ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்

இளம் எழுத்தாளராய்ப் பயணிக்கத் தொடங்கிய காலத்திலேயே விருது பெற்றிருக்கும் மனுசியைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பை மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் நூலே தந்திருக்கிறது.

காதலை, காமத்தை, நட்பை, ஆண் துணை இன்மைமையை, நண்பர் பிரிவை, நண்பர் மரணத்தை, நட்பின் ஊடலை என பெண் ஆண் உறவுகளின் உணர்வோட்டத்தைக் கவிதைகளில் புலப்படுத்தியிருக்கும் மனுசியின் கவிதை மொழியானது தமிழின் பெண் மொழி மரபைக் கட்டமைத்த வெள்ளி வீதியார், அவ்வை, புனிதவதியார், நாச்சியார், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோரின் கவிதை மரபைப் பின்பற்றி நவீனப் பெண் மொழியாய் வடிவம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மனுசியின் மிகப் பெரும் பலமாய் அமைந்திருப்பது மிக இலகுவானதும் எளிமையானதுமான நேர்த்தியானதுமான மொழிப் புலப்பாடு தான். அதே போல, கவிதைப் பாடுபொருளுக்குத் தேர்ந்து கொண்ட களங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. பெண்ணின் தன்னிலைப் பாடுகளை மட்டுமே கவிதையாக்காமல், சமூகத்தின் இதரப் பாடுகளையும் கவிதையின் பாடுபொருளாகக் கட்டமைத்திருப்பது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

காவிமய எதிர்ப்பு, உணவுப் பண்பாட்டு உரிமை ஆதரவு, ஈழ விடுதலை ஆதரவு, மரண தண்டனை எதிர்ப்பு, சாதிய ஆணவப் படுகொலை எதிர்ப்பு, இயற்கை வளச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய மற்றும் பெண் ஒடுக்குமுறை எதிர்ப்பு எனப் பல வகை எதிர் மரபுக் கதையாடல்களையும் மாற்று மரபுக் கதையாடல்களையும் முன்வைத்திருப்பது மனுசியைப் பெண் கவிஞராக மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வு மிக்க கவிஞராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக