செவ்வாய், 30 ஜனவரி, 2018

நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் வெளியீடு

தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரைவியலைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வளப்படுத்திய மார்க்சியத் தமிழியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு நினைவுக்கு சின்னஞ்சிறு கைமாறு ஒன்றையாவது செய்திட வேண்டும் என்கிற உள்ளுணர்வு ஊறிக் கொண்டே இருந்தது. கூடவே, நா.வாவின் கருத்தாடல்களை மீளவும் பரவலாக்க வேண்டும் என்கிற விருப்பும் இணைந்து கொண்டது. இதைச் செயலாக்கும் ஒரு முயற்சி தான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி எனும் நூல்.

இந்நூலின் வெளியீட்டு விழாவைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வாஞ்சையுடனும் தோழமையுடனும் நிகழ்த்திக் காட்டியது.

இவ்வமைப்பின் 5ஆவது மாநிலப் பண்பாட்டுப் பயிற்சி முகாம் இராசபாளையத்தின் நீர் காத்த அய்யனார் கோயில் வனப்பகுதியில் உள்ள சிவானந்தா ஆசிரம வளாகத்தில் கடந்த 27.01.18 மற்றும் 28.01.18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

உலக இலக்கியம், தமிழ்க் கவிதை மரபு, நாட்டுப்புற வழக்காறுகள், பண்பாட்டுச் சிக்கல்கள் போன்ற பல பொருண்மைகளில் கருத்துரைப்புகள் நடைபெற்றன. தோழர் மீரான் மைதீன் அவர்கள் இயக்கிய எழுத்தாளர் பொன்னீலன் அவர்களைக் குறித்த ஆவணப் படம், திருவண்ணாமலைத் தோழர்கள் தயாரித்த அறம் செய்யப் பழகு என்கிற குறும்படம் போன்றவையும் திரையிடப்பட்டன. பாட்டு, கவிதை எனத் தோழர்களின் படைப்பு வெளியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி நூலுக்கான வெளியீட்டு அரங்கமும் சிறப்புற அரங்கேறியது.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் எசு.கே.கங்காதரன் அவர்கள் நூலை வெளியிட, தோழர்கள் சொக்கலிங்கம் அவர்களும் தோழர் கண்மணிராசா அவர்களும் முதல் இரு படிகளைப்பெற்றுக் கொண்டார்கள்.

நூல் வெளியீட்டுரை நல்கிய தோழர் எசு.கே.கங்காதரன் அவர்கள், நா.வாவோடு எவ்வகையிலும் நேரடித் தொடர்பு இல்லாத ஒருவர், நாவாவின் எழுத்துகளைத் தேடிப் பிடித்து அவற்றின் ஊடாகத் தமது எழுத்தைக் கொண்டு செலுத்தும் மகாராசன் அவர்களை, நாவாவின் எழுத்துலக வாரிசுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். நாவாவோடு நேரிடையாகவும் ஆய்வுகளோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள எங்களைப் போன்றவர்கள் செய்திடாத ஒரு காரியத்தை நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி நூல் வழியாகச் செய்து காட்டியிருக்கிறார். உழவுத் தொழில் மரபினரான பள்ளர்களும் பள்ளிகளும் தான் இந்தச் சமூகத்தின் ஆதார சுருதிகள் என்பதை நா.வா அவர்களின் இந்தக் கட்டுரைகள் பேசியுள்ளன. நா. வாவின் தொடக்க கால ஆராய்ச்சி இந்தப் பள்ளுப் பாட்டிலிருந்து தான் தொடங்கி இருக்கிறது. உழவர்களைக் குறித்த உரையாடல்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும். மிக அழகான நேர்த்தியான வடிவமைப்போடு இந்நூல் வெளிவந்திருக்கிறது. இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் மகாராசனுக்கும் ஆதி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள் பல. இது போன்று நிறைய நூல்களை வெளியிட வேண்டும் எனப் பேசியது நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந் நூலை நான் வெளிக்கொண்டு வந்தமைக்காகப் பேராசிரியர் முனைவர் ந.முத்து மோகன் அவர்கள், நூலாடை போர்த்திப் பாராட்ட, இறுதியாய்ச் சின்னதோர் ஏற்புரை வழங்கினேன்.

தமிழ்த் தேசியத்தின் இரு பெரும் அறிவு ஆளுமைகளாகத் திகழும் பாவாணர் மற்றும் நா.வானமாமலை ஆகியோரின் எழுத்துகளே எனது எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்கள். தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தமிழ்ச் சமூகத்தைப் புனரமைக்கவுமான பண்பாட்டுக்களத்தில் இவ்விருவரின் எழுத்துகள் தவிர்க்க முடியாதவை. இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமூகத்தில் எந்தப் புரட்சியையும் செய்ய முடியாது. அந்த வகையில், நா.வாவின் நூற்றாண்டுக்கு என்னால் ஆன ஒரு தளுகையே இந்நூல். இந்த முயற்சிக்கு வாஞ்சையுடனும் அன்புடனும் மதிப்புடனும் ஒரு வெளியீட்டு நிகழ்வை நிகழ்த்தியிருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும் மதிப்பும் எப்போதும் உண்டு எனப் பேசி முடித்தேன்.

முன் பின் அறிமுகமே இல்லாத தோழர்களின் இந்த முயற்சியும் ஏற்பாடும் இன்னும் எழுதுவதற்கான தெம்பைத் தந்திருக்கின்றன. இந்த நூல் வழியாக நிறைய தோழர்களின் அறிமுகமும் அன்பும் கிடைத்திருக்கிறது.

இரு நாள் முகாமை ஒருங்கிணைத்தும் விருந்தோம்பல் பண்பை உயிர்ப்பித்தும் காட்டிய தோழர்கள் கண்மணிராசா, அமீம் முசுதபா, செல்வக்குமார், செந்தழல், ஆனந்தி, சரவணன் உள்ளிட்ட தோழர்களின் உழைப்பு மதிக்கத் தக்கவை.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும் தோழர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்.

வியாழன், 18 ஜனவரி, 2018

எனதூர்த் தல புராணம்.

கல்லடுக்குகளின் செதில்களில் வேர்களை நுழைத்தபடி
கோபுர நிழல் மறைப்பில்
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது இச்சிச் செடி.

பசப்பூறிய பூசனத்தின் ஈரத்தில்
நீந்தத் தவித்து
சுற்றுக்கல் புடைப்புகளில்
ஒட்டிக் கிடக்கின்றன
கெண்டை மீன்கள்.

திரிகள் நனைத்து
வளையொலி இசைத்த
உள்ளங்கைக் கோடுகளில்
கரி அப்பிக் கிடக்கின்றன
நெய் கசிந்த மாடக்குழிகள்.

முகமற்ற குறிகள்
புணர்ந்து கிடந்த கருவறைக்குள்
மெல்ல நுழைந்து பார்த்த
சிற்றொளிக் கோடுகள்,
கரைந்து போன
காலடித் தடங்களைத்
தாவியோடி அணைத்திட
சுவர்களில் முட்டி மோதி
அழுது கிடக்கின்றன.

வளர்பிறையும் தேய்பிறையும்
காலத்தில் கரைந்து போனதைத்
தோல் உரித்துக் காட்டியிருக்கிறது
கருநாகத்தின் சட்டையொன்று.

களவு போன கலசத்தைப் பேசியபடியும்,
நஞ்சையும் புஞ்சையும் பறிகொடுத்து
காணிகளில் உழுதவர்கள்
கண்ணீர் மல்க ஊர் விட்டுப் போன திசை வெறித்துத் தவித்தும்,
தொன்மங்களின் பூச்சுகள் கரைய
உயிர் வழியும் கண்களால்
சுதைகள் சுற்றி நிற்கின்றன
கோபுரத்தைச் சுற்றியபடி.

மனிதத் தழுவுதல் வேண்டியும்
ஒற்றையாய் மண்டியிட்டு
வெளியே கிடக்கிறது எருது.

கோயிலுக்குச் சாற்றிய காணிகளும் களவு போயின இப்போதும்.

கருவறைக்குள்
ஒளிந்து கிடக்கும் தெய்வம்
வெளிவருவதாய்த் திட்டம் இல்லை
இப்போதும்
எப்போதும் போலவே.

வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் - பெண்மொழியும் எதிர் மரபும் : மகாராசன்



     சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால், சைவ - வைணவ சமயங்களோ அத்தகைய விலக்கல் முறைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய
ஈடுபாடுகள் போன்றவற்றைத் தமது பக்திநிலைப் பரப்புகளில் படியச் செய்வதற்கான வாய்ப்புகளுக்கு இடமளித்தன. அதனால்தான், சங்ககாலத் திணை இலக்கிய மரபுகளுள் ஒன்றான  ‘அகப்பொருள் மரபு’ பக்திநிலை இலக்கியத்திலும் படிய நேர்ந்திருக்கிறது.

சங்க கால அகப்பொருள் இலக்கிய மரபு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலை மய்யமிட்டிருப்பது. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்ற மரபைப் பின்பற்றித்தான் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தம்மைப் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பாவித்துக்கொண்ட காதல் அனுபவ வெளிப்பாடுகள் மானுடம் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. கடவுள் பற்றிய காதல் அனுபவ வெளிப்பாடுகளும் அகப்பொருள் மரபைச் சார்ந்ததுதான் எனும் வகையில்
காமப்பகுதி  கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்(தொல்.பொரு.81)
என்கிறது தொல்காப்பியம். இத்தகைய அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பக்திநிலைக் கவிதைகளிலும் காணலாம்.

சமணத்திலும் பவுத்தத்திலும் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் போனதற்குக் காரணம், வீடு பேறு என்ற நிலையை அடைவதற்குப் பெண்களால் முடியாது என வாதிட்டதுதான். இன்னொரு பிறவியில் ஆணாகப் பிறந்து வீடுபேறு அடைய வழி சொன்னதோடு, பெண்ணோடு இணைந்திருக்கும் இல்லறம் சிறப்பல்ல எனச் சமணமும் பவுத்தமும் கருதியிருந்தன. இதனால், தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறை நிராகரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. இதே சூழலில் சைவமும் வைணவமும் தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறையைத் தமதாக்கிக் கொண்டன. பழைய அகப்பொருள் மரபை வைத்துக்கொண்டு இறைக் காதலையும் மனிதக் காதலையும் பாடும் வகையில் பக்திநிலைக் கவிதைகள் பாடப்பட்டன.

சைவத் திருமுறைகளிலும் வைணவப் பிரபந்தங்களிலும் காணலாகும் அகபொருள் மரபானது, அக்காலத்தியப் பக்திநிலைச் சூழலுக்கேற்றவாறு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, கடவுளைக் காதலராகப் பாவனை செய்துகொண்டு பாடுதலை பக்திநிலைக் கவிதைகளில் காணலாம். இத்தகைய அகப்பொருள் சார்ந்த பக்திநிலை மரபு சைவ-வைணவ இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கின்றது. அவற்றுள் வைணவ சமயம் சார்ந்து பாடியவர்களான நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் நாயகி - நாயகன் பாவனையில் பெண் மனவுணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆயினும், அப்பாவனைகள் ஞானத்தில் தன்பேச்சையும், பிரேமத்தில் பெண் பேச்சையும் கொண்ட ஆணின் குரலாகவே அமைந்திருந்தன. ஆனால், ஆண்டாளோ ஞானத்திலும் பிரேமத்திலும் தனது இயல்பான பெண் பேச்சையே வெளிப்படுத்தியுள்ளார்.

   வைணவ இலக்கியக் கர்த்தாக்களான ஆழ்வார்களுள் ஆண்டாள் ஒருவரே பெண். மற்றவர்கள்  அனைவரும் ஆண்கள். ஓர் ஆண் என்னதான் மெனக்கெடுத்துக் கொண்டு பெண் போலப் பாடினாலும், அது ‘பெண் பாடியது போல’ என்றுதான் அமையுமே தவிர, பெண் பாடியதாக இருக்க முடியாது. ஆண்களாக இருந்து கொண்டு பெண்போல பாவித்துக் கொண்டு பாடுவது செயற்கைத் தனம் கொண்டது. பெண்ணாகவே இருந்து பெண்ணாகவே பாடுவதில்தான் உண்மையும் உயிர்ப்பும் இருக்க முடியும். அவ்வகையில்,  ஆண்டாளின் கவிதைகள் இயற்கை ஓட்டத்தைக் கொண்;டிருப்பன. இவ்வியற்கை ஓட்டத்தைத்தான் ‘பள்ளமடை’ என்கிறார் திருப்பாவை உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை. அவர் எழுதிய திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகையில் “புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேகிப்பதிலுங் காட்டில் ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடையாகையாலே”1 எனக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் ஆண்டாளின் பக்திநிலை சார்ந்த கவிதைகளில் நாயகி நாயகர் காதல் வெளிப்பாடுகள் இயற்கைத்தன்மை கொண்டது என அறியலாம்.


ஆண்டாளின் இயற்கையான பெண்பேச்சு தமிழ் இலக்கிய மரபிலிருந்து விலகிய மாற்று மரபை முன்னிறுத்துகிறது. பெண்நிலை சார்ந்து ஆண்டாளின் கவிதைகளை நோக்கும்போது இவ்வுண்மை புலப்படுகின்றது. ஒரு பெண்ணின் நனவிலித் தளத்தில் உருவாகும் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குப் பல்வேறு சமூகத் தடைகள் மரபுகளின் பேரில் உருவாக்கப்பட்டிருந்தன. பெண்ணின் இயற்கைக் குணாம்சத்தை, இயற்கைக் காதலை, இயற்கைக் காமத்தை, இயற்கை களிப்பையெல்லாம் எக்காரணம் கொண்டும் ஒரு பெண் வெளிப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் பெண்ணை இறுக்க நிலையிலே வைத்திருந்தன. இந்நிலையில்தான், பக்திநிலை என்ற வெளிப்பாட்டுத்தளம் மூலமாக மடைமாற்றம் செய்து கொள்ளுதலைப் பெண்கள் மேற்கொள்ளத் தொடங்கினர் எனலாம்.

“எந்த ஓர் உணர்வுத் தளத்தின் தீவிரத் தன்மையும்  ‘பக்தி’ என்பதால் மடைமாற்றி விடலாம். தீராத காமமும், காமம் பற்றிய அச்சமும்; தீராத காதலும், காதல் மீதான அருவருப்பும்; பெரும் திளைப்பும், திளைப்பை மறுக்கும் துறப்பும் என எதிர் எதிர்த் தீவிரத் தன்மைகளைக் கையாளும் இடம் இந்த பக்தி.”2 அவ்வகையில் நோக்கும்போது ஆண்டாளின் காதல் துயரமும் காம வேட்கையும் பக்தியின் வழியாக மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனக் கருத இடமுண்டு.

ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் பக்திநிலை சார்ந்து வெளிப்பட்டிருப்பினும், அவற்றுள் பெண்நிலை சார்ந்த கூறுகளைக் கொண்ட இயல்பான பெண்மொழியைக் காணமுடியும். “மரபான ஆணாதிக்கச் சமூக அமைப்பில், ஆண்களை மேன்மைப்படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கிய மரபுகளையும் மொழியமைப்பையும் உடைத்துக் கொண்டு மாற்று மரபாகத் தன்னுடைய காதல் உணர்வுகளை எந்தவிதப் பூச்சுமின்றி இயல்பான பெண்மொழியில் வெளிப்படுத்தியவர் ஆண்டாள்”3ஆவார்.

 மரபுகளாலும் வரம்புகளாலும் தடுக்கப்பட்ட பெண்ணின் இயல்பான காதல் உணர்வுகள் இலக்கியத்தளத்தில் பதிகின்றபோது, இதுவரையிலான மரபார்ந்த பார்வையைக் கொண்டிராமல் மாற்று மரபைக் கொண்டிருக்கிறது புலனாகின்றது. நிலவுகிற மரபுகளின் மீது எதிர்வினையாற்றக் கூடிய தன்மையை மாற்று மரபுகள் பெற்றிருக்கும். எதிர்ப்பும் மறுப்பும் புதிதும் கொண்ட மரபாகவே ஆண்டாளின் மாற்று மரபு அமைந்திருக்கிறது. இத்தகைய மாற்று மரபு தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது எனலாம். 
                        
ஆண்டாளின் கவிதைகள் திருமால் மீது கொண்ட காதலையும், திருமாலுடன் சேரத்துடிக்கின்ற வேட்கையையும் வெளிப்படுத்தியமைக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஆண்டாள் குறித்து வழங்கப்பெறும் கதைகள்வழி நோக்கும்போது அவர் பாடியதன் பின்னணியை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.

ஆண்டாள் பற்றிய திட்டவட்டமான வரலாறு கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், அவர் குறித்த சில தரவுகளின் அடிப்படையில், ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாகக் கருதப்படுகிறார். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள் என்று புராணக் கதைகள் கூறும் நுhல்கள் குறிப்பிடுகின்றன. கடவுளால் அருளப்பெற்ற குழந்தையே ஆண்டாள் எனும் புனைவை விலக்கி வைத்துப் பார்க்கும் போது, ஆண்டாளைப் பெற்ற தாய் தந்தையர் இன்னாரென்று அறிய இயலவில்லை.அநாதரவான நிலையில் இருந்த ஆண்டாள், பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆண்டாள் பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்திருக்கலாம்.
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே (நா.திரு.13:7)
என்ற குறிப்பின்வழி தமது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஆண்டாள். பெற்ற தாய் வெறுத்து ஒதுக்கியதனால் அனாதையாகிப் போனதும், அனாதையான பிறப்பைக் கொண்டதால் மணவாழ்வு கிட்டாமல் மறுபடி அனாதையாக்கப்படுவதும் ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழும் கசப்பான அனுபவங்கள்.

மானுட உலகின் மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் அவமானங்கள், மானுட உலகின் ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்க்கை போன்றவையால் மானுட உலகின்  ஆண்களையே நிராகரிக்கும் முடிவுக்கு ஆண்டாளைத் தள்ளியிருக்க வேண்டும். அதனால்தான்,
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் (நா.திரு.1:5)
என்று மானுட உலக ஆணினத்தின் மீதான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார். “மரபு வழியாக ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் அழகு, தோற்றப் பொலிவு, அவற்றுக்கெல்லாம் மேலாகக் கல்வி, அதனால் விளைந்த தனித்த ஆளுமையான கவித்திறன் ஆகிய அனைத்தும் தன்னிடம் கைகூடியிருந்தபோதும், பிறப்பின் மர்மத்தில் திருமணச் சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழ்மன ஆவேசம், பக்திப் பின்னணியோடு ஒருங்கிணைந்து இயக்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக அவர் பாடல்களில் எதிர் வினையாற்றியிருக்கிறது”4 எனலாம்.

ஆண்டாள் வாழ்ந்த காலத்தியச் சமூக அமைப்பு, பெண்களைக் குடும்ப அமைப்பிற்குள் இருத்தி வைப்பதற்காக மணவாழ்க்கைமுறை குறித்தான மிகை மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருந்தது. பெண் ஆண் உறவைக் கொண்ட மணவாழ்க்கை முறைக்கு முதன்மை அளிக்கப்பட்ட சமூக அமைப்பின் தாக்கம் ஆண்டாளுக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். பெற்றோர்களால் ஏற்படுத்தித் தரக்கூடிய மணவாழ்க்கை முறையே அன்றைய காலகட்டத்தில் உயர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆண்டாளும் அத்தகைய மணவாழ்க்கை முறையைத்தான் விரும்பியிருக்கிறார்.
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழியே போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழிகாப்பு அரிது (நா.திரு.12:3)
என, உடன்போக்கின் மூலமாக அமையும் மணவாழ்க்கை முறையை ஆண்டாள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆண்டாள் எதிர்பார்த்த மணவாழ்க்கை முறையைப் பெரியோர்களே ஏற்படுத்தித் தரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், அத்தகைய மணவாழ்க்கை ஆண்டாளுக்கு வாய்க்கப்பெறவில்லை. அதனாலேயே மானுட மணவாழ்க்கை மீதான வெறுப்பையும், மானுட ஆண்கள் மீதான எதிர்ப்பையும் ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். இவ்வெதிர்ப்பை நேரிடையாக வெளிக்காட்ட முடியாத சூழலில்தான் அவ்வெதிர்ப்பைப் பக்திநிலை வடிவில் - திருமாலைக் காதலிப்பதாகவும் - அத்திருமாலையே மணமுடிக்க வேண்டுமென்று துடிப்பதாகவும் மடைமாற்ற முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கருதலாம்.

       மானுட உலகின்  ஆண்களின் மீதான எதிர்ப்பை, தன்னில் எழும் காதல் உணர்ச்சியும் - காம வேட்கையும் திருமாலுக்குரியது எனப் பாடுவதின் மூலம் காட்டுகிறார். மானுட உலகின் ஆண்கள் எதை நிராகரித்தார்களோ, எதை வெளியிடக்கூடாது என்றார்களோ அவற்றையே பாடுவதின் மூலமான எதிர்ப்பு மனநிலை ஆண்டாளிடம் காணப்படுகின்றது. ஆனால், “பெண்ணின் இயல்பான இந்த எழுச்சியை ஏற்க முடியாதவர்கள் அவளை இறைவியாக ஆக்கினர். இராமாநுசர் காலத்தில் நிறுவன சமயமாக வைணவம் உருப்பெற்றது. அவரது சீடர்களாலும்;, பின்வந்தவர்களாலும் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட திவ்ய ஆசரிதம் (ஆழ்வார்கள் வரலாறு கூறும் வடமொழியிலான நூல்) குருபரம்பறை (மணிபவள நடையில் அமைந்துள்ள ஆழ்வார்கள் ஆசாரியர்கள் வாழ்க்கை வரலாறு கூறும் நூல்), திருப்பாவை, நாச்சியார் திருமொழி உரைகள் அனைத்திலும் ஆண்டாள் பெரிய பிராட்டியாகவும், அவர் பாடிய பாடல்கள் வேதம், உபநிடதம் எனவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன.”5 அதாவது, பக்திநிலை மடைமாற்றத்தின் மூலமாக வெளிக்கொணரப்பட்ட எதிர்ப்புணர்வு தீவிரத்தன்மை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஆண்டாளை இறைவியாக்கியிருக்கிறார்கள்.

மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட அம்மை, மானுட வாழ்வை மறுத்ததும், மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட  ஆண்டாள் மானுட மணவாழ்வை மறுத்ததும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஆயினும், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் இறையடியாராக, இறைவியாக ஆக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்பது எதிர்ப்புகளைக் காயடிக்கும் ஆண்வழிச் சமூக முறைமைகள்தான் என்பது தெளிவான ஒன்றாகும்.

மானுட மணவாழ்வை ஆண்டாள் நிராகரித்ததற்கான காரணங்களுள் ஒன்றாக, அவருடைய வளர்ப்புச் சூழலையும் கருத இடமுண்டு. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், குழந்தைப் பருவத்திலிருந்தே பக்திச் சூழலோடு வளர்க்கப்படுகிறார். தாயற்ற ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தாயும் தந்தையுமாகக் காணப்படுகிறார்.
திருமாலுக்குப் பெரியாழ்வார் மேற்கொள்ளும் பக்திக் கடமைகளுக்கு ஆண்டாள் உதவியாய் இருப்பதோடு, பக்திநிலை உணர்வில் தானும் இரண்டறக் கலந்துவிடுகிறார். திருமால் குறித்தான அவதாராக் கதைகளும், நம்பிக்கை சார்ந்த புனைவுகளும் பெரியாழ்வாரால் உணர்வுப் பூர்வமாகச் சொல்லப்பட்டதை ஆண்டாளும் உள்வாங்கியிருக்க வேண்டும். உள்ளம் உருகச் சொல்லப்பட்ட பக்திநிலைக் கதைகள் ஆண்டாளின் உள்ளத்தில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் “தந்தையால் வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணனின் பல பெண்களை நேசிக்கும் போக்கை, அவன் கோபியரோடு வைத்திருந்த உறவும், அவனை மணம் முடிக்க அவர்கள் விரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் தான் மணம் முடிப்பதாக அவன் வாக்களித்து விளையாடியதெல்லாம் ஆண்டாள் மனதிலும் வேரூன்றி தன்னையும் ஒரு கோபியராகப் பார்க்க வைத்தது.”6 அதனால்தான், திருமாலுக்காகக் கட்டப்பட்ட மாலையைத் தான் சூடிப்பார்க்கும் ஆசையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

திருமாலுக்குச் சூட வேண்டிய மாலையைத் தான் அணிந்து பார்க்க வேண்டும் என்ற காதல் உணர்வு இயல்பாகவே ஆண்டாளின் உள்ளத்தில் தோன்றுகிறது.
ஏனெனில், மலர்களோடும் மாலைகளோடும்தான் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறார். இந்த மாலைகளும் மலர்களும் மணவாழ்வையும் மங்கலத்தையும் குறித்து நிற்கக் கூடியவை. ஆகவே, ஆண்டாள் கட்டிக் கொடுக்கின்ற மலர் மாலைகள் ஆண்டாளின் மணவாழ்க்கை விருப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே திருமால் மீது கொண்ட விருப்பங்களும் ஒன்றுகூடி திருமால் மீதான காதலாக ஆண்டாளிடம் உருவெடுக்கின்றது.

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என ஆண்டாள் குறிப்பிடுவதின் மூலம், குழந்தைப்பருவம் முதலே திருமாலின் மீது ஈடுபாடும் காதலும் கொண்டு ஆண்டாள் வளர்ந்து வந்திருக்கிறார் என அறிய முடிகின்றது. இவ்வாறு மானுட ஆண்களின் மீதான எதிர்ப்புணர்வு ஆண்டாளிடம் தோன்றுவதற்கு, மானுட ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்வுத் தடைகள், வளர்ந்து வந்த பக்திச் சூழல் போன்றவை காரணமாக இருக்கலாம் எனக் கருதலாம்.

ஆண்டாள் பாடிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் திருமாலின் மீதான காதலையும் காம வேட்கையையும் வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்திருக்கின்றன. திருப்பாவை காதல் உணர்வையும், நாச்சியார்திருமொழி காமத்துயரத்தையும் வெளிப்படுத்துகின்றன. திருப்பாவை மார்கழி நோன்புச் சடங்கு குறித்துப் பாடப்பட்டிருந்தாலும், அதனுள் திருமாலின் மீதான காதல் உள்ளத்தை வெவ்வேறு நிலையில் அவர் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடியும். அதாவது, “ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் திட்டமிட்டுப் போய்ச் சேர்வதுதான் திருப்பாவையின் பாடுபொருள்”7 ஆகும்;. பெண் ஆண் மனக்கலப்புகளின் குறிப்புகளை மிக நுட்பமாக விவரித்துச் சொல்வதாகத்தான் திருப்பாவை அமைந்திருக்கிறது.

திருப்பாவையின் முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர்! போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! (திரு.1)
என்கிறார் ஆண்டாள். நீராடச் செல்லும் பெண்கள் குறித்துப் பேசும் ஆண்டாள்,திருப்பாவையின் ஓரிடத்தில்கூட ஆற்றங்கரை குறித்தோ, குளத்தங்கரை குறித்தோ அல்லது அவற்றை ஒட்டி நடந்ததாகவோ குறிப்பிடவில்லை. ஆனாலும், “நீராட்டம் ஒரு பூடகம். வேறு ஏதோ ஒன்றைத் தங்கள் குழுவினர் மட்டும் புரிந்துகொள்ளும்படி, அயலார் அறியாமலிருக்கும்படி குறியிட்டுச் சொல்கிறார்கள்.”8

பூடகமாக உணர்த்தப்படும் ‘நீராடல்’ என்பது ‘கலவி’யின் விருப்பத்தை உணர்த்துவது. சங்ககாலத் திணைக் கவிதைகளில் காணலாகும் நீராடல், புனலாடல் போன்றவை அந்தப் பொருளைத்தான் குறிக்கின்றன. ஆகவே,ஆண்டாளும் அவ்விருப்பத்தைப் பூடகமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார். இவ்விருப்பம் திருமாலின் மீது கொண்ட காதல் உணர்வால் வந்த விருப்பம். அக்காதலைப் பல்வேறு நிலைகளில் உணர்த்துவதற்காகத்தான் திருப்பாவையின் தொடக்கத்திலேயே ‘நீராடல்’  பூடகமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.

திருமாலின் மீது கொண்ட காதலை
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான் (திரு.1)
என்பதில் வெளிப்படுத்துகிறார். பறை என்பது இங்கு குறியீட்டுப் பொருளைத் தருவது. திருமாலிடம் பறை வேண்டுவது காதலை வேண்டுவதாக வெளிப்படுகின்றது. ஆயினும், ஆண்டாள் தனது காதலை வெளிப்படுத்திவிட்டார். பறை வேண்டுவதின் மூலமாகத் திருமாலின் மீது கொண்ட காதல் நினைவுகளாலே ஒன்றிப்போன மனநிலையைப் பின்வரும் கவிதையிலே ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.
நெய் உண்ணோம்!பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்றோதோம்! (திரு.2)
என்பதில் ஆண்டாளின் நினைவுகளெல்லாம் திருமாலே ஆகிப்போன நிலையைக் காணலாம். தனக்குக் காதல் இருக்கிறது. திருமாலும் தன்னைக் காதலிக்க வேண்டும். இதைத்தவிர வேறெதுவும் வேண்டாம் என்ற காதல் துயரின் வெளிப்பாடுதான் அது.

திருமாலிடம் கொண்ட காதல் வேட்கையும் ஆவலும் முடிவில்லாத நிலையைக் கொண்டிருப்பினும், திருமாலை அடைவதில் மட்டும் உறுதியைக் கொண்டிருக்கிறார் ஆண்டாள். அதனால்தான்,
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலெறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த காட்சியை மலர்மார்பா (திரு.19)
என்ற கனவு நிலைக் காட்சியை வெளிப்படுத்துகிறார் ஆண்டாள்.

பெண்ணின் பருவ வயதில் ஏற்படும் பாலியல் துய்ப்புக்கான விருப்பங்கள் கனவு நிலையில் தோன்றுவதுண்டு. மேற்கண்ட கவிதையானது பாலியல் துய்ப்பு நிகழ்ந்து விட்டதைச் சொல்வதுபோலத் தோன்றும். நிறைவேறாத ஆசைகள் கனவுகளாகத் தோன்றும். எனினும், பாலுறவு அனுபவம் அல்லாதவர்களுக்குச் சேர்வது போன்ற கனவுகள் தோன்ற முடியாது. இருப்பினும், பாலியல் துய்ப்புக்கான விருப்பங்கள் வேறு வேறு வகைகளில் கனவில் தோன்றக் கூடியவை. இங்கு, ஆண்டாளும் திருமாலும் ஒன்று கலப்பதைப் போன்ற கனவு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறார். ஆனால், இருவரும் ஒன்று சேரவில்லை. அக்கவிதை பெண்ணின் கனவு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது என்பதற்கான ஒரே குறிப்பு ‘குத்து விளக்கெரிய’ என்பதுதான்.மிக நுட்பமாகப் பெண்ணின் கனவு நிலையை இயல்பான பெண்மொழியாலே ஆண்டாள் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு அக்கவிதை மிகச்சிறந்த சான்றாகும். அதனால்தான் “தம் காதல் உணர்வை இயல்பான தன் மொழியில் மிகச் சாpயாக வெளிப்படுத்தியவர் ஆண்டாள். அவருக்கு முன்னும் அப்படி ஒரு பெண் கவிஞர் இல்லை. அவர் வெளிப்படுத்திய முறையில் பாடிய பெண்கவிஞர் அவருக்குப் பின்னும் இல்லை”9 என்கிறார் சு.வேங்கடராமன்.

ஆண்டாளின் இளமைப்பருவம் முழுவதும் திருமாலையே மய்யமிட்டு இருப்பதனால், அவரின் கனவு நிலையிலும் திருமாலே மய்யம் கொண்டிருப்பது அவர் கவிதையில் வெளிப்படுகின்றது. திருமாலையே காதலித்து, அக்காதல் நினைப்பிலே வாழ்ந்து, கனவு நிலையிலும் திருமாலையே கூடநினைக்கும் ஆண்டாள், திருமாலே தனக்கு எல்லாம் தரவேண்டும் என்பதை
......கோவிந்தா! உன் தன்னைப்
பாடி பறைகொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே! தோள்வளையே! தோடே! செவிப்பூவே!
பாடகமே! என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன்பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து......(திரு.27)
எனப் பாடுகிறார். ஒரு பெண்ணின் காதல் உச்சத்தின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கிறது.

கைவளை, தோள்வளை, தோடு, புறங்காதில் சிறுதோடு, கால்கொலுசு, மற்றும் பல அணிகள், உடை போன்றவை காதல் விருப்பத்தின் பரிசுப் பொருட்களாகவும், மணவாழ்க்கை மகிழ்வின் வெளிப்பாடுகளாகவும் இருப்பவை. ‘நாடு புகழும் பரிசினால் நன்றாக’ என்பது காதல் கைகூடச் செய்யும் மணவாழ்க்கையை வேண்டுவதைக் குறிக்கின்றது. காதலரைக் கைபிடித்த மணவாழ்க்கைக்குப் பின்தான், காதலரோடு கூடியிருக்கும்போதுதான் நெய்யும் பால்சோறும் முழங்கை வரைக்கும் வழிந்தோடும்படி உண்ணமுடியும். மணவாழ்க்கை அமையப் பெற்றால்தான் இவையெல்லாம் நடைபெற முடியும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் ஆண்டாள்.

ஆண்டாளின் காதல் உணர்வுகள் பல்வேறு நிலைகளில் வளர்ந்து உச்சத்தைத் தொடுகிறது. காதல் வயப்பட்ட பெண்ணின் உளவியல் படிநிலைகளை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார் அவர். முதலில் காதல் விருப்பம், பின்பு காதல் நினைவுகளால் ஏற்படும் மறத்தல், கனவு நிலையில் வேண்டுவதான மணவாழ்க்கை விருப்பம்…… இவ்வாறு ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து செல்லும் பெண்ணின் காதல் நிராகரிக்கப்படுகிறது. “எத்தனையோ விதத்தில் தன் காதலைச் சொல்லி, தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்துவிட முடியாதபடி தன் மனம் கண்ணனுடன் இணைந்து பின்னியிருப்பதைச் சொல்லி, திரும்பிப் போய்விட இயலாத தூரத்தில் வீடு வாசல் எல்லாம் விட்டு வந்த கோபிகையின் பாத்திரத்தை அநுகரித்து, மனசால் ஒரு கோபியாக கண்ணனைக் கிட்டி, படிப்படியாக அவனைப் பலவந்தம்  செய்து அவனைக் கூடிய ஆண்டாள் இப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள்”10 எனும்போதுகூட, ஆண்டாளுக்குள் இருந்த காதல் மறைந்தபாடில்லை. காதல் நிராகரிப்பால் உண்டான ஆற்றாமைத் துயரம் அவரின் காதலை மேலும் மேலும் வளர்த்தெடுக்கின்றது. தான் கொண்ட காதலில் உறுதியாய் இருக்கச் சொல்கிறது மனம். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காயினும் காதல் கைகூடும் என்ற நம்பிக்கை ஆண்டாளுக்குள் இருந்திருக்கிறது. அதனால்தான்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேல் (திரு.29)
என்ற உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் இளமைப் பருவத்தில் பாடப்பட்ட இக்கவிதைகள், திருமாலின் மீது பாடப்பட்ட பக்திநிலைப் புனைவுக் காதலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. ஓர் ஆண் மீது பெண் கொள்கிற காதல் எத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறதோ, அத்தகைய உணர்ச்சிக் குவியல்களையே ஆண்டாளின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. மானுடத்தின் காதல் உணர்ச்சியைத்தான் ஆண்டாளும் கவிதையாக்கியிருக்கிறார். “மானுடப் பெண்ணாகப் பிறந்து தன் காதல் உணர்வை - பிரிவின் ஏக்கத்தை உணர்ச்சி பொங்க, இலக்கிய மரபிற்கு மாற்று மரபாக, புதியன படைப்பதாக ஆண்டாள் பாடினார். மரபு மாற்றத்தில், பழமையான ஆண்களை முதன்மைப்படுத்தும் இலக்கிய மரபுகளையும், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையும் உடைத்துத் தன் ஆசையை - உணர்வுப் போராட்டத்தை - தன்மொழியில் அவர் தமிழ் மரபில் முதல் பெண் கவிஞராகப் பாடினார்”11 என்பது குறிப்பிடத்தக்கது.

மானுடம் முழுமைக்கும் பொதுவாய் உள்ள காதல் அனுபவத்தை ஆண்களே பாடத்தக்கவர்கள்; பெண்கள் பாடுதல் கூடாது என்ற மரபுகள் வழக்கில் இருந்த காலகட்டத்தில், ஆண்டாள் தன் காதல் உணர்ச்சிகள் பொங்கப் பாடியிருப்பது மரபு மீறலைக் கொண்ட மாற்று மரபாகவே அமைந்திருக்கிறது. ஆண்டாள் குறித்த சமயப் புனைவுகளையும், திருமால் பற்றிய சமயப் பிம்பத்தையும் விலக்கிப் பார்க்கும்போது இம்மாற்று மரபு பெண்நிலை சார்ந்த ஒன்றாக அமைந்திருப்பதை அறிய முடியும்.

பெண்ணுடல் ஆணின் பாலியல் துய்ப்புக்கான பண்டமாகத்தான் ஆண்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. பெண்ணுடல் தனித்து இயங்கக் கூடியதான ஆற்றலை இழந்து நிற்கக் கூடியது; ஆணுடலை மய்யமிட்டுத்தான் பெண்ணுடல் இயக்கம் கொள்கிறது என்பதான கற்பிதங்கள் ஆண்வழிச் சமூக முறைமையில் நிலவிக் கொண்டிருப்பவை. மேலும், பெண்ணுடலின் காமமும் உணர்ச்சியும் இச்சையும் பெண்களால் வெளிப்படுத்தக் கூடாதவை; அக்காமத்தையும், உணர்ச்சியையும், இச்சையையும், துய்ப்பையும் ஆண் தரப்பிலிருந்தே வெளிப்படுத்தக் கூடியவை என்கிற கருத்தாக்கங்கள் பெண்ணைப் பேசவிடாமலும், எழுதவிடாமலும் தடுத்து வைத்திருக்கின்றன. இம்மாதிரியான நியதிகளால் பெண்ணின் குரல் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்த நிலையில்தான் ஆண்டாளின் பக்திக் குரல் பெண்நிலை சாh;ந்து ஒலிக்கத் தொடங்கியது. அதாவது, “நீண்ட நாட்களாக இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் ஒட்டு மொத்தமான குரல்”12 ஆண்டாள் மூலமாக  வெளிப்பட்டிருக்கிறது எனலாம்.

பெண்ணுடல் குறித்து ஆண்வழிச் சமூக முறைமைகள் கட்டியெழுப்பியிருந்த கலாச்சாரக் கூறுகளையெல்லாம் தகர்க்கும் போக்கை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக் கவிதைகளில் காணமுடிகின்றது. பெண்ணின் உடல் இன்பம் குறித்தும், பெண்ணுடலின் காமவேட்கை குறித்தும் ஆண்டாள் முன்வைக்கும் உணர்ச்சி நிலைகள் பெண்ணின் இயற்கை சார்ந்த உயிரியல் கூறாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்விதச் செயற்கைப் புனைவுகளும் அல்லாமல், இயல்பான பெண்ணுடல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இயல்பென்று கருதியேதான் ஆண்டாள் தன்னுடைய உணர்ச்சிகளைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.

பெண்ணின் காதல் அனுபவமும் உடல் வேட்கையும் இயல்பென்று கருதியதால் வெளிப்பட்ட ஆண்டாளின் படைப்பாளுமை ஒரு மீறலைச் சாதித்திருக்கின்றது. இத்தகைய மீறலை “பெண் பாலருக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஒழுக்க நடவடிக்கைகளுக்கும், சமூகத் தடைகளுக்கும் எதிராகப் பிரஞ்ஞை பூர்வமாகக் காட்டப்படும் மீறல் என்றும் சொல்லலாம்”13 என்கிறார் செல்வி திருச்சந்திரன். இங்கு, பெண்ணின் உடல் மூலமான அனுபவத்தை இயற்கை சார்ந்த அனுபவமாகக் கருதும் போக்கு ஆண்டாளிடம் காணப்பட்டதனால்தான் அம்மீறலை உணர்வுப்  பூர்வமாகச் சாதிக்க முடிந்திருக்கிறது.

பெண்ணுடல் குறித்துப் பேசுவதில், குறிப்பாகப் பாலியல் நிலைகளில் பெண்ணுடல் அனுபவத்தைப் பேசுதல் பெண்ணுக்கு விலக்கப்பட்டதாக இருந்த சூழலில், பாலியல் குறித்து; பாலியல் உந்துதலைக் கொண்ட பெண்ணுடல் குறித்து; பெண்ணுடலுக்குள் நிகழும் பாலியல் கிளர்ச்சிகள் குறித்து; பாலியல் துய்ப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ளும் போக்கு பெண்களுக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், பெண்ணுடல் அனுபவங்களைக் கவிதையாக்கி, அவற்றைப் பொதுவெளி பகிர்வுக்குக் கொண்டு வந்து மகிழ்ச்சி பொங்க -உணர்ச்சிகள் ததும்ப உலவவிட்டிருக்கும் புதுமரபை ஆண்டாள் முன்வைக்கிறார். இவ்வாறு பெண்ணுடலைப் பெண்ணுக்குச் சொந்தமாக்கியிருப்பதன் மூலம், ஆணுக்குச் சொந்தமானதல்ல பெண்ணுடல் என்ற மாற்றுக் குரலை அவர் முன்வைக்கிறார்.
அச்சமும் நாணும் மடனும் முந்துறந்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொல்.பொரு.96) என்றும்,
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் (தொல்.பொரு.106)
என்றும் பெண்மையின் குணங்களாகச் சொல்லப்பட்டதற்கு மாற்றாக, தனக்கு வெட்கம் என்பது தேவையில்லை என்ற மாற்றுக்குரலை
நாணி இனியோர் கருமமில்லை
நால் அயலாரும் அறிந்தொழிந்தார் (நா.திரு.12:2)
என வெளிப்படுத்துகிறார்.

      ஆண்டாளின் திருப்பாவைக் கவிதைகள் பேதைச் சிறுமி நிலையில் பாடப்பட்டவை அல்ல. பெண்ணின் இளம்பருவத்துக் காதல் உணர்வுகள்தான் திருப்பாவைக் கவிதைகளாக ஆகியுள்ளன. திருப்பாவையில் சொல்லப்பட்ட காதலின் நீட்சியாகத்தான் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. திருப்பாவையில் பெண்ணின் காதல் நிலையினையும், நாச்சியார் திருமொழியில் காதல் முற்றிய பெண்ணின் காம வேட்கை நிலையினையும் காணமுடியும்.
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி (நா.திரு.1:2)
கொத்தலர்  பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரேழுதி (நா.திரு.1:3)
என, காதல் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலரின் பெயரை எழுதி எழுதிப் பார்க்கும் காதல் மனத்தின் செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்துகிறார். திருமாலையே தன் காதலராக நினைத்துக் கிடக்கும் ஆண்டாள், அக்காதல் நோயால் பெண்ணுடல் எதிர்கொள்ளும் மாறுபாடுகளையும், அமைதியின்றித் தவிக்கும் மனக் கோலங்களையும் இயல்பான பெண்ணுணர்ச்சியிலே வெளிப்படுத்துகிறார்.
மாசுடை உடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்த ஒரு போது உண்டு (நா.திரு.1:8)
என்கிறார் ஆண்டாள். திருமாலை அடைய வேண்டுமென்று நீராடச் சென்ற ஆண்டாள், இப்போது நீராடாமல் இருப்பதும், பூக்களைச் சூடாமல் தலைவிரிக் கோலத்திலிருப்பதும், ஒரு வேளை மட்டுமே உண்பதும், வாய்கூட வெளுத்துப் போனதும் திருமாலை நினைத்துத்தான். மேலும்,
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உள்மெலிவும்-(நா.திரு.12:7)
தமக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார். காதல் முற்றிப்போனதின் அறிகுறிதான் இவ்வெளிப்பாடுகள். காதல் நோயால் அவதியுறும் ஆண்டாளின்  மனத்துடிப்புகள் மற்றவருக்கு  அறிய வாய்ப்பில்லை. அவரவரின் அவதி அவரவருக்குத்தானே தெரியும் என்பதை
ஆர்க்குமென் நோய் இது அறியலாகாது (நா.திரு12:5)
என வெளிப்படுத்துகிறார். காதலால் அவதியுறும் பெண்ணின் கனவிலும் வேறென்ன தோன்றப் போகிறது. நனவிலே கைகூடாதவை நனவிலியில் கைகூடுவதுபோலத் தோன்றும். அந்நனவிலி மனதின் வெளிப்பாட்டைத்தான்
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை  புகுதக் கனாக் கண்டேன் தோழி நான் (நா.திரு.6:2)
என்கிறார். திருமாலைக் கூடநினைப்பதின் கனவு வெளிப்பாடு இது.இங்கு கமுகு என்பதும், பாளை என்பதும் குழைதள்ளக் கூடியவை. பெண் தன்மை கொண்டிருப்பவை. காளை என்பது ஆணுக்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது. பெண்ணுடல் மீது ஆணுடல் புகும் வேட்கை விருப்பம்தான் கனவில் குறியீட்டுப் பொருளாய்த் தோன்றுகின்றது. நனவிலியில் தோன்றும் குறியீடுகளைத்தான் கவிதைப் பொருளாக்கியிருக்கிறார் ஆண்டாள்.
காதல்வயப்பட்ட பெண்ணின் மனம் முதலில் நினைப்பையும்,கனவையும் வேட்கையையும், உடல்துயரத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தக் கூடியது. பெண்ணின் மனத்தை மட்டுமல்ல, உடலையும் காதலருக்கென்றே ஒப்படைத்துவிட்ட பெண்ணின் மனநிலையை ஆண்டாளின் கவிதையிலே காணமுடியும்.
........... ஆதரித்து  எழுந்த என்தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என்கிறார். அது மட்டுமல்லாமல், தமது காதலருக்கென்றே தமது உடல் வளர;ந்திருப்பதாகக் கருதுகிறார். அதனால்தான்,
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள் (நா.திரு.1:5)
என்று குறிப்பிடுகிறார். தனது உடல் உறுப்புகள் குறித்து மிக இயல்பாகச் சொல்லிக் கொண்டு போதலை இங்கு கவனிக்கலாம்.

காதல் முற்றி காமம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. பாலியல் துய்ப்புக்கான நாட்டமும் வேட்கையும் பெண்ணுடலுக்குள் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியவை. காதலும் காமமும் பெண்ணின் உடல் - மனமெங்கும் பரவியதால் வேட்கை நிரம்பிய உடலை ஆணின் உடல் வந்து தணிக்க வேண்டும் என்ற பெண்ணின் உடல் கிளர்ச்சியை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.அதை,
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர்
ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும் (நா.திரு.5:7)
என வெளிப்படுத்துகிறார். பாலியல் துய்ப்பின் விருப்பமும், அதனால் உண்டான உடல் கிளர்ச்சியும் இங்கு கவிதையாக ஆக்கப்பட்டிருக்கிறது. பாலியல் துய்ப்பின் விருப்பம் வேறொரு கவிதையிலும் வெளிப்பட்டிருக்கிறது.
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து (நா.திரு.8:7)
என, பெண் ஆண் உடல்கலப்பு நிகழ்வை வேண்டிநிற்கிறது கவிதை. பெண்ணின் பாலியல் நாட்டத்தைத் துளியளவும் இயற்கை மாறாமல் தந்திருக்கிறது ஆண்டாளின் கவிதைமொழி. நனவு நிலையில் பாலியல் துய்ப்பு கிடைக்கப் பெறாதபோது, நனவிலி நிலையில் துய்த்துக் கொள்ளும் பெண்ணின் மனநிலையை ஆண்டாள் பதிவு செய்துள்ளார்.
.....எம்மை
உடைமாடு கொண்டான் ..... (நா.திரு.10:7) எனவும்,
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் நானும்
அவனும் அறிதும்  (நா.திரு.5:8) என்றும்,
..... என்னானவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று
போகானால் (நா.திரு.13:5)
எனவும் வெளிப்படுத்துகிறார். கனவில் கூடியிருந்த நனவிலி நிலையைப் புலப்படுத்துகையில் ‘கச்சங்கம்’ என்கிறார். கச்சங்கம் என்ற சொல்லுக்கு ‘ஈரமாதல்’ என்ற பொருள் உள்ளதாகக் கூறுகிறார் சு.வேங்கடராமன். புணர்ச்சி வேண்டலை நினைத்துக் கிடக்கும் கனவு நிலையின் போது பெண்ணுக்கு ‘ஈரமாதல்’ என்ற பெண்ணுடலின் நிகழ்வைப் புதிய பதிவாகக் கொணர்ந்திருக்கிறார் ஆண்டாள்.

பெண்ணுடலை ஆண் சுவைத்துப் பார்த்த அனுபவங்களை ஆண் பகிர்ந்து கொண்டிருந்த நிலைக்கு மாற்றாக, பாலியல் துய்ப்பு நிலையில் ஆணுடலைப் பெண் சுவைத்துப் பார்க்க விரும்பியதன் வெளிப்பாட்டை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். அதை
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்திருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்தன்வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்.... (நா.திரு.7:1)
என்கிறார்.
பாலொடு தேன்கலந் தற்றே,பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர் (குறள்1121)
என்ற ஆணின் வாய்ச்சுவை அனுபவத்திற்கு மாற்றாக, பெண்ணின் வாய்ச்சுவை அனுபவ விருப்பம் ஆண்டாள் கவிதையில் வெளிப்படுகின்றது.

பாலியல் துய்ப்புக்கான வேட்கை பெண்ணின் உடலெங்கும் பரவியதால் காமத்தீ சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்க, வேட்கையுற்ற உடல் அவதியைத் தமது கவிதையில் வெளிப்படுத்தும்போது
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
அற்ற குற்றம் அவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே (நா.திரு.13:7)
என்பதின் மூலம் பெண்ணின் முலைகள் படும் துயரத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் பெண்ணின் காமத்துயர் உச்சத்தை அடையும்போதும், பாலியல் துய்ப்பு நிறைவேறாதபோதும்,
உள்ளே உருகி நைவேனை உளளோஇலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்பிலெறிந்து என் அழலைத் தீர்வேனே
(நா.திரு.13:8)
என்று உரக்கச் சொல்கிறார். பாலியல் துய்ப்பு நிறைவேறாத ஆற்றாமையின் வெளிப் பாடாகவே அவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

பெண்ணின் காதல் உணர்ச்சியும் காம வேட்கையும் பெண்ணின் முலைகளில் மய்யம் கொண்டிருப்பன என்பதை ஆண்டாள் கவிதைகள்வழியும் அறிய முடிகின்றது. காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மனத் தவிப்புகளும் - துயரங்களும் - வேட்கைகளும் - காமத் தவிப்புகளும் -ஆற்றாமை உணர்வுகளும் எவ்விதத் தடைகளுமற்று பெண்ணின் உணர்ச்சிகளாலே பெண்நிலை சார்ந்து வெளிப்படுத்தும் பெண் ஆளுமை ஆண்டாளிடம் காணப்படுகின்றது.

ஆண்டாளின் கவிதைகள் பக்திச் சாயலைக் கொண்டிருப்பினும், காதலை உரக்கப் பேசியிருப்பதும், பெண்ணுடல் அனுபவத்தைப் பரக்கப் பேசியிருப்பதும் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளாகும். அவ்வகையில், ஆண்டாளின் கவிதைகள் ஒரு மீறலையும் - எதிர்ப்பையும் -மாற்றையும் கொண்ட படைப்பாளுமை நிறைந்தவை எனக் குறிப்பிடலாம்.

ஆண்டாளின் கவிதைகளில் காணலாகும் சுதந்திரத் தன்மையை வைத்துக்கொண்டு ஆண்டாளை ஒரு தேவதாசிப் பெண்ணாகப் பார்க்கும் போக்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆண்டாள் திருவரங்கக் கோயிலில் உள்ள திருமாலோடு போய்ச்சர்ந்தார் என்ற புனைவையும், திருவரங்கனோடு தன்னைச் சேர்த்து விடுங்கள் என்ற ஆண்டாளின் புலம்பலையும் வைத்துக் கொண்டு ஆண்டாளைத் தேவதாசிப் பெண்ணாகக் கருதும் நிலை ஆய்வாளர்கள் சிலரிடம் காணப்படுகின்றது.

“Andal was herself a devadasi who lived and died in the srirangam temple. There is atradition that Kulasekara Alvar's daughter Nila, was presented to srirangam temple as devadasi. She called cerakula Nachiyar and shrine dedicated to her us found in this temple.(p.47 malik Ed.); Indian movement: some aspects of dissent, protest and reform, 1978)”14  என ஆண்டாளைத் தேவதாசிப் பெண்ணாக மதிப்பிடும் போக்கு வெளிப்பட்டிருக்கிறது..

பாலியல் குறித்த வெளிப்பாட்டுச் சுதந்திரம் தேவதாசிப் பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. அச்சுதந்திரம் தேவதாசிப் பெண்களுக்கு மட்டுமே என வரையறுப்பதுகூட, மற்ற பெண்களின் படைப்புச் சுதந்திரத்தைக் கட்டம்கட்டி முடக்கிப்போடும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். ஆண்டாள் தேவதாசிப் பெண்ணாக இருந்திருந்தால் அவருடைய கவிதைகளிலே வெளிப்பட்டிருக்கக்கூடும். ஆனால், அதைப்பற்றிய குறிப்புகள் அகச்சான்றுகளாகவோ புறச்சான்றுகளாகவோ கிடைக்கப்பெறவில்லை. வெறும்  அனுமானத்தின் அடிப்படையில் வரையறுப்பது ஆய்வுக்குப் பொருத்தமானதல்ல.

தேவதாசிப் பெண்கள் விரும்பாமலோ விரும்பியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பாலியல் துய்ப்பு உறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தேவதாசிப் பெண்களின் வெளிப்பாடுகளில் அத்தகைய அனுபவங்கள் வெளிப்படக்கூடும். ஆனால், ஆண்டாளின் கவிதைகளில் பாலியல் துய்ப்பு உறவு நிகழ்ந்ததற்கான எந்தக் குறிப்பும் இல்லை. பாலியல் துய்ப்பு விருப்பம் குறித்தும், நனவிலி மனதில் தோன்றிய நிறைவேறியதான பாலியல் துய்ப்பு குறித்தும்தான் ஆண்டாள் கவிதைகளில் காணமுடிகிறது.

ஆகவே, ஆண்டாள் தேவதாசி மரபைச் சார்ந்த பெண்ணல்ல என்பதைத் திட்டவட்டமாகக் கருதலாம்.

ஆண்டாள் தேவதாசிப் பெண்ணாக அல்லாமல், மானுடப் பெண்ணாகப் பிறந்து பக்திநிலையில் காதலையும் காமத்தையும் பாடுகிறார். அக்காலச் சமூக மரபுகளுக்கும் இலக்கிய மரபுகளுக்கும் மாற்றாக அவருடைய கவிதைகள் அமைந்திருக்கின்றன. இந்த மாற்று மரபின் தொடக்கம் பெண்ணாக இருத்தல் கூடாது என்பதற்காகவே, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகளைப் பெரியாழ்வார் என்னும் ஆணால் எழுதப்பட்டவை என்ற கருத்தை மரபுவழி ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அவ்வகையில் “ஆண்டாள் கற்பனைப் பாத்திரமே என்றும், ப்ம்மைெர்பியாழ்வாரே பெண்ணாக வரித்துக்கொண்டு பாடிய பாசுரங்களே திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் என்றும் இராஜாஜி, டி.கே.சி., உட்பட பலர் வாதித்தது உண்டு”.15 மேலும், “காதலின் படுவேகத்தைக் குறிக்கும் பெரியாழ்வார் திருமொழிப் பகுதியே நாச்சியார் திருமொழி என்று வழங்கப்பெற்று, நாளடைவில் கோதை நாச்சியார் ஓர் உண்மையான பெண்மணியாவும்,வேறொரு பக்த மணியாகவும் கருதப்பெற்றிருக்க வேண்டும்”16 என மரபுவழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காலந்தோறும் பெண்ணைப் பேசவிடாமல் ஊமையாக்க விரும்பும் ஆணாதிக்கத்தின் உச்சவெளிப்பாடுதான் அக்கருத்தாக அமைந்திருக்கின்றது. அடங்கிக் கிடக்கும் பெண் பாடவே மாட்டார், பாடவும் கூடாது என்று கருதியதின் வெளிப்பாடாகவே அவர்களின் கருத்தாய் வெளிப்படுகின்றது எனலாம்.

பெண்ணுடல் குறித்து ஆண் பாடுவதற்கும், பெண்ணுடல் குறித்துப் பெண் பாடுவதற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. பெண்ணுடல் குறித்து ஆண்டாள் பாடிய கவிதைகள் அசல் பெண் தன்மை கொண்டவை. மேலும், பெண்ணின் நனவிலி மனதின் வெளிப்பாடுகளைப் பெண்ணால் மட்டுமே வெளிக்கொணர முடியும். அந்தவகையில் ஆண்டாள் கவிதைகள் சமயம் கடந்த அழகியலையும், உலகியல் இசைந்த காதலையும் கொண்ட பெண்ணின் அகவெளியைப் பெண்நிலை சார்ந்து வெளிப் படுத்தியுள்ளன எனலாம்.

குறிப்புகள்:

1. பெரியவாச்சான் பிள்ளை, திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகை,
    கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார் (ப.ஆ)., திருப்பாவை வ்யாக்யானங்கள், ப.10
2. பிரேம் (க.ஆ)., பக்தி காதல் காமம் பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள்,
மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி(தொ.ஆ)., அணங்கு,  ப.85
3. வேங்கடராமன்.சு.,(க.ஆ), ஆண்டாள், சுப்பிரமணியன்.ச.வே., மெய்யப்பன்.ச.,(ப.ஆ)., தமிழ்ப் பெருங்கவிஞர்,தொகுதி ஒன்று, ப.134
4. சுசீலா.எம்.ஏ., தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும், பக்13,14
5. வேங்கடராமன்.சு.,(க.ஆ), மு.கூ.நூ, ப.135
6. செல்வி திருச்சந்திரன்; தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில்
ஒரு பெண்நிலை நோக்கு, ப.54
7. சதாரா மாலதி, உயர்பாவை, ப.156
8. மேலது, ப.10
9. வேங்கடராமன்.சு.(க.ஆ)., மு.கூ.நூ., ப.135
10. சதாரா மாலதி. மு.கூ.நூ., ப.156
11. வேங்கடராமன்.சு.,(க.ஆ)., மு.கூ.நூ., ப.135
12. மேலது, ப.138
13. செல்வி திருச்சந்திரன், மு.கூ.நூ., ப.56
14. மேற்கோள்: கண்ணன்.எஸ்., பெரியாழ்வார் ஆண்டாள் பாசுரங்கள்
சமூக சமயப் பண்பாட்டு ஆய்வு, ப.19
15. மேலது, ப.17
16. மேற்கோள்: பாலசுப்பிரமணியன்.சி., ஆண்டாள், ப.50





சனி, 23 டிசம்பர், 2017

ஆற்றங்கரை நாகரிகமும் மடைச்சி வாழ்ந்த கீழடி நிலமும் :- மகாராசன்



மலைகளும், காடுகளும், வயல்களும், கடலும் கொண்ட பெரும்பரப்பில் மனித சமூகம் நிலைகொண்டு வாழ்வதற்கு உகந்த சூழலாய் அமைந்தது சமவெளி எனும் நிலப்பகுதிதான்.  மலைகள், காடுகள், கடல் எனும் இயற்கை வெளிகளை வாழ்விடங்களாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களைக் காட்டிலும், சமவெளிப் பகுதிகளை வாழ்விடமாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களே பெருங்குழுக்களாய் உருக்கொண்டு வந்துள்ளன.

இயற்கையின் கடல் மற்றும் இதர நிலப் பகுதிகளைக் காட்டிலும் நிலைத்த வாழ்வுக்கான இயற்கை நில அமைப்பு, உற்பத்திக்கான பெருநிலப்பரப்பு, கூட்டு உழைப்புக்கான மனிதப் பெருந்திரள், நிலம் – உழைப்பு  போன்றவற்றின் விளை பயனாய் அமைந்த உபரிச்செல்வப் பெருக்கம் போன்றவற்றால் அமைந்துபோன வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரம், பண்பாடு, நாகரிகம், மொழி, கலை, இலக்கியம், அறிவுப் புலப்பாடு, கல்வி, அறம், சமூக உறவுகள், பண்டமாற்றுமுறை, சமூகக் கட்டமைப்பு போன்ற இன்னபிற யாவும் பெருகி வளா்ந்தமைக்கான வாய்ப்புகளும் வசதிகளும் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம்தான் அதிக அளவில் காணப்பட்டன. இவ்வாறான சமவெளிப் பகுதிகளையும், மக்களையும் செழிப்பும் வளமும் நிறைந்ததாய் உருவாக்கியதில் பெரும்பங்கு வகிப்பன இயற்கையின் ஒப்பற்ற கொடைகளுள் ஒன்றான ஆறுகள்தான்.

மலைகளில் அரும்பி, காடுகளில் நுழைந்து  சமவெளிகளில் முகம் காட்டுகிற ஆறுகள் யாவும், விரிந்து கிடக்கும் பெரும்பகுதிச் சமவெளிகளைச் செழிப்பாக்குவதையே கடமையாகக் கொண்டிருக்கின்றன. இன்னொரு வகையில்  சொல்வதானால் சமவெளிப் பகுதிகளில் கிளைபரப்பும் ஆறுகளை அந்நிலப் பரப்பில் வாழ்ந்த மனிதக் குழுக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டன.

பருவங்களுக்கு ஏற்றாற்போன்று பெய்திட்ட மழையும், அதை உள்வாங்கிப் பெருக்கெடுத்த ஆறுகளும் சமவெளி நிலப் பரப்பைச் செழிக்கச் செய்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. இதனாலேயே ஆறுகள் பரந்த சமவெளிப் பரப்பில் நிலைகொண்டிருந்த அத்தனை மனிதக் குழுக்களும் மற்ற நிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த மனிதக் குழுக்களைக் காட்டிலும் உயா்த்திக்கொண்டன அல்லது உயா்த்திக் கொண்டதாக நினைத்துக்கொண்டன.

சிறு மற்றும் குறுங்குழுக்கள் பெருங்குழுக்களாகவும், பெருங்குழுக்கள் இனக்குழுக்களாகவும், இனக்குழுக்கள் இனங்களாகவும் உருவெடுத்து, பல்வேறு சமவெளிப் பகுதிகள் சார்ந்த பெருஞ்சமூகங்களாய் வடிவமைத்துக் கொண்டன.  இதனால்தான் ஆற்றங்கரைச் சமவெளிகளை நாகரிகம் செழித்த நிலப்பகுதிகளாக வரலாற்றில் குறிக்கப்படுகின்றன.

உலகில் தோன்றியிருக்கும் எல்லா நாகரிகங்களுமே ஆற்றங்கரைகளில்தான் தோன்றி இருக்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நாகரிகங்களாகக் கருதப்படுகிற எகிப்து நாகரிகம் நைல் ஆற்றங்கரையிலும் , சுமேரிய நாகரிகம் யூப்ரடீசு டைகரீசு ஆற்றங்கரையிலும் , சீன நாகரிகம் குவாங்கோ ஆற்றங்கரையிலும் தோன்றியவைதான். இவை போலவே , சிந்து என்னும் ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகமே சிந்து வெளி நாகரிகம்.

இந்த, 'நாகரிகம்' என்னும் சொல்லே கூட 'நகரம்' என்னும் சொல்லில் இருந்து உருவானது தான். மலை நிலத்தைக் காட்டிலும், காட்டு நிலத்தைக் காட்டிலும், கடல் நிலத்தைக் காட்டிலும், ஆறுகள் வழிந்தோடிய சமநிலைப் பகுதிகளில்தான் நகரங்கள் உருவாகி இருக்கின்றன. அதாவது, நிலையான குடியிருப்புகள், அதிகளவிலான ஊர்ப் பெருக்கம், பலவகைப்பட்ட தொழில் வாய்ப்புகள், பல்வேறு சமூகப் பிரிவினர்களின் கூட்டுறவு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துகள், வணிகம், கலை இலக்கியப் பண்பாட்டு வெளிப்பாடுகள், பல்வேறு சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற கொள்வினை கொடுப்பினை, ஆடை, அணிகலன், உணவு போன்ற வாழ்வியல் புலப்பாடுகள் அனைத்துமே ஒரு திருந்திய நிலையை அடைந்திருப்பதையே நகர வாழ்க்கை என்றழைக்கப்படுகிறது. நகரங்கள் சார்ந்த இத்தகைய திருந்திய வாழ்க்கை முறையைத்தான் நாகரிகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

நகரங்கள் சார்ந்து உருவான இத்தகைய நாகரிக வாழ்க்கை நம் நிலப்பரப்பிலும் செழித்து வளர்ந்திருக்கிறது. இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 4700 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகர நாகரிகம் இருந்திருப்பதை அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நிலப்பரப்பில் நடைபெற்ற அகழாய்வுகள் எடுத்துரைக்கின்றன.

கட்டிட நுணுக்கங்கள் மிகுந்த பெருங்குளம், சுட்ட செங்கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்ட வீடுகள், மண்டபங்கள், விதைக் களஞ்சியம் போன்றவை நகர உருவாக்கம் சிறப்பாக நடைபெற்று இருப்பதை உணர்த்துகின்றன.மேலும், குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியேறுவதற்கான தனிக் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்துள்ளன. வீட்டுக் கழிவுநீரானது மூடப்பட்ட சரிவான சிறு கால்வாய் வழியாகத் தெருவிலுள்ள பொதுக் கால்வாயில் இணைந்திருந்தன. இவையெல்லாம், பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்பங்கள் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் கடல்வழி வாணிகம் செய்து உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்திருக்கின்றனர். குழந்தைகள் விளையாடும் சுடுமண் பொம்மைகள், கிளிஞ்சல், பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல விளையாட்டுப் பொருட்களும் அணிகலன்களும் சிந்து வெளியில் கண்டறியப்பட்டுள்ளன.

காளைகள், வண்டி, புறா, படகுகள் போன்ற சுடுமண் முத்திரைகளும் சிலைகளும் சிந்து வெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பறவைகள், விலங்குகள், பெண் ஆண் உருவங்கள் போன்றவையும், வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் சிலையும் கண்டறியப்பட்டுள்ளன. ஆக, சிந்து வெளியில் நடைபெற்ற அகழாய்வுகள் சிறப்புடன் திகழ்ந்த ஒரு நகர நாகரிகத்தை வெளி உலகத்திற்குக் காட்டியிருக்கின்றன.

சிந்து வெளியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிட அமைப்பு, அவற்றின் நுணுக்கங்கள், சுடுமண் பொருட்கள், அணிகலன்கள், சிலைகள், எழுத்துப் பொறிப்புகள், தொழில், சிற்பம் போன்ற கலை வெளிப்பாடுகள் யாவுமே திருந்திய நகர நாகரிகத்தின் வெளிப்பாடுகளையே கொண்டிருக்கின்றன. இத்தகைய சிந்து வெளி நாகரிகம்தான் திராவிடர் நாகரிகம் எனப்படுகிற தமிழர் நாகரிகம் என அசுகோ பர்போலோ போன்ற ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது.

சிந்து என்னும் பெயர் குறித்துப் பாவாணர் கூறியிருக்கும் கருத்தும் நோக்கத்தக்கது. ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமையாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர்அல்லது திராவிடர் மேலை ஆசியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்பராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப் பெயராகவேய இருக்கலாம்.

சிந்துதல் = சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப்பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழை துளித்துளியாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப்படும்.
'தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி யூழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான்' (குறுந்.120)
என்பது முகில் துளி சிதறுதலையும்,
'அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனை' (குறுந்.121)
என்பது ஆறு துளி சிதறுதலையும் குறித்தன. முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.)என்னும் இருபொருளும் ஏற்பட்டன.

இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என்பதனொடு ஒழுகுதல் என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்தமானதே. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில், ஒருகால் சித் (sidh) என்பது மூலமாயிருக்கலாம் என்று ஐயுறவாகக் குறிப்பர். அச்சொற்குச் செல்லுதல் (togo) என்னும் பொருளே உள்ளது. மேலும், இருக்கு வேதத்தில் சிந்தாற்றிற்குச் சரசுவதியென்னும் பெயரே வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது என, தமிழர் வரலாறு நூலில் விளக்கப்படுத்துகிறார் பாவாணர். ஆக, சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனத் தெளியலாம்.

இந்திய ஒன்றியத்தின் வடமேற்குப் பகுதியில் சீரும் சிறப்புமாய் இருந்திருந்த சிந்து வெளி நாகரிகத்தைப் போலவே, அதனை ஒத்துப் போகும் ஒரு நகர நாகரிகம்தான் தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது.

மதுரை என்னும் சொல்கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கீழடி எனும்  சிற்றூரில் நடைபெற்று வந்த தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கிறது கீழடி. மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை, பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடக்கின்றன.

பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில்தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.

அரப்பா என்னும் சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதைந்த நகரம் என்று பொருள். அதே போல மண்ணுக்குக் கீழே - மண்ணுக்கு அடியிலே நகரமும் நாகரிகமும் வரலாறும் புதைந்து இருப்பதைத் தான் கீழடி என்னும் ஊரின் பெயரே உணர்த்தி நிற்கிறது.

பொய்யாக் குலக்கொடி எனப் புலவர்களால் புகழப்பட்ட வைகை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள், தமிழர்களின் நகர நாகரிகத்தை உலகறியச் செய்துள்ளன எனச் சொல்வதில் வியப்பில்லை. மதுரை நகர உருவாக்கத்தையும் நாகரிக வாழ்வையும் உருவாக்கியதில் வைகை ஆற்றுக்கும் பெரும் பங்கு இருந்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் வருசநாடு மேகமலை தொடங்கி இராமநாதபுரம் அழகன்குளம் வரையிலும் பயணிக்கிற வைகை ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 293 தொல்லியல் அடையாளப் பகுதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டுகள், கோயில்கள், நினைவுச் சின்னங்கள், புதைமேடுகள் எனப் பல்வேறு வகையான தொல்லியல் அடையாளங்கள் கண்டறியப்பட்டாலும், பழங்கால மக்களின் வாழ்விடம் எனும் பகுதியாகக் கண்டறியப்பட்டிருப்பது கீழடிதான்.

திருவிளையாடல் புராணமும், இறையனார் அகப்பொருள் உரையும், சில கல்வெட்டுக் குறிப்புகளும், மதுரை அருகே பெருமணலூர் என்னும் நகரம் பாண்டியர் தலைநகராக இருந்திருப்பதைப் பதிவு செய்திருக்கின்றன. தற்போது, கீழடி பள்ளிச் சந்தைப் புதூரிலும் மணலூர்க் கண்மாய்க் கரையிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் புதைந்து போன மணலூர் நகரத்தை அடையாளப்படுத்தும்படியாகவும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால மக்களின் தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் குறிப்பிடுகிற அணிமணிகள் ஏராளமானவை இங்கு கிடைத்திருப்பதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முத்து மணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லுகள், தாயக் கட்டைகள், சதுரங்கக் காய்கள், குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் போன்றவை கிடைத்துள்ளதையும் காண முடிகிறது.

சங்க கால இலக்கியமான பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறை கேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிகளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டு இருந்ததையும் காண முடிகிறது. வீடுகள், வீடுகள் தோறும் குளியலறைகள், கழிவுநீர்க் குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள் போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.

கீழடியில் சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொள்கிறது.

கீழடியில் கண்டறியப்பட்டிருக்கும் நகரம், மதுரையின் தலைநகராக மட்டும் இருந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கான பெரு நகரமாகவும் விளங்கி இருப்பதையும் உணர முடியும். சூது பவளமணிகள், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மண்கல ஓடுகள் இங்கு கிடைத்திருப்பதன் மூலம், பிற நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பானை ஓடுகளில் பழங்காலத் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட பலவகைப் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆதன், இயனன், திசன், மடைச்சி போன்ற பெயர்கள் பொறித்த பானையோடுகள் அக்காலத்தியக் கல்வி மற்றும் எழுத்தியல் வளர்ச்சியைச் சொல்லி நிற்கின்றன.

புதைந்து போன அந் நகரத்தில் நெசவுத் தொழில் இருந்தமையை அங்கு கிடைத்திருக்கும் தக்களி என்னும் நூற்புக் கருவி மூலம் அறிய முடிகிறது. அதேபோல சிறு சிறு நீர்த்தொட்டிகள், கழிவுநீர்க் கூம்புக் குழாய்கள், மண்பாண்டக் கலன்கள் போன்றவை அங்கு சாயப்பட்டறை இருந்திருப்பதையும் கூறுகின்றன.

கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள் ஆண்பால் பெயர்களைத்தான் குறிக்கின்றன. ஆனால், இதிலிருந்து விலகிய ஒரு பெயர் மடைச்சி என்பது. இது ஒரு பெண்ணின் பெயரைக் குறித்ததாகவும் இருக்கிறது. அதிலும் எளிய குடிமக்களின் பெண் பெயராகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வேளாண்மை உழவுக்குடிப் பெண்ணின் பெயராகவும் இருக்கிறது.

மடைச்சி என்னும் பெயர் வேளாண்மையோடு தொடர்பு கொண்ட ஒரு பெண்ணின் பெயர். வேளாண்மைக்கு மிக முக்கியமான ஆதாரம் நீர்தான். இந்த நீர் ஆதாரங்கள்தான் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள், ஆறுகள் போன்றவை. இத்தகைய நீர் ஆதார வளங்களை முறைப்படுத்தியும் பாதுகாத்தும் புனரமைத்தும் வந்தவர்கள்தான் மடையர்கள். நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீர் நிர்வாகத்தைப் புரிகின்றவர்கள் எனும் அடிப்படையில், மடையர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே நீர் மேலாண்மையைச் செய்து வந்தவர்கள் ஆவார்கள். இத்தகைய நீர் மேலாண்மை எனப் பெறும் மடைத் தொழில் மரபினரையே மடையர்கள் என்று சமூகம் குறித்து வைத்திருக்கிறது. அத்தகைய மடையர் என்பதன் பெண்பால் பெயராகத்தான் இந்த மடைச்சி எனும் பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர், நீராணிக்கர், நீராணியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர்.  பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.

பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்தபோது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு.  கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான  சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போதுதான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு.

கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கீழடி அகழாய்வில், அந்நிலத்தில் வாழ்ந்த மடைச்சிக்கும், ஆதிச்ச நல்லூர் அகழாய்வில், அங்கு விளைந்திருந்த நெற்கதிருக்கும், இரு நிலத்திலும் வாழ்ந்த வேளாண்மை உழவுக் குடிகளுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் மூன்றுமே வீழ்ச்சியை அல்லது வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் குறியீடுகளாகவே இப்போது இருந்துகொண்டிருக்கின்றன. அதாவது,  புதிய தடயங்கள் நிறைந்த ஆதிச்ச நல்லூர் நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. அதேபோல, கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், கீழடி அகழாய்வை இன்னும் தொடராமல், பெயரளவுக்கு மூன்றாம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக் கொண்டது இந்தியத் தொல்லியல் துறை.
எனினும், இதுவரையிலான அகழாய்வின் வழியாக, ஒரு நகரத்தில் புழங்கி இருக்கும் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடுகள், புதைந்து போன பழங்காலத்திய நகரத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்திருப்பதைத் தான் கீழடி நாகரிகம் நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஒரு நகரம்
ஒரு நாகரிகம்
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.
கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.

வரலாறு மீண்டிருப்பதைப் போலவே, வரலாறு எழுந்து நிற்கவும் செய்யும். அவ்வரலாற்றை நேர் செய்வது தமிழர் கடமை.


திங்கள், 18 டிசம்பர், 2017

சடங்கியல் பின்புலமும் கலை உருவாக்கமும்: ஏறு தழுவுதலை முன்வைத்து...




வடமொழி மரபில் எழுத்தியல் (சிட்சை), சொல்லியல் (வியாகரணம்), பொருளியல் (நிருத்தம்), செயல்முறை (கல்பம்), யாப்பு (சந்தஸ்), கணியம் (ஜ்யோதிஷம்) என்கிற ஆறு (ஷட்) அங்கங்களைக் கொண்டு செய்யும் செயலை ஷட் அங்கங்கள் என்று கூறுவர். இதுவே, நாளடைவில் மருவி சடங்கு என்று ஆகிவிட்டதாகக் கருதுவர். ஆனால், தமிழ் மரபில் சடங்கு என்பதற்கு வேறான பொருண்மையும் பொருள்கோடலும் உண்டு.

சடங்கு என்பதன் வேர்ச்சொல் சட்டம் என்பதாகும். சட்ட + அம் + கு = சடங்கு. அதாவது, சட்ட எனும் சொல்லிற்கு ஒழுங்கு முறையான, செவ்விதான எனப் பொருள் உண்டு. அம் என்பதற்கு அழகியது எனப் பொருளுண்டு. கு என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதியாகும். ஆக, ஒரு செயலைச் செம்மையுடனும் ஒழுங்கு முறையுடனும் அழகாகச் செய்விக்கும் தன்மையைச் சடங்கு எனப் பொருண்மை கொள்ளலாம். 

ஒரு சமூகக் குழுவினரால் புரிந்து கொள்ளப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான ஒன்று, காலங்காலமாகவும் மரபு வழியாகவும் பயிலப்பட்டு, அதன் பயன்பாட்டைக் கருதியும் ஏதோ ஒருவகையில் தக்கவைக்கும் நோக்கத்திலும் அதனைக் குறியீட்டுத் தன்மைகளுடன் புலப்படுத்துகிற ஒரு செயல்பாட்டைச் சடங்கு என வரையறுக்கலாம். ஒரு மனித சமூகக் குழுவினரால் குறியீட்டு நிலையில் நிகழ்த்தப்படுகிற செயன்மைகள், திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படுவதின் வழியாகச்  சடங்கு எனும் நிலைத்த வடிவத்தைப் பெறுகின்றன.

செயல் வடிவம் என்பதுதான் சடங்கின் சிறப்புக் கூறு ஆகும். அதாவது, சடங்கு என்பதே நிகழ்த்தப்படுவதாகும். சடங்கில் நிகழ்த்துதல் என்பதே அதன் அடிப்படைக் கூறாக அமைகிறது. இத்தகைய சடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் தன்மை கொண்டவை. சடங்கின் மற்றொரு சிறப்புக் கூறாக அமைவது, அது பலரின் கூட்டு முயற்சியால் நிகழ்த்தப்படுவதாகும். விதிவிலக்காக, சில சூழல்களில் தனி மனிதரால் அவை நிகழ்த்தப்பட்டாலும்கூட, அவை பெரும்பாலும் கூட்டுத் தன்மை உடையவையாக, சமூகம் சார்ந்தவையாகவே நிகழ்த்தப்படுகின்றன.

நிகழ்த்து வடிவமே சடங்கின் வடிவம் எனக் கொள்கிறபோது, நிகழ்ந்தவற்றையே நிகழ்த்திக் காட்டும் தன்மையைச் சடங்கு கொண்டிருக்கிறது எனலாம். அதாவது, வாழ்வியலோடும் உணர்வோடும் நெருக்கமாய்ப் பிணைந்து கிடந்த ஒரு சமூகக் குழுவின் கடந்த காலத்திய அல்லது நிகழ்காலத்திய செயன்மைகளே, போலச் செய்தலாகவோ பாவித்தலாகவோ உணர்வுநிலை சார்ந்தும் நம்பிக்கை சார்ந்தும் நிகழ்த்தப்படுகிறபோது அவை சடங்குகள் எனும் மீவியல் தன்மையையும் நிகழ்த்து வெளிகளையும் கொள்கின்றன.

மனித சமூகக் குழுவின் வாழ்வியல் செயல்பாடுகளின் வழியே பாவனைகளாகவோ போலச்செய்தல்களாகவோ மேற்கொள்ளப்படுகிற இத்தகைய சடங்குகள்தான், அழகியலோடும் உணர்வெழுச்சியோடும் புலப்படுத்தப்படுகிறபோது நிகழ்த்துக்கலை எனும் வடிவத்தைப் பெறுகின்றன. அவ்வகையில், தமிழ்ப் பண்பாட்டு மரபில் நிகழ்த்துக் கலை வடிவமாய்ப் பரிணமித்திருக்கும் ஏறு தழுவுதல், தமிழ்ச் சமூகத்தின் சடங்கு வெளியிலிருந்து உருக்கொண்ட நிகழ்த்துக் கலை என்பதையும், சடங்கியல் பின்புலத்தில் கலைகள் தோற்றம் பெறுவதையும் விளக்கப்படுத்துகிறது இக்கட்டுரை.

தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்துச் சடங்காகப் புலப்படுத்துகின்ற பெரும்பாலான சடங்குகள், வேளாண் உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து பார்க்கும் அல்லது போலச் செய்து காட்டும் சடங்குகளாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு நிகழ்த்துச் சடங்கிற்குப் பின்னாலும் உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளின் போலச் செய்தல் நோக்கமும் செயன்மையும் புதைந்து கிடக்கிறது. வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைப் போலச் செய்து புலப்படுத்தும் நிகழ்த்துச் சடங்குகள், பெரும்பாலும் உற்பத்தியோடு தொடர்புடைய விலங்குகளோடும் தொடர்பு உடையதாய்த்தான் அமைந்திருக்கின்றன .

உலகில் உள்ள மனித சமூகங்கள் பலவும் விலங்குகளோடு தொடர்புடைய சடங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஆத்திரேலிய ஆதிவாசிகள், புதர்களுள் ஒளிந்திருக்கும் விலங்குகளை வேட்டை ஆடுவது போலக் குழு நடனம் ஆடுவார்கள். புதர்களை விலக்கிச் செல்வது போல முதலில் சைகை செய்து ஆடுவார்கள். புதர்களில் இருந்து ஒலி வருவது போலத் தங்கள் குரலாலும் இசைக் கருவிகளாலும் ஒலி எழுப்புவார்கள். விலங்குகள் ஓடுவதுபோல ஆடுவார்கள். பின்னால் அவற்றை பூமராங் என்ற கருவியை எறிந்து கொல்வதுபோல ஆடுவார்கள். அடிபட்ட விலங்குகள் துடிப்பதுபோல ஆடுவார்கள்.

அதேபோல, ஆப்பிரிக்க இனக்குழு மக்கள், வலையில் மான்களை வீழ்த்துவதுபோல நடனமாடுகிறார்கள். பெண்கள் மான்களாகவும் ஆண்கள் வேட்டைக் குழுவினராகவும் பிரிந்து நின்று ஆடுவார்கள். ஆண்கள் தங்கள் உடலினுள் வெளியிலிருக்கும் ஒரு விலங்கின் சக்தி புகுவது போல நினைத்து, வலை வீசுவது போல் ஆடுவார்கள். பெண்கள் வலையில் அகப்படுவதுபோல் ஆடுவார்கள்.

மெலனீசியாவில் மீன் பிடிக்கும் பருவம் ஆரம்பிக்கும்போது விருந்தும் குழு நடனமும் நடைபெறும். அதில் காற்றடிப்பது, கடல் அலையில் படகு மிதப்பது, வலை வீசுவது, மீன் வலையில் அகப்படுவது, படகு கரை சேருவது, மீன் அதிகம் பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக ஆடுவது போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள் என்கிற குறிப்புகளைத் தருகிறார் நா.வானமாமலை. மேற்குறித்த நிகழ்த்துக் கலைகளையும் சடங்குகளையும் போலச் செய்தல் சடங்குகள் எனக் குறிக்கின்றனர் மானுட ஆய்வாளர்கள். 

உணவைத் தேடியும் உற்பத்தி செய்தும் வாழ்ந்து வந்திருக்கிற மனித சமூகத்தின் சடங்குகளில், விலங்குகளும் செடிகளும் கொடிகளும் மரங்களும் நிலமும் விதைகளும் முதன்மை பெறுவது தவிர்க்க முடியாது.

வேட்டை வாழ்க்கையை முற்றிலும் கைவிட்டு, உழவுத் தொழிலில் உணவு பெற்று வாழும் மக்கள் இனத்தவரிடையேகூட வேட்டைக்கால நம்பிக்கைகளின் எச்சங்கள் இருக்கின்றன எனும்போது, உழவுத் தொழில் சார்ந்த செயன்மைகளில் பல்லாயிரம் ஆண்டு காலத் தொடர்பை இன்னும் உயிர்ப்போடு தங்களது வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் மக்களது நிகழ்த்துச் சடங்குகளும் விலங்கோடு தொடர்புடையவையாகத்தான் அமைந்திருக்கும். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் நிகழ்த்துச் சடங்குகள் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்ததாகவும், மாடுகள் சார்ந்ததாகவும் இருப்பதைக் காண முடியும்.

தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடுகளை மதிப்புடனும் மகிழ்வுடனும் கொண்டாடி வந்து கொண்டிருப்பதைப் பல பண்பாட்டுக் கூறுகளின் வழியே அறிய முடியும். இத்தகைய வேளாண் உற்பத்தியின் உயரிய பண்பாட்டுப் புலப்பாடுதான் பொங்கல் சார்ந்த சடங்குகளும் நிகழ்த்துக் கலைகளும்.

தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி உழைப்பும் வாழ்நிலையும் வேளாண்மையோடு தொடர்புடையதாக இருந்ததால், வேளாண் உற்பத்தியின் அறுவடைக்காலமே, உணவுக்கும் செல்வத்திற்கும் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய காலமாகும். அத்தகைய அறுவடையையும் அதற்குத் துணை நின்றவற்றையும் நன்றியோடும் மதிப்போடும் வாழ்த்தவும் வணங்கவும் செய்தனர் தமிழர். அதைத்தான் பொங்கல் விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்வகையில்தான், தையள் மாதம் என்கிற சுறவம் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெவ்வேறு வகையில் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சமூகத்தின் விழாக்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், இன்னும் பிற நிகழ்த்துதல்கள் அந்தச் சமூகத்தின் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமாக சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும் சமூகங்கள், அவை சேமித்து வைத்திருக்கும் கூட்டு நினைவுகளைச் சடங்குகள் விழாக்கள் மூலம் வெளிப்படுத்துவதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதற்கு உதவுகின்றன. இவற்றிலிருந்தே சமூகத்தின் ஆதி வரலாற்றை அறியவும் மீட்டெடுக்கவும் முடியும் என்கிறார் பால்கன்னர்டன் எனும் இன வரைவியல் ஆய்வாளர்.

அந்த வகையில், குழுவாகவும் இனக்குழுவாகவும் சாதியாகவும் பன்மை அடையாளங்களை உள்ளீடாகக் கொண்டு வளர்ச்சி அடைந்த தமிழ்த் தேசிய இனத்துள், தனி மரபாகவும் கலப்பு மரபாகவும் கூட்டு மரபாகவும் பொது மரபாகவும் முன்னெடுத்துக் கொண்டாடுகிற பண்பாட்டு அடையாளங்களுள் பொங்கல் பண்பாடும் ஒன்று. அதனால்தான் பொங்கல் பண்பாட்டைத் தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்திப் பண்பாடாகக் கருதப்படுகிறது. இதுவே தமிழ் நிலத்தின் உயிர்ப் பண்பாடாகவும் காணப்படுகிறது. 

பொதுவாகவே, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் உற்பத்தி சார்ந்தும் உயிரின வளமை சார்ந்தும் அறம் சார்ந்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியலைக் கொண்டிருக்கும். இத்தகையத் தமிழ் மரபு, சமயச் சார்பற்றவை. அதனால்தான், வைதீகம் எனப்படுகிற பார்ப்பனிய மரபு, தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் அனைத்தையும் தமக்குரிய எதிர் அடையாளமாகவே கட்டமைத்தன.

தமிழ்ப் பண்பாட்டு மரபும் பார்ப்பனியத்தை எதிர்க்கும் - மறுக்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழ் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது பார்ப்பனியம்.

பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது என உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவம் எனக் கருதுகிற சமசுக்கிருத மரபில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான். 

பார்ப்பனர்கள்  நிலம் வைத்துக் கொள்ளலாம்; உணவு உட்கொள்ளலாம். ஆனால், வேளாண் தொழிலான உழவுத் தொழிலை மட்டும் அவர்கள் செய்யக் கூடாதாம். பார்ப்பனர்கள் பசு மாட்டைத்தான் தங்களது அடையாளமாகக் கருதுவர். ஆனால், தமிழர்களோ நிலத்தில் இறங்கி சேற்றில் உழைக்கும் வேளாண்மைத் தொழிலைத்தான் தங்களது உற்பத்தி அடையாளமாகக் காண்கின்றனர்.

உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளைத்தான் தங்களது பண்பாட்டு அடையாளமாகக் காண்கின்றனர். அதனால்தான், ஏரையும் உழவையும், நிலத்தையும் மாடுகளையும், பயிர்களையும் அறுவடையையும், உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில் பொங்கல் பண்பாட்டை வளப்படுத்தியிருக்கிறார்கள். இத்தகையப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சிதான் மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகள். அவைதான், மாட்டுப் பொங்கல் சார்ந்த நிகழ்வுகள்.

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும்.

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, கழுத்துமணி ஆரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது.

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனைப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்று கூடி நடத்தப்பட்டிருக்கிறது.

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும் உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்வதை வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப்பட்டிருக்கிறது. இந்த நேர்த்திக்கடன் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது.

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்டதோடு கால்களில் சலங்கை கட்டிய அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு , தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனே தான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர்.

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும் தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.

மனிதர்களும் மாடுகளும் மாறிமாறி உழைக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன; சோர்ந்து போகின்றன. இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக்கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வுக் காலமும் தேவைப்பட்டிருக்கின்றன. அந்த ஓய்வு என்பது, உணவோ உறக்கமோ மட்டுமல்ல. உணவும் உறக்கமும் உடல் சோர்வையும் தேய்வையும் வேண்டுமானால் போக்கும். உள்ளத் தேய்வையும் சோர்வையும் போக்கவேண்டுமானால் உள்ளம் மகிழும்படியான பொழுதுபோக்கும் நடவடிக்கையும் வேண்டியிருந்திருக்கும். அதனாலேயே உள்ளக் கிளர்ச்சியும் எழுச்சியும் மகிழ்ச்சியும் தரும்படியான கலைகளையும் விளையாட்டுகளையும் நிகழ்த்தியும் பங்கேற்றும் வந்துள்ளனர் முன்னோர்.

காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்த இந்நிகழ்த்து முறைகளும் பண்பாடாய் வடிவமைந்து போகின்றன. அவ்வகையில், வாழ்வோடும் தொழிலோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மனிதர்களும் மாடுகளும் பொழுதுபோக்காய் விளையாடி மகிழும் விளையாட்டு மரபாய் உருக்கொண்டதாகத்தான் மாடு தழுவல் பண்பாடு வடிவமைந்திருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

இச் சடங்கு நிகழ்வு, வேளாண் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் அதேவேளையில், வேளாண் உற்பத்தி சார்ந்த சந்தைப்  பொருளியலையும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஒரு சடங்கு பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விழாக்களாகக் கொண்டாடப்படும் போதுதான் அதன் சந்தைப் பொருளாதாரம் விரிவடைந்திருக்க முடியும்.

தொழில் உறவுகள், வணிக உறவுகள், புழங்கு பொருள் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பண்டமாற்று எனப் பொருளியல் சார்ந்த நடவடிக்கைகளும் இது போன்ற சடங்குகளுக்குள் மறைந்திருக்கின்றன. அதாவது, வேளாண்மை சார்ந்த தேசிய இனத்தின் தற்சார்புப் பொருளாதாரப் பின்புலம் இதற்குள் உண்டு. ஆதலால் தான், மாடு தழுவல் சடங்கானது பெருமகிழ்வுக்கான விழாவாக மாறிக்கொண்டது. 

மாடுகளுள், குறிப்பாகக் காளை மாடுகளே ஏரில் பூட்டி உழவு செய்திருப்பதால், ஏர் மாடுகள்,  எருதுகள், ஏறுகள் என்றழைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் மாடு தழுவுதல் என்பதுகூட எருது தழுவுதல், ஏறுகோள், ஏறு தழுவுதல் என இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய மாடு தழுவல் நிகழ்வு இன்னும் வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு, காளை விரட்டு, ஏறு விடுதல், வடமாடு, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என வட்டாரம் சார்ந்து அழைக்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்துமே மாடுகளைத் தழுவிக்கொள்ளும் நிகழ்வைத்தான் குறிக்கின்றன.

மாடு தழுவல் என்னும் நிகழ்வானது சடங்காய் மட்டும் தேங்காமல், தமிழினத்தின் இன்னுமொரு பண்பாட்டு விழாவாகவும் பரிணமித்து வந்திருப்பதைக் காண முடியும். அவ்வகையில், மாடு தழுவலைக் குறித்தத் தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கலை சார்ந்த தடயங்களும் நிரம்ப உள்ளன.

சிந்து வெளி என்றழைக்கப்படுகிற மொகஞ்சதாரோ, அரப்பாவில் நடைபெற்ற அகழாய்வுகள் தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளன. சிந்து வெளியில் மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஏறு தழுவுதலைக் குறிக்கும் சின்னம் என்கிறார் அய்ராவதம் மகாதேவன்.

வளைந்த கொம்புகளுடைய ஒற்றை எருது, மூர்க்கமான கோபத்துடன் முதுகுப் புறமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு, விரைந்து முன் நகர்ந்து மாடு அணையும் மனிதர்களை முட்டி வீச, அவர்களில் இருவர் காற்றில் மிதப்பது போலவும், ஒருவர் எருதைத் தாவி அணைவது போலவும், மற்ற இருவர் முன் பின்னாகத் தலை குப்பிறக் கீழே விழுவதுமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் சிலவும் ஏறு தழுவதலைக் குறித்துப் புலப்படுத்துகின்றன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் கி.மு 2000 முதல் 1500 வரையிலான காலத்தைச் சார்ந்த பாறை ஓவியம் காந்தி ராசன் அவர்களால் கண்டறியப்பட்டது. கூரிய கொம்புகளும் சிலிர்த்த  திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார் அவர். மேலும், மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து மேட்டுப்பட்டியிலும் ஒரு பாறை ஓவியம் அவராலேயே கண்டறியப்பட்டுள்ளது.

திமிலுடன் கூடிய ஒரு காளையை மனிதர் ஒருவர் அடக்க விரட்டுவது போன்று அமைந்த அவ் ஓவியம் கி.மு 1500 ஆம் காலத்தைச் சார்ந்தது ஆகும். இதேபோல, தேனி மயிலாடும்பாறைக்கு அருகில் அருக வெளியில் உள்ள சித்திரக்கல் புடவில் திமிலுடன் கூடிய காளையின் ஓவியம் பாலமுருகன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இவைகள் போக, தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நடுகற்கள் ஏறு தழுவலைக் குறித்த புடைப்புகளையும் குறிப்புகளையும் தருகின்றன. பல்வேறு கல்வெட்டுகளும்கூட ஏறு தழுவல் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

நடுகற்களுள் பல வகை உண்டு. புலியோடு போராடி மாண்டவருக்கு எடுக்கப்பட்ட கல், புலிக் குத்திக் கல் என்று சுட்டுவர். அதே போல, பன்றிக் குத்திக் கல், யானைக் குத்திக் கல் எனப் பல வகையும் உண்டு. அவற்றுள், எருது பொருதார் கல் ஒன்றையும் ஆய்வாளர் சுட்டியுள்ளனர். இதில், காளையின் கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தகையச் சிற்பங்களைக் கொண்ட நடுகற்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன எனக் கூறும் பெருமாள் முருகன், சேலம் மாவட்டத்தில் உள்ள எருது பொருதார் கல் ஒன்றில் காணப்படும் செய்தியைக் குறித்தும் விளக்கப்படுத்தியுள்ளார். கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான். சங்கன் மகன் பெரிய பயலு நட்ட கல்லு என்கிறது அந் நடுகல் . கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடிப் பட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் இது. இதில் எருது விளையாடி என்னும் தொடர் இடம் பெறுவது கவனத்திற்குரியது என்பார் அவர்.

குறிஞ்சி நிலத்து விலங்காகிய மாடுகள் முல்லை, மருதம், பாலை நிலத்து மக்களோடும் தொழிலோடும் வாழ்வோடும் பினைந்து கிடந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவாறாக விவரித்துள்ளன. அவற்றுள் ஏறு தழுவலைக் குறித்த பதிவுகளும் உண்டு.

சங்க கால முல்லைக்கலியில் ஏறு தழுவல் குறித்த பாடல்கள் பலவுண்டு. எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் என ஏறு தழுவல் களம் காட்டப்படுகிறது.

மருப்பில் கொண்டும் மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச் சாடி
கொள இடம் கொளவிடா நிறுத்தன ஏறு –
என, ஏறு தழுவலின் களத்தை விவரிக்கிறது கலித்தொகை. அக் களத்தில் நிற்கும் ஏறுகள், தம்மை அடக்குவதற்காய் வருகின்றவர்களைக் கொம்பினால் குத்திக் கீறி தம் வீரத்தைக் காட்டி நின்றதைக் கூறும் கலித்தொகை ,

கழல உழக்கி, எதிர் சென்று சாடி
அழல்வாய் மருப்பினால் குத்தி
உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்டதம் புண்வார் குருதியால் கைபிசைந்து மெய் திமிறி
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந் தாங்கு ஊர்ந்தார் ஏறு.
ஏறு தம் கோலம்செய் மருப்பினால்
தோண்டிய வரிக்குடர் ஞாலம் கொண்டு
எழூஉம் பருந்தின் வாய்வழீஇ 
ஆலும் கடமும் அணி மார் விலங்கிட்ட
மலைபோல் சினை
என்றுரைக்கின்றது. மேலும், கலித்தொகையின் முல்லைத் திணைப் பாடல்களில் (101 முதல் 107) பலவற்றிலும் ஏறு தழுவுதலைக் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன.

உழவில் பங்கேற்கும் ஏர் மாடுகளைத் தவிர, அதில் பங்கேற்காத காளை மாடுகளும் உண்டு. இவை பொலி காளைகள் எனப்பட்டன. இக்காளைகளே ஏறு தழுவல் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்கக் கூடியவை. இதைக் குறித்துக் கலித்தொகை ஒரு காட்சிபோல் விவரிக்கிறது.

திமில் பெருத்த  இக்காளைகள், பல நிலத்திலிருந்து நீரைக் கொண்டு வருபவை போல நிலத்தை முட்டித் தோண்டின. சில காளைகள் நிலத்தை நொறுக்கின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துச் சிலைத்துக் கொண்டன. சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இவ்வாறு இந்தக் காளைகள் வீரமுடன் போரிட்டுச் செல்வது, மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருத நிலத்து மள்ளர்களை ஒத்ததாக இருக்கிறது என முல்லை நிலத்தையும் மருத நிலத்தையும் இணைவிக்கும் வகையில்,

நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல –
களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன
எனப் புலப்படுத்தியுள்ளது கலித்தொகை.

ஏறு தழுவல்போல, எருதுக்கட்டு எனும் மாடு தழுவல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்திருக்கிறது.

நாச்சங்காளை வடம் வெட்டிக் கன
பாய்ச்சல் காட்டும் பரையெல்லாம்
சிம்பும் எருது வடம் தொட்டு இழுத்துக்
கொம்பு பிடித்து விளையாடி
என்றும்,
எருது கட்டினர் குடும்பரே
என்றும் அந்நூல் விவரிக்கிறது.

ஏறு தழுவல் என்பது இன்னொரு வகையில் ஒரு பாவனை விளையாட்டுத்தான். மாடும் மனிதரும் இரு வேறு உயிர்ப்பான உறவுகள். மாடுகளைக் குறித்து மனிதரும், மனிதரைக் குறித்து மாடுகளும் இணக்கத்தோடும் பரிவோடும் புரிந்தே வைத்துள்ளனர். அதனால்தான் இரு தரப்பும் தம் வீரத்தை விளையாட்டாகக் காட்டிக் கொள்கின்றன. வெல்வதும் தோற்பதுமான பாவனைகள் தழுவல்களோடு முடிந்து போகின்றன. அதைத்தான் ஏறு தழுவல் நிகழ்வுகள் போலச் செய்து காட்டுகின்றன. இதனை ஏறு கொள் வென்றி எனச் சுட்டுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை. இதுபோன்று விலங்குகளோடு தொடர்புடைய விளையாட்டுகளையும் அந்நூல் தெரிவிக்கின்றது.

கோழி வென்றி , தகர் (கிடாய்) வென்றி , யானை வென்றி, சிவல்(கவுதாரி) வென்றி , கிளி வென்றி , குதிரை வென்றி எனப் பல வகை வென்றிகள் குறித்த விரிவுப் பதிவுகள் அந்நூலில் உண்டு. இவை யாவும் விலங்குகளை விலங்குகளோடு பொருதச்செய்யும் விளையாட்டுக்கள். ஆனால், விலங்கோடு மனிதர் தழுவும் விளையாட்டு மாடு தழுவல் மட்டும் தான்.

வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்காய்த் திகழும் ஏறு தழுவலானது, பயில்முறைத் தேவைக்கான தழுவலாகவும் அமைந்திருப்பதைப் பள்ளு நூல்கள் தெரிவிக்கின்றன .

பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
   பூட்டும் பொழுதிலொரு புல்லைக் காளை
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி
  முடுக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட
மாட்டுக் குறும்படங்க மறிப்பன் எனவே
  வடிவழகக் குடும்பன் வந்து மறித்தான்.
கோட்டு முனையாலது குத்துமளவில் குடும்பன்
  சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான்
என உழும் களத்தில் மாடு முட்டுகிற நிகழ்வைக் காட்டுகிறது முக்கூடற் பள்ளு.

காளைகளோடு தழுவிப் பழகியிருந்தால் மட்டுமே - காளைகளைத் தம் வயப்படுத்தும் பயில்முறை தெரிந்திருந்தால் மட்டுமே காளைகளை உழவில் கையாள முடியும். அத்தகைய பயில் முறைகளையும் - பழகு முறைகளையும் நிகழ்த்திப் பார்க்கும் சடங்காகத்தான் மாடு தழுவல் எனும் ஏறு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையத் தழுவல் சடங்கு உழவில் ஈடுபட்ட உழவர்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருப்பதையும் பள்ளு நூல்கள் சொல்கின்றன.

மாடு முட்டியதால் கீழே விழுந்து கிடந்த பள்ளர், மறுபடியும் காளைகளைத் தம் வயப்படுத்தி ஏரில் பூட்டி உழுததை
பள்ளன் எழுந்து நிலை தரித்தான்- நின்ற
பள்ளியர் முகம் பார்த்துச் சிரித்தான்.
மெள்ளப் புருவம் கோட்டி நெரித்தான் - மாட்டை
மீளவும் பூட்டி உழத் தரித்தான்
என்கிறது முக்கூடற் பள்ளு.  இவ்வாறாக, வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கான மாடு தழுவலைக் குறித்த பதிவுகள் அமைந்திருக்கின்றன.

ஏறு தழுவுதல் மனிதர்க்கும் மாடுக்கும் இடையே நிகழ்கிற ஒரு விளையாட்டு மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், இது மனிதர்களின் வீரத்தைக் காட்டும் நிகழ்வு அல்ல. இரு தரப்பு வீரத்தையும் தினவையும் தழுவலின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிற - உணர்வைக் கொடுத்துப் பெற்றுக் கொள்கிற பரிமாற்ற விளையாட்டு அவ்வளவே. மனிதர்களைக் காட்டிலும் மாடுகள்தான் வலிமை மிக்கவை; மூர்க்கம் கொண்டவை; துள்ளல் நிறைந்தவை; தினவு மூண்டவை. ஆதலால், காளைகளுக்கே வீரம் மிகுந்திருக்கும். அதனால்தான் மாடு தழுவுதலைக்கூட மஞ்சு விரட்டு என்கின்றனர். மைந்து என்றால் வீரம் என்று பொருள். மாடுகளின் மைந்து விரட்டலே மஞ்சு விரட்டு என்றாயிற்று என்பார் தொ.பரமசிவம்.

முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருத நிலத்து மக்களின் வேளாண் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவையின் பொருட்டு உருவான தன்னுறு தொழிலோடும் மாடுகள் பிணைந்து கிடக்கின்றன. இவ்வாறு, மூவகைப்பட்ட தொழில்சார் சமூகத்தினரும் மாடுகளைப் பயன்படுத்தி, மாடுகளோடு தொழிற்பட்டு, மாடுகளைச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்ததால் ஏறு தழுவுதலும் இயல்பாகத் தோன்றி வளர்ந்தது என்பார் இ.பேச்சிமுத்து .

ஆக, மாடு தழுவல் என்பதும் - அதன் நோக்கம் என்பதும்  மனித வீரத்தை நிலை நாட்டுவதற்கல்ல; மாறாக, வேளாண் உற்பத்தியின் ஒரு நிகழ்த்துச் சடங்கு  மட்டுமே என வரையறுக்கலாம். அச் சடங்கும் விளையாட்டும்தான் ஏறு தழுவல் எனும் மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடாய் நீட்சி அடைந்து வந்திருக்கிறது.

கூடவே, இந்நிகழ்த்துச் சடங்கு, வேளாண்மையோடு நேரடி உழைப்பில் ஈடுபட்டு வந்திருக்கும் உழுதுண்ட உழவுக் குடிகளின் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளம் எனவும் வரையறுக்கலாம்.

குறிப்பாக, சிறு மற்றும் குறு அளவிலான நிலத்தோடு  உழைப்பில் உறவாடிக் கிடந்த உழவுக்குடிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைத் தொழில் குடிகளின் பண்பாட்டுக் கண்ணியாகவும் அது அமைந்திருக்கிறது எனலாம்.

பார்வை நூல்கள் :
1. ஏறு தழுவுதல் : வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் – மகாராசன்.
2. ஏறு தழுவுதல் சல்லிக்கட்டு: தொன்மை பண்பாடு அரசியல் - பாவெல் பாரதி (தொ.ஆ).
3. கலித்தொகை மூலமும் உரையும் – அ.விசுவநாதன்.
4. பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் - பாவாணர்.
5. பண்பாட்டுக் கட்டுரைகள் - பாவாணர்.
6. தமிழியல் கட்டுரைகள் - பாவாணர்.
7. தமிழர் பண்பாடும் தத்துவமும் - நா.வானமாமலை.
8. புறப்பொருள் வெண்பாமாலை - பொ.வெ.சோமசுந்தரனார் உரை.
9. அசல் மனுதர்ம சாஸ்திரம் - கி.வீரமணி ஆய்வுரை .
10. தமிழ் இலக்கியத்தில் சேர சோழ பாண்டிய மரபினர் - குருசாமி சித்தர்.
11. மானுட வாசிப்பு: தொ.ப தெறிப்புகள் - தயாளன் : சண்முகானந்தம்.
12. முக்கூடற் பள்ளு - ந.சேதுரகுநாதன் உரை.
13. திருவேட்டை அய்யனார் பள்ளு - ப.வே.நாகராசன் (ப.ஆ).
14. தமிழ் விக்கிப்பீடியா


வியாழன், 14 டிசம்பர், 2017

சாதியம் குறித்துப் பேசு பொருளாக்குங்கள்; அதுவே மனித உரிமைக்கான அறம்


சங்கர், சாதிய ஆணவப் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மூன்று வகைப்பட்ட போக்குகள் நிலவுகின்றன.

நிலவுகிற சமூக அமைப்பின் அரசு எந்திரம் வழங்கி இருக்கிற இது போன்ற தீர்ப்புகளே சாதியத்தையும் சாதியப் படுகொலைகளையும் ஒழித்து விடும் என நம்புவது ஒரு போக்கு.

மற்றொன்று , சாதிய ஆணவப் படுகொலைகளை ஆதரித்தும், சாதியத்தின் திமிரோடு காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வெளிப்படுத்தித் தீர்ப்புக்கு எதிரான ஒரு சாதிய உளவியலை உருவாக்கும் அல்லது இறுக்கமாக்கும் போக்கு .

இன்னொன்று, இது போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனை கூடாது என வாதிடும் போக்கு.

மேற்குறித்த மூன்று வகைப்பட்ட போக்குகளுமே நிலவுகிற அல்லது நிலவி வந்திருக்கிற சாதியச் சமூக அமைப்பின் இயங்குதலை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் சரிவரப் புரிந்து கொள்ளாமையால் உருவானவை.

சாதிய இறுக்கம் ஒரு புறமும், சாதியத் தளர்வுக்கான வேலைகள் ஒரு புறமும் பல காலமாக நடந்து கொண்டு தான் வருகின்றன. இதில் எதன் பக்கம் நிற்கிறோம் அல்லது நிற்கப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கிற கேள்வி. இதற்கு முன்னால் சாதியம் பற்றிய புரிதலில் தெளிவு தேவை .

மரண தண்டனை தீர்ப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தோழமைகளின் கருத்துகள் குறித்து தான் மறு விமர்சனம் செய்யப்படுகிறது . சாதியம் பற்றிய உரையாடல்களைப் பின்னுக்குத் தள்ளுவதில் என்னென்ன அக மற்றும் புறக் காரணிகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி , சாதியத் தகர்ப்புக்கான அணி சேர்க்கைக்கான அறைகூவல் தான் எம் போன்றவர்களின் விமர்சனப் போக்குகள்.

இது போன்ற விமர்சனங்கள் , உயர்த்திக் கொண்ட சாதிய சமூகத்திலிருந்து சமூக சனநாயக ஆற்றல்களாகப் பரிணமித்திருக்கும் தோழமைகளை சாதியவாதிகளாகச் சுருக்கிப் பார்ப்பதாகவோ , ஒடுக்கப்பட்டவர்களின் விரோதியாகப் பார்ப்பதாகவோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  அவர்களது புரிதல் மீதும் கருத்தின் மீதும் தான் விமர்சனமே தவிர, அவர்கள் எதிராளிகள் அல்ல. விமர்சனம் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் யாவரும் எம் தோழரே.

சாதியப் பிரச்சினை குறித்துப் பேச வேண்டியதும், செயலாற்ற வேண்டியது குறித்தும் தோழர் தமிழரசன் அவர்களின் விவரிப்பு பின்வருமாறு:

' சாதிப் பிரச்சனை ஒவ்வொன்றுமே ஜனநாயக உரிமைக்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான பிரச்சனையாகும் . சாதி ஒழிப்பிற்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களைப் பாட்டாளி வர்க்கக் கட்சி வறட்டுவாதங்களில் சிக்கி சரியான நிலை எடுக்கத் தவறுவதால் நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையிலிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தால் மக்கள் அச்சாதிவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் பிற்போக்கு வாதிகளின், வர்க்க சமரச சீர்திருத்தவாதிகளின் பின்னால் ஓடுகிறார்கள்.

பிற்போக்கு வாதிகளின் நோக்கம் உழைக்கும் மக்களை ஒன்றுபட்டு விடாதபடி பிரித்துவைத்திருப்பதே என்பதால் சனநாயக உரிமையை வழங்குவதை என்றுமே தீர்ப்பதில்லை. சீர்திருத்தவாதிகளோ மதமாற்றம், வகுப்புவாரி ஒதுக்கீடு, சாதி சங்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று பிரச்சனையை ஓரிரு எலும்புத் துண்டோடு நிறுத்திவிடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிச் சாதிகளையே ஒழிப்பதை நோக்கி இட்டுச் செல்வதில்லை.

சாதிப் பிரச்சனை என்பது சனநாய பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே, இந்தியத் துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போலல்லாமல் இதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும்.

இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தீர்க்கப்பட முடியுமென்பதால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சனநாயகப் போராட்டங்களுடனும் அதாவது புதிய சனநாயகப் புரட்சிக்குரிய சனநாயகப் போராட்டங்களுடனும் இணைக்கப்படவேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டங்கள் உழவர் விடுதலை, தமிழக விடுதலைப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்'.'

 -தோழர் தமிழரசன்
(''சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்'' எனும் நூலில் இருந்து)

புதன், 13 டிசம்பர், 2017

சாதிய உளவியலும் பதற்றங்களும்


சங்கர் படுகொலைக் குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்தத் தீர்ப்பைக் குறித்து நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை; எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. வரவேற்க வேண்டிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டும்.

இதுவே இறுதித் தீர்ப்பும் அல்ல.  இங்குள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் சாதியத் தன்மைகளோடும் அவற்றின் சார்புகளோடும் தான் பெரும்பாலும் இயங்குகின்றன. விதிவிலக்காய் இந்தத் தீர்ப்பு அவ்வளவே.

மரண தண்டனை அல்லாமல் மற்ற தண்டனை வழங்கினால் மட்டும் தீண்டாமையோ படுகொலை நிகழ்வுகளோ நடக்காமல் இருக்கப்போவதில்லை. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் அது குறைந்திடப் போவதுமில்லை. ஆனால் சாதியவாதிகளுக்கு ஓர் அச்சத்தையும் பதற்றத்தையும் இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை . இதைப் பலருடைய  பதிவுகள் பதற்றத்தோடு வெளிப்படுத்துவதில் தெரிகின்றன.

இந்தத் தீர்ப்பால் சாதியம் ஒழிந்து விடும் என நான் நம்பவில்லை. ஆயினும் சாதிய உளவியல் பதறத் தொடங்கி இருப்பதாகவே கருதுகிறேன்.
முற்போக்கும் புரட்சியும் பேசுகிறவர்களுக்குள்ளிருந்து நிறைய சாதிய முகங்கள் வெளியே வந்து மனித உரிமை, மரண தண்டனை எதிர்ப்பு என்ற சாயங்களைப் பூசித்திரிகின்றதைப் பார்க்கும் போது தான் சாதியச் சமூகத்தின் வேர்த் தடங்கள் தெரியத் தொடங்குகின்றன.

சமூக விஞ்ஞானம் பயில்கின்றவர்கள் எனச் சொல்வோரிடமே சாதியம் குடியிருக்கிற போது, சாதிய வட்டத்தோடு நெருங்கி இருக்கிற சாமானியர்களின்  உளவியலை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

இடைநிலைச் சாதிகள் அல்லது உயர்த்திக் கொண்ட சாதிகளில் உள்ள சமூக சனநாயக சக்திகள் இது போன்ற தீர்ப்புக்கு ஆதரவாக நிற்கும் போது தான், சாதியக்கட்டுமானத்தை மெல்ல மெல்ல அவிழ்க்கவும் அதைக் கரைக்கவும் முடியும். மாறாக, எதையோ ஒன்றைக் காரணம் காட்டி எதிர்த்து நின்றால், சாதியவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகவே அமைந்துவிடும்.

நிலவுகிற சமூக அமைப்பில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. அதுவும் சாதியம் பற்றிய தளத்தில் .

முற்போக்கு புரட்சி பற்றிப் பேசும் மிகப் பலரும்  கவுசல்யாவைப் பாராட்டித்தான் பேசுகிறார்கள். சாதியவாதிகள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தீர்ப்பை மட்டும் எதிர்க்கிறார்கள். மரண தண்டனை மனித உரிமை எனப் பேசி பதற்றமடைகிறார்கள். சாதியம் பற்றிய உரையாடலைத் திசை திருப்புகிறார்கள். இவை யாவும் சாதியத்தை ஏதோ ஒரு வகையில் முட்டுக் கொடுக்கும் வாதங்கள் தான்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் என்றுமே தயார் தான். உயர்த்திக் கொண்ட சாதிகளே இணையத் தயங்குகின்றன .

தமிழ்ச் சமூகத்தில் இந்தத் தயக்கத்தை கவுசல்யா உடைத்தெறிந்து புரட்சிகரப்  பெண் அறமாய் முன் நிற்கிறார் . நாம் அவரோடும் அவர் பக்கமும் நிற்பதே சாதிய ஒழிப்புப் போராட்டத்தின் அணி சேர்க்கை ஆகும்.

உயர்த்திக் கொண்ட சாதித் திமிரை ஒழித்துக் கட்டுவோம். உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

மாணவர்கள் உதிரிகளும் அல்லர்; ஆசிரியர்கள் குற்றவாளிகளும் அல்லர்.


தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகுமளவுக்கு இளஞ்சிறார்களை உருவாக்கி இருப்பது பள்ளிகள் மட்டுமல்ல; உதிரிப் பண்பாட்டு நடத்தைகளால் சீரழிந்து கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தாலும் தான்.

மாணவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் இந்தச் சமூகம் எந்தளவுக்கு உற்று நோக்கி இருக்கிறது எனத் தெரியவில்லை. மாணவர்களை மதிப்பெண்களை மட்டுமே எடுக்கக் கூடிய வெறும் எந்திரங்களாகவே இந்தச் சமூகம் கருதிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களை இரு தரப்பினராகப் பாவிக்கும் பார்வை குறித்து நம்மில் பலரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதாவது, பத்தாவது வரை பயிலும் மாணவர்கள் ஒரு ரகம். மற்றொன்று மேல்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பயில்கிறவர்கள் ஒரு ரகம். மேல்நிலை வகுப்புகளில் பயில்கிற மாணவர்கள் பதின்பருவச் சிக்கல்களோடு இருக்கும் நிலையினர். கவனச் சிதறல்களுக்கு ஆளாகும் பருவமும் கூட.

திரைப்பட மோகம், உள்ளூர் சாதிய மதவாத சக்திகளோடு நெருக்கம், கஞ்சா, புகையிலை, மது போன்ற பழக்கங்களோடும் அந்நபர்களோடும் நெருக்கம், கண்ணியக் குறைவான அருவருக்கத்தக்க தோற்றத்தில் கழுத்துப் பாசிகள், கைவளையல்கள், உள்ளாடை தெரிகிற வகையில் உடுப்புகள், அலங்கோலமான தலை முடி வெட்டுகள், பள்ளி வகுப்பறைச் சுவர்களில் சாதியப் பெயர்களோடு எழுதிப் போடுகிற அவன் டா இவன்டா வசனங்கள், புத்தகப் பையே கொண்டு வராமல் இரண்டு ஏனோ தானோ புத்தகங்கள் குறிப்பேடுகள், தாமதமான வருகை, அடிக்கடி விடுப்புகள், பள்ளிக்குள்ளும் வகுப்பறைக்குள்ளும் வெடி போடுதல், பள்ளிப் பொருட்களைச் சேதப்படுத்தல், மது போதையில் வகுப்பிற்குள் இருத்தல், உதட்டுக்குள் புகையிலை வைத்தல், மாணவர்களுக்குள் அடிதடி தகராறு, ஆசிரியரை அவமதித்தல், செல்பேசிப் பயன்பாடுகள், ஆபாசப் படங்கள் பார்த்தல்,  படிப்பில் கவனமின்மை போன்ற இன்னும் பல்வேறு சிக்கல்கள் பதின்பருவ மாணவர்களிடம் இருக்கின்றன.

இதையெல்லாம் களைவதும் அவர்களை நல்வழிப்படுத்துவதும் வேண்டுமானால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சந்தித்துப் பேசியாக வேண்டும். இது மாணவர்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஆசிரியர்களே குற்றவாளிகள் அல்ல. இது சமூகத்தின் பிரச்சினை. சமூகம் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உதிரிப் பண்பாட்டு நடத்தைகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் மாணவத் தரப்பைப் பண்படுத்துவது ஆசிரியர் மட்டுமல்ல நம் அனைவரின் கடமையும் கூட.

மாணவத் தரப்பையோ அல்லது ஆசிரியத் தரப்பையோ மாற்றி மாற்றி குற்றம் சுமத்துவதால் மட்டுமே பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை. இதைக் குறித்த உரையாடல்களைத் திறந்த மனதுடன் முன்னெடுக்க வேண்டியது உடனடித் தேவையும் கூட.

பனப்பாக்கத்தில்
உயிர் மாய்த்து மறைந்த
எம் பிள்ளைகளுக்கு எம் அஞ்சலி.