புதன், 29 மார்ச், 2023

வாழ்தல் நிமித்தங்கள் - மகாராசன்


வெயிலில் தோய்த்த 
மஞ்சளைப் பூசிக்கொண்ட பழுப்பெய்திய இலைகள்
காற்றில் நீந்தியபடி
சறுகென முத்தமிடுகின்றன
தூர் மண்ணில்.

அறுப்புக் கழனியில் 
சிந்தித் தப்பிய நெல்மணிகள் 
கோடை மழையொன்றில் 
ஊறிக்கிடந்து 
வெள்முளை காட்டிச் 
சிரித்துக் கிடக்கின்றன.

அலகு நோகக் கொத்தித் தின்று இரைப்பை நெப்பிய 
கவுதாரிப் பறவைகள்
பனந்தூர்க் குதுவல் மறைவில் 
சிறகை நீவிக்கொண்டிருக்கின்றன.

திக்குகளில் அலைந்து திரிந்து 
இறக்கை வலிக்கப் பறந்து வந்த 
சுள்ளான் குருவியொன்று
வெறுங்கிளையின் அம்மணத்தில் கால்விரல் கவ்வி அமர்ந்திருக்கிறது.

இளைப்பாற இடமிருந்தும்
களைப்பாற மனமில்லாமல்
இறகுகள் துவள 
சிறகை அடித்துப்
பறந்து கொண்டே இருக்கிறது 
வல்லூறு ஒன்று.

வெறுமை ததும்பிய வானத்தை
வெறித்துப் பார்த்தபடி
ஆறுதலாய்க் கிடக்கிறது 
தனிமைப் பொழுது.

கால்த்தடம் மறைந்த பாதையொன்று
மூதாதைகளின் பாடுகளைச் சுமந்து
நீண்டு கிடக்கிறது.

கண்ணீர் கசிய வட்டமிடும்
மனப் பறவையொன்று
தன்னைத் தொலைத்துக்கொண்டே
ஒவ்வொரு இறகாய் உதிர்த்துக்கொண்டிருக்கிறது.

வாழ்தல் நிமித்தங்களை
மென் சிரிப்புடன்
எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறது
ஊழிப் பெருங்காலம்.

ஏர் மகாராசன் 
29.03.2023.

வெள்ளி, 24 மார்ச், 2023

ஆரிய மரபின் நால் வருணப் பகுப்பு வேறு; தமிழ் மரபின் தொழில்குலப் பகுப்பு வேறு - மகாராசன்


ஆரிய வைதீக மரபினரின் நால் வருணக் கருத்தாக்கம் குறித்து விவரிக்கும் பாவாணர், ‘மக்களை நால் வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும், சத்திரியனுக்குச் செந்நிறமும், வைசியனுக்குப் பொன் நிறமும், சூத்திரனுக்குக் கருநிறமும் சார்த்திக் கூறி, நால் வரணப் பாகுபாட்டை ஏற்படுத்தி, பிராமணர் கல்வித் தொழிலையும், பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழில்களையும் வழிவழி செய்து வர வேண்டுமென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவர் என்றும், சூத்திரன் மேல் மூவர்க்கும், வைசியன் மேல் இருவர்க்கும், சத்திரியன் பிராமணருக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்றும், இது இறைவன் ஏற்பாடு என்றும், மேல் வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளர் என்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலும் கேட்கக் கூடாது என்றும், பிராமணனைக் காணின் மற்ற மூவரும் தத்தம் தாழ்வு நிலைக்குத் தக்கவாறு ஒதுங்கி நிற்க வேண்டுமென்றும் இறைவன் கட்டளை இட்டது போல் கற்பித்து விட்டனர். 

இச்சட்ட திட்டம் வடநாட்டில் விரைந்து முழுவதும், தென்னாட்டில் படிப்படியாகப் பேரளவும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. இங்ஙனம், இயற்கையாகத் தொழில் பற்றியிருந்த குலப் பாகுபாடு, நிறம் பற்றி மாற்றியமைக்கப்பட்டது’ என்கிறார்.

மேலும், ‘நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான 'விராட்' என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்னும் 'புருட சூத்தம்' இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்தில் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம்பொருள் கருத்தும் பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே. 

முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும், ஏனை மூன்றும் ஒன்றினொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும் இருப்பதுபோல், நால்வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரின் ஒருவர் தாழ்ந்தவரும், மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டியவருமாவர் என்பதும், நால் உறுப்பும் ஒரே ஆள் வடிவான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால் வரணமும் இறைவன் படைப்பு என்பதும் கருத்தாம். 

இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த் தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடையும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும் வேண்டும் என்பது உட்கருத்தாம். 

இனி, போருக்கு வேண்டும் தோள் வலிமை மறக் குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடியினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல் வலிமை பாட்டாளி மக்கட்கும் இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன்மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே உண்டென்பதும், ஆதலால் நால் வரணத்தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டும் என்பதும், நச்சுத் தன்மையான சூழ்ச்சிக் கருத்தாம்’ என்கிறார் பாவாணர். 

பிறப்பின் அடிப்படையிலான குலப் பாகுபாடுகளைத் தமிழர் மரபு ஏற்றதில்லை; ஏற்பதில்லை என்பதை,

     பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

     செய்தொழில் வேற்றுமை யான்

என, திருக்குறள் தெளிவுபடச் சுட்டியிருப்பதும் நோக்கத்தக்கது ஆகும். 

செய்த தொழிலாலும், செய்கின்ற தொழிலாலும்தான் தமிழர் மரபில் தொழில் குலங்கள் உருவாகி இருக்கின்றன. இந்நிலையில், வேளாளன், வணிகன், அரசன், அந்தணன் என்பதே இயற்கையான வரலாற்று முறைப்பட்ட நால் வகுப்பு வரிசை எனும் வகையில் பாவாணர் விளக்கப்படுத்தும் கீழ்வரும் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

‘எல்லார் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையாத உணவை விளைவிப்பதனாலும், நிலையாகக் குடியிருந்து விளைவில் ஆறில் ஒரு பங்கைக் கடமையாக விறுத்து அரசை நிலை நிறுத்துவதனாலும், போர்க்காலத்தில் படைஞனாகிப் பொருது வெற்றி உண்டாக்குவதனாலும், இரப்போர்க்கு ஈந்து துறப்போர்க்குத் துணையாய் இருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும் தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளர் எல்லாம் உழவனுக்குப் பக்கத்துணைவராகவே கருதப்பட்டனர். 

வெளிநாட்டு அரும்பொருள்களை எல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக்கு அவ்வப்போது பண உதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன், உழவனுக்கு அடுத்தபடியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரர்களாலும் பகைவராலும் அதிகாரிகளாலும் கடு விலங்குகளாலும் உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமல் காக்கும் அரசன், பணி வகையில் வணிகனுக்கு அடுத்தபடியாகவும், அதிகார வகையில் கண்கண்ட கடவுளாகவும் கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரிபவனும், ஆக்க வழிப்பாற்றல் உள்ளவனுமான அந்தணன், இறைவனுக்கு அடுத்தபடி தெய்வத்தன்மை உள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம், உழவு, வாணிகம், காவல், கல்வி என்னும் நால்தொழிலே தலைமையாகக் கொள்ளப்பட்டு எல்லாக் கைத்தொழில்களும் உழவுள் அடக்கப்பட்டன’ எனக்கூறும் பாவாணர், ‘நாகரிகம் முதிர்ந்து அறிவு வளர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் தமிழ்ப் பொருள் இலக்கண நூலார் கிளவித் தலைவரைத் தொழில் அடிப்படையில் நாற்பாலாக வகுக்கும்போது அறிவாற்றல், அதிகாரம், செல்வம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு கொடுத்து அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தலைகீழாக மாற்றி விட்டனர்’ என்கிறார். 

ஆயினும், ஆரிய வைதீகத்தின் நால் வருணப் பகுப்பிற்கும், தமிழரின் நால்வகைத் தொழில் பகுப்பிற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. தமிழரின் நால்வகைத் தொழில் பாகுபாடும், தொழில் குலங்களும் கற்பிதங்களாக உருவாக்கப்படவில்லை. சமூக வளர்ச்சிக் கட்டங்களில் நிலவிவந்த - சமூகத் தொழில் உற்பத்திக் கட்டங்களில் உருவான தொழில் அமைவுகளின் அடிப்படையில்தான் தொழில் குலங்களும் - தொழில் பாகுபாடும் உருவாகி இருக்கின்றன. 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

ஞாயிறு, 19 மார்ச், 2023

புதிய பாடத்திட்டம்: மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடுகிறதா? : மகாராசன்.


அண்மையில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான +2 மற்றும் +1 அரசுப் பொதுத் தேர்வுகளில் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை; தேர்வெழுத வரவில்லை என்கிற தகவல் தற்போது சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாகி இருக்கின்றது. 

மிகப்பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. மாணவர்களின் சமூகப் பொருளாதார மற்றும் குடும்ப நிலைமைகள், குடும்ப வருவாய்க்காகப் பொருளாதார உழைப்பில் ஈடுபடுதல், குடும்ப உறுப்பினர்களின் அறியாமைச் சூழல், பெற்றோர்களை இழந்திருத்தல், மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கம், சமூகக் குற்றவாளிகளுடன் சேர்க்கை, செல்பேசிப் பயன்பாடுகள், சமூக ஊடகங்களில் அதிகப்படியான புழக்கம், நுகர்வு வெறிக் கலாச்சாரம், லும்பன்கள் எனப்படும் உதிரிக் கலாச்சார மனப்போக்கு, அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு என, பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகம் மையமிட்டவை.   

இவை போன்றோ அல்லது இன்னும் பிறவோ நிறைய இருப்பினும், எல்லாத் தரப்பினராலும் கவனிக்கத் தவறுகிற அல்லது கவனிக்க வேண்டிய கல்விசார்ந்த காரணிகளும் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களைக் கல்விச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கும் கல்விசார் அகக் காரணிதான் என்ன?

பொதுவாக, கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் அடைவுகளைப் பெற வைப்பதற்கான கற்பித்தல்- கற்றல் செயல்பாடுகள்தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத் தான் கல்விசார் கலைத்திட்டமானது / கல்வித் திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு உகந்த, பெருவாரி மாணவர்களைப் பங்கேற்கிற வகையில்தான் கடந்த காலத்தியக் கல்வித்திட்டங்கள் அமைந்திருந்தன.

ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாக, அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் விதமாக அமைந்திருந்தன. குறிப்பாக, கல்வி கற்கும் மாணவர்களை மூன்று வகைப்பட்ட தன்மையில் வகைப்படுத்துவர் கல்வி உளவியலாளர்கள். அதாவது, மீத்திறன் மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என மூன்று வகைப்பட்ட மாணவர் தரப்பினர் கல்விச் சூழலுக்குள் இருப்பர். 

மேற்குறித்த மூன்று தரப்பினரையும் மனதில் வைத்துக்கொண்டு தான் - அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறுதான் கல்வித்திட்டப் பாடப்பொருண்மைகள், கற்பித்தல் பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு பாடத்திலும் குறைவான அளவுக்கே பாடப்பொருண்மைகள் வைக்கப்பட்டு, கற்றல் பயிற்சிகள் நிறைய அளிக்கப்பட்டன. இதனால், மீத்திறன் மாணவர்களும், சராசரி மாணவர்களும், மெல்லக் கற்போரும் கற்றல் அடைவுகளின் குறைந்தபட்ச எல்லைகளைக் கடந்து உயர்கல்விக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, மூவகைப்பட்ட மாணவத் தரப்பினரையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா? எனச் சந்தேகிக்கப்பட வைத்திருக்கிறது. புதிய பாடத்திட்டம் எனும் பெயரில் மிக அதிகப்படியான பாடப் பொருண்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருப்பதாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கருதும்படி ஆகியிருக்கிறது. சின்னஞ்சிறு குருவி தலையில் பூசணிக்காயைச் சுமக்க வைத்திருப்பதைப் போலத்தான் மாணவர்கள் உணர்கிறார்கள். அதேபோல, பத்து வண்டிகளில் ஏற்றும் பாரத்தை, ஒரே வண்டியில் ஏற்றி வைத்து, அந்த வண்டியை இழுத்துச் செல்லமுடியாமல் முக்கித் தவிக்கும் வண்டி மாட்டின் பரிதாப நிலையில்தான் ஒவ்வொரு ஆசிரியரும் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பாடத்திட்டத்தை நவீனப்படுத்துவதையும் தரவேற்றம் செய்வதையும் குறையாகவோ அல்லது குற்றமாகவோ கருத வேண்டியதில்லை. அதேவேளை, அது யாருக்கானது? என்ன தரமுடையது? என்ன பலமுடையது? என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது? எல்லோருக்குமான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே ஒரு தலைமுறைக்கான பாடத்திட்டம்/கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஆனால், புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.

அதாவது, இப்போதைய புதிய பாடத்திட்டப் பொருண்மைகளும், அதையொட்டிய தேர்வு முறைகளும் மீத்திறன் மிக்க மாணவர்கள் மட்டுமே அதிகப்படியாகப் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. சராசரி மாணவர்கள்கூட திக்கித் திணறிக் கற்கும் சூழலில்தான் இருக்கின்றனர். மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டப் பொருண்மைக்குள்ளும் தேர்வு முறைகளுக்குள்ளும் நுழைந்து நுழைந்து பார்த்தாலும் நுழையவே முடியாமல் அல்லல்படுகின்றனர். எதைப் எதைப் படித்தால் குறைந்தளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணாவது பெறலாம் என்கிற நிலைமைகள் இப்போது இல்லை. 

கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் வைத்திருக்க வேண்டிய பாடப் பொருண்மைகளை, பள்ளி மாணவர்களின் பாடப் பொருண்மைகளாக அதிகளவில் வைத்திருப்பதைப் பார்க்கும் மெல்லக் கற்கும் மாணவர்கள் ஒருவிதத் தயக்கத்தோடுதான் பள்ளி வகுப்புகளில் சேர்கின்றனர்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதை எதைப் படிக்க வேண்டும்? புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே அவர்களால் தேர்ச்சி பெறமுடியும்; இல்லையெனில் தோல்விதான் என்கிற நிலைமையை அவர்கள் அறிகிறபோது, மெல்ல மெல்ல அதிலிருந்து அந்நியப்படத் தொடங்குகிறார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களை, குறைந்தளவு மதிப்பெண் எடுத்தாவது தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. பாடங்கள் முழுவதையும் படிக்க வைத்தால்தான் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பாடங்கள் முழுவதையும் படிக்க வைக்க முடியாத சூழல்தான் ஆசிரியர்கள் முன்னிருக்கும் சவால்.

மெல்லக் கற்கும் மாணவர்கள், தம்மால் பாடங்கள் முழுமையையும் முற்றும் முழுதாகப் படிக்க முடியாது; இயலாது எனத் தெரிந்த பின்னரும், அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பல்வேறு பாடங்களில் நேரப் போகும் தோல்விகளை எதிர்கொள்வதற்கு அம்மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால், பள்ளிக்கும் வருவதில்லை; வகுப்புக்கும் வருவதில்லை; தேர்வுக்கும் வருவதில்லை எனத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர் அல்லது அந்நியப்படுத்திக்கொள்ள முனைந்து விட்டனர்.

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 9ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறித் தேறிய மாணவர்கள், 11ஆம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் இருக்கின்ற பாடநூல்களின் கனம், பாடப்பொருண்மை, கற்றல் கற்பித்தல் நெருக்கடிகள், குறைந்தளவுத் தேர்ச்சிகூடப் பெறுவதற்கு வழியின்மை போன்றவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட மெல்லக் கற்கும் மாணவர்களுக்குக் கல்வியிலும் கற்றலிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது.

புதிய கல்விச் சூழலில், மெல்லக் கற்கும் மாணவர்களின் இத்தகையத் தனிமைப்படுத்தலுக்கும் அந்நியப்படுத்தலுக்கும் மாணவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது; கூடாது. மாறாக, புதிய பாடத்திட்டக் கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் நோக்கிலேயே அமைந்திருப்பதனால்தான், மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் பங்கேற்புகள் குறைவாகவும் தனிமைப்பட்டும் அந்நியப்பட்டும் விலக்கி வைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால்தான், அதிகளவிலான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. ஒருகாலத்தில், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியை வைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையைப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் கையாளப்படும் சூழலில் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டியது கட்டாயமாகும்.

அதாவது, மீத்திறன் மாணவர்களுக்கு மட்டுமே உரியதாகப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்படாமல், மெல்லக் கற்கும் மாணவர்களையும் உள்ளடக்கியப் பாடத்திட்டப் பொருண்மைகளும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் கல்வித்துறை உடனடியாகச் செய்திடல் வேண்டும். இத்தகையச் சீரமைப்பில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்திரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும்.

கல்வித்திட்டச் சீரமைப்பின் முதற்கட்டமாக, எல்லா வகுப்புகளிலும் எல்லாப் பாடங்களிலும் பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய பிறகு, மறுபடியும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில் நிறைய உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையை இரத்து செய்து, 12ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வாக நடத்திட கல்வித்துறை நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். தேர்வு முறைகளில் வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) என்கிற ஒரு நடைமுறை இருந்து வந்தது. அந்த நடைமுறை புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின்போது நீக்கப்பட்டது. இதனால், ஒரு பாடத்தில் எங்கிருந்து கேள்வி கேட்பார்கள்? எத்தனை மதிப்பெண்கள் எந்தெந்தப் பாடங்களில் கேட்பார்கள்? எதைப் படிக்க வேண்டும்? புத்தகப் பயிற்சி வினாக்களில் (Book back Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? புத்தக உள்நிலையிலிருந்து (Interior Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? என்கிற வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) ஆசிரியருக்கும் மாணவருக்கும் தெரிந்தால் மட்டுமே அதற்கேற்றவாறு மூவகைப்பட்ட மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க முடியும். 

குறிப்பாக, மெல்லக் கற்கும் மாணவரையும் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில், தேர்ச்சி பெற இயலாத அல்லது தேர்ச்சி பெற வைக்க முடியாத சூழல் இருப்பதால் தான், அதிகளவு இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகையால், புதிய பாடத்திட்டத் தேர்வுமுறைகளில் உடனடியாக வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இம்முறை நடைமுறைக்கு வரும்போது மெல்லக் கற்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதற்கான வாய்ப்புகளும், அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் ஏற்படும். 

இவற்றோடு, ஆசிரியர்களைச் சமூகமும் கல்வித்துறையும் மாணவர்களும் அவமதிப்புக்கும் பாதிப்புக்கும் உள்ளாக்காத வகையில் அவர்களுக்கு முழுமையான பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். 

அலுவல் காரணங்களுக்காகவும் தரவுகள் பதிவேற்றங்களுக்காகவும் வெகு தீவிரமாகப் புழக்கத்திலிருக்கும் செல்பேசிப் பயன்பாடுகளை பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பதை உடனடியாகத் தடைசெய்திடல் வேண்டும். கற்றல் கற்பித்தல் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம்திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவுமான கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஓரளவுக்கேனும் கல்வித்துறை சீரமைய வாய்ப்பிருக்கிறது.

(கல்விச் சூழல் குறித்து இன்னும் நிறைய நிறையப் பேசவும் எழுதவும் உரையாடவும் செய்திட வேண்டும். கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும் எழுதவும் உரையாடவும் வேண்டிய நேரமிது. செய்திடுவோம். 

இக்கட்டுரைகூட, மெல்லக் கற்கும் மாணவர்களின் அந்நியப்படுதலை மட்டுமே முதன்மைப்படுத்தி உள்ளது. இன்னமும் இதைப்போன்ற கல்விசார் பிரச்சினைகள் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைத்தல் நன்றாம்.)

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.




புதன், 15 மார்ச், 2023

அறிஞர் அண்ணாவின் கபோதிபுரக் காதல் : அம்சம் மகாராசன்

புதுப்பொலிவுடன் உலகம் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறது. விழித்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிழைத்துக்கொள்வதற்காகத் தந்திர வித்தைகளை நடத்துகின்றன. 

சுதந்திரப்போக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதார்த்தம். இதில் மனிதர்கள் மட்டும் தன் இனத்தைச் சீரழிக்கும் இழி செயல்களைச் செய்து, அதற்குப் பெயர் பெண்மை, தாய்மை என்று மேலோட்டமான புனிதத்தன்மையைக்  கற்பித்துள்ளனர். 

மனம் பொருந்தாத துணைவனுடன் வாழவும் முடியாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்த காதலனை மறக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டு, ரசமற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மீது இயல்பாக இரக்கம்தானே வரவேண்டும். இல்லையென்றால், பெண் பெருமை கொள்ளும்படியான வேறு வாழ்க்கையைக் காண்பிக்க வேண்டும். 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காமவெறி பிடித்த சில மனித ஜென்மங்களால் பெண் சீரழிக்கப்படுகிறாள். வெளியில் தெரிந்தால் உலகம் பாதிப்புக்குள்ளான பெண்ணைத்தானே தூற்றும் என்னும் சமூக பழக்க வழக்கத்தால், அதை மறைத்து வாழ முற்படும் பெண்ணின் நிலை அடுத்தடுத்து சறுக்கு மரமாகிறது என்பதையே இக்குறுநாவல் எடுத்துரைக்கின்றது.

பிறர்மனை நோக்கும் காமக் கூட்டம் தன் குடும்பத்தையும் அழித்து, பாழாய்ப் போன ஊருக்குப் பயந்து பயந்து வாழும் பெண்களின் குடும்பத்தையும் கெடுப்பதில்  படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண் என்ற வேறுபாடில்லாமல் வாழும் ஈனப் பிறவிகளைச் சாடுவதற்காகவும், அத்தகையவர்கள் திருந்துவதற்காகவும், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட குறுநாவல்தான் கபோதிபுரக் காதல். 1968 இல் திராவிடப் பண்ணை வெளியிட்ட இந்நூலை, தற்போது ஆதி பதிப்பகம் மீள்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

இக்குறுநாவல் வெறும் 64 பக்கங்கள்தான். ஆனால், பல கோடி செலவில் வெளியாகும் திரைப்படங்கள் ஊட்டமுடியாத - உணர்த்த முடியாததை எழுத்தில் அறிய வைத்திருக்கிறது. 

கணவன் வீராச்சாமிக்குப் பயந்து பயந்து குடும்பக் கடமையாற்றுபவர் வேதவல்லி. தான் பெற்ற பெண் பிள்ளையின் உணர்வைப்  புரிந்துகொண்டாலும், கணவனிடமும் சொல்லாது, பிள்ளையிடமும் எதுவும் காட்டிக்கொள்ளாத அடக்கக் குணம் கொண்டவள். இருப்பினும், பல்வேறு தொழில்கள் செய்து, எல்லாவற்றிலும் நட்டமும் கடனும் பட்டதால் ஏழ்மை நிலைக்கு வந்துவிடுகிறது அவர்களது குடும்பம். இதனால், 16 வயது மகள் சாரதா என்ற ராதாவை ஜமீன்தார் போன்ற பணக்காரத் தோரணையிலிருக்கும் மாரியப்பப் பிள்ளைக்கு 3 ஆவது மனைவியாகத் திருமணம் செய்துகொடுக்க முற்படுகிறது. இதற்கு  முன்பே  ராதா, ஜமீன்தார் பேரன் பரந்தாமன் மீது காதல் வயப்பட்டிருந்தவள். பரந்தாமனும் அவளை மனதுக்குள் நினைத்திருந்தவன். தற்போது 60 வயது நிரம்பிய ஜமீன்தார் மாரியப்பப் பிள்ளைக்கு 16 வயது மட்டுமே எட்டிய மிக அழகு வாய்ந்த பதுமைப் போன்ற பெண்ணான ராதா மனைவியாகிறாள். 

ராதாவின் மனமோ கிழவனோடு மணவாழ்வில் ஒட்டவில்லை. அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்த உலகில், பரந்தாமனின் சந்திப்பில் தன்னை மறந்த ஒரு நொடியில் ஏதேதோ மாற்றங்கள் தம் வாழ்வில் ஏற்பட்டு விடுகின்றன.  சமயம் பார்த்த கணக்குப் பிள்ளை கருப்பையா, ராதா வாழ்க்கையில் காம வேட்டையாடிச் சீரழிகிறான். வெளியில் தெரிந்தால் ஊர் என்ன பேசும் என்று பயந்து பயந்து ராதா வாழ்ந்து கொண்டிருக்கையில், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், நகரத்திலிருந்து வருகிறவர்கள், சாமியார்கள் என்று பலரையும் நம்பினாள். நாளும் நல்ல காரியங்களைக் கற்றுத்தருவார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு அதிர்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. நன்றாகப் பேசிச் சிரித்துக்கொண்டே தன் இனத்தை வேட்டையாடும்  இழிசெயலைச் செய்யும் மனிதர்களிடம் அவள் அகப்பட்டுக்கொண்டாள். 

அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்வைப்  பதிவு செய்து மிரட்டி சுகபோக வாழ்வு வாழும் மனிதர்களால் நிம்மதியை இழக்கிறாள். பணம், பொருள், உறவு எல்லாம் இழக்கிறாள். இறுதியில் தாலி கட்டியவனையும் இழக்கிறாள். 

நல்லவர்களால் உலகம் இன்று நிலைத்திருக்கிறது என்பது போல, ராதா மீதான காதலைச் சுமந்தலைந்த பரந்தாமன் அம்மை நோயால் கண்பார்வையை இழக்கிறான். கண்ணில்லா கபோதியான பின்பு, ராதாவைச் சந்திக்கிறான். 

சமூகம், திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக்கொள்ளும். தாங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும். ராதா போன்ற பெண்கள், கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும். முன்சென்றால் ஓடிவிடும். சமூகப் பழக்கவழக்கம் என்னும் கொடுமையை எதிர்த்தால்தான் கண்ணுள்ள  கபோதிகள் முன் வாழ முடியும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் அறிஞர் அண்ணா.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால், காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான்; எதுவுஞ்செய்வான்; எவர்க்கும் அஞ்சான்; எதையும் கருதான். 

ஆம்! இன்னமும்,மாடமாளிகை, கூடகோபுரங்களை விட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். எதையும் இழப்பான். காதலை இழக்கத்துணியான். இப்படியாக, ராதாவுக்கு மறுவாழ்வைக் கொடுத்து காதலையும் வாழ்விக்கச் செய்கிறான் பரந்தாமன். இவ்வாறு, கபோதிபுரக் காதலை நிலைநாட்டுகிறார் அறிஞர் அண்ணா.

அறியாத வயதுகளில் புரியாத மனதுடன் அல்லல்படும் பெண்ணின் வேதனையைச் சமூக சீர்த்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும்  நின்று எழுதிய பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். இக் குறுநாவலை அழகுடன் வடிவமைத்துப் பதிப்பித்திருக்கும் ஆதி பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

*

கபோதிபுரக் காதல் (குறுநாவல்),

அறிஞர் அண்ணா, 

முதல் பதிப்பு : டிசம்பர் 2022, 

பக்கங்கள்: 64,

விலை: ரூ 80/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், சென்னை.

பேச: 99948 80005



செவ்வாய், 31 ஜனவரி, 2023

சோ.தர்மனின் சூல் - நிறைசூலியும் நீர்ப்பாய்ச்சிகளின் அறமும் கொலையுண்ட வரலாறு : அ.ம.அங்கவை யாழிசை

என் தாத்தா சோ.தர்மன் அவர்கள் எழுதிய 'சூல்' எனும் கதை நூலை அண்மையில் படித்து முடித்தேன். இந்நூலைப் படித்ததில் பேத்தியான எனக்குப் பெருமிதம்தான். இதனைப் படித்து முடிக்க வெகு நாட்கள் ஆகிவிட்டன. நூலின் பல பக்கங்களை ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தேன். அதில் உள்ள அறிவியல் கருத்துக்களையும், அனுபவத் தத்துவங்களையும், அதில் வந்து போகும் சம்சாரிகளின் வாழ்வியல் அறங்களையும் என் மூளைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அந்தத் தகவல்களைக் குறித்து வைத்தும் எழுதி வைத்தும் வந்தேன்.

பக்கங்கள் செல்லச் செல்ல இப்படி எழுதி வந்தால் முழுப் புத்தகத்தையும் அப்படியே எழுத நேரிடும் என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு நிறைய மனிதர்களும், நிறைய தகவல்களும், நிறையக் கதைகளும் சூல் நூலில் நிரம்பிக் கிடக்கின்றன. சூல் என்பது நீர் நிலைகளை மையமாகக் கொண்டது என்பதால், 'நீர் சூழ்ந்த நிலப்பரப்பு' என்பது போன்ற பொருள் கொண்டது என்றுதான் வாசிக்கும் முன்புவரை நினைத்திருந்தேன். பிறகு, அடிக்கடி கண்மாயை 'நிறைசூல் கர்ப்பினி'யாக விவரிப்பதை வைத்து இதன் மெய்யான பொருளை விளங்கிக் கொண்டேன். 

முழுக்க முழுக்கக் கண்மாயை மையமாகக் கொண்ட கதைதான் சூல். அந்தக் காலத்தில் மொத்த ஊரும் வெள்ளாமையும் கண்மாயைச் சார்ந்திருந்தன. அந்தப் பின்புலமும் வாழ்வும்தான் சூல் காட்டும் பேருலகம்.


இதில் வரும் பல குறிப்புகள் எனக்கு ஆச்சரியமானதாகவும் மிகவும் புதியதாகவும் இருந்தன. ஆண் பனை, பெண் பனை வேறுபாடுகள், பறவைகள், விலங்குகளின் செயல்பாடுகளை வைத்து மழை அறிகுறி அறிதல், மழையைப் போதும் என வழியனுப்பும் வழிபாடு என மிகப் பல விடயங்கள் கிடைத்தன. அன்றைக்கு மக்கள் என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருந்தனர் என்பதை நினைக்கையில் வியப்பாய் இருக்கிறது.


இந்தக் கதையில் இடம்பெறும் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்திருக்கிறது. அந்த மனிதர்கள் பல கதைகளைச் சுமப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய மனிதர்களைப்போல அன்றைய மனிதர்கள் எவரும் வெறுமையாக இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு கதையைச் சுமந்து கொண்டு நிறைந்திருந்தார்கள். உருளைக்குடி கண்மாயைப்போல அதைச் சார்ந்து இருந்த மக்களின் மனதும் விசாலமானதாய் இருந்திருக்கிறது. அந்தக் கண்மாய்த் தண்ணீரின் தூய்மையைப்போல மக்களின் மனதும் இருந்திருப்பதைப் பிரதிபலிப்பதாய் இருந்தது சூல் நூல்.


உருளைக்குடியில் வாழ்ந்த சம்சாரி மக்கள், தங்களைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தனர் அல்லது கதையாகச் சொல்லி வந்தனர். நாம் வணங்கும் பல தெய்வங்கள் விண்ணிலிருந்து பிறந்தவை அல்ல; நம்மோடு நம் மண்ணில் வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதற்கான முன்னோர் வழிபாட்டை உணர்த்தும் பல கதைகள் நூல் முழுவதிலும் வந்தன. காகத்திற்கு ஏன் கோனப் பார்வை என்பதற்குக்கூட ஒரு கதை சொல்வார்கள். இதுபோன்ற கற்பனைத் திறனின் உச்சங்களைப் பல கிளைக் கதைகளில் காணமுடிந்தது. 


அந்தக் காலத்தில் பல நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் பின்பற்றி இருக்கிறார்கள். இக்கால வழக்கின்படி அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள். இந்த மூடநம்பிக்கைகள்தான், அந்தக் கால மக்களைப் பல மூடத்தனமான காரியங்களைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றன என்பதையும், நாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பதையும் இந்நூல் சுட்டிச் செல்கிறது. 


நம் மண்ணில் எங்கும் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், ஜிலேபிக் கெண்டை மீன்கள் இவற்றை ஆங்கிலேயர்கள்தான் நம் மண்ணில் விதைத்துச் சென்றதாக எண்ணினேன். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கம்தான் இம்மண்ணை பாழாக்கிட அந்த நிலத்தின் சம்சாரிகளையே நட வைத்தது என்பது எனக்குப் புதிய செய்தி.


உருளைக்குடி மக்களின் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தைக்கூட மறைத்தும் மறந்தும் வாழ்பவர்களுக்கு மத்தியில் இருந்தால் அந்த வாழ்க்கை அழகாய்த்தானே தெரியும். கதையில் வரும் உறவுக்காரர்களின் கேலிப் பேச்சுகள் எனக்கு மிகப் புதியதாக இருந்தன. என் அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் பலமுறை கேட்ட கேள்வி, இப்படி எல்லாம் கூடவா வெளிப்படையாப் பேசுவாங்க என்பதுதான். ஏனெனில், அவர்களின் பேச்சுக்கள் அவ்வளவும் வெளிப்படையாகவே இருந்தன.


கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தையப் பழமையான கிராமத்து வழக்காறுகள் என்பதால், நூலில் வரும் பல சொற்களின் பொருள்கள் எனக்கு முதலில் புலப்படவில்லை. கதைக்குள் போகப் போகத்தான் அவற்றின் பொருள் புரிந்தன. கதையில் அவர்கள் பேசும் வசவுச் சொற்கள் நான் இதுவரை கேள்விப்படாதவை. நான் கவனித்த மட்டும், கதையில் 'அம்மா' என்ற சொல் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்று அஞ்ஞா அல்லது ஆத்தா. இவைதான் அம்மாவைக் குறித்த சொற்கள். அம்மா எனும் சொல் வரவே இல்லை. அப்பா என்பதற்கும் ஐயா அல்லது அப்பன் என்றுதான் வந்துள்ளன. மேலும், இந்த நூலின் வாயிலாகப் பழைய சொலவடைகள் எனக்குப் புதிதாக அறிமுகம் ஆயின.


அக்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் சிந்திக்க வைக்கும்படி இருந்தன. ஒரு மாதத்திற்குக் கோவில் பகுதியைச் சுத்தம் செய்வது, கோவிலுக்கு விளக்குப் போடுவது என்று சமூக நெறிமுறைகளைச் சார்ந்தே இருந்திருக்கின்றன. குற்றத்திற்குத் தண்டனையும் குற்றவாளிக்கு மன்னிப்பும் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நூல் விவரித்திருக்கிறது. 


நூலை முழுவதும் படித்து முடித்ததற்குப் பின்பாக, எனக்கு இப்போது சூல் நாவல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது, கொப்புலாயி பாட்டியும் அவளின் வெகுளித்தனமும்தான். அவளுடைய வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசியில் அவள் கூறுவது என்னைப் பிரமிக்க வைத்தது. காட்டுப்பூச்சிப் பயல் பட்டணத்திற்குச் சென்று வந்ததைக் கூறும்போது 'துட்டு கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்' என்று சொன்னது, கொப்புலாயி பாட்டியை மிகவும் பாதித்தது. 'துட்டு வாங்கிட்டு சோறு போடுற ஊர் விளங்குமா? அந்த ஊர்ல மனுஷங்க எப்படி வாழ்றாங்க? அந்த ஊருக்கு என்ன பாவம் கிட்டுமோ? என்று புலம்பித் தீர்ப்பார்.


