ஞாயிறு, 22 அக்டோபர், 2017

செம்புலம்.


மெய்யும் பொய்யுமாய்ப்
பேசிச் சிரித்து,
பூவிதழ் வாசத்தை
நாசிகள் குடித்து,
எச்சில் சொற்களை
நாவுகள் எழுதி,
மெய்கள் நெய்த நரம்புகள்
இசைத்துக் கிடந்ததில்
செவ்வரி வரைந்தன
கண்கள்.

கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை.

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக