சனி, 9 ஜூலை, 2022

நெல் விதைப்பும் நடவுச் சடங்கும்: மகாராசன்

வேளாண்மை சார்ந்த வளமைச் சடங்குகளுள் விதைப்புச் சடங்கும் நடவுச் சடங்கும் மிக முக்கியமானவை. பெரும்பாலும், விதைப்புச் சடங்கானது உழவுச் சடங்கோடு சேர்ந்தே நிகழ்த்தப்படுகிறது. விதைப்புச் சடங்கு, வித்துகளோடு தொடர்புடையது. நடவுச் சடங்கு, பயிர்களோடு தொடர்புடையது. விதைப்பும் நடவும் வேளாண்மையோடு தொடர்புடையவை. மருத நில வயல் பகுதிகளில் நெல் வேளாண்மையே முதன்மையானதாகும். 

நிலத்தைப் பொருத்தும் நீரைப் பொருத்தும் நெல் வேளாண்மையில் விதைப்பும் உண்டு; நடவும் உண்டு. எனினும், உழவு மரபினர் நெல் வேளாண்மையில் நாற்று நடவு முறையையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். நாற்றாங்காலில் முளை கட்டிய நெல் விதைகள் பாவி, நெல் விதைகள் நாற்றாக முளைத்த பிறகு, நாற்றாகப் பறித்து, அந்நெல் நாற்றை நடவு வயலில் நடுவதையே நடுகை அல்லது நடவு எனக் குறிப்பர் உழவு மரபினர். 

உழவுத் தொழில் மரபையும், அதன் நுட்பத்தையும், வேளாண் உற்பத்திக் கருவிகளையும், உழவுத் தொழில் செயல்பாடுகளையும், உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களைக் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கும் ஏர் எழுபது நூலானது, நெல் நாற்றைக் குறித்தும், உழத்தியர்களின் நடவுப் பாங்கைக் குறித்தும் விவரித்திருக்கிறது. இவ்விடங்களில் எல்லாம், உழவுத் தொழில் மரபினரை வேளாளர் என்றே பதிவு செய்திருக்கிறார் கம்பர்.

ஏறு வளர்த்திடும் முகிலும் இசை வளர்க்கும் என உரைப்பின்

ஆறு வளர்த்திடுவது சென்று அலை கடலைத் தானன்றோ!

வேறு வளர்ப்பன கிடப்ப வேளாளர் விளை வயலின்

நாறு வளர்த்திடல் அன்றி ஞாலம் உயிர் வளராதே!

என்கிறார் கம்பர். அதாவது, உழவுத் தொழில் மரபினர்களான வேளாளர்களது உழைப்பினாலும் முயற்சியினாலும் விளைவு பெருகும். வயல்களில் உள்ள நெல் நாற்றுகள் செழிப்பாக வளர்ந்தால்தான், உலகில் உள்ள உயிர்கள் யாவுமே நிலைத்து வளரும் என்பதை அப்பாடல் வலியுறுத்துகிறது.

நெல் நாற்றுகளைப் பறித்து நடவு வயலில் நடுகின்ற நிகழ்வைக் குறிக்கும் கம்பர், போர்முனையைக் காட்டிலும் மேலானது என்கிறார். நாற்று நடுகின்ற வயல் களத்தை நடவு முனை எனப் புலப்படுத்தும் வகையில்,

உலகத்தில் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்

அலறத்திண் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ?

உலகத்தில் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்

சிலவர் உழச் சிலவர் நடும் அவையன்றோ திருமுனையே!

என்கிறார் கம்பர். 

அதாவது, உலகத்திலே ஏறுபோல உலாவும் புகழ்பெற்ற முடியினரான ஆற்றலுடைய அரசர்கள், போர்க் களத்தின் இடத்தே பகைவர்கள் அலறியோடுமாறு யானைகொண்டு போரிட்டுக் கலக்கும் போர்முனையும் நல்வாழ்வுக்கு ஏற்றவொரு முனையாகுமோ? ஆகாது. உலகில் கடாக்கள் உழுதலையுடைய - உயரிய நாற்று முடிகளைக் கொள்ளுகின்ற வேளாளர் சிலர் உழவும், சிலர் நடவுமாக வயல் முனையின்கண் விளங்குகின்றனரே, அவையன்றோ உண்மையான வெற்றி முனையாகும்.

போர் முனை பகையொழித்து வெற்றி தரும். எனினும், அதனால் உயிர்கட்கு அழிவேயன்றி வளர்ச்சியேதும் இல்லை. அது பற்றியே, போர் முனை வெற்றியினும் விளை பொருள் மிகுத்தலே ஒரு நாட்டின் வாழ்வுக்கு இன்பம் தருவது என்பது இது. பகை, நொதுமலுக்கேயன்றிப் பகை கொண்டு எழுபவர்க்கும் துயர் விளைக்கும். உழவு எவர்க்குமே இன்ப வாழ்வு தரும் என, அப்பாடலுக்குப் பொருளுரைக்கிறார் புலியூர் கேசிகன். உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களது உழவுக் களமும் நடவுக் களமுமே திருக்களமாகும் எனும் வகையில் நடவு முனை அமைந்திருக்கிறது.

உழுது, தொளி புரட்டி, பரம்படித்துச் சமன் செய்யப்பட்ட வயலில் விளம்பப்பட்டிருக்கும் நாற்று முடிகளை எடுத்து நடுகின்ற வேளாள உழத்திகளின் நடவுக் கைப்பக்குவம் - நடவுக் கைப்பாங்கு குறித்து எடுத்துரைக்கும் கம்பர்,

செய்ப்பாங்கு படக் கிடந்த செழுஞ்சாலி நன்நாற்றைக்

கைப்பாங்கு பகுத்துநடக் கற்றாரே கற்றாரே

என்கிறார். அதாவது, வயலின் பல பகுதிகளிலும் விளம்பப்பட்ட நாற்று முடிகளை அப்படியே பற்றி நடுவதற்கு இயலாது. ஒரு முடியை எடுத்தவுடன் ஒரு சிறு பகுதியைத் தம் கைக் கொள்ளுமளவு எடுத்து வைத்துக் கொண்டே நாற்று நடுவர். 

இவ்வாறு, இடக்கையில் கையளவு நாற்று எடுத்துக் கொண்டு, இடக்கையிலுள்ள நாற்றுப் பிடியிலிருந்து சிறுசிறு நாற்றாய் வலக்கையால் பிரித்து, நெல் நாற்றின் தூர்ப் பகுதியைத் தொளியில் ஊன்றி நடுவதே நடுகையாகும். சீரான இடைவெளியோடு நடுகையிடும் நடவு நுட்பமே கைப்பக்குவம் அல்லது கைப்பாங்கு என்பர் உழத்தியர்கள். 

நாற்று நடும் கைப்பாங்கைக் கொண்ட  உழத்தியர்களே பயன் தரும் கல்வியைக் கற்றவர்கள் ஆவர் எனும் பொருளில்தான் கம்பர் அவ்வாறு பாடியிருக்கிறார். அதாவது, நெல் நாற்றைக் கைப்பாடம் பெறப் பகுத்து நடுவதற்குக் கற்ற உழத்தியர்களே உண்மையாகப் பயன் தரும் கல்வியினைக் கற்றவர் ஆவர் என்கிறார் அவர்.

நெல் நாற்றை நடுகின்ற போது நெருங்கவும் நடக்கூடாது; கலந்தும் நடக் கூடாது. நடுகையானது சீரான இடைவெளியோடு இருத்தல் வேண்டும். இதுவே உழத்திகளின் நடவுக் கைப்பாங்கு ஆகும். இவ்வாறு கைப்பாங்குடன் நெல் நடவு செய்யும் உழத்தியர்களைக் குறித்துப் பள்ளு நூல்கள் அனைத்தும் பதிவு செய்திருக்கின்றன. உழத்திகளின் நடுகை நுட்பம் பற்றி எடுத்துரைக்கும் வையாபுரிப் பள்ளு நூல் பாடலானது,

நாற்றை எடுத்து உங்கள் நெற்றி வைத்து

     நாலு திசைகளை நோக்கி வாழ்த்திப்

போற்றித் துதித்து நிரை வகுத்துப்

     புகழ்ந்து குரவை முழக்கிப் பயிர்

சற்றே நெருங்காமல் அணியணியாய்

     இடையில் கலந்து போகாமல் மெல்ல

மாற்றியே நண்டது ஊடே போகாமல்

     வளமாய் நடுங்கடி பள்ளீரே

எனப் பதிவு செய்திருக்கிறது.

நெல் வேளாண்மையின் ஓர் அங்கமாக இருக்கும் நடவுச் செயல்பாடும்கூட, வளமைச் சடங்காக வேளாண் மரபில் நிகழ்த்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இத்தகைய நடவுச் சடங்கானது, வேளாண் நிலத்தில் நடவு செய்யும் நெல்நாற்று முடியை இந்திர அடையாளத்தோடுதான் புலப்படுத்துகிறது. 

பள்ளுப் பிரபந்தம் எனப்படும் பள்ளு இலக்கியத்தின் உள்ளடக்கப் பொருண்மை குறித்து எடுத்துரைக்கும் தியாகராசக் கவிராயர்,

இந்திரத் தெய்வதம் போற்றி எக்காலும்

சிந்தை இன்புற்று இகழ்தரும் தகைத்தாய்

உள்ளி ஆன்றோர்கள் உரைக்கும் பிரபந்தம்

என்றுரைக்கிறார். அதாவது, இந்திரனையே வழிபடு தெய்வமாகக் கொண்டிருக்கும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினரைப் பற்றிய சிற்றிலக்கிய வகையே பள்ளு இலக்கியங்களாகும் என்கிறார் அவர். அவ்வகையில், வேளாண்மைத் தொழில் மரபோடு ஒன்றிப்போனதாக இந்திரன் அடையாளம் அமைந்திருக்கின்றது.

மள்ளர் எனும் உழவர்கள் இந்திரனைத் தொழுது, வயலை உழுது, சேற்றைப் பரம்படித்துச் சமன்செய்து, வெண்முளை கட்டிய நெல்மணிகளை நாற்றங்காலில் தெளித்து, பின்பு நாற்றங்காலில் உள்ள நீரை முறையாக வடித்ததாகக் கூறும்போது, 

பழுதின் மள்ளர் பயிற்றி வலாரியைத் 

தொழுது வெண்முளை தூவித் தெளித்தபின் 

முழுது நீரைக் கவிழ்ப்பர் முறைமையால் 

என விநாயகப் புராணம் கூறுகிறது.   இந்திரனைக் குறிக்கும் வேறு பெயரான வலாரி என்னும் சொல்லால் குறிப்பதோடு, நெல் விதைப்பு முறையையும் புலப்படுத்துகிறது அப்பாடல்.

உழவர்களின் வழக்காற்று மரபில், நடுகை தொடங்குவதற்கு முன்பாக நெல் நாற்று முடியைக் குலவையிட்டு வணங்கிய பிறகே நடத் தொடங்குவர் உழத்தியர்கள். மருத நில உழத்தியர்கள் இந்திரனை வணங்கிய பின்பே நாற்று நடுவர் என்பதை, 

உழுத சால்மிக ஊறித் தெளிந்த சேறு 

இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் 

தொழுது நாறு நடுவார் தொகுதியே 

பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்

என்கிறது பெரிய புராணம். உழத்தியர்கள் வணங்கும் முதல் நாற்று முடியை, இந்திர முடி என வழங்கும் உழவர் வழக்காற்று மரபும் இங்கு ஒப்பத்தக்கது ஆகும்.

மேலும், கி.பி 12ஆம் நூற்றாண்டு சீவலமாற பாண்டிய மன்னன், தான் எழுதிய சங்கர நாராயணசாமி கோயில் புராணத்தில், மள்ளர்கள் ஒரு நல்ல நாளில் இந்திரக் கடவுளைத் தொழுது, எருதுகளை ஏரில் பூட்டி உழுது, நாற்றங்காலில் நெல் விதைத்தனர் என்பதை,

ஏர்தரு மூரியேறும் இருங்கடா ஆவினமுங் கட்டிக் 

கூர்நுனிக் கொழுக்கள் ஆழ உழவற உழுது கோட்கள் 

சீர்தரு நாளில் வானோர்க்கு இறைவனாந் தெய்வம் போற்றிக்

கார்நிற மள்ளர் சாலி முளைத்தனர் களிப்பால்

என்று குறிப்பிடுகிறார். வானோர்க் கோமான் இந்திரனையே, வானோர்க்கு இறைவனாம் தெய்வம் என்கிறது அப்பாடல். 

திருமகள் வாணி சசி முதலான தேவியர் பள்ளியராகி

இருகையில் அணிந்த குருகினந் தெழிப்ப விட்டிடை வருந்த வார்செவியின்

மருவிய தோடு நாலவார் கூந்தன் மல்கிய தோளின் வீழ்ந்தலைய

உருகெழு பச்சைப் பள்ளியோடு அயர்ந்திட்டு ஒண்முடி நாறு நட்டனரால்

எனக் கூறும் பேரூர்ப் புராணப் பாடலானது, உழவுத் தொழில் மரபினரான பள்ளியர் உழத்திகளோடு பெண் தெய்வங்களாகக் குறிக்கப்படும் இலக்குமி, சரசுவதி, இந்திராணி போன்றோரும் நடவு செய்ததாகக் கூறுகின்றது. அதாவது, செல்வ மகள், கல்வி மகள், மண் மகள் என யாவராக இருப்பினும், உழத்தியர்களின் நடுகைத் திறம் அறிந்தவர்களாகவும், அவர்வழி மரபினராகவும் இருந்ததாக அப்பாடல் சுட்டுகிறது.

மேற்சுட்டிய பேரூர்ப் புராணத்தின் பாட்டுடைத் தலைவராகக் குறிக்கப்படும் பட்டீசுவரர் கோயிலில்தான், வேளாண்மை உழவுத் தொழிலின் அங்கங்கள் யாவும் சடங்கியல் வழிபாட்டு மரபுகளாக இன்னும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் அருகே பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோயிலில் நடைபெற்றுவரும் சடங்குகளுள், நெல் நாற்று நடவுச் சடங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கி.பி 18ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட நூல் பேரூர்ப் புராணம் ஆகும். இந்நூலில் உள்ள பள்ளுப் படலப் பகுதியானது, சிவன், பார்வதி, முருகன், விநாயகர் மற்றுமுள்ள தேவர்கள் யாவரும் உழவுத் தொழில் மரபினராக - மள்ளர்களாக - பள்ளர்களாக வயலில் இறங்கி உழவுத் தொழில் செய்ததாக மிக விரிவாக எடுத்துரைக்கின்றது. 

இதன் கதைச் சுருக்கத்தை எடுத்துரைக்கும் தே.ஞானசேகரன், கொங்கு நாட்டிற்குச் சுந்தரர் மூன்றாவது முறையாக வருகை தந்தபோது பேரூருக்கு வருகை புரிந்தார். அச்சமயம் பேரூரில் குடியிருக்கும் பட்டீசுவரர், அருகிலிருக்கும் வயலில் மள்ளராக - பள்ளராக மாறி வேலை செய்கின்றார். பார்வதி தேவியார் பள்ளியாக மாறி கழனியிலே நாற்று நடுகிறார். விநாயகனும் முருகனும் மள்ளச் சிறார்களாக மாறி வயலில் விளையாடுகின்றனர். 

திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் நுகம், கலப்பை, மேழி, கொழுவு, வார், தார்க்கோல், எருது, விதைகள், நாற்று ஆகிய அனைத்து உழவுக் கருவிகள், இடுபொருட்களுடன் வந்தனர். இலக்குமி, சரசுவதி, இந்திராணி முதலிய தேவ மகளிர் மள்ளத்தியர்களாக மாறி, பச்சை நாயகி உமாதேவியோடு வயலில் நாற்று நட்டனர். 

இவ்வாறு, இவர்கள் கழனியிலே வேலை செய்வது தெரியாது கோயிலுக்குள் சென்ற சுந்தரர், சிவபெருமானை அங்கே காணப் பெறாமல் வினவ, நந்தி கடைக்கண் காட்ட, வயலில் வந்து சுவாமியையும் அம்மையையும் கண்டு வணங்கினார். இதுவே திருப்பேரூர்ப் புராணம் தரும் செய்தி என விவரிக்கிறார். 

இலக்கியத்தில் அவ்வாறு மிகையாகவோ புனைவாகவோ பதிவு செய்திருப்பதாகக் கருதுவது ஒருபுறம் இருந்தாலும், பேரூர் பட்டீசுவரர் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகள், பேரூர்ப் புராணம் மேற்குறித்தவாறு எடுத்துரைத்த உழவுத் தொழில் மரபையும் வரலாற்றையுமே சடங்கியல் வடிவில் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் நடந்து வரும் நாற்று நடவுச் சடங்குத் திருவிழாவானது, உழவுத் தொழில் மரபினரையும், அவர்களின் வேளாண்மை உற்பத்தி நடவடிக்கையையும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக அடையாளப்படுத்தி வருகின்றது. இதைக் குறித்து விவரிக்கும் கோவைக்கிழாரின் கருத்தும் ஒப்புநோக்கத்தக்கது. 

சுந்தரர் கொங்கு நாட்டிற்கு வந்த காலம் கி.பி 850 ஆகும். அக்காலத்திலிருந்தே பள்ளர்களும் கோயில் விழாக்களில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று ஐதீகத்திலிருந்து நாம் ஊகிக்க முடியும். இந்த நாளிலும் அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அமைந்த நாற்று நடவு, அவர்கள் கலந்து கொள்வது போல வேறு தளங்களில் நாம் பார்க்க முடியாது என்பார் கோவைக்கிழார். பன்னெடுங்காலமாகவே அங்கு நெல் நாற்று நடவுச் சடங்கு நடைபெற்று வருவதை இலக்கிய மரபிலும் மட்டுமல்லாமல், வழிபடு பண்பாட்டு மரபிலும் காண முடிகிறது. 

ஆனி எனும் ஆடவை மாதத்தில் நடைபெறும் நாற்று நடவுத் திருவிழாவை, ஆனி திருமஞ்சனப் பொன்னேர் நாற்று நடவுத் திருவிழா, சித்திரமேழிப் பொன்னேர் விழா, ஆனி உற்சவம், நாற்று வெள்ளி, இந்திர விழா, நாற்று நடவு உற்சவம், ஆனி உற்சவ நாற்று நடவுத் திருவிழா, இந்திர விழா என்னும் பொன்னேர் பூட்டும் விழா எனப் பல பெயர்களால் அப்பகுதி மக்கள் குறிக்கின்றனர். வழிபாட்டுச் சடங்காகவும் வளமைச் சடங்காகவும் நடைபெற்று வருகிற நாற்று நடவுச் சடங்கானது, உழவுத் தொழில் மரபினரின் வேளாண் பண்பாட்டு அடையாளச் சடங்காகவும் நடைபெற்று வருகின்றது. 

இந்நடவுச் சடங்கானது, இரண்டு வகையான சடங்கியல் தன்மைகளையும் நோக்கங்களையும் புலப்படுத்துகிறது. இதுகுறித்துக் கூறும் தே.ஞானசேகரன், இவ்விழா இரண்டு விழாவினைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒன்று, இந்திர விழா. மற்றொன்று, மள்ளராக மாறிய சிவபெருமானின் புராணக் கதையை மறுபடியும் நடித்துக் காட்டும் விழா என, அங்கு நடைபெறும் சடங்குகளை இருவேறாகப் பிரித்துக் காட்டுகிறார். 

பேரூர்ப் புராணம் கூறுகிற கதையாடல்களின்படி, சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் யாவும் உழவுத் தொழில் புரிந்ததன் மேன்மையை - உழவுத்தொழில் செயல்பாடுகளைப் போலச்செய்தல் சடங்கியலாக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. கோயிலுக்கும் - தொன்மக் கதையாடலுக்கும் - வேளாண்மைக்கும் - வேளாண் மரபினருக்குமான  பிணைப்பை இத்தகையப் போலச்செய்தல் சடங்கு வலுப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது.

பட்டீசுவரர் கோயில் வளாகத்திற்கு முன்புள்ள தேவேந்திரர் சமூக மடத்தில் நடைபெறும் நாற்று நடவுச் சடங்கானது, இந்திர வழிபாட்டின் நீட்சியாக நடைபெறும் வளமைச் சடங்காகவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனி மாதத்தில் நடைபெறும் இவ் வளமைச் சடங்கின் முதல் நாளில், நாற்றங்காலில் நெல் விதை பாவுதல் சடங்கு நடைபெறுகிறது. இதை நாற்று விடுதல் என்றழைக்கின்றனர். ஓரிரு வாரத்திற்குள் நடுவதற்குப் பக்குவமான வளர்ச்சியை அடைந்த பிறகு, ஏற்கனவே குறிக்கப்பட்ட ஒரு நாளில் நாற்று நடவுச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. 

நாற்றுக் கழனிக்கு வருகின்றவர்கள், நெல் நாற்றை இந்திரன் முடி என்பதாக வணங்குவர் என்பதாகக் கூறும் தே.ஞானசேகரன், பெண்கள் நாற்றுக் கழனியைச் சுற்றி நின்று கும்மியடிக்கின்றனர். இவ்வாறு கும்மியடிக்கும்போது, ஒரு சின்னப் பெண்ணை அமரச் செய்து, அப்பெண்ணைச் சுற்றி இந்திர விழாப் பாடலைப் பாடிக் கும்மியடிக்கின்றனர். இக்கும்மியடிக்கும் சடங்கு, பல குழுவாக மடத்தின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. இங்கு பாடப்படும் பாடல்களை உழத்திப்பாட்டு என்றும், இந்திர விழாப் பாடல்கள் என்றும் கும்மியடிப்போர் கூறுவதாகப் பதிவு செய்கிறார்.  

நாற்றுப் பறித்தல் சடங்கின்போதும், நாற்று நடவுச் சடங்கின்போதும் வேளாண் மரபினரின் உழத்தியர்களால் பாடப்படும் கும்மிப் பாடல்கள், இந்திர அடையாளத்தையும் - வேளாண் மரபின் பண்பாட்டு நீட்சியையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

சந்திரரே சூரியரே சாமி பகவானே

இந்திரனை நோக்கி எடுத்தேன் இளமுடியை

இளமுடியும் வாடாம என் குரல் மங்காம

தேவேந்திர மார்கள் எல்லாம் சேரக் குலவை இடுங்கள்

தேவேந்திர ராசனுக்கு…

யானையின்னா யானை ஐராவதத்து யானை

குட்டி மத யானை கொம்பு இரண்டும் பொன் யானை

குண்டு குழியைக் கண்டால் குலுங்குமாம் அந்த யானை.

பள்ளன் படுகையைக் கண்டால் பதுங்குமாம் அந்த யானை.

நம்ம செந்நெல்லுக்கு நீர் போக்கி

தேவேந்திரப் பெண்கள் சேரக் குலவையிடுங்கள்

என, நாற்று நடவுச் சடங்கில் பாடப்படும் இதுபோன்ற கும்மிப் பாடல்களிலும், உழவுத் தொழில் சார்ந்த இதுபோன்ற சடங்குப் பாடல்களிலும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினரின் இந்திர வழிபாட்டு மரபின் நீட்சியைக் காண முடிகிறது. 

பொருள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு தொழில் மரபினரும், தத்தமது தொழில் மரபுகளை உற்பத்திச் செயல்பாட்டு நிலையிலும், சடங்கியல் போன்ற பண்பாட்டு நிலையிலும் தக்கவைத்து வந்திருக்கின்றனர். அத்தகையத் தொழில் மரபுகளைத் தக்க வைத்ததில் - தக்க வைப்பதில் போதாமைகளையும் இயலாமைகளையும் கடந்து, ஒருசில தொழில் மரபினரே உற்பத்திச் செயல்பாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் தத்தமது அடையாளங்களைத் தக்க வைத்திருக்கின்றனர். 

தத்தமது தொழில் மரபுகளை அறிவூட்டலாகவும் மகிழ்வூட்டலாகவும் கூட்டுணர்வையும் கூட்டுழைப்பையும் வலியுறுத்துவதாகவும்தான், பண்பாட்டுச் சடங்கியல் வகைமைகளையும் வெளிகளையும் உருவாக்கி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். 

அவ்வகையில், வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருக்கும் - ஈடுபட்டு வருகின்ற உழவுத் தொழில் மரபினர், வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைத் தொழில் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் புலப்படுத்தியே வந்திருக்கின்றனர். தமிழர் மரபில் புலப்படுகிற பெரும்பாலான பண்பாட்டு நடத்தைகளும் சடங்கியல் கூறுகளும் உற்பத்தி சார்ந்த கூட்டுச் செயல்பாடுகளை - கூட்டு வாழ்வியலை - கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை-76

விலை: ரூ.250

தொடர்புக்கு: 

செந்தில் வரதவேல்

9080514506.


வெள்ளி, 24 ஜூன், 2022

நினைவுப்பூ : மகாராசன்

 

கோடையில் வெடிக்கும்
இலவம் பஞ்சாய்
வெயிலில் குளித்து
இளங்காற்றில் மிதந்தலைகிறது
வெண்ணிற நினைவுகள்.

மேய்ச்சலுக்குப் போன
தாயாட்டின் பால் கவுச்சி ஈரத்தில் 
குடாப்பு இருளுக்குள் 
அடைந்து கிடக்கும் இளங்குட்டிகளாய் 
தாய்மடிக் காம்புகளை நினைத்தபடி 
தவித்துக் கிடக்கின்றன 
விதைச் சொற்கள்.

திடுதிப்பென்ற இடிமின்னலில் 
கொட்டித் தீர்த்த பெருமழை
செவல் ஓடைகளைக் 
குளிப்பாட்டி வடிந்த
செந்தண்ணீர்க் குளமாய் 
நிரம்பித் ததும்புகின்றன 
வெட்கமூறிய பொழுதுகள்.

தொளியிலும் புழுதியிலும் 
இலாடங்கள் தேய உழுததில் 
நேர்க்கால் அழுந்திய 
உழு மாடுகள் திமிலோரத்தில்
காய்ப்புக் கரையாய்
வலியறியாமல் 
தடித்துக் கிடக்கிறது
பசப்பூறிய சிமிட்டல்.

ஒற்றைச் செம்போத்தின் 
நெடுங்கூவல் தனியொலியை
தவிப்போடு
கேட்டுக்கொண்டிருக்கிறது
தனித்துக் கிடக்கும்
நிகழ் வாழ்க்கை.

இன்னும் இன்னும் பூக்கவே
அசைபோடும் நினைவுகள்
மழையெனப் பெய்கிறது
மனதுக்குள்.

ஏர் மகாராசன் 
10.04.2022

வியாழன், 23 ஜூன், 2022

தமிழர் பண்பாட்டு அரசியலை உரக்கப் பேசும் நூல்: செ. தமிழ்நேயன்


தமிழ்ச்சமூகச் சூழலில் கவனிக்கத் தவறிய பகுதிகளைக் கோர்வையாகக் கோர்த்து, "பண்பாட்டு அழகியலும் அரசியலும்" என்ற பெயரில் ஆவணமாகப் பதிவு செய்துள்ளார் மகாராசன்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் மறைந்திருக்கும் வழக்காறுகள் மற்றும் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். தமிழ்ச் சமூகத்தில் மறுக்கப்படும் சமூகங்களின் பண்பாடு, வாழ்வியல், அரசியல் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்நூல். 

பண்பாடு என்பது ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையைக் குறிக்கும். பண்பாடுகள் பெரும்பாலும் வழமையான நிகழ்வுகளை உள்ளடக்கித் தோன்றியிருக்க வேண்டும், தமிழ்ச் சமூகத்தில் உழவு, ஏறு தழுவல் போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நிலம் சாந்து தான் இயங்குகின்றன.

பண்பாட்டு அழகியல் என்ற சொல்லின் கருப்பொருள் நிலம், நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியலைப் பேசுகின்ற அதே வேளையில், அப்பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட நிகழ்வுகளையும் பேசுகிறது. பண்பாடு என்ற சொல், பொருள் ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையைத்தான் குறிக்கிறது. அந்த ஒழுங்கு நிலை இயல்பாகவே அமையபெற்றது.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் மறைந்திருக்கும் வழக்காறுகள் மற்றும் வாழ்வியல், கலை, இலக்கியம், அரசியல் பற்றிப் பேசுகிறது. சடங்குகள் என்பவை பெரும்பாலும் வைதீக மரபைச் சார்நதவை என்று பொதுவெளியில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை மறுக்கும் வகையில் சடங்குகள் தமிழ் மரபைச் சார்ந்த ஒரு ஒழுங்கு வடிவம் பெற்ற பழக்க முறை என்று வரலாற்று அடிப்படையில் நிறுவுகிறது இந்நூல்.

ஏறு தழுவல் என்பது பெரும்பாலும் மாடு பிடி விளையாட்டு என்று கருதப்பட்டாலும், அதன் கருப்பொருள் மாடுகள், மாந்தர்கள் இடையே உள்ள

அன்புபிணைப்பைக் காட்டுகிறது. முல்லை நிலத்தில் உழவும், ஏறு தழுவல் தோன்றி இருந்தாலும், முழுமையும் ஒழுங்கு வடிவம் பெற்றது மருத நிலத்தில் என்கிறது தமிழ். 

எருதுகளின் வகைப்பாட்டுப் பட்டியல், பண்பு இயல்புகளைப் பள்ளு இலக்கியங்கள் வழியே நிறுவுகிறார் மகாராசன். மேலும், பள்ளு இலக்கியங்கள் பேசும் அரசியலையும் பதிவு செய்துள்ளார்.

தமிழர்களின் அறம் சார்ந்த பண்டிகைக் குறியீடாக உள்ள அறுவடைத் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாள் உணர்த்தும் சடங்குகளின் மெய்பாடுகளைப் பேசுகிறது. நிலம், உழவு, எருது, சூழலியல் பற்றி அரசியல் பார்வைகள் பற்றிய பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல்.

கலை மற்றும் இலக்கியத் தளங்கள் ஒற்றைச் சார்பு நிலை கொண்டிருந்த சூழலில், எளிய மக்களின் கலை மற்றும் இலக்கியக் குறிப்புகள் பொதுவெளியில் பேசும் பொருளாக மாற வேண்டும் என்று கூறுகிறது இந்நூல்.

ஐவகை நிலங்களின் இயல்புநிலை வளர்ச்சி என்ற பெயரில் ஆள்வினைஞர்களின் பொறுப்பற்ற தன்மை, சுரண்டல்களையும், சூழலியல் சீர்கேட்டை எதிர்க்க மனமில்லாமல் வாழும் அடிமை நிலைக் கூட்டத்தையும் பற்றியும் விவரிக்கிறது. 

கடல் சார்ந்தது வாழும் தமிழர்கள் நேர்கொள்ளும் இயற்கைப் பேரிடர் நிகழ்வின் போது சமய நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் பாராமுகத்தையும் வலியோடு பதிவு செய்கிறது.

பெண்மொழி மதிப்பீடு மற்றும் ஆண் ஆதிக்கப் போக்குகளையும்,.பெண்ணியம் சார்ந்த இயங்கும் அமைப்புகளின் பொறுப்பற்ற தன்மையும் பட்டியலிடுகிறது. பெண்களின் அரசியல் எழுச்சி மாற்றத்தில் ஆண்கள் பங்களிப்பு உள்ளது என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்நூல்.

கற்பித்தல் செயல்பாட்டில் அதிகார அரசியல் நுழைவு காரணமாக மாணவச் சமூகம் நேர்கொள்ளும் சிக்கல்களையும், பிற்போக்கு எண்ணங்களை விதைக்கும் கல்விமுறைகளையும் கடிந்துரைக்கும் இந்நூல், தமிழர்களின் பண்பாட்டு அரசியலை உரக்கப் பேசியிருக்கிறது.

பண்பாட்டு அழகியலும் அரசியலும்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
9994880005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
9080514506.

கட்டுரையாளர்:
செ. தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.

வெள்ளி, 17 ஜூன், 2022

சமத்துவக் குரலெடுக்கும் முனீசுவரன்களைக் கொண்டாடுவோம் : மகாராசன்

மானுட சமத்துவத்தையும் தன்மான உணர்வையும் மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதும் கல்விச் செயல்பாட்டின் ஓர் அங்கம்தான்.  

சாதியக் காழ்ப்பும், சாதிய வன்மமும், சாதிய ஏற்றத்தாழ்வும், சாதிய வக்கிரங்களும், சாதிய வன்முறையும் ஒடுக்குமுறையும் நிரம்பி வழியும் ஓர் சமூக அமைப்பிலிருந்தேதான் ஆசிரியர்களும் உருவாகி வந்திருக்கிறார்கள். ஆயினும், சாதிய அழுக்குகள் நிறைந்த மனிதர்களிடமிருந்தும் பணியாளர்களிடமிருந்தும் வேறுபட்ட ஒரு பணியும் பொறுப்பும் கடமையும் தமக்கு இருக்கின்றன என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணரவும் இல்லை; அவ்வாறு உணர்வதற்கான அல்லது உணர்த்துவதற்கான அகப்புறச் சூழல்களும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

அவர்கள் பயின்ற கல்வியும், இப்போது அவர்கள் பயிற்றுவிக்கிற கல்வியும் சமூக சமத்துவத்திற்கான உணர்வுகளையும் எண்ணங்களையும் அறிவையும் வழங்கத் தவறியிருக்கின்றன எனில், கல்வியமைப்பிலும் சாதிய அழுக்குகள் படிந்திருக்கின்ற என்றே பொருள்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என, கல்வி அமைப்பில் இருக்கும் பெரும்பாலோரிடத்தில் சாதிய அழுக்கு இன்னும் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது. சாதியப் பாகுபாட்டையும் சாதியக் கண்ணோட்டத்தையும் சிலர் வெளிப்படுத்துவார்கள்; சிலர் உள்ளுக்குள் வைத்திருப்பார்கள்; சிலர் ஒத்துப்போவார்கள்; சிலர் ஒதுங்கிப் போவார்கள்; சிலர் மவுனமாக இருப்பார்கள். சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக இருந்த - இருக்கும் மிகச்சில ஆசிரியர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதேவேளையில், சாதியப் பாகுபாட்டுக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த/கொண்டிருக்கும் ஆசிரியர்களையும், சாதிய வன்மத்தை மாணவர்களிடம் விதைத்த/விதைக்கும் ஆசிரியர்களையும், அதையெல்லாம் கண்டும் காணாமலும் போன/போகும் ஆசிரியர்களையும் எனது கால் நூற்றாண்டுகால கல்வி அனுபவங்களில் பார்த்துக்கொண்டும் எதிர்கொண்டும்தான் வருகிறேன். 

அதேவேளையில், நேர்மையும், அறிவும், கற்பித்தல் திறனும், மாணவர்கள் மீதான அக்கறையும் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியரைக் குறித்து என்னதான் அவர் சாதியைக் குறித்து மாணவர்களிடம் சொன்னாலும் விதைத்தாலும், அதையெல்லாம் காதில் வாங்காமல் அந்த ஆசிரியரிடம் நெருக்கமும் பெருமதிப்பும் கொண்டிருந்த/கொண்டிருக்கும் மாணவர்களையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

சாதியப் பாகுபாடும், சாதியக் கண்ணோட்டங்களும் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல; ஆசிரியர் சங்கங்களிலும்- சங்கவாதிகளிடமும் பரவிக் கிடக்கிறது என்பதும் மிகக் கசப்பான அனுபவங்கள் நிரம்ப உண்டு.

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆசிரியர்களிடமும் பாடப்புத்தக அறிவு மட்டும்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது. சமூக சமத்துவத்திற்கான சமூக அறிவும் சமூகக் கல்வியும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. சமத்துவத்திற்கான சமூகக் கல்வியை ஆசிரியர்கள் பெறுவதற்கான கல்வியமைப்பும் அதற்கான வாய்ப்புகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை; அதற்கான உரையாடல்களை வளர்த்தெடுப்பதற்கான களங்களும் சனநாயகத் தன்மையோடு இயங்கவுமில்லை.

இன்னும் கூட, இட ஒதுக்கீடு என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் தப்பும் தவறுமாகவும் அரைகுறையாகவுமே புரிந்துவைத்திருக்கின்றனர். அதாவது, பி.சி; எம்.பி.சி; எஸ்.சி; எஸ்.டி எனும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் உள்ள பெரும்பாலோர், எஸ்.சி தரப்பினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருப்பதுபோல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், எஸ்.சி எனில் இழிவானது; தாழ்வானது என்கிற தப்பெண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், எஸ்.சி என்பதைத் தாழ்வாகவும் இழிவாகவும் கருதுகிற சமூகத் தப்பெண்ணங்களுக்கு எதிராகத் தம்மை எஸ்.சி இல்லை; எஸ்.சி பட்டியலில் இருந்து மாற்றி வேறு பட்டியலில் சேர்த்திடுங்கள் என்கிற குரல்கள் வெளிவருவதன் பின்புலமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

சாதியத்தைக் கரைக்கும் சமூகக் கல்வியும், தமிழர்கள் ஓர்மை எண்ணங்களும், சாதியவாதிகளைத் தனிமைப்படுத்தும் போக்குகளும் இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

ஆயினும், அவர்களும் சமம்தானே டீச்சர் எனும் முனீசுவரன் குரல்களும், நாங்களும் சமம்தானே டீச்சர் எனும் முனீசுவரன்கள் குரல்களும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

நாம், சமத்துவக் குரலெடுக்கும் இருதரப்பு முனீசுவரன்களையும் கொண்டாடுவோம்; அவர்கள் பக்கமே நிற்போம்.

ஏர் மகாராசன் 

17.06.2022

செவ்வாய், 7 ஜூன், 2022

வேளாண் மக்களைக் குறித்த தனித்துவ நூல் - ப.இளங்கோ


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் அண்மையில் வெளிவந்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல். 

”வேளாண் மக்கள் ஆய்வுகள்”, ”வேளாண் மக்களியம்” என்னும் கருத்தியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் மகாராசன் எழுதிய இந்நூல், இன்றைய சமூகச் சூழலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது என நான் நம்புகிறேன். 

இன்றைய நகரமயச் சூழலில் வேளாண் தொழில் மற்றும் வேளாண்தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வேளாண் தொழிலில் நீர் ஆதாரங்களாக விளங்கும் கண்மாய், ஏரிகள் போன்றவை சாக்கடைகளாக மாற்றப்படும் அவலம், கண்மாய், ஏரிகளைப் பராமரித்த வேளாண் மக்களை, வேளாண் நிலங்களிருந்தும், நீர்நிலைப் பராமரிப்பிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்ட வரலாற்றுச் செயல்பாடுகளையும் பொருத்திப் பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை இந்நூல் தந்திருக்கிறது.

     வேளாண்மையின் தோற்றத்தையும் தனிச் சிறப்பையும் முதல் கட்டுரையில் விளக்கியுள்ள நூலாசிரியர், காட்டாண்டியாக வாழ்ந்த மனிதன், நாடோடிச் சமூகத்திலிருந்து வேட்டை என்கிற செயலில் இருந்து விவசாயம் மூலம் எவ்வாறு தன்னுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான் என்பதையும், வேளாண்மை ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சியையும் மேம்பட்ட நாகரிகத்தையும் உருவாக்கியது என்பதையும் விளக்கியுள்ளார். 

    தமிழ் இலக்கியம் கூறும் ஐந்திணைகளில் வாழ்ந்த மக்களும் அவரவர் வாழ்வியலோடு வாழ்ந்து வந்தாலும், உணவு உற்பத்தி முறையைக் கையாண்டு வந்தாலும், மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள்தான் திருந்திய வேளாண்மையை மேற்கொண்டதன் மூலமாக நாகரீக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, அரசு உருவாக்கம் எனப் படிப்படியாகச் சமூகம் மாறி வந்ததை இந்நூலில் விளக்குவது மிகச்சிறப்பாக இருக்கிறது. மேலும், வேளாண் தொழில் செய்த மக்கள்தான் குடும்ப உருவாக்கம், நகர உருவாக்கம் மற்றும் பிற சமூக மக்களின் தொழில் உருவாக்கத்திற்கும் கூட்டு வாழ்க்கை முறைக்கும் ஆணிவேராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்றுப்பூர்வமாக விளக்கியுள்ளார். 

ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் வாழ்வியலையும், அதாவது, ஒவ்வொரு நிலத்தின் வாழ்வியலிலும் உணவு உற்பத்தி முறையையும், அதனோடு அமைந்த வாழ்க்கை நடத்தை முறைகளையும் தெளிவாக இலக்கியச் சான்றுகளின் துணையுடன் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மகாராசன். அதுமட்டுமின்றி, மருதம் - வேளாண் பெருக்கத்தின் நிலவளம் எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையில், ஒவ்வொரு நிலத்தின் விவசாயத்திற்கு ஏற்ற தன்மையையும், அதன் பெயர்களின் காரண காரியங்களையும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. 

வேளாண்மை தான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது என, உலகப் பொதுமறையான திருக்குறளில் வழியாகச் சான்று காட்டுவது கூடுதல் சிறப்பாக உள்ளது. 

வேளாண் மரபும் அறிவும் எனும் தலைப்பிலான கட்டுரையில், தமிழ் நிலத்தின் வேளாண் மக்களின் வாழ்வியல், வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம், வேளாண்மை சார்ந்த வாழ்வியல் மற்றும் பண்பாட்டு மரபு, அம்மக்களின் குடிப்பெயர் போன்ற அனைத்து செயல்பாடுகளையும், அவற்றை உயிரோட்டமாகப் பொதிந்து வைத்துள்ள பள்ளு இலக்கியத் தவுகள், நாட்டுப்புறவியல் வழக்காறுகள், பண்டைக்கால இலக்கண இலக்கியங்கள் உள்ளிட்ட ஏராளமான தரவுகளோடு ஆய்வுப்பூர்வமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். 

நெல் வகைகள் எனும் தலைப்பில் அமைந்த சான்றாதாரங்கள், நெல்விடு தூது, பள்ளு இலக்கியம், பழனி செப்புப்பட்டயம் போன்ற சான்றுகளின் துணையுடன் வருங்கால சந்ததிகள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளது இந்நூல். நெல் வகைகளின் பெயர்களும், அவர்களின் பருவநிலைகளும், காலத்திற்கேற்றவாறு பயிரிடப்படும் சூழல் போன்றவற்றை நமக்கு அறியக் கிடைக்கும் புதுமையான தகவல்களாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். மேலும், வேளாண் தொழில் செய்யும் ஆண்கள், பெண்கள் மற்றும் வேளாண் குலத்தாரின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்பெறும் பெயர்கள், மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து அமைந்தவையே என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

வேளாண்மை, உற்பத்திச் சடங்குகள், தெய்வ வழிபாடு இம்மூன்றும் பண்பாட்டு நாகரிக வாழ்வின் அங்கமாக அமைந்திருக்கின்றன. 

சடங்கியல் வழிபாடுகள், கொடை விழா போன்ற நிகழ்வுகளின் மூலம் காணக் கிடைக்கும் - காணக் கிடைக்கின்ற தரவுகள் எவ்வாறு வேளாண்மையோடு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றன என்பதை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். 

நீரின் அவசியம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், விவசாயத்திற்கு நீரின் இன்றியமையாமை, மழை நீரை எவ்வாறு தேக்கிவைத்து வேளாண்மை செய்தனர் என்பதைக் குறித்த செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மழைநீர் தற்செயலாகக் கடலை அடைவது ஒருபுறமிருந்தாலும், மழைநீரைச் செயற்கையாக ஒரு இடத்தில் தேக்கி வைத்து வேளாண்மை செய்வது ஒரு வேளாண் தொழில் நுட்பத்தின் முக்கியக் கூறாகும். இதனை மிக நுட்பமாக விவரித்திருக்கிறது இந்நூல்.

தெய்வ வடிவ உருவாக்கம் மக்களிடையே எவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற கருத்தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது. அதாவது, மனிதன் தான் வாழும் நிலம், தட்பவெட்ப நிலையில் குளங்கள் அமைவதைப் போல, தெய்வங்கள் என்பவையும் நிலம் சார்ந்த மக்களின் தொழில் நுட்பத்துடன் தோன்றியிருக்கும். மருத நிலத் தெய்வமாக - வேளாண் மக்களின் வழிபடு தெய்வமாக மழையைக் குறித்திருப்பதைத் தக்க சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைத்துள்ளது. 

அதாவது, மழைத் தெய்வமே வேந்தன் என்றும், விண்ணுலக வேந்தனே இந்திரன் என்றும், அத்தகைய மழைத் தெய்வமே இந்திரன் என்றும் இந்நூல் விரிவான ஆய்வை முன்வைத்து விவரித்திருக்கிறது. மேலும், தமிழர்களின் இந்திர வழிபாடு என்பது, ஆரியர்களிடம் இருக்கும் வழிபாட்டு மரபிலிருந்து வேறுபட்டிருப்பது என்பதையும், தமிழரான வேளாண் குடிகளின் இந்திர வழிபாடு குறித்தும் மிக விரிவாக இந்நூல் விளக்கியுள்ளது. 

வேளாண் மக்களின் வாழ்வியலோடு இயைந்தும் இணைந்தும் உழவுத் தொழிலுக்குத் துணை நின்ற அனைத்து உயிரினங்களுக்கும் நன்றி பாராட்டி மகிழும் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும், மழைச்சோறு எடுத்தல், போகிப்பண்டிகை போன்றவை நீர் ஆதாரங்களுடனும் விளைநிலங்களுடனும் தொடர்புடைய பாவனைச் சடங்குகள் என்பதைத் தக்க தரவுகளுடன் விளக்கியுள்ளார் மகாராசன். 

மழைவளம், நிலவளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி மூலம் உணவு வழங்கிய அறுவடைச் சடங்கு மற்றும் சூரியன், மழை கால்நடைகள் போன்றவற்றுக்கும், வேளாண் உற்பத்தியில் ஈடுபட்ட - ஈடுபடுகின்ற உழவர்களுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றி உணர்வையும் வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் எனும் பண்பாடாக விளங்குவதைக் காணலாம்.

உழவுத் தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியை அறுவடை விழாவாகக் கொண்டாடும் வேளாண் உற்பத்திச் சமூகத்தின் நிகழ்த்து வடிவமாய் - பண்பாட்டு வழக்கமாய் தமிழ் சமூகத்தில் பன்னெடுங்காலமாய் நிகழ்ந்து வருவதைப் பல தரவுகளுடன் விவரிக்கிறது இந்நூல்.

வேளாண்மை தொடர்புடைய சடங்கியல் கூறுகள், வேளாண் மக்களோடு இன்றும் உயிரோட்டமாகத் திகழ்வதை வரலாற்று நோக்குடனும் சமகால நாட்டுப்புற மக்களின் வாழ்வியலோடும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

வேளாண் மரபினரின் உற்பத்திச் செயல்பாடுகளும், சடங்கியல் வழிபாட்டு முறைகளும், வாழ்க்கை முறைகளும் தனித்துவமான பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளன என்பதை விளக்கப்படுத்தும் இந்நூல், வேளாண் மக்களைக் குறித்து வெளிவந்திருக்கும் நூல்களில் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது என்பதற்கு இந்த நூலின் சான்றாதாரங்களே நிதர்சனம் ஆகிறது. 

*

கட்டுரையாளர்:
ப.இளங்கோ,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை-76
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080514506.

செவ்வாய், 17 மே, 2022

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்: மகாராசன்

பாரம்பரியத் தாயகப் பிரதேசமும் வாழ்வாதாராத்தை நிலைக்கச் செய்யும் பொருளுற்பத்தித் தன்னிறைவும் வரலாற்றுத் தொன்மையும் கொண்ட எந்தவொரு தேசிய இனத்திற்கும் தனக்கான இறையாண்மையை நிறுவிக்கொள்ளும் உரிமை உண்டு. ஒரு தேசிய இனம் வேறொரு தேசிய இனத்துடன் இணைந்திருப்பதற்கோ அல்லது பிரிந்து தனியான அரசு அமைத்துக் கொள்வதற்கோ முழு உரிமை உண்டு. இந்த உரிமையின் அடிப்படையில்தான் உலகின் பல தேசிய இனங்கள் தமக்கான தனியரசுகளைக் கொண்ட நாடுகளாக உருவாகியிருக்கின்றன. 


அந்தவகையில்தான், தமிழீழ தேசிய இனமும் தனக்கான தனியரசை உருவாக்கிக்கொள்ள கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.


இலங்கையில் தமிழர்கள் சிங்களவருடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தமது சம உரிமைக்கான கோரிக்கைகளை அமைதிவழியில் வலியுறுத்தி வந்தனர். அவ்வமைதி வழியிலேயே போராட்டங்களையும் நடத்தினர். 


இலங்கை நாட்டிலேயே தமிழர்களும் சிங்களவர்களுமாக இணைந்து வாழ்வதற்கான கருத்துக்களையும் விருப்பங்களையும் தமிழர்கள் முன்வைக்கவே செய்தனர். ஆனால் இலங்கை என்பது சிங்கள பவுத்தர்களுக்கு மட்டுமே உரிய நாடு; அதில் தமிழர்களுக்கு உரிமையில்லை; தமிழர்கள் அந்நியர்கள்; தமிழர்கள்அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பன போன்ற ஆதிக்கக் கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்டுவந்த சிங்கள பவுத்த பேரினவாதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தமிழர்களின் உரிமைக்கான அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரிக்கவே செய்தனர். 


அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் சம உரிமைக்கான அனைத்துவகை அமைதிவழிப் போராட்டங்களையும் காவல்துறை, இராணுவம் போன்ற அரச வன்முறை எந்திரங்கள் மூலம் ஒடுக்கியது சிங்கள பவுத்த பேரினவாத அரசு.


தமிழரின் தாயக உரிமை, மொழியுரிமை, வாழ்வுரிமை, அரசுரிமை போன்ற அனைத்தையும் மறுத்ததோடு, தமிழர்கள் சம உரிமை கோருவதை நாட்டைப் பிளவுபடுத்தும் துரோகம் எனவும், தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தி ஒடுக்கியது சிங்கள பவுத்த பேரினவாத அரசு. அது மட்டுமல்லாமல், சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகப் பகுதிகள் சிங்களமயமாக்குதல், ஆட்சியில், நீதியில், கல்வியில், மொழியுரிமை மறுத்தல்; கல்வி, தொழில், வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கான உரிமை மறுப்பு; தமிழருக்கு எதிரான இனக் கலவரங்கள் மூலம் தமிழர் உடைமைகளைச் சூறையாடுதல், தமிழர்களைக் கொன்றொழித்தல் போன்ற நடைமுறைகளை சிங்கள பவுத்த பேரினவாத அரசு தொடர்ந்து தீவிரப்படுத்தி வந்தது. இதன் விளைவாகத்தான் இலங்கை என்னும் ஒரே நாடு என்னும் அமைப்புக்குள் தமிழர்கள் இனியும் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்குத் தமிழர்கள் வந்தனர். அதாவது, தமிழர்களின் சொந்தத் தாயகப் பகுதியில் தனித்து இறையாண்மையுள்ள ஓர் அரசை நிறுவி, தனி நாடாக அமைத்துக் கொள்வதுதான் தமிழர்களுக்கான ஒரே வழி என்ற முடிவுக்குத் தமிழர்கள் வந்தனர். சம உரிமையுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தமிழர்கள் இந்த முடிவை எடுத்தனர். தமிழர்களின் இந்த முடிவை வெளிப்படையாக உலகுக்கும் அறிவித்தனர்.


“............ மொழி உரிமை இழந்து, குடியுரிமை இழந்து, சமய உரிமை இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்று வழி எது? தரப்படுத்தலினால் உயர் கல்விக்குரிய வாய்ப்பை இழந்து, தொழில் துறையில் சமவாய்ப்பை இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது? ஆட்சியாளர்களால் தூண்டப்பட்ட குண்டர்களாளும் பாதுகாப்புப் படையினராலும் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுத் தவிக்கும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது? தனித்துவத்தை நாடி திக்குத் தெரியாது நிற்கையில் அழிக்கப்படும் ஆபத்தையே காணும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது?” என்றெல்லாம் தமிழர்களுக்கு முன்னிருந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதிலாக அமைந்திருந்தது 1976 இல் நிறைவேற்றப்பட்ட யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் தான். தந்தை செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற தமிழர் தேசிய மாநாட்டில் தமிழ் இனத்திற்குத் தேசிய விடுதலை கோரும் வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


''….இலங்கைத் தமிழ் மக்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுதபலத்தால் வெற்றி கொள்ளப்படும்வரை சிறப்புவாய்ந்த பழம்பெரும் மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டிருந்ததோடு பல நூற்றாண்டுகளாக ஒரு தனித்துவமான பிரதேசத்தில் தனியரசை அமைத்துச் சுதந்திரமாக வாழ்ந்த வரலாறும் உடையவர்கள். இவற்றுக்கு மேலாகத் தங்களது சொந்த மண்ணில் தனி இனமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி புரிந்து வாழ வேண்டும் என்ற உறுதிப்பாடும் உடையவர்கள். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் என்பதால், தமிழர்கள் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவமான தேச அமைப்பைக் கொண்டிருந்தார்கள்.


இலங்கையின் 1972 ஆம் ஆண்டின் குடியரசுக்கான அரசியல் யாப்பு, புதிய குடியேற்ற எஜமானர்களாகிய சிங்களவர்களின் ஆட்சியின்கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. தவறான வழியில் பெற்றெடுத்த ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சிங்களவர்கள் தமிழ் மக்களின் நிலவுரிமை, மொழியுரிமை, குடியுரிமை, பொருளாதார உரிமை, வாழ்வுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை ஆகியவற்றை மறுத்து அவர்களின் தேசிய கட்டமைப்பின் அடிப்படைகளையே அழித்துள்ளனர். ஆகவே, தமிழீழத் தனியரசு அமைப்பது குறித்து வடகிழக்கிற்கு வெளியே வாழும் பெருந்தோட்டத் தொழிற்சங்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்த தயக்கத்தைக் கருத்தில் எடுக்கும் அதே வேளையில், தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய மதச்சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசு மீளப்பட்டு மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது” எனத் தமிழர்களின் தாயக உரிமைக்கான தேவையை உலகுக்குப் பறை சாற்றியது வட்டுக்கோட்டைத் தீர்மானம்.


தமிழீழ தேசிய இனத்தின் இந்த உரிமையைச் சிங்கள பவுத்த பேரினவாத அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தமிழர்களின் தாயகப் பகுதியை அபகரித்து, தமிழினத்தை அழிக்கும் முயற்சிகளைத்தான் மேற்கொண்டது. மேலும் 1948லிருந்து முப்பது ஆண்டுகாலம் சம உரிமையுடன் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வதற்குத் தமிழர்கள் செய்த அனைத்து முயற்சிகளையும் முறியடித்துவிட்டது. இறுதியாக, இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்றோ, அதற்குத் தாயகப் பகுதியும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது; தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக மட்டுமே இலங்கையில் வாழ முடியும் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது சிங்கள பவுத்த பேரினவாத அரசு. 


முப்பதாண்டு காலம் தமிழர்களின் சம உரிமைக்கான அமைதிவழியிலான போராட்டம் தோற்றுப் போய்விட்ட நிலையில்தான், தமிழீழ தேசிய இனத்தின் உரிமையையும் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்வதற்குத் தமிழீழத் தனியரசு அமைப்பது ஒன்றுதான் வழி என்ற முடிவுக்கு வந்த தமிழீழ மக்கள், தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான ஆயுதவழியிலான போராட்டத்தைக் கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழத் தனியரசுக்கான ஆயுதவழிப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தது.


‘இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமும் சம உரிமையும் உள்ள கவுரவமான வாழ்க்கையைப் பெறுவதற்குத் தமிழீழக் குடியரசு அமைக்கப்பட வேண்டும்’ என்ற 1976 இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பணியை - அத்தீர்மானத்திற்குத் தமிழீழ மக்கள் தந்திட்ட ஆதரவையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பொருட்டுத்தான் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதவழியிலான போராட்டத்தை எந்தவித சமரசமும் இன்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று நடத்தி வந்தனர்.


தமிழீழ மக்களிடமிருந்தே தோன்றி, தமிழீழ மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து, வேறு எந்த நாட்டின் ஆதரவும் இன்றி தமிழீழ மக்களின் ஆதரவுடன் மட்டுமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களைக் காப்பதற்காகவே ஆயுதம் எந்தினாவர்கள் விடுதலைப் புலிகள். புலிகளை மக்களும், மக்களைப் புலிகளும் காத்துவந்தனர். புலிகள் வேறு மக்கள் வேறு எனப் பிரிக்க முடியாத அளவுக்குத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளும் மக்களும் இணைந்தே இருந்தனர். இத்தகைய தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டமானது ஒடுக்குண்டு கிடக்கும் உலகின் எல்லா தேசிய இனங்களுக்கும் முன் மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்திருந்தது. 


அதேவேளையில், ஏகாதிபத்திய உலகமயத்தின் சதிவலைகள் உலகின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவே பல்வேறு வடிவங்களில் இயங்கிக்கொண்டிருந்தது, இயங்கிக் கொண்டுமிருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் உலகின் எந்தவொரு மூலையில் நடைபெற்றாலும் அது ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிராகவே இருக்கும்என்பதால், எந்தவொரு தேசிய இன விடுதலைப் போராட்டமும் உலகின் எந்தப்பகுதியிலும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதிலும், ஒருவேளை நடைபெற்றால் அதை நசுக்கி ஒடுக்குவதிலும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றன. 


இத்தகைய ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் துணையோடுதான் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் எனக்

காத்துக் கிடந்தது சிங்கள பவுத்த பேரினவாத அரசு - தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் பலமுறை தோற்றுப்போன சிங்கள பவுத்த பேரினவாத அரசானது, சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்தால் மட்டும் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டபின்பு, தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பல்வேறு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் உதவியையும் ஒத்துழைப்பையும் நாடியது. சிங்கள பவுத்த பேரினவாத அரசின் கூக்குரலுக்கு ஓடோடிச்சென்று உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள பவுத்த பேரினவாத பயங்கரவாத அரசுக்கு அரசியல் - பொருளியல் - இராணுவம் போன்ற கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்திய அரசு தொடக்கத்திலிருந்தே சிங்கள பவுத்த பேரினவாதத்துக்குத் துணையாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.


இலங்கையில் உள்ள மலையக மக்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1821 முதல் 1939 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் தோட்டத் தொழில்களுக்காகத் தமிழகத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டவர்களாவர். தங்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் மலையகப் பகுதியையும் இலங்கையையும் வளமாக்கியவர்கள் அவர்களேயாவர். மலையகப் பகுதியையே தமது வாழ்விடமாகவும் இலங்கையையே தமது தாய்நாடாகவும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அவர்களுக்கு வாக்குரிமையும் அளிக்கப்பட்டிருந்தது.


ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற சிங்கள பவுத்த பேரினவாத ஆட்சியாளர்கள் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து பத்து இலட்சம் மக்களை நாடற்றவர்களாக்கியபோது, அந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்ற முறையிலோ அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய வம்சாவழியினர் என்ற முறையிலோ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்திய அரசு சிங்கள அரசுடன் ஒப்பந்தம் போட்டு மலையகத் தமிழ் மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்தவே உதவி செய்தது. இதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் மக்கள் தொகை குறையவும், மலையகப் பகுதியைச் சிங்கள பவுத்த மயப்படுத்துவதற்கும் உதவியது. இதில் மலையகத் தமிழ் மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் முயற்சியைக்கூட இந்தியா மேற்கொள்ளவில்லை. அதாவது, சிங்கள அரசைப் போலவே இந்திய அரசும் மலையகத் தமிழ் மக்களைத் தனது விருப்பம்போல் கையாள்வதற்கான அடிமைகளாகவே கருதியது.


1958 இல் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது இந்திய அரசு அதை ஏனென்று ஒரு வார்த்தைக்குக்கூட கேட்கவில்லை. 1961 இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய தமிழர்கள் மீது சிங்கள பவுத்த பேரினவாதத்தின் காவல்துறை, இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட ஈவு இரக்கமற்ற அடக்குமுறை நடவடிக்கையை இந்திய அரசு கண்டிக்கவில்லை. அதேபோல், 1977 இல் சிங்கள வெறியர்களுடன் சிங்களக் காவல்துறையும் இராணுவமும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தியபோது இந்திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.


1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் புகுந்து சிங்களக் காவல்துறையினர் 9 தமிழர்களைக் கொன்றொழித்ததை இந்திய அரசு கண்டிக்கவில்லை. மேலும், 1981 இல் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தைச் சிங்கள இராணுவம் எரித்து நாசப்படுத்தியபோதும் இந்திய அரசு கண்டிக்கவில்லை.


இவ்வாறு இலங்கையில் தமிழர்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியபோதும், இனக் கலவரங்களில் தமிழர்கள் பலியானபோதும் இந்தியா வாய் திறக்க மறுத்து, சிங்களப் பவுத்த பேரினவாதத்திற்கே துணை போனது.


இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது ஈழவிடுதலைக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. இந்தியாவின் இந்தவகையான உதவிகள் ஈழவிடுதலைக்கு உதவ வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டவையல்ல. ஏனெனில் ‘ஈழப் பிரச்சினைக்கு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு, அதன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டுத் தீர்வுகாண வேண்டும்’ என்று மட்டுமே இந்தியா எப்போதும் கூறியிருக்கிறது. ஆகவே, ஈழவிடுதலைக் குழுக்களுக்கு இந்தியா உதவியும் பயிற்சியும் அளித்ததன் நோக்கம் ஈழ விடுதலை அல்ல. மாறாக, ஈழ விடுதலைக் குழுக்கள் உண்மையிலேயே ஈழ விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் சார்ந்த இயக்கங்களாக வளர்ந்துவிடாமல் தடுப்பதும், இந்தியாவைச் சார்ந்ததாய் - இந்தியாவுக்குட்பட்டதாய் மாற்றுவதை மட்டுமே நோக்கமாய்க் கொண்டிருந்தது இந்திய அரசு.


பெரும்பாலான ஈழவிடுதலைக் குழுக்களைப் பொருத்தமட்டில் இந்திய அரசு தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது. எனினும், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அது வெற்றியடையவில்லை. இந்நிலையில் தமிழீழ விடுதலைக்குப் போராடுவதில் தமிழீழ விடுதலைப் புலிகள் விடாப்பிடியாக நின்றதால் அவ்வமைப்பை ஒழித்துக் காட்டுவதற்குச் சிங்கள பவுத்த பேரினவாத அரசுடன் இந்திய அரசு கூட்டணி சேர்ந்து கொண்டது.


1987 இல் உருவாக்கப்பட்ட இராசீவ் - செயவர்த்தனா ஒப்பந்தமானது தமிழீழ மக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் ஒப்புதல் பெறாதது. இவ்வொப்பந்தத்தை தமிழீழ மக்களும் விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ‘அமைதிப்படை’ என்ற பெயரில் இலங்கைக்கு அனுப்பட்ட இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களையுமே கொன்றொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனாலும், தனது நோக்கங்களில் வெற்றி பெறாமலேயே ‘இந்திய அமைதிப்படை’ 1990 இல் இந்தியா திரும்பியது. எனினும் , ஈழத்தமிழர்களுக்கு எதிராக விடுதலைப்புலிகளுக்கு எதிராக - தமிழீழ விடுதலைக்கு எதிராக இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.


ஈழத் தமிழர்களுக்கு எதிரான - சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் மேலும் புதுப்பித்துக் கொள்ளும் வகையில்தான், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்து இந்தியாவில் தடைசெய்தது இந்திய அரசு. இதன்மூலம் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய உண்மைச் செய்திகள் மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் சிங்கள பவுத்த பேரினவாத அரசு பரப்பும் பொய்களையே இந்தியாவும் பரப்பியது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் பேசுவதும் செயல்படுவதும் உதவுவதும் குற்றச் செயல்களாக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 42 நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துத் தடைசெய்யத் தூண்டியதும் இந்திய அரசுதான். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளிலிருந்து தார்மீக ஆதரவும், உலகம் முழுவதிலிருக்கும் ஈழமக்களிடமிருந்தும் ஏனைய நாட்டு மக்களிடமிருந்தும் தார்மீக மற்றும் பொருளியல் ஆதரவும் கிடைப்பதைத் தடுத்து நிறுத்தியதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாகும்.


தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக உளவுத் தகவல்களைச் சேகரித்துச் சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு அளித்துக் கொண்டிருந்ததும் இந்தியாதான். அதுமட்டுமல்லாமல், சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்துக்கும் இந்தியா பயிற்சி அளித்தது. தமிழர்களுக்கு எதிரான போருக்குத் தேவையான இராணுவத் தொழில் நுட்பக் கருவிகள், ரேடார்கள், டாங்கிகள், ஆயுதங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியது. கடல்வழியில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவிகள் வந்து சேர்வதைத் தடுப்பதற்காக இந்தியக் கப்பற்படை காவலுக்கு வைக்கப்பட்டது.


ஈழப் போராளிகளுக்கு எதிரான போரில் இந்திய இராணுவத் தளபதிகள் பாகிஸ்தான், சீனா, ரசியா, இஸ்ரேல் போன்ற பிறநாட்டுத் தளபதிகளுடன் சேர்ந்து சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்திற்குப் போர் முனையிலேயே வழிகாட்டினர். இந்தியப் போர் விமானிகள், இந்தியச் சிறப்பு இராணுவப் படையினர் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்திற்கு ஆதரவாகப் போர் முனைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். ஈழத்தமிழின அழிப்புப் போரில் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்துடன் இந்தியப் படையும் வெளிப்படையாகவே இணைந்து கொண்டது.


ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பவுத்த பேரினவாத பயங்கரவாதத்தினை இந்தியா கண்டிக்கவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகப் போரை நடத்தியது பற்றியோ, ஈழப் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் வெளியேற்பட்டதைப் பற்றியோ, சிங்கள பவுத்த பேரினவாதத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கடத்திக் கொல்லப்பட்டதைப் பற்றியோ, பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும்போது தடை செய்யப்பட்டதைப் பற்றியோ, பள்ளிகள், மருத்துவமனைகள் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டு தமிழர்கள் அழிக்கப்பட்டது பற்றியோ, தமிழர்கள் முகாம்களில் அடைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றியோ, தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுவதைப் பற்றியோ, சிங்களப் பேரினவாத இராணுவத்தின் முப்படைத் தாக்குதல் மூலம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது பற்றியோ இந்திய அரசு இதுவரை ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை.


ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரினால் சிங்களப் பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அதைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடிக் கணக்கில் நிதியுதவி அளித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. சிங்கள பவுத்த பேரினவாத அரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழீழ தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை நசுக்கவும், அப்போராட்டத்தை வழிநடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பை நசுக்கவும் தனது முழு சசக்தியையும் பயன்படுத்தி வந்திருக்கிறது இந்திய அரசு.


இந்திய அரசு சிங்கள பவுத்த பேரினவாத அரச பயங்கரவாதத்துடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழீழ தேசிய இனத்தின் தாயக உரிமை, தேசிய இன உரிமை, சுயநிர்ணய உரிமை போன்றவை சிங்கள பவுத்த பேரினவாத அரசால் மறுக்கப்படுவது குறித்து இந்திய அரசு அக்கறை கொள்வதில்லை. இதற்குக் காரணம் இந்தியாவின் விரிவாதிக்க நலனைத் தவிர வேறொன்றுமில்லை.


தெற்காசிய மண்டலத்திலேயே ஒரு ஏகாதிபத்திய நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்கு உட்பட்ட நாடாக இலங்கை இருந்து கொண்டிருக்கிறது. இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதே இந்தியாவின் நெடுநாளைய திட்டம். “இலங்கையின் இறையாண்மை” “ஒன்றுபட்ட இலங்கை” என்ற கோட்பாட்டின் மூலம் இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொ£ள்வது அதன் கொள்கை. இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கக் கரங்களுக்குள் அரவணைத்துக் கொள்வதற்கு வேறெந்தக் கொள்கையையும் விட இதுவே அதற்கு ஏற்பான கொள்கை என்று இந்தியா கருதிக் கொண்டிருக்கிறது.


இந்தியா என்பதே பல்வேறு தேசிய இனங்களையும் அடிமை கொண்டிருக்கும் ஒரு வல்லாதிக்க நாடாக உருப்பெற்றிருக்கிறது. இந்தியா ஒரு நாடு என்ற முறையில் அதனுள் அடங்கியிருக்கும் தேசிய இனங்களை மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளையும் தனது விரிவாதிக்கக் கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் இந்தியாவின் விரிவாதிக்க நலனுக்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா. அதாவது தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நசுக்கி இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அரசின் இறையாண்மையப் பாதுகாக்க உதவும் கொள்கையே இந்தியாவின் கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் நலனைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறது. சிங்கள புவத்த பேரினவாத அரசுடன் சேர்ந்து கொண்டு ஈழத்தமிழின அழிப்புக்குத் துணை போய்க் கொண்டிருக்கிறது. அதாவது, இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அரசின் மூலமாகத் தனது வல்லாதிக்கத்தை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈழத் தமிழினத்தின் உரிமைகளையும் உயிர்களையும் பலியிட்டது. பலியிட்டுக் கொண்டிருக்கிறது இந்திய வல்லாதிக்க அரசு.


சிங்கள பவுத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இந்திய வல்லாதிக்க விரிவாதிக்க நலன்களுக்கு உடன்பட மறுத்தும்தான் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆகவே, தமிழீழ விடுதலைப் போராளிகளை ஒழிப்பதன் மூலம் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒழிக்க முடியும் என இந்திய வல்லாதிக்கமும் சிங்கள பவுத்த பேரினவாத அரசும் கருதின. இந்த அடிப்படையில்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போராக அறிவித்து இந்திய வல்லாதிக்கத்துடன் இணைந்து ஈழத்தமிழினத்தைக் கொன்றொழிக்கும் கொடூரமான போரை சிங்கள பவுத்த பேரினவாத அரசு நடத்தி முடித்திருக்கிறது.


தமிழீழ தேசிய இன விடுதலை இயக்கமான போராளிகள் அமைப்பை நிராயுதபாணியாக்கிச் சரணடையச் செய்யும் நோக்கோடுதான் தமிழர்களுக்கு எதிரான இந்தப்போர் நடவடிக்கையை - தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையைச் சிங்களப் பவுத்தள பேரினவாதமும் இந்திய வல்லாதிக்கமும் இணைந்து நடத்தியிருக்கிறது. போராளிகளை ஒழித்துக் கட்டுவதும், போராளிகளுக்குத் துணையிருந்த மக்களை ஒழித்துக் கட்டுவதும், தமிழீழம் என்ற அரசியல் கோரிக்கையே எழாமல் தடுப்பதும், தேசிய இன விடுதலை இனிசாத்தியமில்லை. இலங்கைக்குள்ளும் அதன் அரசியல் சட்ட அமைப்புக்குள்ளும் உட்பட்டுச் சிங்களவர்களுக்கு அடிமையாய் இருப்பதே தமிழர்களின் தலைவிதி என்பதாக ஆக்குவதும்தான் சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்கத்தின் கூட்டு நடவடிக்கையான தமிழின அழித்தொழிப்புப் போரின் நோக்கமாக இருந்திருக்கிறது. 


தமிழீழ விடுதலைப் போராளிகளும் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உறுதியுடனும் பற்றுடனும் இருந்து போராடியதாலும் சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்கத்திற்குப் பணிந்து போக மறுத்தாலும் சிங்கள பவுத்த பேரினவாத இந்திய வல்லத்திக்கத்தின் இராணுவ பயங்கரவாதம் போராடிய மக்களையும் போராளிகளையும் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தது.


பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், ஆண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி, போராளிகள் பொதுமக்கள் என்ற பாகுபாடின்றி விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைத் தாக்குதல் மூலமாகவும் ஏறி குண்டுகள் வீசியும் அன்றாடம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது சிங்கள பவுத்த பேரினவாத இராணுவமும் அதற்குத் துணைநின்ற இந்திய வல்லாதிக்கமும். உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நச்சுவாயுக் குண்டுகளைப் பயன்படுத்திக் கொடூரமான முறையில் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது சிங்களப் பவுத்த பேரினவாத இராணுவம். சர்வதேச போர்விதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களைக் கொன்று குவிப்பதிலேயே குறியாய் இருந்திருக்கிறது சிங்கள இராணுவம். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுவந்த இந்தப் போர் பயங்கரவாதம் ஒரு கோர வடிவத்தை வெளிக்காட்டியிருக்கிறது. சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்தால் ஏற்கெனவே தொடுக்கப்பட்டு வந்த போரினால் பல இலட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உலகெங்கும் பல நாடுகளுக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் பலகோடிக் கணக்கான உடைமைகள் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் சூறையாடப்பட்டுவிட்டன. தமிழர்கள் உணவுக்காகவும் வாழ்விடத்துக்காகவும் ஆடுமாடுகளைப் போல அலைகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


ஈழத்தமிழர்கள் மீது கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இறுதிக்கட்டப் போரின்போது சிங்கள பவுத்தபேரினவாத இராணுவத்தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகப் போராளிகளுடன் அய்க்கியப்பட்டுக் கொண்டிருந்த மக்கள்மீது ஈவிரக்கமின்றி கொத்துக் குண்டுகளை வீசி கூட்டங்கூட்டமாக தமிழர்களைக் கொன்றொழித்தது இராணுவம். எங்கும் பிணக்குவியல் இரத்த வெள்ளம், மரண ஓலம். உணவில்லை, மருந்தில்லை, காயம்பட்ட உயிர்களைக் காப்பாற்ற எந்தவழியும் இல்லை. சிங்கள பவுத்த பேரினவாதம் தொடுத்த தமிழர்களுக்கு எதிரான போர் நாளுக்குநாள் கொடூரமாக நடந்தேறியது. தங்களின் தாயக விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காவும் போராடிய ஈழத்தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இராணுவ பயங்கராவாதத் தாக்குதல்களால் உடல் உறுப்புகள் இழந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான போராளிகள் சித்திரவதைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.


இராணுவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் கிடையாது. எஞ்சியுள்ள மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம், நீர், மருந்து என எந்த வித அடிப்படை வசதியும் சிடையாது. தொற்று நோய்களாலும், போதிய உணவு, மருந்து பற்றாக்குறைகளாலும் தமிழ்க் குழந்தைகளின் இறப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலங்காலமாகத் தாங்கள் பூர்விக மண்ணில் வாழ்ந்த ஈழத்தமிழினம் - தங்களின் விடுதலைக்காகப் போராடிய ஈழத்தமிழினம் சொந்த மண்ணிலேயே அகதியாக, அநாதையாக அடிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. போராடிய போராளிகளையும் அவர்களுக்குத் துணைநின்ற மக்களையும் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்த இந்தப் போரை சிங்கள பவுத்த இராணுவம் மட்டும் நிகழ்த்தவில்லை. சிங்கள பவுத்த பேரினவாத இராணுவத்துடன் இந்திய வல்லாதிக்க இராணுவத்தின் கூட்டும் மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், இந்திய வல்லாதிக்கம் தான் தமிழின அழித்தொழிப்புப் போரை நடத்தியிருக்கிறது. அதனால்தான் சிங்கள பவுத்த பேரினவாத பாசிச வெறிபிடித்த இராசபக்சே அரசு இந்தியாவுக்காகத்தான் இந்தப் போரை நடத்தினோம். இந்தியாதான் இந்தப்போரை வழிநடத்தியது, இந்தப் போரில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இந்தியாவுக்கு நன்றி என இந்திய விரிவாதிக்க நலனின் விசுவாசத்தைக் கொக்கரித்துச் சொன்னது.


சிங்கள பவுத்த பேரினவாதமும் இந்திய வரிவாதிக்கமும் மட்டுமே ஈழத்தமிழின அழித்தொழிப்பில் ஈடுபடவில்லை. இவற்றோடு உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளும் கூட ஈழத்தமிழின அழித்தொழிப்புக்கும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் துணைபோயிருக்கின்றன. இன்னும் துணைபோய்க்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தியாதான். அதாவது, இந்திய அரசு தமிழீழ விடுதலையை எதிர்க்கிறது. சிங்கள பவுத்த பேரினவாத அரசின் உறவுக்காகவும் - இந்தியாவின் விரிவாதிக்க நலனுக்காவும் சிங்கள பவுத்த பேரினவாதத்திற்குத் தமிழினத்தைப் பலியிடுவது எனத் தீர்மானித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் தேசிய இனங்களின் விடுதலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. 


அதனால்தான் தமிழீழ தேசிய இன விடுதலையை எதிர்க்கின்றது. இதனால், உலகின் மற்ற நாடுகளில் இந்தியாவின் வல்லாதிக்கத்தை மீறி - இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கவோ இராணுவ பயங்கரவாதத்தால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராகவோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவும் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவும் தயங்குகின்றன. தமிழீழ மக்களின் தாயக உரிமைக்கான நியாயமான போராட்டம் குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.


இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் சிங்கள பவுத்த பேரினவாத அரசின் நட்புக்காவும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு உலக நாடுகள் பலவும் ஆயுதங்களையும், நிதியுதவியும் வழங்கியுள்ளன. உலக நாடுகளின் இம்முனைப்புக்குப் போட்டியாக இந்திய அரசும் சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழின அழிப்புப்போரை நடத்துவதற்கு எல்லாவகை உதவிகளையும் செய்திருக்கிறது. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாட்டினால்தான் ஐ.நா. சபையே ஏற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு உட்பட்ட ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க உலக நாடுகள் மறுக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் போரில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், சிங்கள பவுத்த பேரினவாத இராணுவ அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சில நாடுகள் பெயரளவிலான தீர்மானத்தைக் கொண்டு வந்த போதுகூட சிங்கள பவுத்த பேரினவாத அரசின் பக்கமே நின்ற இந்திய அரசின் தலையீட்டால் உலக நாடுகள் தமிழின அழித்தொழிப்பு குறித்துப் பெயரளவுக்குப் பேசுவதைக் கூட நிறுத்திக் கொண்டன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மனித குலத்தின் அறம்சார் கொள்கை. ஈழத் தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் இந்த அறம் சார் கொள்கைகளை ஆதரிக்கவும் இல்லை, பொருட்படுத்தவுமில்லை. இதற்கெல்லாம் காரணம்கூட இந்தியாதான்.


ஈழத்தில் நடைபெற்று வந்த தேசிய இன விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டது; களத்தில் நின்று போராடிய போராளிகள் இயக்கத்தின் பெரும்பகுதியை அழித்து ஒழித்தது; போராளிகளையும், மக்களையும் கொத்துக் கொத்தாய்க் கொன்றொழித்தது; தமிழீழத்திற்காகப் போராடிய ஈழத்தமிழர்களைச் சொல்லெணாத் துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாக்கியது என எல்லாவற்றையும் செய்து முடித்தது. சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அரசுகள்தான்.


தமிழீழம் தனது சொந்த உரிமைக்காகப் போராடுவதை ஆதரிக்க நாடுகள் இல்லை. தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த நாடுகள் இல்லை. அதைக் கண்டிக்கவும் நாடுகள் இல்லை. சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வவ்லாதிக்க - ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அரச பயங்கரவாதத்தால் ஒரு மனித பேரவலம் தமிழீழத்தில் நிறைவேறியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் கடுமையான பாதிப்புகளையும் இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் -அப்போராட்டத்தில் களம்நின்ற போராளிகள் மற்றும் மக்கள் குறித்தும் - தமிழீழ விடுதலைப் போராட்டப் பின்னடைவுகள் குறித்தும், பேசவும் எழுதவும் கூடிய மனித உரிமை எனக் கூறிகொள்ளும் அறிவுஜீவிகள், இடதுசாரி வேடங்கொண்டிருக்கும் அறிவுஜீகள், முதலாளித்துவ அறிவுஜீவிகள் புலம்பெயர் ஈழத்து அறிவுஜீவிகள் என அறிவுஜீவிகள் வட்டமாய்க் கூடிச் சேர்ந்தியங்கும் அறிவுஜீவிகள் சிலரின் அண்மைக்கால எழுத்துக்களும் பேச்சுக்களும் வன்மங்களைச் சுமந்தபடி வெளிவந்து கொண்டிருக்கின்றன.


தமிழீழ விடுதலைப் போராட்டம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதற்கும், தமிழர்கள் கொடூரமாய்க் கொல்லப்பட்டதற்கும், ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்ததற்குமான எல்லாவற்றுக்கும் தமிழீழம் என்ற கோரிக்கையும், தமிழீழத்திற்காகப் போராடிய போராளிகளும் தான் காரணம் என்பது போன்ற அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் பலர். 


களத்தில் நின்று கடைசிவரை போராடிய போராளிகள் இயக்கத்தின் மீது விமர்சனம் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி சேற்றை வாரி இறைப்பதும், அப்போராளிகள் ஜனநாயக மற்றவர்கள், சகோதரப் படுகொலைக் காரர்கள், அதிகார வெறியர்கள், இரணுவவாதிகள், பாசிஸ்டுகள், இரக்கமற்றவர்கள், சாதியம் காத்தவர்கள், முஸ்லீம் பகையாளிகள், அரசியலற்றவர்கள், உலகச்சூழல் புரியாதவர்கள், மக்களைக் கொடூரமாகக் கொன்றவர்கள், மக்களைப் பிணையக் கைதிகளாக வைத்திருந்தவர்கள் கடைசிக்கட்டப்போரில் மக்களைச் சுட்டுக் கொன்றவர்கள்........... என நீளும். போராளிகள் மிதான குற்றச்சாட்டுகள் போராளிகள் இயக்கத்தின் மீது விமர்சனப்பூர்வமாக முன்வைத்தவையல்ல. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் நேர்மையற்ற முறையில் அமைந்த அவதூறுகளும் வன்மங்களுமே ஆகும்.


ஈழத்தில் நடந்துள்ள மனிதப் பேரவலத்திற்கெல்லாம் போராளிகள்தான் காரணம்; போராளிகள் முன்னெடுத்த தமிழீழம் காரணம்; தமிழீழம் இனி சாத்தியமில்லை; தேசிய இன விடுதலைப் போராட்டம் இனி சாத்தியமில்லை; ஆயுதவழியிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால்தான் இம்மனிதப் பேரழிவு;  இனி ஒருபோதும் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது; ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் கதியும் - அதற்குத்துணை நின்ற மக்களின் கதியும் அதோ கதிதான்; தமிழீழம் என்ற கோரிக்கையோ போராட்டமோ தேசிய இன சுயநிர்ணய உரிமை என்ற முழக்கமோ இனி எழவே எழக் கூடாது; கடந்த அரை நூற்றாண்டாக நடந்து வந்த தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் தோல்வியிலேயே முடிந்துள்ளது; ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை; தேவையற்றது; உலகின் மற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வியே ஒரு பாடம்... என்றெல்லாம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் அவதூறு பரப்பும் அறிவுஜீவிகள் . 


இவர்களைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த சாராம்சத்தில் சொல்ல வருவது என்னவென்றால் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற கோரிக்கையே தவறானது. தமிழீழ விடுதலைப் போராளிகள் தீவிரவாதிகள். அவ்வியக்கம் போராளிகளின் தீவிரவாத இயக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டம் இனி சாத்தியமில்லை. ஆயுதப் போராட்டம் தவறானது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் - இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டுத்தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என்பதைத்தான் இவ்வறிவுஜீவிகள் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். இதையேதான் சிங்கள பவுத்த பேரினவாத அரசும், இந்திய வல்லாதிக்க அரசும் முதலாளித்துவ நாடுகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. 


இவ்விடத்தில், சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்க முதலாளித்துவக் கொள்கையோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள் அவ்வறிவுஜீகள். 


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கின்ற பேரில் அவதூறுகளைப் பரப்பிவரும் இத்தகைய அறிவுஜீவிகள் இந்நிலைப்பாடானது, சிங்கள பவுத்த பேரினவாத - இந்திய வல்லாதிக்கச் சார்பான நிலைப்பாடாகவே அமைந்திருக்கிறது.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கும் இவ்வறிவுஜீவிகளின் பேச்சிலும் எழுத்திலும் நேர்மையில்லை. ஏனெனில் போராளிகள் இயக்கத்தையும், அதன் நடவடிக்கைகளையும், அதன் கோரிக்கைகளையும் விமர்சிக்கும் இவர்கள் ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள பவுத்த பேரினவாத அரசையோ அல்லது உற்றதுணையாய் சக பங்காளியாய் போரில் ஈடுபட்ட இந்திய வல்லாதிக்க அரசையோ அல்லது தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உலக நாடுகளைப் பற்றியோ விமர்சிப்பதில்லை. தமிழினத்திற்கு எதிரான அவற்றின் கொடூர நடவடிக்கைகளை எதிர்க்கவுமில்லை, எதிர்ப்பதுமில்லை. 


மாறாக, தமிழீழ விடுதலைப் போராளி இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும் மாறி மாறிக் குற்றம் சாட்டுவதும், அவதூறுகளைப் பரப்புவதுமாகத்தான் இவ்வறிவுஜீவிகள் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 


தமிழக - இந்திய -உலக அரசியல் குறித்து முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவர்கள் கூட தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதிலும் அவதூறுகளைப் பரப்பிவிடுவதிலும், விடுதலை வேட்கையை வற்றிப்போகச் செய்வதிலும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு நீர்த்துப் போகச் செய்வதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். இம்மாதிரியான அவதூறு சக்திகள் தெரிந்தும் தெரியாமலும் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நிற்கின்றன; சிங்கள பவுத்த பேரினவாத இந்திய வல்லாதிக்கத்தின் கருத்துக்களையே பிரச்சாரம் செய்து வருகின்றன. எனினும் பொய்களும் அவதூறுகளும் கொச்சைப்படுத்தல்களும் போராட்டவரலாற்றின் பக்கங்களில் உண்மைகளாக ஆகிவிடுவதில்லை. போராட்டகால உண்மைகள் வெளிவரும்போது அவதூறுகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய அவதூறு வன்மங்கள் அம்பலப்பட்டுபோகும். 


தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்போதுதான் முறியடிக்கப்படும். தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிந்து விட்ட ஒன்றல்ல, அது தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஏனெனில் தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தமிழர்களின் சொந்த இறையாண்மைக்கான போராட்டம். தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டம். மனிதகுல அறப் பண்புகளை காக்கின்ற போராட்டம். அரை நூற்றாண்டுகாலம் போராடியவர்கள் இன்னும் போராடுவார்கள் மனிதர்கள் விடுதலைக்குரியவர்கள்; விடுதலைக்காகப் போராடும் குணமுடையவர்கள் தமிழர்கள், தமிழர்கள் விடுதலைக்காகப் போராடும் குணமுடையவர்கள் மட்டுமல்ல, அரைநூற்றாண்டு அனுபவமும் உடையவர்கள், விழுந்தவர்கள், எழுவார்கள்; விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள். அவர்களுக்குத் தோள் கொடுப்பதும் துணை நிற்பதும் நம் அனைவரின் கடமை மட்டுமல்ல, வரலாற்றுத் தேவையும்கூட.


‘அவதூறுகளை முறியடிப்போம்; தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும்’ என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதூறுகளை மறுத்தும் எதிர்த்தும் வெளிவந்தவை. இக்கட்டுரைகள் வெகுமக்கள் தளத்திற்குப் போய்ச் சேரவேண்டும் என்பதாலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதூறுகளுக்கான மறுப்புகளை ஆற்ற வேண்டியதும் இன்றைய காலகட்டத் தேவை என்பதாலும் இவ்வாறான கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அதனதன் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இவை ஒரே மாதிரியான ஒரே பார்வையில் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவை அல்ல. ஆயினும் இதனுள் உள்ள எல்லாக் கட்டுரைகளும் தமிழீழ விடுதலைப் போராட்ட அவதூறுகளை மறுக்கக்கூடிய வகையிலேயும், அவதூறு சக்திகளின் கருத்தியல் அரசியல் நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தக்கூடிய வகையிலேயும் இருக்கின்றது. 


இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளோ அல்லது இத்தொகுப்பு உருவாக்கமோ தனி மனிதர்களை விமர்சிக்கும் அல்லது அம்பலப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல. 


தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதூறுகளுக்கான மறுப்புகள் என்ற வகையிலும், அவதூறு சக்திகளின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையிலும்தான் இந்நூல் கொண்டுவரப்படுகிறது. அரசியல் ரீதியிலான நேர்மையான உரையாடல்களை மேலும் மேலும் தொடர்வதற்கு இந்நூல் உதவும். 


இந்நூல் வெளிவர உதவிய கட்டுரையாளர்கள் அனைவருக்கும் எமது நன்றி. இந்நூலைக் கொண்டுவரும் பாலை வெளியீட்டகத்திற்கு நன்றி. இந்நூல் உருவாக்க முயற்சிகளில் பங்கெடுத்து உதவிய தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தோழமை நிறைந்த நன்றி.


-     மகாராசன் 


(பாலை பதிப்பகம் வெளியிட்ட ‘அவதூறைகளை முறியடிப்போம்’ 

: தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் எனும் நூலுக்கான முன்னுரையிலிருந்து...)



புதன், 4 மே, 2022

கல்வியை மாசுபடுத்தும் ஒலி மாசுபாடு: மகாராசன்

கொரானா பெருந்தொற்றுக் காலங்களில் நாட்டு மக்களின் வாழ்வியல், தொழில், பண்பாட்டு நடத்தைகள் பெரும் முடக்கத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளாகின. இதில் இளைய தலைமுறையின் எதிர்காலத்தோடு தொடர்புடைய கல்விச் செயல்பாடுகள் முற்றாகவே முடங்கிப் போயிருந்தன. பேரிடர்க் கால முடக்கத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் ஆசிரியர் உறவிலும், கற்றல் கற்பித்தல் நாட்டத்திலும் மிகப்பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 

பெரும்பான்மை மாணவர்கள் நெறிபிறழ் நடத்தைகளோடும் அலட்சிய மனப்போக்கோடும்தான் வகுப்பறைகளுக்குள் இருந்தார்கள். இரண்டாண்டுகள் வீட்டிலிருக்கும்போது செல்பேசிப் பயன்பாடுகளில் மாணவர்கள் மூழ்கிப் போனதால் படிப்பில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்த முடியாமல் மாணவர்கள் தடுமாறுவதை அன்றாடம் காணமுடிந்தது. 

மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் அதிகமான பாடங்களை நடத்தி முடித்து, பல கட்டத் திருப்புதல் தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடித்து, இந்த வாரத்தில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. 

கற்றல் கற்பித்தலில் பல நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் தாண்டியும் கடந்தும்தான் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதுவதற்குத் தயார்படுத்தியுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள்.

வரும் மே 5 ஆம் தேதியிலிருந்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுமட்டுமல்லாமல், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி ஆண்டுத் தேர்வுகளும் இதே காலகட்டத்தில் தொடங்குகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாகப் கொரோனா கால நெருக்கடிகளையும், கற்றல் பின்னடைவுகளையும், கவனச் சிதறல்களையும் எதிர்கொண்டு வந்த பள்ளி மாணவர்கள், இந்தக் கல்வி ஆண்டுக்கான கற்றல் அடைவுகளுக்கான பொதுத்தேர்வுகளையும்/ஆண்டுத் தேர்வுகளையும் எழுதவுள்ளனர்.

