ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஈசப்பால்.


தட்டான்கள் தாழப் பறந்து
தப்பாமல் மழை பெய்து
நிலமெல்லாம் குளிர்ந்து கிடக்கும்
வெயில் பொழுதுகளின்
புழுதிக் காட்டில்
குறுக்கும் நெடுக்குமாய்ப் பறந்தன
கரிச்சான் குருவிகள்.

ஈச ஈசானே
ஈசக் கரையானே
ஙொப்பனும் ஙோத்தாளும்
தண்ணிக் கரையீல
செத்துக் கெடக்காக..
சில்லானக் கூட்டிக்கிட்டு
சிலுக்கு சிலுக்குனு ஓடியாவென்ற
உதடுகள் குவித்த
ஊதலிசை கேட்டு
மொது மொதுவெனப்
புற்றுவாயில் பூத்தன
ஈசல்கள்.

மண்ணின் அருவிபோல்
முன்டியடித்துப் பூத்து
சட்டென மேலே பறந்து
இறக்கை உதிரக்
கீழே விழுந்து
அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன.
ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக