுத்த அரசு என்பதை இலங்கை அரசு வெளிப்படையாகக் கொண்டதும்தான் அவ்வேறுபாடு பிரிட்டிஷாரின் கிறித்துவப் பரப்பலுக்கு எதிராக சிங்களப் பகுதியில் உருவான சிங்கள பவுத்தப் பேரினவாதம், தமிழீழப் பகுதியில் உருவான தமிழ்ச்சமயத் தற்காப்பும்தான். இதன் காரணமாக இன முரண்பாடும் இனப் போராட்டமும் தெளிவாக முன்னேறியது. ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதை அது எப்போதும் பற்றி இருந்தது. (தமிழகத்தில் இருந்தது போன்ற பங்கு அரசியல், திரிந்த திராவிட இந்திய அரசியல் அங்கு இல்லை.)
இலங்கையை விட்டு வெளியேறிய பிரிட்டிஷாரிடம் தமிழர் தரப்பு 50:50 என்ற இன அடிப்படையிலான விகிதாச்சாரத்தை முன்னிறுத்தியதை. இனம் இரண்டென்றால் நாடு ஒன்று இனம் ஒன்றென்றால் நாடு இரண்டு என்ற கருத்தை அப்போதே முன் வைத்தது. ஆனால், சிங்கள் பேரினவாத சக்திகள் தன் கைக்கு அதிகாரம் மாறியபோது தமிழர்களின் தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டக் கூறுகளை நீக்கி தன் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புப் பணியைத் தொடங்கியது. தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக ஆக்கும் எண்ணத்தோடு மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக மாற்றி அதன் ஒரு பகுதியினரை இந்தியாவிற்குத் துரத்தியது. சிங்கள மொழிக்கு மட்டும் அரசதிகாரம், வாகனங்களில் ஸ்ரீ எழுத்துப் பொறிப்பு கட்டாயம், இன அடிப்படையில் கல்வியில் தரப்படுத்துதல் கொண்டு வந்தது. தமிழ்ச்சமய ஆலயங்களை அழித்தது, தமிழர் பகுதியில் சிங்கள வன்குடியேற்றங்களை நடத்தியது என அனைத்து வழிகளிலும் இன அழிப்பு வேலையை முன்னெடுத்தது. 50:50 என்ற இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கோரிய தமிழர் தரப்பு ஒடுக்குமுறை தொடர்ச்சியாகக் கூடவே பெரும்பான்மைத் தமிழீழத் தமிழர்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெறச் செய்யப்பட்ட 1976 வட்டுக் கோட்டைத் தீர்மானம்தான் தனித் தமிழீழமே ஈழத்தமிழர் சிக்கலுக்கு தீர்வு என்ற அரசியல் மாற்றத்தையும் அமைதி வழியிலான போராட்டம் தீர்வு தராது, ஆயுத வழிப் போரட்டமே தீர்வு என்ற போராட்ட வழி மாற்றத்தையும் கொண்டு வந்தது.
தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் தோன்றினாலும் தமிழீழக் கோரிக்கை மீதான பிடிப்பும் தெளிவும் தியாகமும், போராட்ட ஆற்றலும், ஆகச்சிறந்த தலைமையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே இப்போராட்டத்தின் நாயகர்களாக விளங்கினர். எதிரியைத் தாக்குதல் என்ற எளிய வடிவத்தில் தொடங்கிய இப் போராடடம் தாயகத்தின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மாற்று அரசு அதிகார உறுப்புகளையும் முப்படைப் பிரிவுகளையும் உருவாக்கி தற்கால உலகத்தில் நடைபெற்று வரும் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கியது.
புதிய இராணுவ அரசியல் கோட்பாட்டு உருவாக்கத்திற்கான மூல வளங்களைக் கொண்டதாக இப்போராட்டம் விளங்கியது. இப்பிராந்திய இந்திய சீன மேலாதிக்கத்தாலும், ஏகாதிபத்திய சக்திகள் சிங்களத்தோடு இணைந்து நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்டதன்மூலம் அப்புகழ்ப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்டம் தமிழீழத் தாயகத்திலிருந்து உலகம் தழுவியதாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய இனச் சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர்
மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் மற்றும் பல தேசங்களில் குடியேற்றப்பட்ட, குடியேறிய தேசங்களில் நிலைத்து விட்ட தமிழர்கள் அத்தேசங்களில் சமூகப் பொருளியல் அரசியல் வாழ்வில் இணைக்கப்பட்ட பகுதிகளாகவே உள்ளனர். அவர்களின் வரலாற்றுத் தாயகமாக தமிழகம், தமிழீழம் இருந்தாலும் குடிபெயர்க்கப்பட்ட அவர்களின் வாழ்வு அத்தேசங்களில் நிலைத்து விட்டாலும் அத்தேசமோ அவ்வரசுகளோ அவர்களை ஒரு சமூகமாகப் பார்த்து தேசிய இன மற்றும் மொழிச் சிறுபான்மையினராக அங்கீகரித்து அவர்களின் மொழி பண்பாடு சமயம் அரசியல், பொருளியல், உரிமைகள் என எதையும் அங்கீகரிக்காமல் உதிரிகளாக வைத்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் சிறுபான்மையினருக்குரிய எந்த உரிமைகளையும் பெறாத நிலையிலேயே உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் வாழும் தேசங்களில் கடைநிலை மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அகதிகள் மற்றும் தொழிலாளர்கள்
சர்வதேச சட்டங்களால் அகதிகளுக்கு வழங்கும் உரிமை மற்றும் பாதுகாப்பு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும் நிலையில் உள்ளது. பிற தேசங்களில் அதற்காக நாம் ஒருங்கிணைய வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல் 300 ஆண்டுகளுக்கு முன் கூலி இனமாக பல மணி நேரம் பணிவாக பணி செய்யும் இனமாக அறியப்பட்டது போலவே இன்றும் உலகமெங்கும் தமிழக கிராமங்களிலிருந்து சென்ற தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தொழிலாளர்களுக்கு உரிய உரிமையோ பாதுகாப்போ ஏதுமற்ற நிலையிலேயே உள்ளனர்.
தேசிய இனமாகவும் தேசிய இனச் சிறுபான்மையினராகவும், மொழி இனச் சிறுபான்மையானராகவும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தகுதிக்குரிய உரிமையுடன் வாழ்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள் தேசத்தால் வேறுபட்டு வாழ்ந்தாலும் வேறுபட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டாலும் தாயகங்களுக்கு தேசிய விடுதலை, புறத்தில் தேசிய இன சிறுபான்மையினர் உரிமை, மொழி இனச் சிறுபான்மையினர் உரிமை அகதிகளுக்கான உரிமை என தீர்வழிகளிலும் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மை இன ஒடுக்குமுறை என்பதும், அதற்கு எதிரான போராட்ட வழி இனப்போராட்டமே என்பதேயாகும்.
மாந்த சமூகம் இனப்போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற இரண்டுபோராட்ட வழிகளில் தான் தற்போதைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இரண்டு போராட்ட வழிகளில் இனப்போராட்டமே மூத்தது. இயற்கையோடான போராட்டத்திலும் விலங்குகளுக்கு எதிரான வேட்டையிலும் பிற குழுக்களுக்கிடையிலான மோதலிலும் தன் குழுவிற்குள்ளே மொழி உள்ளிட்ட பொதுத்தன்மைகளை உருவாக்கிக் கொள்வதிலும்தான் இனமும் இனப் போராட்டமும் தொடங்கியது.
இப்போராட்டத்தின் அடிப்படை தனக்குப் புறத்திலிருந்து தன் குழுவைப் பாதுகாப்பதே. தன் குழுவைப் பாதுகாப்பதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே. தன் குழு என்ற நிலை உருவான பிறகும் அக்குழுவிற்கான மொழி பண்பாடு மரபு, கலை, இலக்கியம், இசை, மருத்துவம், நில எல்லை என ஒவ்வொன்றாக வளர்ந்து ஒரு பொதுத்தன்மை கொண்ட இனமும், அவ்வினத்தால் புழங்கக்கூடிய நில எல்லையாக தேசமும் உருவாகிறது.
இனங்கள் தோன்றி வளர்ந்து, ஆதிப் பொதுமைச் சமூகம் வளர்ந்து, வளர்ச்சியின் விளைவாக அதில் ஆளும் பிரிவு, ஆளப்படும் பிரிவு எனப் பிரிவு படுவதிலும்; போரில் தோற்ற குழுக்களை அடிமைகளாக மாற்றுவதின் வழியாகவும்தான் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் தொடங்குகின்றன. இதிலிருந்து சில தேச நிலைகளில் ஆண்டான் அடிமை முறையும், அதிலிருந்து நிலவுடைமை முறையும், சில தேச நிலைகளில் நேரடியாக நிலவுடைமை அமைப்பு முறையும் தோன்றுகிறது. இனத்தால், மொழியால், தேச எல்லைகளால் இணைக்கப்பட்ட தேசங்கள் உற்பத்தி முறையாலும் தேச அரசாலும் இறுதியாக மையப்படுத்தப்படுவது தேசிய முதலாளிய வகுப்புப் புரட்சி முதலாளியதேச உருவாக்கம் என்பதாக உள்ளது. (இதில் வேறுபட்ட சமூக வளர்ச்சி நிலைகளும் உள்ளன.) இந்த வகையிலேயே பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், ருஷ்யா உள்ளிட்ட தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின. வர்க்கப் போராட்டம்தான் இவற்றை மையப்படுத்தப்பட்ட தேசிய அரசாக தேசிய சமூகமாக உருவாக்கினாலும் அதன் மொழி, நிலம், மரபு, பண்பாடு உள்ளிட்ட உள்ளடக்கங்களை இனமே தீர்மானித்தது.
இந்த முன்மாதிரிகள் தடையற்ற புறத் தலையீடற்ற சமூக வளர்ச்சியின் முன் மாதிரிகளாகவும், பிரிட்டனுக்கு எதிரான அயர்லாந்து விடுதலைப் போராட்டமும், வெள்ளை நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்களின் போராட்டமும், ஜப்பானுக்கு எதிரான சீன விடுதலைப் போராட்டமும், பிரெஞ்ச் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமிய விடுதலைப் போராட்டமும் புறத்திலிருந்து வரக்கூடிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனப்போராட்டத்தின் முன்மாதிரிகளாக உள்ளன.
நடைபெறுவது இனப்போராட்டமா, வர்க்கப் போராட்டமா என்பதை அத்தேசிய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை புற மேலாதிக்கம் தடை செய்கிறதா, அக மேலாதிக்கம் தடை செய்கிறதா என்பதிலிருந்தே தெரிவு செய்யப்படுகிறது. இதில் இரண்டில் ஒன்று முன்னெடுக்கப்பட்டாலும் இன்னொன்று இல்லாமல் போய்விடுவதில்லை. மாறாக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அது மாறிவிடுகிறது.
நிலவுடமைக்கும் போர்ப்பிரபுகளுக்கம் எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், தலைமையில் நடந்த வர்க்கப் போராட்டம் ஜப்பானிய எதிர்ப்பு சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது முந்தைய வர்க்க விரோதிகளான நிலப்பிரபுக்கள் மற்றும் போர்ப்பிரபுக்களில் ஒரு பிரிவினர் கோமிங்டாங் கட்சி உட்பட தேசிய விடுதலையின் நண்பர்களாக மாறினர். சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அவ்வர்க்கப் போராட்டம் மாறியது.
இப்படிப் புறத்திலிருந்து எழும் முரண் பாட்டிலிருந்து இனப்போராட்டமும், வளர்ச்சியின் விளைவாக அகத்திலிருந்து எழும் வர்க்கப் போராட்டமும்தான் மனித சமூகத்தை வழிநடத்தி இருக்கின்றன.
மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விளைவாக வேறு வகையில் கூறுவதெனில் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தங்களுடைய முதலாளிகளிடம் தோற்றதின் விளைவாக உருவானது ஏகாதிபத்தியம். அது உருவாகி சுரண்டலை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் போராட்டங்களும் அதன் துணையோடு உருவாக்கப்பட்ட பல்தேசிய நாடுகள் (எ.கா இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான்) உருவாகி சுரண்டலை மேலாதிக்கத்தை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் அனைத்து போராட்டங்களும் அயல் மேலாதிக்கத்திற்கு எதிரான தேசிய இனப் போராட்டங்களே. உலக முதலாளிகள், ஏகாதிபத்தியம், பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடமிருந்து சுரண்டப்படும் உபரியை விட தேசங்களிடமிருந்து சூறை யாடப்படும் வளத்திலிருந்தே அவர்களுடைய அமைப்பு முறையைக் காத்து வருகிறார்கள். உபரி அவர்களுக்கு உபரியாக மாறிப்போனது. ஏகாதிபத்தியங்களின் மற்றும் பல்தேசிய நாடுகளின் இருப்பு மற்றும் உயிர் ஒடுக்கப்படும் தேசங்களில்தான் தங்கி இருக்கிறது. அதற்கு எதிரான இனப் போராட்டத்தினால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல பத்து தேசங்களை உருவாக்கி இருக்கிறது. ஏகாதிபத்திய ஐரோப்பிய முதலாளிகள் நேரடிக் காலணி ஆதிக்கம் சேமநல அரசு, புதுக் காலனியம், நிதி மூலதன ஆதிக்கம், சூறையாடும் முதலாளியம் என உருமாறும் உலக முதலாளியம் இன்று உலகமயம் என்ற பெயரில் மூன்றாவது உலக யுத்தத்தை ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும்  தேசங்களுக்கு எதிராக நடத்திக்கொண்டு இருக்கிறது.
இப்போரிலேயே நம் இனம் அழிப்பிற்கும் விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கும் உள்ளானது. ஈழ விடுதலை அதன் தேசியத் தளத்தில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் அது சர்வ தேசத் தளத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் நமக்கு மறு உறுதி செய்திருக்கிறது. இந்த உண்மை இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தமிழ்த்தேசிய விடுதலைக்கும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இன விடுதலைக்கும் பொருந்தும்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதை வரலாறு தமிழர்களுக்கும் கொடுத்த நல்வாய்ப்பாகக் கருதி தமிழர்கள் தங்களுக்குள் உலக அமைப்பாக உருவாகி பிற ஒடுக்கப்படும் இனங்களோடும் சுரண்டப்படும் மக்களோடும் இணைந்த புதிய அகிலத்தை உருவாக்கி காலமும் சூழலும் நமக்கு வழங்கும் நண்பர்களின் துணையோடு இன ஒடுக்குமுறை உலக அமைப்பிற்கு எதிராக தேசிய இன விடுதலை அரசியலை முன்னெடுப்பதோடு தங்களது தாயகங்களின் விடுதலைக்கும், தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.
ஏகாதிபத்தியங்களை நம் ஒடுக்கப்படும் தேசங் களில் வீழ்த்தி அவர்களின் சொந்த தேசங்களுக்குத் திருப்பி அனுப்பி அவர்களின் சொந்த சகோதரர்களால் சவ அடக்கம் செய்யத் துணை நிற்பதன் மூலமும்; சோசலிச தேசங்களைப் படைப்பதன் மூலமும் உலக சோசலிச சமூகம் படைப்பதற்கான போரட்டத்தை ஒடுக்கப்பட்ட இனங்களும் சுரண்டப்படும் மக்களும் இணைந்து முன் நகர்த்துவோம்.
இதுவே தமிழர் முன்னணியின் பார்வையும் நோக்கமும் ஆகும்.
இயங்கியல் கண்ணோட்டத்தில் இனப்போராட்டக் கோட்பாட்டை ஏற்று மக்கள் திரள் வழியில் தமிழர் பணி முடிக்க அன்போடு அழைக்கிறோம்.

செயப்பிரகாசு நாராயணன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் முன்னணி .

ஏர் மகாராசன்
17.03.2019.

சனி, 9 மார்ச், 2019

எழுத்தின் மீதான வருணப் பேதங்களும் தமிழின் தனித்த மரபும்: மகாராசன்


மனிதர்களைப் பாலினப் பாகுபாடுகளாக வகைப்படுத்தியதைப்போல எழுத்துகளையும் பாலினப் பாகுபாடு செய்துள்ள பாட்டியல் நூல்கள், வருணப் பொருத்தம் எனும் பெயரில் தமிழ் எழுத்துகளை நான்கு வருணங்களாகவும் பாகுபாடு செய்துள்ளன.

தொழில் நிமித்தமாக நிலவியிருந்த சமூக வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளாகக் கற்பிதம் செய்து,  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால் வருணங்களாக முன்மொழிந்த வருணக் கற்பிதங்கள்போல எழுத்துகளுக்கும் வருணப் பாகுபாடுகளைக் கற்பித்துள்ளன பாட்டியல் நூல்கள்.

மறையோர், அரசர், வணிகர், சூத்திரர் என எழுத்துகளை நால் வருணங்களாக / சாதிகளாக அவை வரிசைப்படுத்திக் கொள்கின்றன.

ஒழியா உயிரனைத்தும் ஒற்று முதலாறும்
அழியா மறையோர்க்காம் என்பர்;- மொழியும்
அடைவே ஓராறும் அரசர்க்காம் என்பர்
படையாத சாதிகளின் பண்பு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதனையே, அந்தண சாதிக்குரிய எழுத்துகள்; அரச சாதிக்குரிய எழுத்துகள் என வருணப்படுத்துகிறது பன்னிரு பாட்டியல்.

நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்
அறுமுகன் படைத்தன அந்தணர் சாதி;
இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன
துன்னரும் சிறப்பின் மன்னவர் சாதி

என்கிறது அது. அதாவது, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிர் பன்னிரண்டு எழுத்துகளும், ஒற்று முதல் ஆறும் என்கிற க், ங், ச், ஞ், ட், ண் ஆகிய மெய் எழுத்துகளும் மறையோர் / அந்தணர் / பார்ப்பனர் சாதி எழுத்துகளாகவும், கூறப்படுகிறது. மெய்யெழுத்துகளான த், ந், ப், ம், ய், ர் ஆகியன அரசர் /  மன்னர் / சத்திரியர் எழுத்துகளாகவும் கூறப்படுகிறது.

வணிக சாதிக்குரிய எழுத்துகள், சூத்திர சாதிக்குரிய எழுத்துகள் எனப் பாகுபடுத்தும்போது,

பண்பார் வணிகர்க்காம் பாங்கில் லவறனக்கள்
மண்பாவும் சூத்திரர்க்காம் மற்றையவை- நண்பால்
அரன் அரிசேய் மால் கதிர் கூற்றாய் மழை பொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதையே, பன்னிரு பாட்டியல் கூறும்போது

திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன
அணி மிகு சிறப்பின் வணிகர் சாதி;
கூற்றுவன் படைத்தன கூற்றன இரண்டும்
ஏத்திய மரபின் சூத்திர சாதி

என்கிறது. அதாவது, ல், வ், ற், ன் என்னும் நான்கு மெய்யும் வணிகர் /  வைசிய சாதி எழுத்துகளாகவும், ழ், ள் என்னும் இரண்டும் சூத்திர சாதி எழுத்துகளாகவும் பாகுபடுத்தப்படுகிறது. இதையே,

பன்னீர் உயிரும் முன்னொற்று ஆறும்
மன்னிய அந்தணர் வருணமாகும்;
தநபமயர எனச் சாற்றிய ஆறும்
மன மகிழ் அரசர் வருணமாகும்;
லவறன என்னும் நான்கு புள்ளியும்
இவர்தரு வணிகர்க்கு எய்தும் என்ப;
ழ ள எனும் இரண்டும் வளமையர்க்காகும்

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்.
தமிழ் எழுத்துகள் குறித்தும், அவற்றின் ஒலி மற்றும் வரிவடிவங்கள் குறித்தும், அவற்றின் வகைப்பாடுகள் குறித்தும் தமிழ் இலக்கண இலக்கிய மரபில் உள்ள விவரிப்புகள் காரண காரிய இயல்புகளைக் கொண்டிருப்பவை; மொழியின் இயங்கியல் தன்மையின் இயல்போடு பொருந்திப் போகின்றவை. தமிழ் எழுத்துகளின் ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள், அவற்றுக்கான பெயர்கள், வேறு வேறான காலங்களில் வேறு வேறான நிலைகளை அடைந்த எழுத்துகளின் பரிணாம வளர்ச்சிகள், தமிழ் எழுத்துகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள், எழுத்து வகைகள், தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துகளின் பெயர், வகை, தொகை, விரிகள் எனச் சொல்லப்படுகின்றவை அனைத்தும் மொழியியல் எனும் அறிவுப் புலமாய் வடிவமைந்திருப்பவை; பிற்காலத்திய மொழியியல் கோட்பாடுகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பவை.

மேலும், தமிழர் வாழ்வியல், தமிழர் பரவிய நிலத்தியல், வரலாற்றியல், தொல்லியல், பண்பாட்டியலோடு ஓர் உயிர்ப்பான உறவையும் அடையாளத்தையும் கொண்டிருப்பதாகவே தமிழ் எழுத்து மரபு இயங்கி வந்திருக்கிறது. இத்தகைய எழுத்து மரபின் வாயிலாகவே, தமிழரின் அறிவு மரபு காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. தமிழரின் எழுத்து மரபு பற்றிய விவரிப்புகளுக்குள் தமிழின் தனித்த பண்பாட்டுத் தன்மை பொதிந்திருப்பதைக் காண முடியும். அதாவது, தமிழ் மக்களின் பேச்சு வழக்காறுகளாலும் எழுத்து வழக்காறுகளாலும்தான் தமிழ் செழிப்படைந்து வந்திருக்கிறது.

தமிழர்கள் பல்வேறு இனக் குழுக்களாகவும், குலங்களாகவும், தொழில் மரபினராகவும், சமயத்தவர்களாகவும், சாதியினராகவும், வட்டாரத்தினராகவும் இருப்பினும், அத்தகைய அடையாளங்களோ சார்புத் தன்மையையோ தமிழின் எழுத்து மரபில் இல்லை. அதிகார மய்யங்களால் தமிழ் அரவணைக்கப்பட்டிருந்தாலும், ஒதுக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும், அதிகாரச் சார்பின்றியும் துணையின்றியும்தான் தமிழால் தனித்து இயங்க முடிந்திருக்கிறது. வலியோருக்கு மட்டுமின்றி எளியோருக்கும் தமிழ் எழுத்துகள் ஓர் அறிவாயுதமாய்ப் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவ்வகையில், தமிழ் எழுத்து மரபிற்கு அரசதிகாரம் /  சமயம் / சாதி / வர்க்கம் /  பாலினம் /  வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது எனலாம்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை. தமிழி, வட்டெழுத்து என வளர்ச்சி அல்லது மாற்ற நிலைகளை அடைந்து வந்த தமிழ் எழுத்து மரபில், பிற மொழி / சமயம் /  பண்பாடு /  அதிகார நுழைவுகளாலும் படையெடுப்புகளாலும் ஆட்சி மாற்றங்களாலும் கிரந்தம் என்கிற எழுத்துமுறை திரிபுகளை ஏற்படுத்தியது. கிரந்தம் செல்வாக்கு பெற்ற அதே இடைக்காலத்தில்தான், தமிழ் எழுத்துகள் குறித்த விவரிப்புகளில் திரிபுநிலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி /  சமய / பாலின /  வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்.

அதாவது, தனித்ததோர் எழுத்து மரபாய்த் தமிழ் இருப்பதிலிருந்து, அதற்குச் சார்புத் தன்மையை உருவாக்குவதே அந்நூல்களின் பெருநோக்கமாய் இருந்திருக்கிறது. ஆயினும், தமிழ் எழுத்துகள் பற்றிய அத்தகையக் கற்பிதங்கள் தமிழ் எழுத்து மரபில் சிதைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...

பெண் அரசியல் : ஏர் மகாராசன் நேர்காணல்.

பெண் அரசியல்:
‘விடுதலைக்கான கருத்தியல் என்பது
அதிகாரத்திற்கு எதிராகத்தான் இருக்கும்’.
ஏர் மகாராசன் நேர்காணல்.

மார்ச் 8 - உலகப் பெண்கள் நாளை முன்னிட்டு, நியூஸ் 7 தொலைக்காட்சி இணையத்திற்காகத் தோழியர் சண்முகப்பிரியா அவர்களின் கேள்விகளும் எனது பதில்களுமான நேர்காணல் உரையாடல்.

சண்முகப்பிரியா :
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன?
இது கொண்டாடப்பட வேண்டிய நாள்தானா?

மகாராசன்:
மனித குலத்தினுடைய சரிபாதி அங்கமாகத் திகழக்கூடிய பெண்கள், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் எனப் போராடி, வெற்றி பெற்ற நாள்தான் மார்ச் 8ஆம் நாள். இது, பெண்கள் செய்த புரட்சியின் குறியீட்டு நாளாகவே கருதப்படுகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது 1789ஆம் ஆண்டு, ஜூன் 14ஆம் நாள் பெண்களுக்கான சுதந்திரம், சமத்துவம், பெண் பிரதிநிதித்துவம், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை என அனைத்துவகைப் பெண்ணடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போர்க்கொடி உயர்த்திப் புரட்சியில் ஈடுபட்டனர்.

இந்தக் கிளர்ச்சி உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. போராட்டக் கிளர்ச்சி தீவிரமடைந்த சூழலில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு இடமளிக்கவும் முன் வருகிறார் பிரான்ஸ் நாட்டின் புருஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க். அவ்வாறு அரசாங்க உத்தரவு 1848ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 1910இல், பணிக்குச்செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில்தான், பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு உலகம் முழுவதும் ஒரு நாளை மகளிர் நாளாகக் கொண்டாடுவதன் அவசியத்தை, ஜெர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான கிளாரா ஜெட்கின் என்பவர் முன்வைத்தார். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8ஆம் நாளையே, உலகப் பெண்கள் நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கருத்து பெரும்பாலான பெண்கள் இயக்கங்களின் விருப்பமாக இருந்தது. இதனால், 1921ஆம் ஆண்டு முதல் மார்ச்  8ஆம் நாள், உலகப் பெண்கள் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இது கொண்டாடப்பட வேண்டிய நாள்தான்.

சண்முகப்பிரியா:
பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணி மற்றும் காரணிகள் என்ன?

மகாராசன்:
வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது, பெண் பாலை, ஆண் பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்கிறார் ஏங்கல்ஸ். மனித சமூகத்தின் இயங்குதலுக்கு அடிப்படையாக இருப்பது, பொருள் உற்பத்தியும், உயிரின மறு உற்பத்தியும்தான். உற்பத்தியிலும், மறு உற்பத்தியிலும் கட்டுப்பாடு இல்லாது, பெண்கள் ஈடுபட்டிருந்த நிலைமைகள் தாய்வழிச் சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன.

இதற்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட ஆண்வழிச்சமூக முறைமையில்தான், பெண்களின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செயல்பாடுகள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு, சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டதால், அவ்வுற்பத்தி நடவடிக்கையின் மூலம் கொணரப்பட்ட சொத்துகள், செல்வங்கள், பொருட்கள், உடைமைகளுக்கு ஆண்களே உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால், பெண்கள், ஆண்வழிச் சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுமல்லாமல், இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆணின் உடலின்ப  வேட்கைக்குப் பலியான பெண்கள், கேவலம், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கருவிகளாக மட்டும் ஆக்கப்பட்டனர்.

மேலும், பொருள் உற்பத்தித்தளம் ஆண்கள் வசம் இருந்ததால், ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கொண்டாடும் வகையில் சொத்துடைய ஆணின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பணிக்குப் பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இக்குடும்ப அமைப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஆக, ஆணாதிக்கத்தின் பொருளியல் அடிப்படை என்பது, பெண்களின் உழைப்பு, சக்தி ஆகியவற்றின் மீது ஆண்கள் கொண்டுள்ள அதிகாரமே ஆகும். இதுதான், பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியாக நாம் கருதமுடியும்.

சண்முகப்பிரியா:
பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் எது?

மகாராசன்:
தனிச்சொத்துடைமையும் உரிமையும்தான் ஆண்களுக்கான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வழங்கியிருக்கின்றன. இத்தகைய உடைமை வர்க்கச் சமூக அமைப்பை மாற்றக்கூடிய பாட்டாளி வர்க்க விடுதலைப் புரட்சியே பெண்களுக்கான முழு விடுதலையை அளிக்கக்கூடியது. அதாவது, உழைக்கும் வர்க்கத்துப் பெண்களின் விடுதலையில்தான் அனைத்து வகையான பெண்களின் முழு விடுதலையும் உள்ளடங்கியிருக்கிறது.

சண்முகப்பிரியா:
பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதா?

மகாராசன்:
ஒரு விடுதலைக் கோரிக்கையை, அதற்கான உரையாடலைக் கொண்டிருக்கும் எந்த ஒரு கோட்பாடும், ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும். பெண்ணியம் என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் பெண்களுடய விடுதலைக் குரலாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால், பெண்ணியம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணாதிக்கத்திற்கும், ஆண் அதிகார முறைகளுக்கும்தான் எதிரானது.

சண்முகப்பிரியா:
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்ளலாம் என்பதை இதுபோன்ற கருத்தியல்கள் கூறுகின்றனவா?

மகாராசன் :
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்வதைத்தான் பெண்ணியம் உள்ளீடாகக் கொண்டிருப்பதாகப் பெண்ணியத்தைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்துகொள்வதே பெண்ணியம் என்பதாக முதலாளித்துவச் சமூக அமைப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு கருத்துப் பரவல். இது, முதலாளித்துவ மேட்டிமைச் சமூகத்தின் பெண்களது கோரிக்கைகள் அவ்வளவுதான்.

இதுபோன்ற வாதங்கள், பெண்ணை நுகர்வுப் பண்டமாக ஆக்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ நுகர்வுப் பண்பாட்டு நடைமுறைகளுக்குத்தான் சார்பாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவச் சந்தை உற்பத்தியில், பொருட்களை ருசித்துவிட்டு எறிந்துவிட்டுச் செல்வதுபோல, பெண்ணின் உடலையும் ருசிப்புக்கான நுகர்வுப் பண்டமாக ஆக்குவதில் முதலாளித்துவச் சந்தைக் கூறுகள் அனைத்தும் தீவிரம் காட்டுகின்றன. இந்தத் தீவிரத்தின் வெளிப்பாடுகள்தான் கட்டற்ற பாலியல் சுதந்திரம்; வரையரையற்ற பாலியல் புணர்ச்சி; கூட்டுக்கலவி போன்றவை முற்போக்கானவை எனக்காட்டும் வாதங்களும் நடவடிக்கைகளும் ஆகும். இதுவே கலாச்சாரப் புரட்சியாக மதிப்பிடப்பட்டாலும், இது முதலாளித்துவ நுகர்வுவெறிக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

சண்முகப்பிரியா:
பெண் சுதந்திரம், பெண்ணியத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள்
யார் யார்?

மகாராசன்:
பெண்ணுரிமை, பெண்ணியம், பெண் எழுத்து தொடர்பான ஆய்வுகளையும் உரையாடல்களையும் மேற்கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. எனினும், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக மேரி எல்மான், சிமோன் தி பொவாயர், எலைன் ஷோவால்டர், டோலிமர், ஆனிட் கோலோட்னி, மீரா ஜெலன், கேட் மில்லட், ராபின் லாக்கோப், ஜூலியா கிறிஸ்தவா, ஹெலன் சீக்சஸ், மேரி டாலி, வெர்ஜினியா ஊல்ப், கோரா கப்லான், சுலாமித் பயர்ஸ்டோன், அஸிஸா அல் ஹிப்ரி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், பெண் விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியல் இயக்கங்களாக வடிவமைத்து நடைமுறைப்படுத்தியவர்களுள் லெனின், கிளாரா ஜெட்கின், ஷீலா ரெளபாத்தம் போன்றோரைக் குறிப்பிடலாம். இந்தியச் சூழலில் பூலே, அம்பேத்கர் பெண்ணுரிமைச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியவர்களாவர்.

தமிழ்ச் சூழலில், பெண்ணுரிமைச் செயல்பாட்டை அரசியலாக முன்னெடுத்தவர் பெரியார். பெண் விடுதலைச் செயல்பாட்டை மண் விடுதலையோடும் இன விடுதலையோடும் இணைவுபடுத்திப் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்து அவர்களைப் போராட்ட சக்தியாக வார்த்தெடுத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சண்முகப்பிரியா:
1871-இல்தான் பெண்ணியம் என்ற விடுதலைக் கருத்தியல் உருப்பெறுகிறது எனில், அதற்கு முன்பாகப் பெண்கள் அவ்வளவு காத்திரமாகப் போராடவில்லையா?

மகாராசன்:
அப்படி இல்லை. பெண்களின் விடுதலைக்குரல் எல்லாக் காலத்திலும், எல்லா தேசத்திலும் ஒலித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறது. பெண்களுடைய விடுதலைக் குரலானது, எழுச்சியாகக் கிளம்பியதும், புரட்சியாக வெடித்ததும், இயக்கங்களாகப் பரவியதும் இந்தக் காலகட்டத்தில்தான். ஆகையால், இந்தக் காலகட்டத்திற்கு முன்பு, பெண்கள் குரல் எழுப்பவே இல்லையா என்றெல்லாம் பார்த்திட முடியாது. பெண்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கான தடயங்களும் இருக்கின்றன.

கண்ணகி, தன்னுடைய கணவனான கோவலன் கொல்லப்பட்டதை அடுத்து, பாண்டிய மன்னனை எதிர்த்துக் குரலிட்டு, மதுரையை எரித்துவிட்டுச் சென்றது பெண்ணினுடைய தனிநபர் நிகழ்ச்சியாக மட்டும் பார்த்துவிட முடியாது. ஒரு அதிகார அமைப்பை, பெண் எதிர்த்திருக்கிறாள். அவள், தன் உரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். அதேபோல, பெண்ணினுடைய தன்னிலை உரிமைக்குரல் தமிழ் மரபில் வெளிப்பட்டிருப்பதை நிறையப் பார்க்க முடியும். வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோருடைய கவிதைகளில், மிகப்பெரிய பெண் உரிமைக்கான குரல் பொதிந்திருப்பதைப்  பார்க்க முடியும்.

இதேபோல, எல்லாக் காலகட்டத்திலும் எல்லா நாடுகளிலும் பெண்கள் தம்முடைய உணர்வுகளையும், தங்களுக்கான உரிமைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வரலாற்றில் அதற்கான சான்றுகள் இருக்கின்றன. இது எப்பொழுது தீவிர அரசியலாக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அந்தப் பெண்ணுரிமைக் குரல், ஓர் அரசியலாகவும் இயக்கமாகவும் மாறியது 1871 காலகட்டங்களில்தான்.

சண்முகப்பிரியா:
பெண்ணியத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

மகாராசன்:
பெண்ணியத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால்,  அதனை மூன்று அடிப்படையான வகைக்குள்ளே அடையாளப்படுத்துவர்.
மிதவாதப் பெண்ணியம் - சீர்திருத்தங்கள் மற்றும் சலுகைகளைக் கோருவது.
தீவிரவாதப் பெண்ணியம் - பெண்கள் ஒடுகப்படுவது ஆண்களால்தான். அதனால், ஆண்களுக்கு எதிராகத் தீவிரத் தன்மையுடன் இருப்பது.
சமத்துவப் பெண்ணியம் - பெண் விடுதலையைப் புரட்சியின் அங்கமாக முன் வைப்பது.

சண்முகப்பிரியா:
இத்தனை வகைகளில், எந்த வகைப் பெண்ணியம் சரியான விடுதலைக்கான பாதையை முன்வைப்பதாகக் கருதுகிறீர்கள்?

மகாராசன்:
சமத்துவப் பெண்ணியம் என்று சொல்லக்கூடிய மார்க்சியப் பெண்ணியமே தெளிவான நோக்கத்தையும் பெண் விடுதலைக்கான வழிமுறைகளையும் செயல் திட்டங்களையும் கொண்டிருக்கிறது. ஆண்வழிச் சமூக உடைமை முறைமைகளில் இருந்தும், ஆதிக்கவெறி ஆண்களிடம் இருந்தும், இன்னும் எல்லா விதமான சுரண்டல் ஒடுக்குமுறைகளில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறுவதற்கான திட்டங்களையும், அரசியல் வழிமுறைகளையும், அதற்கான போராட்டங்களையும் மார்க்சியப் பெண்ணியமே எடுத்துரைக்கிறது. ஆகவே, மார்க்சியத்தின் வழிப்பட்ட சோசலிசம் எனப்படுகிற சமத்துவப் பெண்ணியமே சரியானது என்று நான் கருதுகிறேன்.

சண்முகப்பிரியா:
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் சார்ந்த எழுத்துகள் எப்படி உள்ளன?

மகாராசன்:
1990-களுக்குப் பிறகு, தமிழ்ச் சூழலில் பெண் சார்ந்த பதிவுகள் நிறைய வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆண்களின் எழுத்து முறைகளில் இருந்தும் அனுபவப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டதான ஒரு புதிய எழுத்து முயற்சிகள் பெண்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கவிதை, கட்டுரை, நாடகம், புனைகதை, கலை உள்ளிட்ட தமிழ் மரபின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளும், அறிவுப் புலப்பாடுகளும் பதியப்பட்டு வருகின்றன. எழுதுவதில் பெண்களுக்கு இருந்த தயக்கம் முற்றாக மறையத்தொடங்கி உள்ளது. அதேபோல, பெண் எழுத்துகளுக்கு இருந்த ஆண்களின் எதிர்ப்புகளும் கைவிடப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துச்சூழலில், பெண்களுக்கான இடத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டு இருப்பதும், தமிழை வளப்படுத்தக்கூடிய ஒன்றாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சண்முகப்பிரியா:
ஒரு எழுத்தாளராக இந்தப் புலத்தில் உங்கள் படைப்புகள் குறித்துக் கூறுங்கள்.

மகாராசன்:
தமிழ்  மரபில் பெண் எழுத்துகளில் காணப்படக்கூடிய இயங்கியலை அடையாளப்படுத்தும் வகையில், நான் மேற்கொண்ட பெண் மொழி பற்றிய ஆய்வு மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். தமிழில் பெண் மொழி மரபு  குறித்த எனது ஆய்வு  “பெண்மொழி இயங்கியல்” என்ற பெரு நூலாக வெளிவந்திருக்கிறது. அதற்கடுத்து, பெண் விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்களைத் தொகுத்து, “ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்” என்னும் நூலாக எனது தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. இரண்டு நூல்களையும் தோழமைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும், பெண் எழுத்துகள் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எழுத்துகள் யாவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் மக்களின் பக்கம்தான். அவ்வகையில், எனது எழுத்துகள் யாவும் பெண்ணின் பக்கம்தான்.

சண்முகப்பிரியா:
தலித் பெண்ணியம் என்ற ஒன்று பொதுவாகப் புழக்கத்தில் இருக்கின்றது. சாதியம் சார்ந்த பெண்ணியத்தின் தேவைகள் என்ன?

மகாராசன்:
இந்தியச் சமூகத்தில், சாதியப் பாகுபாடுகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் வெகுகாலமாகவே நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நோய். சாதியத்தைப் பேசுபொருளாக்காமல், எவ்வகைப் புரட்சியும் இங்கு சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கே வெகுகாலமாகிப் போயிருக்கிறது. இங்குள்ள உயர்த்திக் கொண்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு; ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு. இருவேறு தரப்பினரின் நிலைமைகள் ஒரே மாதிரியாக அமைந்திருக்கவில்லை. இதில், அதிகமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடப்பது ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள்தான். ஆகவே, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் குரலை ஆதரித்துதான் ஆகவேண்டும். அவ்வாறான குரலை வரவேற்பதில் தவறில்லை.

சண்முகப்பிரியா:
லிபரல் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

மகாராசன் :
நிலவுடைமைச் சமூகத்தில் பெண்களுடைய உழைப்புச் சக்தி என்பது மறுக்கப்பட்டது. முதலாளித்துவச் சமூக அமைப்பிலே, பெண்களின் உழைப்புச் சக்தி பறிக்கப்படுகிறது. இதைத்தான் உழைப்புச் சுரண்டல் என்று கூறுகின்றனர். முதலாளித்துவச் சமூக அமைப்பு, நிலவுடைமைச் சமூக அமைப்பில் இருந்து முற்போக்கானதாகக் கொண்டு போனாலும்கூட, அதன் உள்ளீடான நோக்கம், சுரண்டல் தன்மையைத்தான் கொண்டுள்ளது. ஆகவே, முதலாளித்துவப் பெண்ணியமோ, குட்டி முதலாளித்துவத்தின் சீர்திருத்தவாதப் பெண்ணியமோ பெண்களுக்கான முழு விடுதலையையும் கொண்டிருப்பதில்லை. மார்க்சிய வழிப்பட்ட சோசலிசப் பெண்ணியமே உழைக்கும் பெண்களது விடுதலையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது.

சண்முகப்பிரியா:
லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் இடையிலான பெண்ணியம் சார்ந்த விவாதத்தின் முக்கிய சாரம் என்ன?

மகாராசன்:
லெனின், ரசியப் புரட்சியின் பிதாமகனாகக் கருதப்படுகிறவர். கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர். லெனினுடன் புரட்சியில் பங்கெடுத்துக்கொண்டவர். லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் 1920 காலகட்டங்களில் நிகழ்த்திய உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் உடல் அரசியல் பற்றி நிறைய உரையாடியுள்ளனர்.

கட்டற்று இருக்கக்கூடிய பாலியல் சுதந்திரம் குறித்துக் கூறுமிடத்தில், முதலாளித்துவச் சமுதாயத்தின் குப்பை மேட்டில் அத்தனைச் செழிப்புடன் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தியானம் புரியும் இந்திய ஆண்டியைப்போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சினைகளிலேயே முழு நாட்டம் கொண்டிருக்கும் இவர்களை நான் நம்புவது இல்லை. பெரும்பாலும், வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தாந்தோன்றித் தனமான ஊகங்களேயான இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகி உள்ளதற்குச் சொந்தத் தேவைகளே காரணம்.

முறைகேடான அல்லது மட்டு மீறிய தமது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னால் நியாயம் கற்பிக்க வேண்டும்; தாம் கண்டிக்கப்படல் ஆகாது என வாதாட வேண்டும் என்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும். இதனைக் கலகத் தன்மை கொண்டதாகவும், புரட்சிகரமானதாகவும் தோன்றச் செய்யும் பொருட்டு எவ்வளவுதான் முயன்ற போதிலும், முடிவில் எப்படியும் இது முற்றிலும் முதலாளித்துவத் தன்மையாகவே இருக்கிறது . இது உழைக்கும் பெண்களது கோரிக்கையல்ல. மாறாக, முதலாளித்துவச் சமூக அமைப்பில் இருக்ககூடிய மேட்டிமை வர்க்கத்துப் பெண்களுடைய கோரிக்கைதான் என்று அவ்வுரையாடலில் சொல்லி இருக்கின்றனர்.

ஒரு கடையில் ஒரு கோப்பையில் தேனீரை வாங்கி, தேனீரைக் குடித்து முடித்தவுடன், அந்தக் குவளையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவது மாதிரியானது கட்டற்ற பாலியல் செயல்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், பாலியல் என்பதும் காதல் என்பதும் முழுவதுமாக அன்பு மற்றும் உறவு வயப்பட்டது. காதலற்ற முத்தங்கள் ஒரு கோப்பைத் தண்ணீர் போன்றது என விவரிக்கும்  அந்த உரையாடல்  பகுதிகள் முக்கியமானது. இவ்வாறு, பெண் விடுதலை பற்றிய மார்க்சியப் பார்வைகள் குறித்துதான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் எனும் நூல் உணர்த்துகிறது.

சண்முகப்பிரியா:
தமிழ்நாட்டில், பெண்ணியம் எப்பொழுது முதல் தீவிரமாகப் பேசப்படுகிறது?  தமிழ்ச்சூழலில் முக்கியமான பெண்ணியவாதிகள் என யாரையெல்லாம் சொல்லலாம்?

மகாராசன் :
தமிழ்ச் சூழலில் பெண் விடுதலைக்கான குரலை அரசியலாய் முன்னெடுத்தவர்கள் தந்தை பெரியாரும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும்தான். பெண் சார்ந்த உரையாடல்களைத் தமிழ்ச் சூழலில் வளப்படுத்தியும், வளப்படுத்திக் கொண்டும் இருப்பவர்களாக சிவகாமி, வ.கீதா, ஓவியா, அருள்மொழி, சரசுவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, அம்பை, கனிமொழி, எம்.ஏ.சுசீலா, அ.மங்கை, ஜூவ சுந்தரி, பாலபாரதி, அஜிதா,  செல்வி, குட்டி ரேவதி, தேவதத்தா, வாசுகி,  நந்தினி, கவின்மலர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையச் செயல்பாட்டாளர்கள் பெண் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சண்முகப்பிரியா:
பெரியாரின் பெண்ணியம் தீவிரமானதாகக் கருதப்படுகிறதே அது ஏன்?

மகாராசன்:
பெண்கள் ஆண்களிடம் அடிமைகளாக இருப்பதற்குக் குழந்தைப்பேறுக்குக் காரணமான அவர்களின் கர்ப்பப்பையே காரணம் என்கிறார் பெரியார். குழந்தையைப் பெற்றுப்போடக்கூடிய கர்ப்பப்பை இருப்பதனால்தான் பெண்களை ஆண்கள் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஆகவே, பெண்கள் தங்கள் கர்ப்பப் பையை அறுத்தெறியுங்கள் என்கிறார் பெரியார். அதனால்தான், பெரியாரின் இந்தக் குரல், தீவிரமானதாகப் பார்க்கப்படுகிறது.

சண்முகப்பிரியா:
பெரியாரின் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்குமான முக்கிய வித்தியாசம் என்ன?

மகாராசன்:
பெரியாருடைய பெண்ணுரிமைக் கருத்தியல்கள் தீவிரமானதாகக் கருதப்படுகிறது என்றாலும்கூட, உழைப்புச் சுரண்டலிற்கும், பாலியல் சுரண்டலிற்கும் உள்ளாகும் பெண்களின் சமூக அமைப்பை மாற்றுவது குறித்து அவை பேசவில்லை. நிலவுகிற சமூக அமைப்பில், பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மறுமணம், சொத்துரிமை போன்ற சீர்திருத்த வடிவங்களையே வெளிப்படுத்தின.

சோசலிசப் பெண்ணிய அரசியலானது, நிலவுகிற சமூக அமைப்பையே புரட்டிப்போடக்கூடிய புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ளது. எனினும், சீர்திருத்த நடவடிக்கை என்பது, புரட்சியின் முதல் கட்ட தொடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சோசலிச பெண்ணுரிமையின், ஒரு தொடக்கப் புள்ளியாகவே பெரியாரின் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சண்முகப்பிரியா:
நவீன பெண்ணியம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? பெண்ணியம் எனும் கருத்தியலில் எதிர்காலத்தேவை, வீச்சு எப்படிப்பட்டதாக இருக்கும்?

மகாராசன் :
கட்டற்று இருப்பதுதான் பெண்களின் சுதந்திரம் என்கிற கருத்து, இந்தச் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. மேட்டிமைப் பெண்களின் முன்னெடுப்புகளே நவீனப் பெண்ணியமாக முன்மொழியப்படுகிறது. பெண்ணியம் என்பது பெண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு விடுதலைப் புரட்சி  கிடையாது. அதேபோல, ஒரு வர்க்க விடுதலை என்பது, பெண்களை நிராகரித்து விட்டு அல்லது தவிர்த்துவிட்டு நடக்கக்ககூடிய ஒரு புரட்சியும் கிடையாது. உழைக்கும் பெண்களும், உழைக்கும் ஆண்களும் அணிதிரள்வதுதான் இங்குள்ள எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் ஒரே தீர்வு. அந்தப் புரட்சிதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்று அழைக்கப்படும். அந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அணி சேர்வதன் மூலமாகத்தான் பெண் விடுதலையும் சாத்தியப்படும் என்கிற ஒரு புரிதலை நவீன பெண்ணியம் உள்வாங்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இன்றைய நவீனப் பெண்ணியவாதிகள், மார்சியத்தைப் புரிந்து கொள்வதிலும், மார்க்சியவாதிகள் பெண்ணியத்தைப் புரிந்து கொள்வதிலும் போதாமைகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மார்க்சியரும் பெண்ணியத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணியவாதியும் மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  இதுவே நவீனப் பெண்ணியமாக உருக்கொள்ள வேண்டும். இதுவே இப்போதையத் தேவையும்கூட.

சண்முகப்பிரியா:
கம்யூனிசத்திற்கும் பெண் விடுதலைக்கும் அப்படி என்ன நெருக்கமான தொடர்பு இருக்கிறது?

மகாராசன்:
கம்யூனிசம் என்பது மனிதகுல விடுதலையைப் பற்றிப் பேசுகிறது. பெண்கள் மனித குலத்தின் சரிபாதி அங்கம். அதனால், கம்யூனிசம் பெண் விடுதலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

திங்கள், 4 மார்ச், 2019

குலசாமி வழிபாட்டு மரபும் வரலாற்று வழக்காறுகளும்: புரிதலும் போதாமைகளும் :- மகாராசன்



குலசாமி வழிபாடுகள் நிறுவனப்படுத்தப்பட்ட ஆரியப் பெருந்தெய்வ வழிபாட்டு மரபுகளைப் போன்றதல்ல. ஆரியப் பெருந்தெய்வ வழிபாட்டு மரபுகளில் இருந்து வேறுபட்ட எதிர்மரபையும் மாற்று மரபையும் கொண்டிருக்கக் கூடியவை.
குலசாமி வழிபாட்டு மரபுகளைத் தெய்வ வழிபாடு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. குலசாமிகள் என்பவைதான் இந்த உலகத்தையும் உயிரினங்களையும் படைத்ததாகக் குலசாமி வழிபாட்டினர் கருதுவதில்லை. முன்னொரு காலத்தில் தம் குழுவுக்கோ கூட்டத்திற்கோ குலத்திற்கோ அல்லது இந்தச் சமூகத்திற்கோ ஏதாவது ஒரு வகையில் சமூகப் பங்களிப்பை வழங்கியவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
அவர்களது சமூகப் பங்களிப்பை மதித்து நினைவஞ்சலி செலுத்தும் எளிய வழிபாட்டுச் சடங்குதான் குலசாமி வழிபாட்டு மரபில் பொதிந்து கிடக்கிறது. சமூகப் பங்களிப்பு செய்த முன்னோர், மூத்தோர், நீத்தார் என்போரைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட நடுகல் வழிபாட்டு மரபின்  நீட்சிதான் குல சாமி வழிபாட்டு மரபும்.
குலசாமி வழிபாட்டு மரபில் பல குலங்களின் கூட்டிணைவு உள்ளடங்கி இருக்கிறது என்பதையும் காண முடியும். குலசாமி வழிபாடு தெய்வ வழிபாடு என்பதைக் காட்டிலும், பூர்வீக நிலத்தோடு பூர்வீக மக்களுக்கிருக்கும் உயிர்ப்பான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வகைச் சடங்கு முறை அதற்குள் இருக்கிறது. இன்னும் குறிப்பாக உற்று நோக்கினால், ஒவ்வொரு குலசாமி வழிபாட்டு வழக்காற்றுக்குள்ளும் அந்தந்த வட்டாரத்தின் - குலத்தின் வரலாறும் சடங்கு மரபாய் மாறிக் கிடக்கிறது. இந்த வரலாற்றையும் வழக்காறுகளையும் போகிற போக்கில் உதறித் தள்ளிவிட முடியாது.
குலசாமி வழிபாட்டு மரபைக் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுவதை விடுத்து, வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் பண்பாட்டு நடத்தைகளை ஆராய்வது தான் இப்போதைய தேவை.  குலசாமி வழிபாட்டு மரபு ஒன்றும் பிற்போக்கானது - தீங்கானது என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வருதல் என்பதும் ஆரியத்திற்குத் துணை செய்யும் கருதுகோளே ஆகும். ஏனெனில், குலசாமி வழிபாட்டு மரபை ஆரியமும் இழிவானது என்றே முன்மொழிகிறது. பகுத்தறிவுவாதம் எனும் பேரில் குலசாமி வழிபாட்டு மரபுகளைக் கொச்சைப்படுத்துவதும் ஆரியத்தை வலுப்படுத்தவே துணை செய்யும். குலசாமி வழிபாட்டு மரபு போன்ற மக்களின் வழக்காற்று மரபுகளைப் பிற்போக்கானது என ஒதுக்கி வைத்ததன் - வைப்பதன் விளைவாகவே, அவற்றையெல்லாம் ஆரிய மரபு தமதாக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் வழக்காறுகள் உழைப்பிலிருந்தும் உற்பத்தியிலிருந்தும் உருவாகி நிற்பவை. குலசாமி வழிபாட்டு மரபில் இருக்கும் மக்கள் வழக்காற்றுக்குள் இருக்கும் வரலாற்றையும் சமூகப் பண்பாட்டியலையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டிய தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.
பண்பாட்டு எடுத்துரைப்பில் இன்னும் போதாமைகள் இருக்கின்றன. பண்பாட்டுப் புரிதலிலும் அத்தகையப் போதாமைகளே நீடிக்கின்றன. மக்களையும் சமூகத்தையும் இன்னும் படிப்பதின் மூலமே இதைச் சரி செய்திட முடியும்.
ஏர் மகாராசன்
ஓவியம்:
ஓவியர் மருது

செவ்வாய், 22 ஜனவரி, 2019

கல்விப்புல ஆய்வரங்கில் சொல் நிலம் : மு.செல்லமுத்து




மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் தமிழியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திரு மு.செல்லமுத்து அவர்கள், எனது கவிதைத் தொகுப்பான சொல்நிலம்  நூல் அறிமுகத்தை முன்வைத்துப் பேசியதன் சாரம்.

ஏர் மகாராசன்  மதுரைக்கு அருகிலிருக்கும் சின்ன உடைப்பு என்னும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேளாண்மை. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, தொல்லியல்,சூழலியல், தமிழியல், மாற்று அரசியல், எளிய மக்களின் வாழ்வியல் அசைவுகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றுகிறவர். தொன்மை பாதுகாப்பு மன்றம், மக்கள் தமிழ் ஆய்வரண், ஏர் இதழ் போன்று ஈடுபாட்டோடு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியராகவும், தற்போது ஒரு பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுவதாகவும் இந்நூலாசிரியர் குறித்த அறிமுகத்தை முதலில் தெளிவுபடுத்தினார். பின்னர், இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருந்தது போல்,

“நனவிலும் கனவிலும்
 பாடாய்ப் படுத்தும்
 நினைவுகள்,
 இப்படியான
 கவிதைகளில் தானே
 செழித்து நிற்கின்றன”
என்ற வரிகளை நினைவுகூர்ந்தார்.

 இந்நூலில் கருச்சொல், நிழல் வனம், கூதிர்காலம், அகக் கண்ணர்கள், அலை நிலத்து அழுகை, கெடுநகர், நிலப்படுகொலை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலை, மனங்கொத்தி, அழுகைத்தமிழ், ஆயுட்காலம், அறத்தீ மனிதர்கள், ஈழப்பனையும் குருவிகளும், உறவுக்கூடு, துயர்ப்படலம், ஆழிமுகம், செந்நெல் மனிதர்கள், பாழ்மனம், ஈசப்பால் போன்ற பல்வேறு பாடுபொருளில் தலைசிறந்த 52 கவிதைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்நூலாசிரியர் மானுட சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சனைகள் பலவற்றைக் கவிதைகளாக்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."
என்கிற கவிதை வரிகளைக் கோடிட்டுக்காட்டி, விவசாயத்தை தன் குலத்தொழிலாக ஏற்று தன் மண்ணையும் அதுசார்ந்த மக்களையும் பெரிதும் நேசிப்பவராக வாழ்கிறார் எனவும், சமூகத்தின் மீதான தனது சிந்தனைகளை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைக் கொள்கையில் நின்று பேசியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

சொல்நிலம் என்கிற இக்கவிதைத் தொகுப்பனாது பல்வேறு பார்வையில் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஓரு நல்ல இலக்கியப்படைப்பு எனவும் குறிப்பிட்டார்.

        எந்தவொரு படைப்பாளியும் தன் படைப்பில் அடையவேண்டிய உச்சநிலையை நோக்கியே பயணப்படுவர். இலக்கியவாசிப்பில் பெரும் ஈடுபாட்டோடு செயல்படும் வாசகர்களின் மனங்களில் அவ்வாறான படைப்புகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.

 தொல்காப்பியம், சங்கஇலக்கியம், நவீனவாசிப்பு போன்ற பல்வேறு தமிழிலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்து இந்நூலாசிரியர் தனது படைப்பின் பாடுபொருளை திட்டமிட்டு கவிதைகளாக்கியுள்ளார் எனத் தாம் உணர்ந்ததாகவும் அவையில் குறிப்பிட்டார். தான் பிறந்த சிவகங்கை மாவட்ட வட்டார வழக்கிலும் கவிதைகள் புனையப்பட்டுள்ளன என்றும், இவரது கவிதைகள், வாசிக்கும் வாசகனுக்கு புதிய புதிய விளக்கங்களைத் தருவதால் இப்படைப்பு நிச்சயம் காலம்கடந்தும் பேசப்படும் எனவும் குறிப்பிட்டார்.

 எண்ணற்ற பதிப்புக்களைக் கண்ட ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற கவிதைத்தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா,

 “இந்த பூமி உருண்டையை
 புரட்டிவிடக்கூடிய
 நெம்புகோல் கவிதையை
 உங்களில் யார் படைக்கப்போகிறீர்கள்”

என்ற வினாவை எழுப்பியிருந்ததாகவும், ‘சொல்நிலம்’ என்ற கவிதைத்தொகுப்பின் வழி கவிஞர் ஏர் மகாராசன் அதைச்செய்ய முயன்றுள்ளார் எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். எனவே, இந்நூல் முயற்சி பாராட்டத்தகும் என்கிற அடிப்படையில் இவரது நூல் அறிமுகம் அமைந்திருந்தது.

எண்ணற்ற கலந்துரையாடலோடு இறுதிவரை அரங்கமும் இன்புற்றிருந்தது. திட்டமிட்டவாறு நிகழ்வும் இனிதே நிறைவடைந்தது.

சனி, 12 ஜனவரி, 2019

உழைப்பின் உற்பத்தியே மொழி : மகாராசன்


அய்வகை வெளிகள் சூழ்ந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்கிற நிலப்பகுதியிலே சமூகவெளி அமைந்திருக்கிறது. இச்சமூக வெளியானது முற்றுமுழுதான ஒருமித்த கூறுகளால்  ஆனதல்ல. எண்ணற்ற இனக்குழுக்களும், பல்வேறு தேசிய இனங்களும் தமக்கான எல்லைக்  கோடுகளை வகுத்துக்கொண்டு தனித்த அடையாளங்களோடு திகழ்கின்றன. இவ்வாறான வெவ்வேறுபட்ட கூறுகளைக் கொண்டதாகச் சமூகவெளி அமைந்திருப்பினும், மொழி அல்லாமல் சமூக வெளியின் இயக்கம் இல்லை; சமூகவெளி அல்லாமலும் மொழியின் இயங்குதல் இல்லை. ஆக, சமூகத்திற்கும் மொழிக்கும் இயங்குதல் நிலையில் பிணைப்பு உண்டு.

சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது. மொழியின் இயங்கியல் என்பது மனிதகுல வரலாற்றோடு சேர்ந்த இருகோட்டுப்பாதையாக அமைந்திருக்கிறது. மனித சமூகத்தில் புழங்கிவரும் மொழியின் தோற்றம் குறித்துப் பல்வேறு விவரிப்புகள் உள்ளன.

மொழி குறித்து நிலவும் இவ்விவரிப்புகளில் இருவகைப் போக்குகள் காணப்படுகின்றன. அதாவது, மனிதர்களுக்கிடையில் கருத்தைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படும் ஒரு கருவியாக  மட்டுமே  மொழியைக் கருதும் நிலையும், உயிரோடும் உணர்வோடும் தொடர்புபடுத்தப்பட்டு அதீதப் புனிதத்தோடு மொழியைக் கருதுவதும் சமூகத்தில் இருந்து  கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மொழி குறித்த அறிவியல் வழிப்பட்ட சமூகவியல்  சிந்தனைகள் இதுவரையிலும் நிலவுகிற மொழி குறித்தக் கருத்துப் படிமங்களிலிருந்து  வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஒரு சமூகத்தின் இயங்கியல் என்பது மனிதர்களை மய்யமிட்டுத்தான் அமைந்திருக்கின்றது. அதனால்தான், ‘மனித வரலாற்றின் முதல் நிபந்தனையாக உயிருள்ள தனி மனிதர்கள் இருக்க வேண்டும்’ என்கின்றனர் மார்க்சும் எங்கெல்சும். மனிதகுலத்தின் தோற்றம் குறித்து இருவேறு கருத்துருவங்கள் நிலவுகின்றன. நம்பிக்கை சார்ந்த மெய்ப்பிக்க இயலாமற்போகிற கருத்து முதல்வாதச் சிந்தனைகள் ஒரு புறமும், அறிவியல்வழி மெய்ப்பிக்கப்பட்ட / மெய்ப்பிக்க ஏதுவாக உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இன்னொரு புறமுமாக விரிந்த அளவிலே விவரிப்புகளை முன்வைக்கின்றன.

பூமியை மய்யமாகக் கொண்டுதான் சூரியன் உள்ளிட்ட அனைத்துக் கோள்களும் சுழல்கின்றன எனும் ‘பூமி மய்யக் கொள்கை’ பதினாறாம் நூற்றாண்டு வரையிலும் சமூகத்தில் நிலவி வந்தது. இக்கொள்கைக்கு மாற்றாகக் ‘கதிர்மய்யக் கொள்கை’யை  ‘வானக்கோள்களின் சுற்றுகள்’ (Derevolutionibus oribum conelestum) எனும் நூலின் வழியாக அறிவித்தவர் கோபர்  நிக்கஸ் எனும் இயற்பியல் அறிஞர்.

‘பூமி உருண்டையானது; அது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ எனச் சொன்ன கோபர் நிக்கசின் கதிர்மய்யக் கொள்கையானது, இயற்கை விஞ்ஞானம் தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்த புரட்சிகரமான செயலாக இருந்தது என்பார் எங்கெல்ஸ்.

இதைப்போலவே, ‘ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிகளாகப் பரிணமித்துத் தாவரங்களும் விலங்குகளும் தோன்றுகின்றன’ என்பதை விளக்கும் வகையில் ‘இயற்கைத் தேர்வின் மூலம் இன வகைகளின் தோற்றம் பற்றி ’ எனும் நூல் சார்லஸ் டார்வின் எனும் அறிஞரால் முன் வைக்கப்பட்டது. டார்வின் விளக்கிய அப்பரிணாமக் கோட்பாடானது, பரிணாமக் கருத்துகளின் வளர்ச்சியை நிறைவாக்குவதாகவும் நவீன உயிரியலின்  அடித்தளமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மனிதர் விலங்குலகிலிருந்து, குறிப்பாக மனிதக் குரங்கிலிருந்து தோன்றினர் எனும் டார்வினின் கண்டுபிடிப்பானது, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் நிலவிய கருத்துகளின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், டார்வின் போதனை அக்காலத்தில் மனிதன் தோற்றம் பற்றி நிலவிய கருத்துகளில் ஒரு புரட்சியைக் குறித்தது என்கிறார் இ.லி.அந்திரேயெவ்.

மனிதகுலத் தோற்றம் குறித்து நிலவிய கருத்து முதல்வாதச்   சிந்தனைகளுக்கு நடுவே, டார்வின் தத்துவமானது இயக்கவியல் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் உருக்கொள்வதற்கான இயற்கை அறிவியல் காரணிகளில் ஒன்றாகவும் அமைந்திருந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றிய பரிணாம வளர்ச்சிக்கு இயற்கைக் காரணிகள் வழிகோலியிருக்கின்றன. குரங்கிலிருந்து மனிதராக மாறிய இடைநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதற்குப் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. வேறெந்த வெளிச்சக்திகளின் தலையீடும் இல்லாமல் தாவரங்களும் விலங்குகளும் தோன்றியிருக்கின்றன. இத்தகைய ‘தாவரங்களும் விலங்குகளும் வாழ்வதற்கு உகந்த வகையில் போதுமான அளவுக்குப் பூமி குளிர்ச்சியடையப் பத்து கோடி ஆண்டுகளுக்கும் சிறிது அதிகமாகவே கடந்துள்ளன’ என்கிறார் வில்லியம் தாம்சன் எனும் இயற்பியல் அறிஞர். ஆகவே, குரங்கிலிருந்து மனிதக் குரங்கிற்கும், மனிதக் குரங்கிலிருந்து மனிதராகவும் தோன்றுவதற்கு இலட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றிருக்க வேண்டும்.

நீண்ட நெடிய காலகட்டத்தின் மிக முக்கியமான படிநிலை வளர்ச்சியாக முதல் தாவரங்களும் முதல் விலங்குகளும் தோன்றியதை அடுத்து, ‘முதல் விலங்குகளிலிருந்து பிரதானமாகப்  பின்வந்த வேறுபாடுகளினால் அனேக வகைகள், வரிசை முறைகள், குடும்பங்கள், வம்சங்கள், இனங்களான விலங்குகள் தோன்றி வளர்ந்தன. கடைசியாக நரம்பு மண்டலம் முழுவளர்ச்சி பெற்ற முதுகெலும்புள்ள விலங்குகளும் தோன்றின. இவைகளின் மத்தியிலிருந்து இறுதியாக இயற்கை தன்னைத்தானே உணரும் சக்தி பெற்ற முதுகெலும்புள்ள விலங்கான மனிதனும் தோன்றினான்’ எனும்போது, மனிதத் தோற்றம்  என்பது  திடுதிப்பென்ற தோற்றமாகக் கருத முடியாது. மனிதர் பல்வேறு வரலாற்று வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்தே தோற்றம் கொண்ட உயிரி என்பதாகத்தான் சமூக வரலாற்றுத் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.

மனிதக் குரங்கினத்திலிருந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்பதற்காக, மனிதக் குரங்கினத்தையும் மனித இனத்தையும் ஒரே மாதிரியாக வரையறுக்க முடியாது. குரங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன. ‘உழைப்பில்தான் மனித சமூகத்திற்கும் குரங்குகளின் கூட்டத்திற்கும் இடையிலான வேறுபாடு அடங்கியுள்ளது’. மனிதக் கூட்டத்தைப் போலவே குரங்கினங்களும் உயிர் வாழ்கின்றன. ஆனால், உயிர் வாழ்வுக்குத் தேவையானவற்றைக் குரங்கினங்கள் உற்பத்தி செய்வது கிடையாது. இயற்கை வழங்கியுள்ளவற்றில் தமக்குத் தேவையானதைக் கண்டடைந்தோ அல்லது தேடியலைந்தோ எடுத்துக் கொள்ளும் அவ்வளவுதான். குரங்கினங்கள் இனப்பெருக்க உற்பத்தியைத் தவிர வேறெந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. இதனாலேயே மனித இனம் குரங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அதாவது, மனித இனம் குரங்கினத்திலிருந்து விலகி ‘நிமிர்ந்து நேராக நடப்பதற்கு மாறியதுதான் உயிரியல் ரீதியாக முதன்மையான அம்சமாகும்’எனலாம்.

நிமிர்ந்து நடக்கும் தன்மையைப் பெற்றதன் காரணமாகவே தனக்குத் தேவையான உணவு ஆதாரங்களைத் தேடியும், தன்னைச் சுற்றியுள்ள இயற்கை சார்ந்த பொருட்களின் மீது கவனத்தைச் செலுத்தியும் மனித இனம் உயிர் வாழ்கின்றது. மேலும், ‘பாதத்திலிருந்து கை வேறுபாடு அடைவது என்பதும், நிமிர்ந்த நடை என்பதும் தோற்றம் பெற்றதால் மனிதக் குரங்கிலிருந்து மனிதன் வேறுபட்டு நின்றான்’. ஆக, குரங்கினத்திற்கும் மனித இனத்திற்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று, நடப்பதற்குப் பயன்பட்ட முன்னங்கால்கள் மனித  இனத்திற்குக் கைகளாக ஆகியிருப்பதுதான்.

இந்தக் கைகள்தான் மனித ‘வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் சாதனமாகவும், பற்களுக்கு அடுத்தபடியாக முதல் இயற்கை உழைப்புக் கருவியாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது’. கைகள்தான் மனித சமூக வளர்ச்சியின் முதல் கட்டமாகும். இந்தக் கைகளே உழைப்பைச் செலுத்துவதற்குத் தோற்றுவாயாக அமைந்தன.

கையின் வளர்ச்சியுடனும் அதன் உதவியுடனும் இயற்கை மீது வினைபுரியத் தொடங்கும் போதுதான் உழைப்பு தொடங்குகிறது. இதனால், ‘இயற்கையின் மீது ஆளுகை கொள்வது தொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடைய அறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருட்களின் அதுவரை அறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போல அவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பர ஆதரவு, கூட்டுச்செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்; ஒவ்வொரு தனிநபருக்கும் இவ்விதக் கூட்டுச்செயலின் நல்லாதாயத்தைத் தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடிவர உழைப்பின் வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது’. ஆக, மனித இன அறிவு வளர்ச்சிக்கும் கூட்டுணர்வுக்கும் அடித்தளமாக இருப்பது உணவு ஆதாரங்களுக்காக மேற்கொண்ட உழைப்புதான். இவ்வுழைப்புதான் குரங்கினத்திலிருந்து மனிதரை வேறுபடுத்திக் காண்பிக்கிறது எனலாம்.

மனித சமூக வாழ்நிலைக்கு, குறிப்பாக உணவு ஆதார நிலைகளுக்கு அடிப்படையாக இருப்பது உழைப்புதான். கற்களைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுதலும், நெருப்பை உண்டாக்குதலும், கூர்நகங்களையும் பற்களையும் பயன்படுத்தலும் உழைப்பின் ஆரம்ப வடிவங்கள் எனலாம். இந்த ‘உழைப்பின் ஆரம்ப வடிவங்களிலேயே கூட்டு நடவடிக்கை, கூட்டுறவு இன்றி உழைப்பு சாத்தியமில்லை’.  ஏனெனில், இயற்கைச் சீற்றங்களில் இருந்தும்,  கொடிய விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு   மட்டுமல்லாமல், தனக்குத் தேவையான உணவு ஆதாரங்களை வேட்டையாடுவதற்கும் பிற மனிதர்களின் கூட்டுறவு தேவைப்படுகிறது. இதனால் தன்னை ஒத்த மனிதர்களுடன் ஒத்துழைத்துச் செயல்படும் குணத்தால் மனிதர்கள் ஒருங்கிணைகிறார்கள்.

ஆக, ‘மனிதனாக மாறுவதற்கும் மனிதனாக இருப்பதற்கும் செயற்கைக் கருவிகளை வைத்திருப்பது மட்டும் போதாது. அவனுக்கு மற்ற மனிதர்கள் தேவை. அவர்களுக்கும் அவன் தேவை. இதுதான்  உழைப்பிற்கான கண்டிப்பான முன் நிபந்தனை’ என இருக்கும்போது, மனிதக் குழுக்களும் கூட்டுகளும் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகிறது. இவ்வாறாக, ‘உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவை என்பது ஓர் உறுப்பைப் படைத்தது. மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத குரல்வளை மெதுவாக, ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் (Modulation) மூலம் இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்ய மாற்றியமைக்கப்பட்டது. வாயின் உறுப்புகள் படிப்படியாக ஓர் தீர்க்கமான ஒலிக்குப்பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டன’. இந்நிலையில், சக மனிதர்களை இணைப்பதற்கும், தங்களின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும்,  தமக்கு ஏற்படும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கும் ஏதோ ஒன்று  தேவைப்பட்ட நிலையில் பேச்சுதான் அவர்களுக்குக் கை கொடுக்கிறது.

ஆக, விலங்குகளுக்கு வாய்க்காத இப்பேச்சு வடிவம்தான் மனிதர்களாக இணைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது எனலாம். இந்த மிக முக்கியமான வளர்ச்சிக் கட்டம் குறித்து எங்கெல்சு குறிப்பிடுகையில், முன்னங்கால்கள் கைகளாகவும் குரல்வளை பேசும் உறுப்பாகவும் மாறியதுதான் மனிதப் படிமலர்ச்சியில் ஏற்பட்ட முதல் புரட்சி என்கிறார்.

பேச்சு மனிதரோடு இணைந்த ஒன்று. இந்தப் பேச்சு என்பது தேவையிலிருந்துதான் தோன்றுகிறது. ஏனெனில், ‘உணர்வு போன்றே மொழி மற்ற மனிதர்களுடன் உறவு கொள்வதன் தேவையிலிருந்தே; இன்றியமையாமையிலிருந்தே தோன்றுகிறது’. ஏதோ ஒரு வகையில் மனிதத் தேவைதான் மனிதர்களிடம் பேச்சை உருவாக்குகிறது. உணவு ஆதாரங்களைச் சேமிப்பதற்கும், வேட்டையாடுவதற்கும், கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் மனிதக் கூட்டு என்பது அவசியமானதாக அமைந்து போனதோடு, அம்மனிதர்களிடையே அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதற்கும் ‘பேச்சு’ என்பது தேவையாகி நிற்கிறது.

மனிதக் கூட்டின் மூலமாக நடைபெறக்கூடிய இன்னொரு வினை உற்பத்திச் செயல்பாடு. உழைப்பின் மூலம் வெளிப்படும் உற்பத்திச் செயல்பாட்டை மேற்கொள்கிறபோது மனிதப்பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத வினையாகவும் ஆகிறது. ‘உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூற வேண்டிய அளவுக்கு அது மானுட வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக’ இருப்பதைப்போல, பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத அடிப்படை நிபந்தனையாகவும் அமைந்திருக்கிறது. பேச்சை வெளிப்படுத்தும் மனிதர்களின் இச்செயலானது, இயற்கை வாழ்நிலைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, சமுதாய வாழ்நிலைக்கும் அடிப்படையான தேவையாகவும் முன்நிற்கிறது.

மனிதக் குரலாய் வடிவெடுக்கும் பேச்சு உருவானதற்கு முன்பே மனிதர்களிடையே பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது, உணர்ச்சிகளை - தேவைகளை - தாம் நினைப்பதையெல்லாம் முகபாவனைகள், சைகைகள் வழியாகவும், போலியாக நடித்துக் காட்டுவதன் வாயிலாகவும், பிறருக்கு உணர்த்த வேண்டியதைக் கிறுக்கியும் வரைந்தும் காண்பித்து ஏதோ ஒருவகையில் பரிமாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். இப்பரிமாற்ற நிகழ்வுகளில் புரிந்து கொள்வதிலும் - புரிய வைப்பதிலும் போதாமைகள் ஏற்படும்போது, அப்போதாமைகளை ஈடுசெய்வதன் தேவையிலிருந்தும் ‘பேச்சு’ உருவாகியிருக்க வேண்டும். ஆக, மனிதத் தொடர்புக்கு அவசியம் பேச்சு. இப்பேச்சின் வழியே மனிதக்கூட்டு ஏற்படுகிறது. மனிதக் கூட்டின் செயல்பாடு உழைப்பு; உழைப்பின் வெளிப்பாடு உற்பத்தி நடவடிக்கை என்றாகிறது.

‘முதலில் உழைப்பு, அதன் பின்னரும், பிறகு அத்துடன் சேர்ந்தும் பேச்சு - இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாக மாறியது. மனித மூளை மனிதக் குரங்கின் மூளையை  ஒத்ததாக இருந்த போதிலும், மனிதக் குரங்கின் மூளையைவிட இன்னும் பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின் வளர்ச்சியுடன் கைகோர்த்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியான கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவது என்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போலவே, மூளையின் வளர்ச்சி முழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன’. ஆக, உழைப்பும் பேச்சும்தான் மனிதப் புலன்களின் வளர்ச்சிக்கும் மூளையின் படிப்படியான வளர்ச்சிக்கும்  காரணமாக அமைந்திருக்கின்றன எனலாம்.

மேலும், ‘மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவு பெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன் ஆகியவற்றின் வளர்ச்சி, உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்திய எதிர்ச் செயல்பாடு, உழைப்பு - பேச்சு இவற்றின் கூடுதலான  வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது’ எனலாம்.

மனிதர்களும் சமுதாயமும் தோன்றியது ஒரே நிகழ்ச்சிப் போக்காக அமைந்திருப்பதைப் போலவே, மனித உழைப்பு நடவடிக்கையும் பேச்சும்  ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இயங்கியல் கூறாக அமைந்திருக்கிறது. பேச்சு மனிதக் கூட்டின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. அம்மனிதக் கூட்டின் பரிமாற்றத்திற்கு மட்டும் பேச்சு உதவுவதில்லை. அதற்கும் மேலாக, தொழிலில் - உற்பத்தியில் - உழைப்பில் மனிதர்கள் ஈடுபடும்போதும் உதவுகிறது.

‘மனிதன் தொழிலில் ஈடுபடாது கருவிப் பிரயோகம் பற்றிய அனுபவமில்லாது, மொழியை இயற்கையின் அநுகரணமாகவும் நடவடிக்கைகளையும் பொருட்களையும்  குறிக்கும் சின்னமாகவும் கருத்து நிலையில் தோற்றுவித்திருக்க முடியாது. ஆற்றல் மிக்க ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டதான சொற்களை மனிதன் தோற்றுவித்ததற்குக் காரணம், அவன் வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம் முதலிய மெய்ப்பாடுகளுக்கு ஆட்படுபவன் என்பதால் மாத்திரமன்று, அவன் தொழில் செய்யும் உயிரினம் என்பதாலுமாகும்’ என ஏண்ஸ்ற் ஃபிஷர் கூறுவதிலிருந்து, உழைப்புடன் மனிதர்கள் கொண்டுள்ள இன்றியமையா உறவின் காரணமாகவே மனிதப்பேச்சு உருவாகிறது எனலாம்.

மனிதர் வெளிப்படுத்தும் பேச்சும், அப்பேச்சு வெளிப்படுத்தும்போது உடன் பிறக்கும் சிந்தனையும்தான் மனிதரைத் திட்டவட்டமாக வேறுபடுத்திக் காட்டின. ஆக, பேச்சு என்பது மனித உயிர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகிறது. மனித உயிர்களின் இயல்பூக்கங்களாக உள்ள பசித்தேவைக்கும், பாலுறவுத் தேவைக்கும், தூக்கம் போன்றவற்றிற்கும் பேச்சு என்பது அவசியப்படாது. ஆனால், ஒரு மனித உயிர் பிற மனித உயிர்களுடன் உறவுபடுத்திக் கொள்ளவேண்டிய நிலையில் பேச்சு அவசியமாகிறது. அதாவது, மனித உயிர்கள் சமூகமாக மாறும் நிலையில் பேச்சு தேவைப்படுகின்றது. மனிதர் தனித்து ஒதுங்கி வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட நிலையில், சமூக மனிதர்களோடு கலந்து கொள்வதற்குப் பேச்சைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மனித உயிர்கள் சமூகமாக மாறும் வளர்ச்சிக் கட்டங்களில், மனித உயிர்களால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும் சைகைகளும் அர்த்தம் கொள்ளத் தொடங்குகின்றன. இந்த அர்த்தப் புலப்பாடுதான் ‘மொழி’ எனப்படுகிறது. அதாவது, ‘வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவி கொண்டு இவற்றிற்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும்தான் மொழி பிறந்தது’. மொழி என்பதற்கு அடிப்படை பேச்சொலி என்றாலும்கூட, எல்லாப் பேச்சொலிகளும் மொழி என்றாகி விடுவதில்லை. முறைப்படுத்தப்படுகிற பேச்சொலிகளே மொழி வரம்பிற்குள் வரமுடிகிறது. இதைக்குறித்து ஜமாலன் கூறும்போது, மொழி என்பது அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சப்தம் அல்லது ஓர் உடலில் இருந்தோ பொருளில்  இருந்தோ உருவாகும் ஒரு சப்த ஆற்றல் (ஒலி ஆற்றல் / Sound energy). இந்தச்  சப்தம் குறியீடுகள் வழியாக அடையாளப்படுத்தப்படும் வண்ணம் பெயரிடுதல் என்பதாக ஒழுங்கமைக்கப்படும்போது மொழி உருவாகிறது என்கிறார்.

மனிதர்கள் வெளிப்படுத்திய பேச்சொலிகளுக்கும், எதிர்கண்ட பொருட்களுக்கும் குறியிட்டுப் பெயரிடுவதன் விளைவாக மொழி உருவாகிறது; சொல்லாடல்கள் உருவாகின்றன. குகைகளிலும் பாறைகளிலும் பொறிக்கப்பட்ட அடையாளங்களும் குறியீடுகளும் எழுத்துருவம் கொள்கின்றன. எழுத்துருவங்களும் பேச்சொலிகளும் சேர்ந்து ‘மொழி’ என்பதாகத் தோற்றம் கொள்கிறது. இவ்வாறாக,  மனித உழைப்பிலிருந்தும் அதனுடைய தொடர்ச்சியான மாற்றப் படிநிலைகளில் இருந்தும்தான் மொழியின் தோற்றம் அமைந்திருக்கிறது எனலாம்.

சமுதாய உறுப்பினர்களிடையேயான பொருளுடைய பேச்சு மூலமே கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பொருளுடைய பேச்சில் சொற்கள் வாக்கியங்களாகக் கட்டமைக்கப்படுகின்றன. இவ்வாறு தமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடிய அனைத்துத் தனி நபர்களையும் சமூகம்  உள்ளடக்கியுள்ளது. பொதுவானதொரு பேச்சு வடிவம் இருப்பதாலேயே இவர்களால் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. ஆதி நிலைமைகளில், ஒவ்வொரு சமூகமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தனக்கென ஒரு சொந்த மொழியையோ அல்லது குல வழக்கையோ கொண்டிருக்கிறது. இந்த மொழி அல்லது குல வழக்கு அந்த சமூகத்தின் பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்ததாகும் எனக் குறிப்பிடும் ஜார்ஜ் தாம்சன், எழுத்துக் கலையின் கண்டுபிடிப்பு பேச்சின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு புதிய கட்டமாகும் என்கிறார்.

மேலும், எழுதப்பட்ட பேச்சு என்பது வாய்மொழிப் பேச்சைப்போல அப்போதைக்கப்போது தன்னியல்பாக வெளிப்படுவதல்ல. மாறாக, முன் தயாரிப்போடு செய்யப்படுவதும், அந்தந்த நேரத்தில் பேசவேண்டிய  உடனடித் தேவையிலிருந்து விடுபட்டு நிதானமாகச் சிந்தித்துக் கருத்துகளைக் கூறுவதற்குப் பயன்படுவதாயும் உள்ளது. எழுதப்பட்ட பேச்சு, வாய்ப்பேச்சுப் போல வாய், காது ஆகிய புலன்சார்ந்த அம்சத்தைக் கொண்டதல்ல. அந்தப் புலன் சார்ந்த அம்சத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு ஒரு உயர்ந்த மட்டத்திலான அருவத்தன்மையைப் பெறுகிறது. எழுத்துமுறை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகுதான் மனிதன், பேச்சு என்பது அதற்கே உரிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஒரு புற யதார்த்தமாக இருப்பதை உணர்ந்தான். பின்னர், அந்த விதிகளை இலக்கண விதிகளாக முறைப்படுத்தத் தொடங்கினான். எழுத்தறிவு பேச்சார்ந்த கலைகளுக்குப் புதிய தன்மையை வழங்கியதுடன் அறிவியல் பகுத்தாய்வுக்கான இன்றியமையாத சாதனமாகவும் அமைந்தது என எழுத்து மரபின் தோற்றச் சூழல் குறித்தும் விவரிக்கிறார் ஜார்ஜ் தாம்சன்.

அதாவது, மனிதர்கள் தோன்றிய காலத்தில் தம்முடைய செயல்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த சைகைகளைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் ஒலிகள் மூலம் குரல்களை வேறுபடுத்திக் காட்டிய அவர்கள், தமது செயல்பாடுகளையும் கருத்துகளையும் தமக்குப் பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவான குறியீடுகளைப் பயன்படுத்திக் கற்களிலும் பாறைகளிலும் பொறித்து வைக்கும் வழக்கத்தைப் பயின்று வந்திருக்கிறார்கள். இவ்வழக்காறே மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டதின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால கட்டங்களைச் சார்ந்த  முதுமக்கள் தாழிகள், ஓவிய வரைவுகள், மண்பாண்டங்கள், காசுகள், அணிமணிகள், முத்திரைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில்கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, ஜப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாக சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை கொண்டிருப்பதாகவும் கருதுகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மொழியின் வளர்ச்சியில் குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெருவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும் குறியீடுகள் திகழ்ந்தன. குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்பு குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்பு குறைந்தும் அமைகின்றன. குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்புதான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற்காலத்து மட்பாண்டக் குறியீடுகள்தான் தமிழ் எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன என்கிறார் இராசு.பவுன்துரை.

மொழியைப் பற்றி எடுத்துரைக்கும் எஸ்பெர்ஸன், மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்குப் பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான்; தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான்; பின்னர் நாளடைவில் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான்; அதன் பிறகு பொருளின் பண்புகளைத் தன் செய்கையால் அறிவித்து அதனைப் பெற்று வந்தான்; மூன்றாவதாகக் குறுக்கெழுத்துப்போல ஒரு பொருளுக்கு ஓர் எழுத்து இட்டு வழங்கினான்; அடுத்து எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழியானது உருப்பெறுகிறது என, எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கமாகக் கூறியுள்ளார்.

மொழியின் தோற்றத்தையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் பரிதிமாற்கலைஞர், உலகின் கண்ணே மக்கள் ஒருங்குகூடி வாழவேண்டியவராதலின், அவர்கள் அடிக்கடி தங்கள் கருத்துகளை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக்கொள்வது அவசியமாயிற்று. ஆகவே, அவர்கள் கை, வாய் முதலிய உறுப்புகளால் பலவிதச் சைகைகள் செய்துகாட்டித் தங்கள் கருத்துகளை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை இயற்கை மொழி என்பர். இவ்வியற்கை மொழி, முதலில் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வி அளவிலும் பரவிற்று. அதாவது, சில ஒலிகளும் ஒலிக்கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாகி அச் சைகைகளுடன் கூடின. அவ்வொலிகளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவைதாம், போறல் வகையானும், சுவை வகையானும், அறிகுறிவகையானும் எழுந்தனவாம் என்கிறார்.

இம்மூவகை குறித்து விவரிக்கும் அவர், ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதனால் பலவகைப்பட்ட மிருகங்களின் ஒலி வேறுபாடுகளையும் நன்குணர்ந்து தமக்குள்ளே அவற்றை அறிந்து கொள்ளுமாறு அவ்வொலிகளினின்றும் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர். ஒன்று பிறிதுபோல் கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் போறல் வகையால் எழுந்தன. மக்கள் சுவை உடையவர் ஆதலின், அவற்றுக்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவெல்லாம் சுவை வகையால் உண்டாகிய சொற்களாம். அறிகுறி வகையால் எழுந்த பகுதிகள் நாவின் சைகை என்பதனடியாகப் பிறந்தன. நாவின் சைகையும் கைச்சைகையின் உதவிக்காக வந்து, அதனைச் சிலநாள் பாதுகாத்துப் பார்த்தும் அது கருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால், அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. இவ்வாறு நடாத்தினதால் சொற்கள் பல உண்டாயின என்கிறார்.

மொழியின் தோற்றம் குறித்தும், அதன் ஒலி மற்றும் வரி வடிவங்கள் குறித்தும் ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழியானது காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழி எவ்வாறு வடிவமைந்துள்ளது என விளக்கி, காலப்போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆராய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இதுவே மொழி வரலாறு எனப்படுகிறது. அவ்வகையில், மொழி வரலாற்றின் தொல்லியல் சார்ந்த அடையாளங்கள் நிரம்பிக் கிடப்பதே எழுத்தின் வரலாறாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து..

ஆதி பதிப்பகம் வெளியீடு.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு


பண்டைக் காலத் தமிழகத்தில் எழுத்துக் குறிகளைப் பயன்படுத்தி ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப் பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட தாழை மடல்கள், ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெறவில்லை. அண்மைக் காலத்தைச் சார்ந்த ஓலைச் சுவடிகளே  கிடைத்துள்ளன. ஆயினும், பல்லாயிரம் மற்றும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றில், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய வெவ்வேறு எழுத்து வடிவங்களைக் காணமுடிகிறது.

எழுதுவதாகிய வரிவடிவங்கள் காலம்தோறும் சிறிது சிறிதாகவும் வெவ்வேறாகவும் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இத்தகைய எழுத்து வடிவங்கள் பற்றிய எடுத்துரைப்பைத் தொல் வரி வடிவவியல் என்பர் தொல்லியலார்.
தொல் வரி வடிவவியல் சார்ந்த விவரிப்புகள் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்கும் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களைத் தமிழகத்தின் குகைக் கல்வெட்டுகள் வழியாக அறிய முடியும். இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் பல்வேறு கருத்து நிலைகள் நிலவுகின்றன.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில்  எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. பாறைகளிலும் தூண்களிலும் பிராகிருத மொழியில் பொறித்து மக்கள் அறியும்படியாகச் செய்திருக்கிறார் அசோகர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவைப் பிராமி என முதன் முதலாகப் பெயரிட்டுக் கூறியவர் பியூலர் ஆவார். பிராமி எனும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும், தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப்பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருந்ததினால், பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகளைப் பிராமி வரிவடிவத்தின் தென்னக வகை என அழைக்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.  அதேவேளையில், தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ் பிராமி என்று பெயரிட்டு அழைப்பார் ஐராவதம் மகாதேவன்.

பொதுவாகவே, பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் உருவாகி இருக்க வேண்டும் எனும் கருதுகோள்தான் பெரும்பாலும் நிலவுகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டெழுத்துகளைத் தமிழ் பிராமி எனக் குறிப்பது தமிழின் தனித் தன்மையை ஏற்க மறுக்கும் நோக்கம் கொண்டதாகக் கருதும் நடன.காசிநாதன், தமிழ் பிராமி என்று அழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியில் இருந்து இவ்வெழுத்து தோன்றியதே எனினும் அதில் இருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறு எனில், பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமி என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும், அப் பிராமி எவ்விடத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவர்கள் உருவாக்கிக் கொள்கையில், மற்ற பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கு என ஒரு எழுத்தை உருவாக்கிக்கொண்டு இருக்க மாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து என, தமிழின் தனித்ததோர் எழுத்து மரபு தனித்து இயங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.

தமிழ் மொழியில் எழுதும் வடிவ முறையினைப் பிராமியாகவும், அவ்வெழுத்து வடிவம் வடக்கிருந்து பெறப்பட்ட ஒன்றாகவுமே பெரும்பாலும் கருதப்பட்டது. ஆனால், அசோகர் காலத்திய கல்வெட்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் வழக்கில் இருந்துள்ளதையும், அவை முறையாக வளர்ச்சி அடைந்து வந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது.

கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்தா’ (சமவாயாங்க சூத்திரம்), ‘பன்னவயன சுத்தா’ என்னும் சமண நூல்களில் அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்து வகைகளுள் 18 வகையான எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் பிராமி எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. பிராமி என்பதே பம்பி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

மேற்குறித்த சமண நூல்கள் எடுத்துரைக்கும் அதே பட்டியலில்தான் தமிழி எழுத்து வகையும் குறிக்கப்படுகின்றது. தமிழ் எழுத்தைப் பிராகிருத மொழியில் தாமிழி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டையத் தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. அவ்வகையில், தமிழி மற்றும் பிராமி என்னும் இவ்விரண்டு எழுத்து வகைகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை; தமிழியும் பிராமியும் வேறு வேறானவை  எனத் தெரிகின்றது.

உலகில் உள்ள எழுத்து வடிவங்கள் யாவும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது.  எழுத்து கடவுளின் ஒரு தோற்றம் என்றும், கடவுளே அதைத் தோற்றுவித்தார் என்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் கருதினர். எகிப்தியர் தோத் என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டது எனக் கருதினர். பாபிலோனியர் நேபோ என்னும் தெய்வத்தாலும்; யூதர்கள் மோசஸ் என்பவராலும்; கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்னும் தெய்வத்தாலும் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதினார்கள்  என்கிற குறிப்பைத் தருகிறார் இரா.நாகசாமி.

இந்நிலையில், பிராமி எழுத்து வடிவமும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது. அதாவது, பிரமனால் இவ்வெழுத்துக்கள் உண்டாக்கப்பட்டதாகக் கருதப்பெற்றதால் பிராமி எழுத்துக்கள் என்று பெயராயிற்று என்றும், பிராமணரிலிருந்து பிராமி எனும் பெயர் பெற்றது என்றும் கூறுவர். அதேபோல, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரின் மகள் பெயரான பம்பியிலிருந்தே பிராமி வந்தது என்பர். ஆக, பிராமி எழுத்து வடிவம் சமயம் / சாதி சார்ந்த அடையாளத்தையே பின்புலமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், பண்டையத் தமிழி எழுத்து வடிவத்திற்கு எந்தவகையான சமய / சாதி அடையாளப் பின்புலங்கள் எதுவும் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறைமையே தமிழி எனக் குறிக்கப்படுகிறது. அதாவது, தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்தியப் பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் இரா.நாகசாமி.

பிராமிக்கும் தமிழிக்கும் பலவகை வேறுபாடுகள் நிறைய இருப்பினும், சில அடிப்படையான வேறுபாடுகளும் இருக்கின்றன. அதாவது, அசோகர் காலத்துப் பிராமியைப்போல் பண்டையத் தமிழியில் கூட்டெழுத்துகள் கிடையாது. மேலும், அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துகள் தமிழியில் உள்ளன. அவை ற, ன, ள, ழ என்கிற எழுத்துகள் ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழியையும் வேறுபடுத்த உதவுகின்றன. அக்காலத்திய இந்த எழுத்து முறைமையைத் தனித்தமிழ் எழுத்து முறைமை எனவும் கூறப்படுகிறது.

குகைப் படுக்கைகள், நடுகற்கள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள், இன்னும் இதரப் புழங்கு பொருட்கள் ஆகியவற்றிலிருந்தும் தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம் இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழி எழுத்துப் பொறிப்புத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழியும் பிராமியும் வேறு வேறு எழுத்து வடிவங்கள் எனினும், பிராமி எழுத்து வடிவம் வழங்கி வந்த கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததே தமிழியின் காலமும் ஆகும் எனப் பொதுவாய்க் கருதப்படுகிறது. அதாவது, பிராமியிலிருந்தே தமிழ் எழுத்து வடிவம் உருக்கொண்டது என்பதற்காகவே தமிழ் பிராமி என்கிற சொல்லால் தமிழி எழுத்து வடிவம் குறிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பது, தமிழியைப் பிராமி எழுத்து வடிவத்தின் உள் வடிவமாக அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

அதேபோலவே, பிராமியின் காலமும் தமிழியின் காலமும் ஒரே காலகட்டமாகக் கணிப்பதிலும் இருக்கிற நோக்கம் என்பதெல்லாம், பிராமிக்கு முந்தியதாகத் தமிழி இருந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனாலும், பிராமி எழுத்து வடிவத்திற்கு முந்திய எழுத்து வடிவமே தமிழி ஆகும். இவ்வரலாற்று உண்மையைத் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...
ஆதி பதிப்பகம் வெளியீடு / 2019.