இந்நிலையில்தான், மாணவர்கள் தேர்வு எழுதப் போகும் இதே காலகட்டத்தில்தான், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ஊர்த் திருவிழாக்களும், கோயில் வழிபாட்டுத் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

இரண்டு ஆண்டுகளாக முடக்கத்தில் இருந்த சமூகப் பண்பாட்டு நடத்தைகள் யாவும், கொரோனா பேரிடர்க் காலத் தளர்வுகளுக்குப் பின்பு, இந்த ஆண்டுதான் மிகப்பெரிய அளவில் சமூகப் பண்பாட்டுக் கூடுகைக்கான சமூகக் களமாகத் திருவிழாக் களங்கள் மும்முரமாகத் தயார்படுத்தப்படுகின்றன.

இந்தத் திருவிழாக் காலங்கள், மனிதத் திரளின் பண்பாட்டு நடத்தைகளை உயிர்ப்பிக்கும் காலம்தான் என்றாலும், அத்தகையத் திருவிழாக் காலங்களில் அளவுக்கதிகமாகவும், அதிக சத்தங்களோடும் பயன்படுத்தப்படுகிற ஒலிபெருக்கிப் பயன்பாடுகள் மாணவர்களின் கவனச் சிதறலை ஏற்படுத்தும் மிக முக்கியக் காரணிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.

கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அத்தகையத் தடைகளையும் மீறித்தான் கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளும், ஒலிபெருக்கிப் பெட்டிகளும் ஊர் முழுக்கக் கட்டப்படுகின்றன. நகர்ப்புறங்களில் இதுபோன்று கட்டப்படுவது குறைவுதான் என்றாலும், நகரங்கள் தவிர்த்த எல்லா ஊர்களிலும் இவ்வாறுதான் ஒலிபெருக்கிகள் கட்டப்படுகின்றன. 

காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கும் மேலாகக் கூட அதிக சத்தத்துடன் காதுகள் கிழிய ஒலிபெருக்கிகளில் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுவது எல்லா ஊர்களிலும் வழமையாகிக் கொண்டிருக்கிறது.

ஊர்த் திருவிழாக்கள் பெரும்பாலும் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையது என்றாலும், தெய்வ வழிபாட்டை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்த ஊர்த் திருவிழாக்கள் யாவும், இப்போது ஊர்த் தலைக்கட்டுகள்/சாதிகள்/ பங்காளிகள்/வகையறாக்களின் கவுரவத்தையும் ஆடம்பரத்தையும் பகட்டையும் பெருமிதத்தையும் காட்டிக்கொள்ளும் வகையில் மாறிப்போயிருக்கின்றன.

வண்ண வண்ண அலங்கார மின் விளக்குத் தோரணங்கள், மின்விளக்கு வரிசைகள், மின்கம்பங்கள் தோறும் ஒலிபெருக்கிகள் என, திருவிழா நிகழ்வை அறிவிக்கும் கருவிகளாய்ப் பயன்படுத்தப்படுகின்றன. இதோடு, தாரை தப்பட்டை, பட்டாசு வெடிகள் எனப் பலவும் சேர்ந்து கொண்டுள்ளன.

இந்தத் திருவிழாக்கள் மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் தருகின்றன என்றாலும், திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிற ஒலிபெருக்கிகளும் பட்டாசு வெடிகளும் மாணவர்களின் நிகழ்காலக் கல்வியையும் எதிர்கால வாழ்வையும் சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை அந்தந்த ஊர் மக்களும், அரசும், காவல்துறையும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது பள்ளி மாணவர்களின் தேர்வுக்காலம். எல்லாக் கல்வி ஆண்டிலும் மார்ச்சு மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்தக் கல்வி ஆண்டில் மட்டும்தான் தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. 

வழக்கம் போல எல்லா ஊர்களிலும் இது திருவிழாக் காலம்தான். இந்த ஆண்டு இது தேர்வுக்காலம் என்பதால், திருவிழாக்களே நடத்தக்கூடாது என்று கூறவும் கூடாது. அது மக்களின் பண்பாட்டு மனநிலைக்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடும். அதேவேளையில், திருவிழாக் காலத்தில் மாணவர்களின் தேர்வுக்காலமும் வருவதால், திருவிழா சமூக நடத்தைகளில்-திருவிழா நடைமுறைகளில் சில பல கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவருவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நல்லது.

ஓர் ஊர்த் திருவிழா என்பது குறைந்தது 4 நாட்களாவது நடைபெறுகின்றது. இந்த நான்கு நாட்களும் நாள் முழுக்க ஒலிபரப்பாகும் ஒலிபெருக்கிச் சத்தங்கள், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்துச் சீர்குலைத்துப் படிப்பதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மாணவர்களின் கூற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.

அரசு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10,11,12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு அண்மையில் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்தன. அவ்விடைத்தாள்களைத் திருத்தியபோது, மிக நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட நன்றாகவும் முழுமையாகவும் தேர்வுகளைச் சரிவர எழுதியிருக்கவில்லை என்பதைக் காணமுடிந்தது. 

விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கும்போது, ஏன் சரிவர விடைகள் எழுதவில்லை என அவர்களிடம் கேட்டபோது, பெரும்பாலான மாணவர்கள் சொன்ன ஒரே பதில், "படிக்க முடியலங்க அய்யா" என்பதுதான்.

ஏன்? என அவர்களிடம் கேட்டபோது,

"ஊர்ல திருவிழாங்கய்யா. மூனு நாளா ஒரே பாட்டுச் சத்தமா இருந்துச்சுங்கய்யா. படிக்கனும்னு புத்தகத்தத் திறந்து படிக்க முயற்சி செஞ்சாக்கூட படிப்புல கவனத்த செலுத்த முடியலங்கய்யா. அமைதியான சூழலே இல்லாம என்னேரமும் பாட்டுச் சத்தமா அலறிக்கிட்டு இருந்ததால, அந்தச் சத்தத்தத் தவிர வேற எதுக்குள்ளயும் கவனத்தச் செலுத்த முடியலங்கய்யா. ஒரே இரைச்சலும் சத்தமாவும் இருந்ததால, படிக்கிறதுல எங்களால கவனத்த செலுத்த முடியலங்கய்யா. எங்களால என்ன செய்யுறதுன்னே தெரியலங்க அய்யா" என்று வேதனையோடு கூறினார்கள்.

ஏற்கெனவே, கொரானா காலத்தில் கற்றலில் நாட்டமில்லாமல் - கற்பித்தல் கற்றலில் தொடர்ச்சி இல்லாமல் இருந்த மாணவர்கள் இப்போதுதான் படிப்பு வட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாய் பொதுத்தேர்வு/ஆண்டுத் தேர்வு எதையும் எழுதவில்லை; எதிர்கொள்ளவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறுகிய காலத்திற்குள் பொதுத்தேர்வு - ஆண்டுத் தேர்வு எனும் தேர்வு அனுபவத்தை எதிர்கொள்ள இருக்கின்றனர். 

இந்தச் சூழ்நிலையில், பொதுத்தேர்வு/ஆண்டுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக- கவனச் சிதறல் ஏற்படுத்தும் கருவியாக இருக்கும் ஒலிபெருக்கிகளை, மாணவர்களின் தேர்வுக்காலமாக வந்திருக்கும் இந்தக் காலத்தில் மட்டுமாவது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் அல்லது அதிக அளவு சப்தங்களோடு அலறவிடாமல் மிகக் குறைவான நேரங்களில் மட்டும் ஒலிபரப்பு செய்து திருவிழாக்களைக் கொண்டாட முன்வருவதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும்.

ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவது ஒன்றும் தெய்வக் குற்றமாக ஆகிவிடாது. எந்தத் தெய்வமும் ஒலிபெருக்கிகளை ஊர் முழுக்க அலரவிட்டுத்தான் கொண்டாட வேண்டும் என்று சொல்லியதாகவும் இல்லை. ஒலிபெருக்கிகள் இல்லாமல்தான் பன்னெடுங்காலமாகத் திருவிழாக்களும் கொண்டாடப்பட்டும் வந்திருக்கின்றன.

ஆகையால், திருவிழாக் காலங்களில் மாணவர்களின் தேர்வுக் காலமும் வருவதால், மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், அவர்களின் படிப்பில் கவனச் சிதறலையும் இடையூறையும் ஒலி மாசுகளையும் ஏற்படுத்தாத வகையில், ஒலிபெருக்கி இல்லா திருவிழாக்கள் கொண்டாடுவதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும்.

திருவிழாக் காலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் ஒலி மாசு, தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் தேர்வுக்காலத்தை மாசுபடுத்தக்கூடியதாகும்.

ஆகவே, மாணவர்களின் தேர்வுக்காலத்தையும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் திருவிழாக் கால ஒலிப்பெருக்கிப் பயன்பாட்டை தேர்வுக்காலம் முடியும் வரையிலும் நிறுத்திவைக்கவும்- ஒலிபெருக்கிப் பயன்பாட்டைத் தடைசெய்யவும்கூடச் செய்யலாம். அல்லது, ஒலி அளவைக் குறைத்து, கூம்புக்குழாய் ஒலிபெருக்கிகளைத் தவிர்த்து, ஊர் முழுக்க ஒலிபெருக்கிகள் கட்டாமல், மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டும் ஒலிபெருக்கிகள் அமைத்து, நாள்முழுக்க ஒலிபெருக்கிகளை அலறவிடாமல், குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும்படியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். 

குறிப்பாக, திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிப் பயன்பாடுகள் குறித்த வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு அதைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும். 

மேம்போக்காகப் பார்த்தால், ஒலிபெருக்கிகளின் ஒலி மாசு மிகச் சாதாரணமானதாகத் தெரியலாம். ஆனால், இது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகமானவை. அப்பாதிப்புகள் உடனடியாகத் தெரிவதுமில்லை. கல்வியில் நாட்டமில்லாத தலைமுறை உருவாகிக்கொண்டிருப்பதற்கு இந்த ஒலிபெருக்கி மாசும் ஒரு காரணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆயினும் அதுதான் உண்மையும் கூட.

ஆகவே, கல்வியாளர்கள், கல்வித்துறையினர், அரசு நிர்வாகிகள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் மாணவர்களின் தேர்வுக் காலத்தை, படிப்புக்கு உகந்த காலமாக உருவாக்கித் தருவதற்கு முன்வர வேண்டும். 

மாணவர்களின் இந்தத் தேர்வுக் காலத்தை ஒலிபெருக்கி மாசு இல்லாத காலமாக ஆக்கித் தருவதற்கு உண்டான நடவடிக்கைகளைச் செய்து தரவேண்டும் என்பதே மாணவர்கள் ஆசிரியர் தரப்பிலிருந்து முன்வைக்கும் ஒற்றைக் கோரிக்கையாகும்.

ஏர் மகாராசன் 

01.05.2022

திங்கள், 18 ஏப்ரல், 2022

தமிழ் ஆண்டுப் பிறப்பை எதுவாகக் கொள்வது? - மகாராசன்


தமிழ் நிலம் முழுவதையும் ஒரே மன்னர் ஆண்டிருக்கவில்லை. வட்டார அடிப்படையிலும் மண்டல அடிப்படையிலும் பல்வேறு பெருநில மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். 

தமிழ் நிலம் பல்வேறு அயல் இனத்தாரின் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, பல்வேறு அயல் மொழி, பண்பாட்டு அதிகாரங்கள் பல காலம் நீடித்திருக்கின்றன. 

ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நடைமுறைப்படுத்திய - பின்பற்றிய ஆட்சி ஆண்டு நடைமுறைகளே அந்தந்த காலகட்டத்தில் ஆண்டுப் பிறப்பாகவும் கொண்டாட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழர்கள் எல்லா பருவங்களையும் இன்முகத்தோடு வரவேற்கும் பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். 

இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி, கார், கூதிர் என ஆறு பருவகாலங்களையும் வரவேற்று மகிழ்ந்திருக்கின்றனர். அந்தவகையில், தையும் வரவேற்றுக் கொண்டாடப்பட்டிருக்கிறது. சித்திரையும் வரவேற்றுக் கொண்டாடப்பட்டிருக்கிறது. தமிழ் ஆண்டுத் தொடக்கம் தையா? சித்திரையா? எனும் குழப்பங்களும் விவாதங்கள் இன்னும் நடந்துகொண்டிருப்பதற்கான காரணம் யாதெனில், எல்லாக் காலத்திலும் குறிப்பிட்ட மாதத்தை மட்டும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியிருக்கவில்லை என்பதுதான். 

இப்போதைய காலகட்டத்தில், தமிழர்களுக்கான ஆண்டுப் பிறப்பை எதுவாகக் கொள்வது?

சித்திரையும் தையும் ஆண்டுப் பிறப்பு மாதங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த இரண்டில் எதை ஏற்பது? சித்திரையை ஆரியமும் முன்மொழிந்திருக்கிறது; வழிமொழிந்திருக்கிறது. தமிழ் மரபில் சித்திரையும் உண்டு; தையும் உண்டு. இறுதியாக, ஆண்டுக் கணக்கிற்கு- ஆண்டுத் தொடக்கத்திற்கு உரிய மாதமாகக் கொள்வது எதை? 

ஆரியத்திற்கு எதிராகவும் மறுப்பாகவும் இருந்திருப்பதே தமிழர் மரபு. அவ்வகையில், ஆரியத்திற்கு எதிரானதான பண்பாட்டு நடத்தையாகக் கொள்ளும் வகையில், தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டாகக் கருதலாம். சித்திரையை வேனில்காலத் தொடக்கமாய்க் கொண்டாடலாம்.