அந்தக் காலத்தில் வழிப்போக்கர்கள் கேட்டால் அன்னம் இடுவார்கள் என்பது தெரியும். ஆனால், அன்னத்திற்குக் காசு வாங்கக் கூடாது; அது பாவம் என்பது எனக்குத் தெரியாது. எவ்வளவு பெரிய விடயம் இது. ஊருக்குள் சாமியார்கள், பண்டாரங்கள் என யார் வந்தாலும், அவர்கள் தெருவில் வந்து கையேந்தக்கூடாது என்றும், அவர்களுக்கு ஆனதை அந்த ஊர் இளவட்டங்களே எல்லோர் வீட்டிலும் சென்று வாங்கி வந்து கொடுப்பார்கள் என்பதும் எனக்கு மேலும் புதிய விடயம். அவர்களை அன்னத்திற்காகக் கையேந்தவிடும் ஊர் விளங்காது என்பது அவர்களது நம்பிக்கை. அன்று வாழ்ந்த எல்லோரும் ஊருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். இல்லையென்றால் பாவத்திற்குக் கட்டுப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன.


முந்தையக் காலத்தில்தான் சாதிச் சண்டைகள் அதிகமாக இருந்தது அல்லது இருந்திருக்கும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால், கதையில் பல சமூகங்களுக்குள் உள்ள புரிதலும் ஒற்றுமையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படி இருந்தவர்களைப் பிரித்துப் பகையாக்கியது யாரோ? எதுவோ?


கதையில் மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், அப்பாவத்தின் பலனாக ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும். விரோதம் காரணமாக ஊர்க் கண்மாயை உடைத்தவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும். இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன. எப்போதும் சிரிக்கும் கண்மாயை ஊமையாக்கியவன் பரம்பரையில் ஊமைப் பிள்ளை பிறக்கும். இது போன்ற பாவங்கள் ஜென்ம பாவங்கள் என்றும், தலைமுறையாகத் தொடரும் என்றும் நம்பினார்கள். ஆனால் இந்தப் பாவத்தைப் பற்றி ஊரில் யாருக்கும் தெரியாது. இந்தப் பாவத்திற்குப் பரிகாரங்களாக அவர்கள்  சொன்னதெல்லாம், மரங்கள் வளர்ப்பது; ஆடு மாடுகள் பராமரிப்பது; கண்மாயைப் பராமரிப்பது என, இயற்கையை இணைத்துப் பயனூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கதையில் வரும் குப்பாண்டிச் சாமியும் குஞ்சான் சாமியும் எதிர்காலத்தைப் பற்றி, அதாவது இன்றைய நிலையை அப்படியே கூறும்போது வினோதமாக இருக்கும்.


ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கும் நீர்நிலைகளுக்கும் ஏற்படாத அவல நிலை, நம் நாட்டவரின் ஆட்சியின்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வைத்தது. ஆங்கிலேயர்கள் மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த நம் நாட்டு அரசியல்வாதிகளால் மண் முழுதும் அடிமையானது. ஆங்கிலேயர்கள்தான் நம் வளத்தை எல்லாம் சுரண்டினார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தேன். ஆனால், மண்ணின் வளங்களைக் காக்க, அந்த வளத்தைப் பற்றி நன்கு தெரிந்த பரம்பரை அறிவு கொண்டவர்களிடம்தான் அதை ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதை இந்நூலில்தான் முதன்முதலாக அறிந்துகொண்டேன். 


கண்மாய்களைக் காக்கவும், வயல்களுக்கு அந்த நீரைப் பாய்ச்சவும் என நியமிக்கப்பட்டவர்கள்தான் நீராணிக்கர்கள் ஆவார்கள். கதையில் நீர்ப்பாய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நீர்ப்பாய்ச்சியும் ஊர்க் குடும்பனும்தான் ஊரின் முதன்மைத் தலைகள். இப்போது அதன் பொறுப்பை ஏற்று இருக்கும் பொதுப்பணித்துறையில் உள்ளவர்களுக்கு, சூழலியல் சார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாததன் காரணமாகத்தான், மண்ணும் தன் அடிப்படைக் குணத்தை இழந்து வருகிறது. பட்டறிவைவிட, பரம்பரை அறிவு முக்கியமானது. அது அனுபவங்களின் கோர்வை. 


ஆங்கிலேயர்கள் சென்ற பின்பு, அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, உருளைக்குடியின் பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் உள்ள புறம்போக்கு நிலத்தைத் தனதாக்கிக் கொள்வது நடக்கும். அந்த வயலுக்குக் கண்மாய் நீரைப் பாய்ச்சிட வேண்டுமென்று நீர்ப்பாய்ச்சியிடம் ஆணையிடும்போது, 'முறை மாற்றி வாய்க்காலில் கண்மாய் நீர் செல்வதை அனுமதிக்க மாட்டேன்' என்பார். அப்படி என்றால், மடைச் சாவியைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு பஞ்சாயத்துத் தலைவர் கேட்பார். 'அய்யனாரப்பன் முன்பு ராசா தொட்டுக் கொடுத்த சாவி இது. இது எங்கிட்ட வாரதுக்கு முன்னாடி, எங்கப்பன் எப்படி அய்யனார்ட்ட ஒப்படச்சாரோ, அங்கயே நானும் ஒப்படைக்கிறேன்' என்று கூறுவார்.  உருளைக்குடியின் கடைசி நீர்ப்பாய்ச்சியான அவர், மடைச்சாவியைக் கோயிலின் முன்பு வைத்து விட்டு வரும் காட்சி உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கும். 


நிலத்தையும் நீரையும் கட்டிக்காத்த நீர்ப்பாய்ச்சிகளின் அறம் இதுதான். மிகவும் பலம் பொருந்திய காளையின் மூக்கணாங்கயிறு அவர் கையை விட்டுச் சென்றதாகவும், சரியான கைகளிடம் போய்ச் சேரவில்லை என்றால், அந்தக் காளை மாடு ஊர் நிலத்தை நாசமாக்கிவிடும் என்று கண்மாயைக் காளையாகவும், மடைச்சாவியை அதன் மூக்கணாங்கயிறாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கும்.


முன்பெல்லாம் கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகளை அந்தந்த ஊர் மக்களே செய்து வந்திருக்கிறார்கள். குடிமராமத்துப் பணிகள் நடக்கும் காட்சியை மிக அழகாகக் கூறியிருப்பார் நூலாசிரியர்.


ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த பிறகு, நாட்டில் இருந்த கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின்கீழ் சென்றன. இதனால், முன்பு போல ஊர் கூடி மராமத்துப் பணிகள் செய்ய முடியாமல் போனது. மராமத்துப் பணிகள் செய்திடப் பல பேரிடம் போய்க் கேட்டும், சாக்குப் போக்குச் சொல்லி வந்தனர் அரசியல்வாதிகள். பல வருடங்கள் ஆகியும் மராமத்துப் பணி நடக்காததால் கண்மாய்கள் மேடேரிப்  போயின. இதனால் வருடத்தின் பாதியிலேயே கிணறுகள் வற்றிப்போயின. கண்மாய்களில் இருந்து வயல்களுக்குக் கரம்பை மண்  எடுக்கவும் தடை. நம் ஊர்க் கண்மாயில் இருந்து நம் வயலுக்கு நாம் மண்ணெடுக்க முடியாது என்றால், எங்கு போவது? கண்மாய் அரசாங்கத்துக்கு உரியது என்றால், அரசாங்கம் யாருக்காக? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. 


குடிமராமத்துப் பணிகள் நடக்காத காரணத்தினாலேயே கண்மாய்களும் வயல்களும் தன் பொழிவை இழந்து போன துயர வரலாற்றைப் பேசும் சூல் நூலானது, நிறை சூலி கொலையுண்ட பெருவலியைப் பதிவு செய்திருக்கிறது. சூல் நூலானது, நீர்நிலை சார்ந்த நிலங்களையும், அந்நிலம் சார்ந்த சம்சாரி மனிதர்களையும், அம்மனிதர்களின் வாழ்வியல் பண்பாடுகளையும் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியிருப்பதாகவே உணர்கிறேன். 


பெருவாழ்வைத் தந்த நிறைசூலியும், நீர் அறத்தைக் காத்துவந்த நீர்ப்பாய்ச்சிகளும் இப்போது கொலையுண்டு போயிருப்பதை உணர்த்துகிறது இந்நூல். இதன் வலி நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பைத் தரத்தான் போகிறது.


சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் தாத்தாவின் இந்த நூலைப் படித்ததில் பெருமை அடைகிறேன்.


கட்டுரையாளர்:

அ.ம.அங்கவை யாழிசை,

இளநிலை சித்த மருத்துவ மாணவி.

31.01.2023

வெள்ளி, 27 ஜனவரி, 2023

தீட்டுக்கு எதிரான முதல் பெண் கலகக்குரல் : மகாராசன்






தமிழ் இலக்கியப் பரப்பில் காலுான்றிய பெரும்பாலான பெண் கவிஞர்கள் இலக்கியத்தின் வழியாகப் பெண்நிலை சார்ந்த கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெண்நிலை சார்ந்த அக்கவிதைகள் எதிர்ச்சிந்தனை மரபையும் மாற்றுச் சிந்தனை மரபையும் உள்ளடக்கி வைத்திருக்கின்றன. 

அந்தந்தக் காலகட்டத்தில் சாத்தியப்பட்ட பாடுகளத்திற்குள்ளும் பெண்ணின் குரலைப் பதிவு செய்யும் முயற்சிகள் பெண் கவிஞர்களிடம் இருந்திருக்கின்றன. இந்த வரிசையில் செங்கோட்டை ஆவுடையக்காளின் குரலும் தமிழ் இலக்கியப் பதிவில் குறிப்பிடத்தக்க ஒரு பதிவாக அமைந்திருக்கிறது.


இதுவரையிலான மற்ற பெண் கவிஞர்களிடம் பெண்நிலை சார்ந்த இலக்கியச் செறிவு மட்டும் காணப்படுகின்றது. ஆவுடையக்காளிடமோ இலக்கியச் செறிவோடு தத்துவச் செறிவும் காணப்படுகிறது. தத்துவ நோக்கில் ஆவுடையக்காள் எழுதிய கவிதைகள் 'செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காள் பாடல் திரட்டு' எனும் நூலாக வெளிவந்திருக்கிறது. ஆயினும், இந்நூல் பற்றிய குறிப்புகள் பெரும்பாலான தத்துவ மற்றும் இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படவில்லை.


தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 'வாழ்வியல் களஞ்சியம்' இரண்டாம் தொகுதியில் 'ஆவுடையம்மாள்' எனும் தலைப்பில் சிறு குறிப்பு மட்டுமே காணப்படுகின்றது. ஆவுடையக்காள் பற்றியும், அவர் கவிதைகள் குறித்தும் விரிவான முறையில் அமைந்த கட்டுரை சு.வேங்கடராமன் எழுதிய 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூலில் உள்ளது. 


தத்துவச் செறிவுமிக்க ஆவுடையக்காளின் கவிதைகளில் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. தத்துவத் துறையினுள் பெண்ணாக நுழைந்து பெண்நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கை அவரின் கவிதைகளின்வழி அறிய முடிகின்றது.


செங்கோட்டையில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடையக்காள். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள கிபி.17ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் பிறந்த இவருக்கு, அன்றை அந்தண சமூக வழக்கப்படி குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையக்காள் குழந்தைப் பருவமாய் இருக்கிறபோதே விதவை ஆகிறார். பருவம் எழுதிய பின்னர் விதவைக் கோலம் கட்டாயமாகப் பூணப்பட்டிருக்கிறது. இளம் பருவத்திலேயே விதவைக் கோலம் பூண்டது ஆவுடையக்காளுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவுடையக்காளின் விதவைநிலை குறித்து 'ஆவிடையம்மாள் சரித்திரம்' கூறும்போது, பெற்றோரால் பாலியத்தில் விவாகம் அடைந்த அவளது பர்த்தா பரகதி அடையவே தன் கிரியை நினைத்து நினைத்து ஆறாத் துயரம் அடைந்து, பின் ஒருவாறு தன் விவேகத்தால் தேர்ந்து, உலகை வெறுத்து, ஒன்றிலும் பற்றுதலும் இன்றி இருந்தாள் என்கிறது.


ஆக, அன்றைய காலத்தின் சமூகச் சடங்குகளாலும், குலம் கோத்திரங்களாலும், தமது வாழ்வு பறிக்கப்பட்டதை எண்ணி எண்ணித் துன்பத்தில் உழன்று தவிக்கும் பெண்களுள் ஆவுடையக்காளும் ஒருவராக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.


அக்காலத்தியச் சமூகத்தின் பொதுத்தளத்தில் ஓரங்கட்டப்பட்ட வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாய்ப் பெண்கள் இருந்தனர். அத்தகையச் சூழலில், பெண்கள் விதவையாக்கப்படும்போது முழுவதுமான அந்நியப்பட்ட வாழ்நிலைக்கு ஆட்படவேண்டியிருந்தது. உயிர் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் விதவையாக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்திருக்கிறது.


உடலை வருத்தியும் மனதை அடக்கியும் எவ்வித இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தவித்த பெண்கள், தங்களுக்கான வடிகாலாய்த் தேர்ந்தெடுத்தது பக்திக்களம்தான். இப்பக்தி நிலையின் வழியாக உலகியல் துன்பங்களை மறப்பதற்கான மடைமாற்றுத் தளமாகக் கைக்கொண்டவர்களில் ஆவுடையக்காளும் ஒருவர் எனலாம்.


தத்துவநிலை சார்ந்து தமது கருத்துகளை வெளிப்படுத்தும் ஆவுடையக்காள், அதனுள்ளும் பெண்நிலை சார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்தி உள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்வழிச் சமூக முறைமைகள் பெண்ணைக் குறித்துப் பல்வேறு கருத்தியல்களை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. அத்தகையக் கருத்தியல்களில் 'தீட்டு' என்பதும் ஒன்று. 


பெண் தீட்டானவர்; பெண்ணுடல் தீட்டானது என்பதான கற்பிதங்கள் பெண்ணைப் பல்வேறு தளங்களில் விலக்கி வைத்திருக்கின்றன. இந்நிலையில், தீட்டுக்கு எதிரான கலகக் குரலைத் தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் அக்காள்.


பெண்ணுக்கென்று வரையறுக்கப்பட்ட வெளிகளில்தான் பெண்கள் நடமாடவேண்டும்; மற்ற வெளிகளில் பெண்கள் நடமாடக் கூடாது; அவ்வாறு பெண்கள் நடமாடிவிட்டால் அவை தீட்டுக்கு ஆளாகிவிடும் என்பதான கருத்து நிலைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார் அக்காள்.


எச்சில் எச்சிலென்று

புலம்புகிறாய்;

மானிடர்கள் எச்சில்

இல்லாத இடமில்லை.

சில்லெச்சில் மூர்த்திகையில்;

ஈஎச்சில் தேனல்லவோ!

என்றைக்கும் உண்ணும்

தாய்முலை எச்சிலன்றோ!

மச்சமெச்சில் நீரில்வந்து

முழுகும் மறையோர்கள் எச்சில்.

பச்சைக்கிளி கோதும்

பழம் எச்சிலன்றோ!

தேரை எச்சில் தேங்காய்

சிறுபூனை எச்சில்;

தேசமெல்லாமே

எச்சிலென்று அறிவேன்.

எச்சிலுந்தன்

வாயும் உடலும் ஆகமாயிருக்கையிலே

பாதம் எச்சில் என்று

அலம்ப சுத்தமாச்சோ? (ஆ.பா.தி.ப90)

என்ற ஆவேசமான குரலை வெளிப்படுத்துகிறார் அக்காள். 


மேலும், பெண்ணும் ஆணும் ஒன்றுதான். சக்தியும் சிவனும் ஒன்றான வடிவில் இருக்க, பெண் எப்படி தனியே தீட்டானவராக இருக்க முடியும் என்ற கேள்வியை அக்காள் எழுப்புகிறார். அதை,

சாஸ்திரமாய்

கோத்திரமாய்

ஜாதிவர்ணாசிரமுமாய்

ஸத்பாத்திரமும்

தீட்டல்லவோ அறியாள்.

சக்தி சிவமே

சராசரமாய் நிற்கையிலே

எதுவும் கர்ம மூடருக்கு

இருட்டாச்சே (ஆ.பா.தி.ப91) என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். 


தீட்டு என்பதை, சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் வர்ணாசிரம தர்மங்களுந்தான் ஏற்படுத்தியவை. மனிதர்கள்தான் தீட்டு என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பெண்ணும் ஆணும் கடவுளாய் அமைந்திருப்பதை அறியாத மூடர்களே தீட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்கிறார் ஆவுடையக்காள்.


பெண்ணின் உடலில் நிகழும் இயற்கை மாற்றங்களான குருதிப்போக்கு நிகழ்வையும் தீட்டு என்றுதான் ஆண்வழிச் சமூகம் கருதி வைத்திருக்கின்றது. பெண்ணின் குருதிக் கசிவைத் தீட்டென்று சொல்லும் சமூகம், காயம்பட்ட ஆண்களின் குருதிக் கசிவைத் தீட்டென்று உரைப்பதில்லை. 


மனித உற்பத்தி நிகழ வேண்டுமானால் பெண்ணுக்குக் குருதிக் கசிவு ஏற்பட்டாக வேண்டும். பெண்ணின் அக்குருதிதான் காமத்தை, குழந்தையை உண்டு பண்ணக் கூடியது என்ற பெண்நிலை சார்ந்த பதிவை ஆவுடையக்காளின் கவிதையில் காணமுடிகின்றது. அதை,

முந்தின தீட்டெடுத்து

முத்தமிடும் தொட்டிலிலே,

கர்த்தனோடு சூத்திரத்தைக் காணார். 

காமத்தீட்டுரைந்து

கைக்குழந்தையாயிருந்து

ஆமையைப்போல முழுக

சுத்தியாச்சோ (ஆ.பா.தி.ப91)

என வெளிப்படுத்துகிறார். 


மேலும், மாதந்தோறும் நிகழும் குருதிப்போக்கு நாட்களில் துயரமும் அவலமும் பெண்ணுக்குத்தான். ஆனால். பெண்ணைத் தீட்டென்று விலக்கி வைத்திருக்கும் ஆண்களிடம் காணப்படுகிற 'அகத்தீட்டு' போய்விடவில்லை. இதைப் பெண்நிலை சார்ந்த ஓர் எதிர்ப்புக் குரலாகவே வெளிப்படுத்துகிறார் அக்காள்.


தீட்டென்று மூன்று நாள்

வீட்டைவிட்டு விலக்கித் திரிந்துவிட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து

நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி நடுவீட்டில் வந்திருப்பாய்

நான் சுசி என்றுரைத்து.

தீட்டென்றும்

பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க தேகமேல் முழுகிவிட்டால்

தீட்டோடிப் போமோ?

ஆசார மாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டுப் போச்சோ (ஆ.பா.தி.ப145) என, தீட்டுக்கு எதிரான பதிவைத் தமது கவிதைவழி வெளிப்படுத்துகிறார். ஆவுடையக்காள். 


தத்துவ நிலைப்பாட்டினுள்ளும் பெண்நிலை சார்ந்து வெளிப்படும் ஆவுடையக்காளின் குரல் 'தீட்டு'க்கு எதிரான முரணைக் கொண்டிருக்கிறது. 'தமிழ் இலக்கிய மரபில் இப்படியான பெண்மொழியையும் பெண்ணின் மாதவிலக்கு - அது தீட்டு என்பதை எதிர்த்துப் பெண் எழுப்பும் கலகக் குரலையும் ஆவுடையக்காள் பாட்டில்தான் முதன்முதலாகக் கேட்கிறோம்' என்பது குறிப்பிடத்தக்கது.


மகாராசன் எழுதிய 'தமிழில் பெண்மொழி மரபு' நூலில் இருந்து...


செவ்வாய், 17 ஜனவரி, 2023

திரைமொழியில் நவீன ஏகலைவன்: மகாராசன்


அன்பு நண்பர் அருண் பகத் அவர்களின் உருவாக்கத்தில் மலர்ந்த ஏகலைவன் எனும் குறும்படத்தை அண்மையில் பார்த்தேன். 

இந்தியச் சமூக அமைப்பில் பல்வேறு சாதிகள் குலங்களாகவும் குடிகளாகவும் தொழில் அடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் பரவிக் கிடக்கிறார்கள். இந்த வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளைக் கற்பிதங்களை உருவாக்கி சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், அதற்கேற்ப வாழ்வியல் படிநிலைகளையும் உருவாக்கி வந்திருப்பதைச் சமூக வரலாறு எடுத்துரைக்கின்றது. இத்தகையச் சாதியப் பாகுபாட்டுக் கற்பிதங்கள் இன்றைய சமூக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அனைத்து மனித மனங்கள் வரையிலும் ஊடுருவிக் கிடக்கின்றன.

சாதியக் கற்பிதங்களின் பாகுபாட்டு நுண் உணர்வுகள் நவீன சமூக வாழ்வின் அடியாழத்தில் இன்னமும் படிந்திருப்பதைக் கலைப்படைப்புகளின் ஊடே வெளிப்படுத்தும் பெருமுயற்சியாகவும், அதேசமயத்தில், சாதியப் பாகுபாட்டு நுண் உணர்வுக்கு எதிரான சமத்துவ உணர்வைப் புலப்படுத்தவும் வளப்படுத்தவுமான உணர்வெழுச்சியைத் தரக்கூடியதாகவும் ஏகலைவன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திறமைகள் பல இருப்பினும், பிறப்பின் அடிப்படையில் அதற்கான தகுதிகள் இருப்பதாகத்தான் உயர்த்திக்கொண்ட சாதிய மனங்கள் நம்பிக்கிடக்கின்றன. ஒருவேளை, அந்தத் தகுதியை மீறி திறமைகள் வெளிப்படும்போது, அதைத் தம்மால் மூலம்தான் பெற்றுக்கொண்டதாகவும், அதற்குரிய குருதட்சணையை ஏதோ ஒருவகையில் கேட்கும் நோக்கில் பலி வாங்குவதையும், குரு தட்சணையாகத் தம் திறமையின் அங்கத்தைப் பலிகொடுப்பதையும்தான் ஏகலைவன் தொன்மம் படிந்திருக்கிறது. 

ஏகலைவன் குறும்படமோ, பழைய காலத்து ஏகலைவனைப்போல குருதட்சணையாகப் பலியாகாமல், திரும்பியெழும் திருப்பிச் செய்யும் சமத்துவத்தோழமை விதைக்கும் ஏகலைவனை முன்னிறுத்துகிறது. 

இருவேறு வர்க்க சமூக வாழ்வியல் பின்புலங்களைச் சார்ந்த இளைஞர்கள் இன்றைய மட்டைப் பந்தாட்ட விளையாட்டில் போட்டிபோடுவதையும், அதற்குள் இருக்கும் திறமை, நிராகரிப்பு, பலிவாங்கல் போன்றவற்றையும் பின்புலமாகக் கொண்டு ஏகலைவன் படம் ஒரு சேதியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. அது, பிறப்பின் அடிப்படையில் தகுதிகள் தீர்மானிக்கப்படுவதில்லை; ஏகலைவன் வாரிசுகள் ஏகலைவனைப்போலவே பலியாக வேண்டியதில்லை என்பதுதான்.

மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது படம். ஒரு தொன்மத்தை நவீனப் படைப்பாக்கும்போது அதன் சம காலத்தியக் குரலைப் பேசவேண்டும். அதை நவீனப் பூர்வமாகவும் கலைப்பூர்வமாகவும் மிக அழகியலோடு நவீன ஏகலைவனைத் தந்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

இதில் வருகிற அன்பின் அனுபவங்கள் பல வடிவங்களில் எமக்கும் நேர்ந்ததுண்டு. மிகச்சிறப்பான கலை முயற்சி. வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றி.

குறும்பட இணைப்பு:

https://m.youtube.com/watch?v=yZR_UlYxGeY&si=EnSIkaIECMiOmarE

தோழமையுடன்

ஏர் மகாராசன்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாய் வழங்கல்


செம்பச்சை நூலகம், மக்கள் தமிழ் ஆய்வரண், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் தமிழ் நாள்காட்டிகளை அன்பளிப்பாக வழங்கி வருகிறோம்.

தமிழர் மரபில் நெடுங்காலமாய்ப் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ் எண்களை மீளவும் வழக்கத்தில் கொண்டுவரவும், தமிழ் நாள்காட்டி மரபை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவும்தான் இந்த முயற்சி. தமிழுக்குச் செய்கின்ற சிறு கைம்மாறுதான் இது.

ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் வெளியிடும் இந்தத் தமிழ் நாள்காட்டிகளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்வதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். 

செம்பச்சை நூலகத்திற்கு நேரில் வருவோருக்கும், தமிழ் நாள்காட்டிகள் வேண்டுவோருக்கும், தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாகவே வழங்கப்படும். 

எனினும், வெளியூர் அன்பர்கள் அஞ்சல் செலவை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம். அஞ்சல் செலவை அனுப்பி வைக்கும் அன்பர்களுக்கு, தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாக அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ் நாள்காட்டிகள் வேண்டுவோருக்கு, அஞ்சலில் அனுப்பி வைக்கும் பெரும்பணியை மனமுவந்து ஏற்றிருக்கிறது யாப்பு வெளியீடு.

அஞ்சலில் வேண்டுவோருக்கு இரண்டு தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். இதற்கான அஞ்சல் அனுப்புகைச் செலவு உரூ 40/- மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதலாக நாள்காட்டிகள் வேண்டுவோர் அதற்குரிய செலவுத் தொகையை மட்டும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். 

தமிழ் நாள்காட்டிகள் அஞ்சலில் பெறவும், சென்னை வட்டார அன்பர்கள் நேரில் பெறவும் தொடர்பு கொள்க:

திரு. செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506.

*

தோழமையுடன்

ஏர் மகாராசன் 

செம்பச்சை நூலகம்,

மக்கள்தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

01.01.2023

வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஜெயமோகனின் புறப்பாடு - பயணங்களும் படிப்பினைகளும்: அ.ம.அங்கவை யாழிசை




நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த 'யானை டாக்டர்' எனும் கதையைப் படித்தபோதுதான் 'ஜெயமோகன்' எனும் எழுத்தாளர் பெயர் அறிமுகமானது. ஜெயமோகன் எழுதிய கதைகளையும் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது இருந்தது.

இதைக் குறித்து எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும்  இருப்பதாகக் கூறினார். இரண்டொரு நாளிலேயே எங்களது 'செம்பச்சை' நூலகத்திற்கு ஜெயமோகன் நூல்கள் பலவற்றை வாங்கிவிட்டார் அப்பா. 


எந்தப் புத்தகத்தையும் மாதக்கணக்கில் சிறுகச் சிறுகப் படிக்கும் என் அம்மாவை, ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்த முதல் புத்தகம் ஜெயமோகனின் 'எழுதுக' எனும் புத்தகம்தான். அவரின் எழுதுக எனும் நூல் அவருக்கு மிக முக்கியமான நூல் என்பார். அந்தப் புத்தகத்தை அவர் படித்து முடித்த கையோடு, ஜெயமோகன் எழுதிய 'புறப்பாடு' எனும் நூலையும் படிக்கத் தொடங்கினார். எந்நேரமும் அந்தப் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார்.


புறப்பாட்டைப் படித்து முடித்த பிறகு ஜெயமோகனின் மிகத் தீவிர ரசிகையாக ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயமோகனின் பேச்சுகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருப்பார். 


புறப்பாடு புத்தகத்தைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அந்த நூலைப் பற்றி விரிவாக ஏதும் கூற மறுத்து விட்டார். "அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள். மனுஷன் போய்க்கிட்டே இருப்பாரு… போய்க்கிட்டே இருந்திருக்காரு…" என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டார். அப்போதிருந்தே ஜெயமோகனும் புறப்பாடும் எனக்கு நன்றாகவே அறிமுகம்.


பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான காத்திருப்புக்கு இடையில் கிடைத்த விடுமுறை நாட்களில் நிறைய நூல்களை வாசித்திட வேண்டும் என, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நூல்களைச் சொல்லியிருந்தார் அப்பா. 


போன மாதம் கிட்டத்தட்ட இதே நாளில்தான் புறப்பாடு வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பாதான் 'இதை உன் அடுத்த இலக்காக வை. பெரும்பாலும் வரலாற்று நாவல்களையே வாசித்து உலவிய உனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும்' என்றார்.


புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலின் கால்வாசிப் பக்கங்களை வாசித்த பின்பு நிறுத்திவிட்டேன். இதுவரை வாசித்தவற்றை நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு முயன்றாலும் அவரது சித்திரத்தை இந்தப் பயணத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.


நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.


அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார்.


அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.


இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார்.


எங்கும் நிலையில்லாத ஆற்று நீர் போல அலைந்து திரிந்து கடலில் கலந்திருப்பாரா? என்று தோன்றும். இல்லை, அவர் இன்னும் அலைந்து கொண்டிருப்பார் காற்றைப் போல.


முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. அவர் சம்பவங்களை விவரிப்பதால் இப்படிக் கூறவில்லை. சம்பவங்களின் பின்னணியை விவரிப்பதன் நுணுக்கத்தை வாசிப்பில் உணர்ந்ததால் கூறுகிறேன். மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான். அப்படிப்பட்டவர்களை நான் எப்போதும் ரசிப்பதுண்டு.


அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. 


இந்தப் புத்தகத்தை முக்கால்வாசியளவு வாசித்து முடித்திருந்தபோது, எனக்குக் கவலையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நான் எனது புத்தக வாசிப்புப் பயணத்தை மிகத் தாமதமாக ஆரம்பித்து விட்டதாக ஒரு தவிப்பு தோன்றியது. இன்னும் முன்னரே வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்மேல் நானே கோபப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அப்போதுதான் அவரைப்போல நானும் சுற்ற வாய்ப்புகள் கிட்டும் என எண்ணி இருக்கலாம்.


இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். எப்படி அப்படி எழுதினார்? எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது. நான் அதைப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் இன்னும் பக்குவப்படவில்லையோ என எனக்குப் பட்டது. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.


இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில், என் அப்பா தினமும் கேட்பார் "புறப்பாடு எப்படிப் போகுது?" என்று. எனது ஒரே பதில், வழக்கமான பதில் "போய்க்கிட்டே இருக்குப்பா''. ஆம், போய்க்கொண்டே, நீண்டு கொண்டே, விரிந்து கொண்டே சென்றது முடிவில்லாதது போல. எனக்கு ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது. எனக்கும்தான் அலைந்து திரிய ஆசை. ஆனால், முடியவில்லை. ஒரு கணம் அப்படியே கிளம்பினால் என்ன? என்று தோன்றும். அந்த எண்ணம் மறுகணம் செத்துப் போகும்.


இவர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்தும். அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது. ஆங்கிலத்தில் அதை அனாலஜி என்கிறார்கள். எதையெதையோ எதனுடனும் ஒப்பிடுவார். அவ்விரண்டையும் வைத்து நான் கற்பனைகூட செய்திருக்க மாட்டேன். ஆனால், படித்த பிறகு சரிதானே என்று தோன்றும். அந்த ஒப்புமையைக் கண்டு நானே சிரிப்பேன். நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார். ரயிலில் பயணம் செய்யும் பொழுது போடுகின்ற பாடல்கள் பயணிப்பவர்களின் பல உணர்வுகள் கொண்டாட்டங்கள் நிறைந்தது என்று கூறிவிட்டு, அதை ஓட்டல் தட்டுகள் என்பார். யார் யாரோ வந்து எதையெதையோ வைத்துத் தின்ற தட்டு என்று கூறுவார். இப்படி, சிறு பொருளையாவது ஒப்பிட்டுத்தான் எந்தவொரு காட்சியையும் நகர்த்துவார்.


சரம் சரமாகப் பேராசிரியர் பொழிந்து கொண்டிருந்த வகுப்பில் மதிய நேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்கு மேலேதான் என்பார். இந்த வரியைத் தாமதமாகவே நான் புரிந்து கொண்டேன். உணவிற்குப்பின் பாடம் நடத்தப்படுகிறது என்று பிறகு புரிந்தது. புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.


என் அப்பா இந்தப் புத்தகத்தை என்னிடம் தரும்போதே 'படித்து முடித்தபின் அதைப்பற்றி எழுத வேண்டும்' என்று கூறிவிட்டார். அதற்காகப் படிக்கும்போதே குறிப்பு எடுக்கவும் சொன்னார். ஆனால், எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்படி எழுதுவது? அவர் இங்கு இருந்து அங்கு சென்றார். பிறகு அங்கிருந்து வேறு எங்கோ சென்றார். அங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்றார் என்பதையா எழுதுவது? சட்டென்று நான் ஒரு உதவாக்காரியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த விசாலமான பயணத்தையும், படைப்பாளரின் அந்த அறிவையும் எழுத்தாக்க என் அறிவு போதாது என்ற இயலாமையின் வெளிப்பாடு அது.


உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.


உலாவுதலில் கிடைக்கும் நிம்மதி வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் என்னவோ, நான் ஒரு சிறு தூரமேனும் உலாவுவேன். புதிதாய் ஒன்றைப் பார்ப்பேன். அதன் நினைப்பே கிளர்ச்சியூட்டும். இந்த எதிர்பார்ப்போடு புறப்பாடு என்னை மிகக் கவனமாக அந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றது. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பயணம். ஆனாலும், நான் காணாத பலவற்றை அந்தப் பயணத்தில் கண்டேன்; உணர்ந்தேன். 


ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.


புறப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, "அவர் பிழைப்பிற்காக ஓடினாரா? இலக்கியத்திற்காக ஓடினாரா? என்றே தெரியாது" என அம்மா கூறினார். ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.


ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக - பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன். 


சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சேரியில் இரவில் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக மொய்க்கும். சேரியில் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள். அவற்றைக் கூறுகையில், அக்குழந்தை பிறப்பதற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்குச் சில லிட்டர் ரத்தத்தை உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான் என்பார். மழைக் காலங்களில் சாக்கடைகளை அடித்தளமாகக் கொண்ட குடிசைகள், சாக்கடைகள் பெருகி ஓடும்போது கட்டைகளில் பிணங்கள் முட்டி நின்ற சம்பவங்களையும் பதிவு செய்திருப்பார். இந்த வாழ்வெல்லாம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு. 


அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் என்னை வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு,  "இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்" என்று பட்டது. அந்தவகையில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் புறப்பாடு எனக்குக் காண்பித்திருக்கிறது.


காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில் என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன. 


ஜெயமோகன் ஓர் ஆணாக இருந்ததால் கிளம்பிவிட்டார்; ஓடிவிட்டார். பெண்ணாகிய நான் ஓட நினைத்தால், ஊர் சுற்ற நினைத்தால், உலாவ நினைத்தால் என்னாவது? என்னவெல்லாம் நடக்கும்? என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சமூகம் என்ன மாதிரியான படிப்பினைகள் தந்திருக்கும்? பெண்களை இந்தச் சமூகம் நடத்துவதும், பெண்களுக்கு இந்தச் சமூக மனிதர்களும் ஆண்களும் தருகின்ற மோசமான படிப்பினைகளை நினைக்கும்போதும் எனக்குப் பீதியூட்டுகிறது; பயமாய் இருக்கிறது. அதனாலேயே நான் ஓடிப் போகவும் ஊர் சுற்றவும் நினைத்த எண்ணம் செத்துப் போனது. ஆண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறு; பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறுதானே.


ஆனாலும், புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.


அ.ம.அங்கவை யாழிசை

15.12.2022